ஞாபகம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7018
இதற்கிடையில் பிள்ளையின் மறதி குணத்திற்கு புதிய வடிவங்கள் வந்து சேர்ந்திருந்தன. உதாரணத்திற்கு, பிள்ளை பென்சிலைப் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் செய்வதைப் போல அவர் பென்சிலை எடுத்து நுனிப்பகுதியைச் செதுக்கி சீவுகிறார். சீவி முடிக்கும்போது, கையில் வைத்திருக்கும் பொருளின் பெயரை மறந்து விடுகிறார். அதற்குப் பிறகு அந்த நாள் முழுவதும், சில நேரங்களில் நாட்கணக்கில் தனக்கு நன்றாகத் தெரிந்திருந்த அந்த பெயரை அறியும் தேடல் ஆரம்பித்துவிடும். ஒரு பென்சிலைக் காட்டிவிட்டு ‘இதன் பெயர் என்ன?’ என்று வேறு யாரிடமாவது கேட்பதில் இருக்கும் தர்மசங்கடமான நிலையைப் பற்றிய புரிதல் இருந்தால், அவர் தன்னுடைய பிரச்சினையை யாரிடமும் வெளிப்படுத்தாமல் நடந்து திரிந்துகொண்டிருக்கிறார். இறுதியில் எப்போதாவது ‘பென்சில்’ என்ற வார்த்தை மனதில் தோன்றும்போது, புதையலே கிடைத்துவிட்டதைப் போல சந்தோஷத்தில் மூழ்கிவிடுகிறார்.
இதுபோல மேஜை, நாற்காலி, கண்ணாடி, சாளரம், குளியலறை, ரோஜா மலர், சுத்தம் செய்ய வேண்டிய கை, ஸ்கூட்டர், கைக்குட்டை போன்ற எல்லா பொருட்களும் பிள்ளையை பாடாய்ப்படுத்த ஆரம்பித்தன. ஒருநாள் மனைவி, மருமகன் ஆகியோருடன் சேர்ந்து ஒரு மனநல நிபுணரைப் போய்ப் பார்த்தாலும், கொஞ்சம் ‘ந்யூரோபயான்’ மாத்திரைகளைச் சாப்பிட்டார் என்பதைத் தவிர, அதனால் எந்தவித பிரயோஜனமும் உண்டாகவில்லை.
ஒருமுறை பம்பாயில் வேலையிலிருக்கும் மகனும் குடும்பமும் விடுமுறையில் வந்திருந்தபோது, பிள்ளைக்கு தன் மகனின் பெயர் ஞாபகத்தில் இல்லாமல் போனது, கமலம்மாவை சிறிது அழச் செய்துவிட்டது. மகனின் மனைவி மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் பெயர்களை சரியாகக் கூடிய பிள்ளையால், பொறுப்புணர்வின் மூலகர்த்தாவாக இருந்த அந்த தந்தையால், தன் மகனின் பெயரை மட்டும் உடனடியாக ஞாபகத்தில் கொண்டு வர முடியவில்லை.
வருடங்கள் கடக்க... கடக்க... மறதி என்ற கோட்டையின்மீது புதிய பாசிகள் முளைத்தன. நன்கு தெரிந்த முகங்களைப் பார்க்கும்போதுகூட, யாரென்பதை நினைவுபடுத்திப் பார்க்க முடியாத சூழ்நிலை பிள்ளைக்கு உண்டானது. பிறகு... நீண்ட நேர கடுமையான முயற்சிக்குப் பிறகுஆள் யாரென்பது தெரியவரும்போது, அவருக்கு அழுகை வர ஆரம்பிப்பதும் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. விருந்தினர்கள். உறவினர்கள் ஆகியோர் வரும்போது, அவர்களை முன்னால் நிற்க வைத்துக் கொண்டு ‘இது யார்? கூற முடியுமா?’ என்று மனைவியோ மகளோ கேட்பதென்பதும், பதில் தெரியாமல் பிள்ளை குழம்பிப் போய் நிற்பதும் அந்த வீட்டில் தினமும் நடக்கக்கூடிய சம்பவங்களாகிவிட்டன. ஒரு நாள் சோமன் நாயர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து வீட்டுக்குள் நுழையத் தொடங்கியபோது, பிள்ளை வழியைத் தடுத்து நிறுத்தியவாறு ‘யாரு? தெரியலையே?’ என்று கூறிய சம்பவம், அந்த வீட்டில் நீண்ட காலமாக எல்லாரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், அந்த சிரிப்புகூட பிள்ளை மனதை வேதனை கொள்ளச் செய்யவில்லை. காரணம்- அப்போதே அவர் அதை மறந்து விடுவதுதான்.
மறந்து... மறந்து... பிள்ளை முழுமையாக மறதியின் உலகத்திலேயே இருந்துவிட்டார். தனக்கு இப்படிப்பட்ட ஒரு குறைபாடு இருக்கிறதென்று யாரிடமும் கூறுவதிலும் அவருக்கு வெட்கமோ குற்ற உணர்வோ இல்லாமல் போய்விட்டது. வாசலின் பக்கவாட்டில் இருந்த தன்னுடைய பழைய அலுவல் அலுவல் அறையில் தனியாகப் படுத்துக் கொண்டு, மறந்துபோன நூறுநூறாயிரம் விஷயங்களை நினைவில் கொண்டு வருவதற்கு அவர் தேவையில்லாமல் முயற்சித்தார். உணவு சாப்பிடும் நேரங்களில் மனைவி வந்து ஞாபகப்படுத்தும் காரணத்தால், அதுமட்டும் சரியாகவும் நிற்காமலும் நடந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் தான் யெரென்பதையும் தன்னுடைய பெயர் என்னவென்பதையும் ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு அவருக்கு பல வாரங்கள் ஆனது. கண்களை மூடிப் படுத்துக் கொண்டு அந்த அவிழ்க்க முடியாத முடிச்சுகளைக் கொண்ட கட்டுகளில் மாட்டிக் கொண்டு அவர் திணறிக் கொண்டிருந்தார். தன்னுடைய தாய், தந்தை, தங்கை, இளமைக்காலம், அலுவலகத்தின் நண்பர்கள், தன் வீட்டிலிருக்கும் அறைகள், நிறங்கள் என்று இப்படி அனைத்து விஷயங்களும் படிப்படியாக மறதி என்ற திரைச்சீலைக்கு அப்பால் இருந்தன. ஒருநாள் பச்சைக்கும் கருப்புக்கும் இடையே வேறுபாடு கூற முடியாமல், அவர் பேத்தி ப்ரீதிக்கு முன்னால் கேலிக்குரிய கதாபாத்திரமாக ஆனார். எப்போதாவது மட்டுமே கார்மேகங்களும் இடியும் இல்லாத தெளிவான பகல் வேளையில், வெட்டிக் கொண்டிருக்கும் மின்னலைப் போல, ஏதாவது ஒரு சம்பவமோ முகமோ பெயரோ மனதில் வந்து விழும்போது, அவர் அதிக சந்தோஷத்தால் சிரித்தார்.
ஆனால், அந்தச் சமயத்தில் அந்த வீட்டில் பிள்ளையின் சிரிப்புக்கோ அழுகைக்கோ அர்த்தமே இல்லாமலிருந்தது. உபயோகம் இல்லாமல்போன ஒரு பழைய வளர்ப்புப் பூனையைப் போல அவர் எப்போதும் தன்னுடைய அறையில் போடப்பட்டிருக்கும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு படுத்திருந்தார். இனி எந்தச் சமயத்திலும், தன்னால் எதையும் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாது என்ற உண்மையைக்கூட பிள்ளையால் நினைக்க முடியவில்லை.
பிள்ளைக்கு எழுபத்திரண்டு வயது கடந்துவிட்டது. ஷைலஜாவின் மகள் ப்ரீதியின் திருமணம் முடிந்து ஒரு வாடகைக் காரில் வரும்போது, தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் சவுக்கு மரங்கள் பூப்பதை சுட்டிக்காட்டி, உடன் பயணித்தவர்கள் அதைப் பற்றி விளக்கிப் பேசிக் கொண்டிருந்தது பிள்ளைக்கு சிறிதும் புரியவில்லை.
அந்த நாட்களில் ஒருநாள் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடைபெற்றது. கற்றானத்திலிருந்து வந்திருந்த பழைய உறவினரை ஒரு பார்வையில் பிள்ளை அடையாளம் கண்டுபிடித்தார். இருபது வருடங்களுக்குப் பிறகு சந்தித்த அந்த மனிதனின் பெயரும் மற்ற தகவல்களும் உடனடியாக பிள்ளையின் மனதிற்குள் வந்து சேர்ந்தன.
“நாம் என்னைக்கு கடைசியாப் பார்த்தோம்னு ஞாபகம் இருக்கா?” பிள்ளையின் ஞாபகக் குறைவு எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டிருந்த காரணத்தால், எல்லாருக்கும் முன்னால், உறவினர் இரக்கம் கலந்த குரலில் கேட்டார்.
பிள்ளைக்கு அது ஞாபகத்தில் வந்தது. தன்னுடைய அத்தை கெ.எம்.கவுரியம்மா என்ற வனஜாவுடைய தாயின் மரணத்தையொட்டி சென்றிருந்தபோது, அந்த மனிதரை இறுதியாகப் பார்த்தார். பரமேஸ்வரன் நாயர் என்ற பெயரைக் கொண்ட அந்த மனிதர், அந்தச் சமயத்தில் குழந்தைகள் பிறக்காமல் போனதைப் பற்றி கூறி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அன்றைய உரையாடலுக்கு மத்தியில், மண்ணாரசாலையில் நடைபெறும் திருவிழாவைப் பற்றி பேச்சு வந்தது. எல்லா விஷயங்களும் பகலைப்போல தெளிவாகத் தெரிந்தன.
“ஞாபகத்தில் இல்லை. அப்படித்தானே?” பரமேஸ்வரன் நாயர் காது கேட்காத மனிதர்களிடம் கேட்பதைப்போல குரலை உயர்த்திக் கேட்டார்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,