Lekha Books

A+ A A-

ஜலசமாதி

jala samaadi

த்ம சாந்தியைத் தேடிக் கிளம்பியிருக்கிறான். வயது அறுபதை நெருங்கியிருக்கிறது. முடி முழுவதும் நரைத்துவிட்டது. காலம் உண்டாக்கிய மாறுதல்கள் பாலசந்திரனிடம் நன்றாகவே தெரிகின்றன. உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி மாறிக் கொண்டிருக்கிறது.

மது அருந்தும் பழக்கத்தை அவன் முழுமையாக நிறுத்திவிட்டான். கஞ்சா புகைப்பதையும் நிறுத்திக் கொண்டு விட்டான்.

மாமிசம், மீன் போன்றவற்றைச் சாப்பிடுவதை நிறுத்தி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. பெண் உடம்பின்மீது இருக்கும் ஆசை மீதும் வெறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. எந்தவொரு மாயமோகினியாலும் பாலசந்திரனை இனிமேல் இன்பம் கொள்ளச் செய்ய முடியாது. அவன் சிற்றின்ப விஷயங்களைத் தாண்டி அன்புப் பரவச அனுபவத்தை அடைய நினைத்திருக்கிறான். எல்லையற்ற அன்பு. அதை அடைவதற்கான ஒரே வழி மனதில் இருக்கும் காம எண்ணங்களை முழுமையாக இல்லாமல் செய்து ஆன்மிக வழியில் முன்னோக்கிப் போவதுதான்.

இந்த அலைபாயும் மனதை நிலையாக ஒரே இடத்தில் இருக்கும்படி மாற்றுவதற்கான சரியான வழிகளைத் தேடி அவன் இப்போது புறப்பட்டிருக்கிறான். இதுவரை செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்தாகிவிட்டது. இப்போதும் எத்தனையோ சபலங்கள் அவனை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன. ஆசைகளுக்கு முடிவு ஏற்பட்டு விடவில்லை. ஆசைகளைக் கட்டுப்படுத்த அவன் முயற்சி செய்துகொண்டிருக்கிறான். உயரங்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் இப்போதும் அவனை விட்டுப் போகவில்லை. புகழ்பெற்ற மனிதனாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஆளாக வரவேண்டும் என்ற பலமான ஆசைக்கு முடிவு கட்ட அவனால் முடியவில்லை. பொறாமை என்ற போர்வையைப் பிடித்துக் கிழித்தெறிய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருக்கிறது. ஆணவம் என்பதே இல்லாத ஒரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் முயற்சிக்கிறான். நம்பிக்கை மோசம்... அதை இப்போது அவன் இல்லாமல் செய்ய வேண்டி இருக்கிறது. இங்கு சொல்லப்பட்டவை அனைத்தும் இப்போதுகூட பாலசந்திரனின் குணத்தை விட்டு முழுமையாகப் போய்விடவில்லை.

பயணம் செய்ய வேண்டும். பயணம் செய்து கொண்டிருப்பதற்கு மத்தியில் எங்கேயாவது படுத்து இறக்கவேண்டும். கஷ்டமே இல்லாத மரணத்திற்காக அவன் கடவுளிடம் வேண்டிக் கொள்வதுண்டு. யாருக்கும் ஒரு தொந்தரவும் தராமல் திடீரென்று கண்களை மூடிவிட வேண்டும். வேண்டியவர்களிடம் இனிமேல் விடைபெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இதுவரை ஆட்சி செய்து கொண்டிருந்தது கோபமும் காமமும்தான். திடீரென்று தன்னை வந்து ஆக்கிரமித்த கோபத்திற்கு அடிமைப்பட்டு எத்தனையோ செய்கைகளைச் செய்தாகிவிட்டது. மன்னிக்க முடியாததால்தான் கோபம் அங்கிருந்து கிளம்பிவிட்டது. மன்னிக்க வேண்டும் என்று பலமுறை உபதேசம் செய்யப்பட்டிருப்பதுதான். மன்னிக்கப்பட்டவனே, பெற்றுக்கொள். நீ மன்னிக்கப்படாதவன். அதனால் கிடைக்க வேண்டிய பல விஷயங்களும் கிடைக்காமலே போய்விட்டன. கிடைக்க வேண்டிய பலவும் தடுக்கப்பட்டுவிட்டன.

தந்தை உபதேசித்திருந்தார்- விருப்பமில்லாததைப் பார்க்க நேரும்போது, எதிர்வினையாற்ற வேண்டுமென்று. அநீதியான செயல்கள் நடப்பதைப் பார்க்கும்போது, எதிர்வினை ஆற்றாதவன் மனிதனே அல்ல என்பதை நிரூபிப்பதற்காக அவன் சிரமப்பட்டான். குருநாதர் கூறியது வேறொன்று. மவுனம். மவுனத்தால் அடைய முடியாதது எதுவுமில்லை என்று அவர் கற்றுத் தந்தார். அந்த மூன்று பேர்களின் கருத்துகளையும் பாலசந்திரன் மதித்து நடந்திருந்தால் இன்றைய கஷ்டங்கள் அவனுக்கு வந்திருக்கவே வந்திருக்காது.

இப்போது அதைப் பற்றிப் பேசி பிரயோஜனமே இல்லை. தாய் தந்தையும் குருவும் இந்த உலகத்தைவிட்டு விடைபெற்று எத்தனையோ வருடங்கள் கடந்து போய்விட்டன.

பாலசந்திரனின் புனிதப் பயணத்தின் இலக்கே மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ அடையக்கூடிய ஒன்றல்ல அது. அது ஒரு நீண்ட தவம் என்றுதான் கூறவேண்டும். முழுமையான பணிவு அதற்கு முதலில் வேண்டும். மனமும் உடலும் ஒன்றோடொன்று இரண்டறக் கலக்க வேண்டும். அதற்கு ஒரு சிறிய அளவில் இந்தப் பயணம் பயன்படும்.

மரணத்தைத் தழுவிய தன்னுடைய தந்தை, தாய் ஆகியோரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக எத்தனையோ சடங்குகளை அவன் செய்திருக்கிறான். எனினும், சாந்தி கிடைக்கவில்லை. எங்கோ என்னவோ சில குறைகள் இருக்கின்றன. பாலசந்திரனுக்குத் தேவைப்படும் அளவிற்கு அனுக்கிரகங்கள் கிடைக்கவில்லை. சன்னியாசி வேடம் அணிந்திருக்கும் காரணத்தால் மட்டும் ஒரு மனிதன் சன்னியாசி ஆகிவிடுவதில்லை. சன்னியாசி ஆகவேண்டுமென்றால் அதற்கு வேறுசில விஷயங்களும் வேண்டியிருக்கின்றன. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றைப் பற்றி அவனுக்கு அவ்வளவாகத் தெரியாது.

புத்தன்களத்தில் பாலசந்திரமேனன் (பாலானந்தயோகி) காவிஉடை அணிய ஆரம்பித்து நாட்கள் எவ்வளவோ ஆகிவிட்டன. தேவையான அளவிற்குப் பணத்தை மடியில் கட்டி வைத்துக்கொண்டு அல்ல அவன் பயணத்தை ஆரம்பித்தது. இனியொரு முறை தான் பிறந்த ஊருக்கு திரும்பி வரவேண்டும் என்ற ஆசையெல்லாம் அவனுக்கு இல்லை.

இமயமலையில் அமைந்திருக்கும் ரிஷிகேஷிலிருக்கும் சிவானந்தா ஆசிரமத்தில் போய் தங்கியிருக்கக் கூடிய ஒரு ஆளாகத் தான் ஆக வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசை. இமயமலையில் தவம் இருப்பதைப் பற்றி அவன் வெறுமனே கேள்விப்பட்டிருக்கிறான். அவ்வளவுதான். தபோவன சுவாமிகள் இமயமலையில் தவமிருந்து உயிர்த் தியாகம் செய்த கதையைப் புத்தகத்தின் வாயிலாகப் படித்து அவன் மனதில் அதை ஆழமாகப் பதிய வைத்திருந்தான். அதே நேரத்தில் குளிர், ஆசைகள் போன்றவற்றைக் கடந்து தவம் செய்து கொண்டிருப்பதற்கான சக்தி தனக்கு இருக்கிறதா என்ற விஷயத்தில் பாலானந்த யோகிக்குச் சந்தேகம் இருக்கவே செய்தது. முன்பு பி.கே.பி. என்ற பெயரில் கேரளம் முழுவதும் அறியப்பட்டிருந்த தான் ஒரு நாள் சன்னியாசத்தை ஏற்றுக்கொண்ட விஷயத்தைக் கேள்விப்படுபவர்கள் யாராவது அதை நம்புவார்களா? என்ன காரணத்திற்காக பி.கே.பி. என்று அறியப்படும் எழுத்தாளர் சன்னியாசியாக மாற வேண்டும்? அப்படி யாராவது எங்காவது வைத்து சில கேள்விகளைக் கேட்பார்கள் என்ற சந்தேகத்திற்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை. எவ்வளவோ மனிதர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக சன்னியாசியாக மாறுகிறார்கள். சிலர் வாழ்க்கை மீது கொண்ட வெறுப்பு காரணமாகவும் காவி ஆடைகளை எடுத்து அணிவதுண்டு. ஆழமான சிந்தனைக்குப் பிறகு சன்னியாசிகள் உருவாவதுமுண்டு. உலக மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகச் சன்னியாசத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இல்லாமலில்லை. கவலைகளிலிருந்து விடுபட்டு ஓடி ஒளிய வேண்டும் என்பதற்காகச் சன்னியாசியாக மாறியவர்களும் இருக்கிறார்கள். சன்னியாசிகள் பல வகைப்பட்டவர்கள். அவர்களைப் பற்றி பொதுவாகவே ஒருவகையான அவநம்பிக்கை பாலசந்திரனிடம் இருக்கவே செய்கிறது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel