Lekha Books

A+ A A-

ஞாபகம் - Page 4

“இல்லை...” பிள்ளைக்கு அப்போதுதான் சொல்லவே தோன்றியது.

அப்படி சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அந்த உரையாடலை நீக்கிச் செய்வதில் பிள்ளைக்கு சிறிதும் விருப்பமில்லை. அதற்கு பதிலாக ஞாபகத்தின் கதவுகள் எந்த அளவிற்கு திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்பதை சோதித்துப் பார்ப்பதில்தான் அவர் அவசரத்தைக் காட்டினார்.

இப்போது கடந்துசென்ற வருடங்களில் நடைபெற்ற சிறிய சிறிய சம்பவங்களைக்கூட தெளிவாக நினைத்துப் பார்க்க முடிந்தது. வேலையிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற வழியனுப்பு விழாவில், பணியாற்றிய இரண்டு நண்பர்களின் பெயர்களை மாற்றிமாற்றிப் பேசியபோது, கூட்டத்தில் நிலவிய அமைதியும் முணுமுணுப்பும் தெளிவாக நினைவில் வந்தன. பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மகன் சதீஷ்பாபு அங்கேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்தவுடன், அங்கே வரும்படி கூறி எழுதிய கடிதத்திலிருந்த வார்த்தைகள் மனதில் வலம் வந்து கொண்டிருந்தன. கைனக்கரியைச் சேர்ந்த கோவிந்தக் குறுப்புடன் திருமண நிச்சயம் முடிவாகிவிட்டிதென்பதைத் தெரிந்து கொண்டு, தனக்கு முன்னால் வந்து நின்று தேம்பித்தேம்பி அழுத வனஜாவின் கண்ணீரினுடைய உவர்ப்பை உதட்டில் உணர்ந்தார். அதற்குப் பிறகும் பின்னோக்கிச் சென்றபோது, இளம் பருவத்தில் வயல்களுக்கு மத்தியில் பள்ளிக் கூடத்திற்குச் சென்றதையும், ஒரு நாள் திரும்பி வரும்போது ஒரு பெரிய நீர்ப்பாம்பு, உரத்த குரலில் கூப்பாடு போடும் பருமனான தவளையை பாதி வரை விழுங்கிவிட்டிருப்பதைப் பார்த்து பயந்து ஓடியதையும் தெளிவாக நினைத்துப் பார்த்தார். ஞாபகம் சம்பந்தமான மறக்க முடியாத அந்த பின்னோக்கிய பயணத்தில் நீந்தி நீந்திச் சென்ற போது, இரண்டு வயதில் குடித்த தாய்ப்பால் வயிற்றுக்குள் கிடந்து வாந்தியாக வெளியேறி வந்ததையும், அம்மா அதைதான் அணிந்திருந்த துணியின் நுனியைக் கொண்டு துடைத்து சுத்தப்படுத்தியதையும் மீண்டும் பார்த்தார்.

ஆனால், பிள்ளை யாரிடமும் இந்த சம்பவங்களின் அணிவகுப்பைப் பற்றி சொல்லவில்லை. சொற்களால் விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், ஞாபகம் என்ற கல்லறைகளை ஒவ்வொன்றாகத் திறந்து சோதித்துப் பார்த்து, முன்பு எப்போதோ படித்த ஏதோ குழந்தைப் பாடலை முணுமுணுத்தவாறு அவர் அதே இடத்தில் படுத்திருந்தார். உணவுக்கான நேரம் வந்தபோது, உணவு சாப்பிடுவதற்கான நேரம் வந்துவிட்டதென்பதை அவர் நினைத்துப் பார்த்தார். எனினும், எப்போதும் நடப்பதை மாற்றுவதற்கு அவர் முயலவில்லை. மனைவி வந்து அழைத்தபிறகுதான் உண்ணச் சென்றார்.

சாப்பிட்டு முடித்து, எப்போதும் இருக்கக்கூடிய மதிய தூக்கத்திற்காகப் படுத்தபோது, இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் நடைபெற்றது. அந்த சமயத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து சுவாரசியமான சம்பவங்கள் முழுவதும் மனதில் வந்து நின்று கொண்டிருந்தன. எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலை. அதைத் தொடர்ந்து மனம் எதிர்காலத்தை நோக்கியும் அடியெடுத்து வைப்பதை பிள்ளை தெரிந்து கொண்டார்.

இன்று பொழுது சாய்வதற்கு முன்பு, கையிலும் காலிலும் பேன்டேஜ் இட்ட ஒரு மனிதன் வீட்டிற்கு வருவான் என்பதாக அவர் பார்த்தார். அப்போது உயர்ந்தொலித்த கூப்பாடுகளையும், அழுகைச் சத்தத்தையும் பேச்சுக்களையும் அவர் தெளிவாகக் கேட்டார். அவையனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு படுத்திருந்தபோது, ஆபத்தில் சிக்கி வந்திருப்பது மருமகன் சோமன் நாயர் அல்லாமல் வேறு யாருமல்ல என்ற விஷயமும் அவருக்குத் தெரிந்தது.

யாரிடமாவது இதைக் கூறினால், முட்டாள்தனமான விஷயமென்று நினைப்பார்கள் என்பது தெரிந்திருந்ததால், பிள்ளை யாரிடமும் எதுவும் கூறுவதற்கு முயற்சிக்கவில்லை. ஆனால், அன்று மாலை ஸ்கூட்டரிலிருந்து விழுந்து கையிலும் காலிலும் சிறு சிறு காயங்களுடன் பேன்டேஜுடனும் சோமன் நாயரை வீட்டிற்குச் கொண்டு வந்தார்கள். முன்பு பிள்ளை கேட்ட அழுகைச் சத்தமும் பேச்சும் சிறிது கூட மாறாமல் மீண்டும் செவியில் வந்து மோதின.

அதைத் தொடர்ந்து பிள்ளையின் மனம் சுறுசுறுப்பாகிவிட்டது. எதிர்காலத்தை நோக்கி கண்களைத் திறந்து கொண்டு அமர்ந்திருந்தபோது, இரவு ஒன்பது மணிக்கு வீட்டில் மின்சாரம் இல்லாமல் போவதையும், அரை மணி நேரம் கழித்து திரும்பவும் விளக்குகள் எரிவதையும், பத்தரை மணிக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நற்செய்தியுடன் ஆஷாவின் தந்தை ஆர்.பி.பி. மேனன் வீட்டிற்கு வந்ததையும், பன்னிரண்டு மணிக்கு சற்று முன்பு சாலையில் ஒரு ஃபயர் எஞ்ஜின் மணியடித்துக்கொண்டு அலறிப் பாய்ந்து போய்க் கொண்டிருந்ததையும் அவர் முன்கூட்டியே பார்த்தார். மூன்றும் அதேமாதிரி நடந்தன.

அன்றிரவு பிள்ளையைப் பொறுத்தவரையில், மகிழ்ச்சியானது அதன் எல்லா அர்த்தங்களிலும் தோன்றி கிளைபரப்பிக் கொண்டிருந்தது. அந்த அபூர்வ சக்தியை நீடித்திருக்கச் செய்யவும் அதை வளர்த்தெடுக்கவும் செய்தால், தான் இவ்வளவு காலமும் சந்தித்த அவமானமும் வேதனையும் முற்றிலும் விலகிவிடும் என்பதையும், அதன் இடத்தில் பாராட்டும் வழிபாடும் நிறைந்து நிற்குமென்பதையும் தெரிந்து கொள்வதற்கு பிள்ளை அதிகம் சிரமப்படவில்லை. தூக்கம் வராமல் படுத்திருந்தபோது, பல வருடங்களுக்குப் பின் தான் மறுநாள் அதிகாலையில் நடப்பதற்காக வெளியேறிச் செல்வதை பிள்ளை பார்த்தார்.

வீட்டில் யாருக்காவது தெரிந்தால் சம்மதிக்க மாட்டார்களென்பது நிச்சயம். அதனால் எல்லாரும் விழிப்பதற்கு முன்பே வெளியேறிவிட்டார். பல நாட்களுக்குப் பிறகு வாசலுக்கு வெளியே அவர் வருகிறார். சரியாகக் கூறுவதாக இருந்தால், பதினேழு வருடங்களும் ஒன்பது மாதங்களும் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் சாலையில் பெரிய மாறுதல்கள் உண்டாகிவிட்டிருக்கின்றன. இடது பக்கமாகத் திரும்பி நடந்தபோது, பல மாடிகளைக் கொண்ட பெரிய கட்டடம் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதற்கப்பால் முன்பு தரிசாகக் கிடந்த மலையடிவாரத்தில் ஒரு மாதிரியான அமைப்பில் கட்டப்பட்டிருந்த ஏராளமான க்வார்ட்டர்ஸ்... அதையும் தாண்டிச் சென்றால், சாலை இரண்டாகப் பிரிந்தது. வலது பக்கமாக சென்ற பாதையில் நடந்து சென்று மீண்டும் புதிய காட்சிகளைக் கண்டார். ட்ராக் ஷூட் அணிந்து ஓடிக் கொண்டிருந்த இளைஞர்களும், அதிகாலை நடைக்காக வந்த நடுத்தர வயதைக் கொண்டவர்களும் பிள்ளையைப் பொருட்படுத்தவில்லை. சாலையின் இரு பக்கங்களிலும் பெரிய மரங்கள் இலைகளை உதிர்த்து நின்றிருந்தன. அவற்றில் அமர்ந்து காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. எச்சங்களை இட்டன. ஒரு எச்சம் சரியாக பிள்ளை அணிந்திருந்த சட்டையின் காலரின்மீது வந்துவிழுந்தது. அதைத் துடைத்துவிட்டு மீண்டும் நடந்தபோது ஸ்டேடியம் வந்தது. பிள்ளை ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார். ஸ்டேடியத்தில் நல்ல உடல்நலத்தைக் கொண்டவர்கள் வந்துசேர ஆரம்பித்திருந்தார்கள். தூரத்தில்... தூரத்தில் சிலர் ‘புஷ் அப்’ எடுத்துக் கொண்டோ, ஓடிக் கொண்டோ இருப்பதைப் பார்த்தார். அவர்களுனைவரும் அவரவர்களுடைய உலகங்களில் இருந்தால், யாரும் பிள்ளையை கவனிக்கவில்லை.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel