Lekha Books

A+ A A-

ஞாபகம் - Page 2

ஆனால், தன்னுடைய முதல் காதலைப் பற்றி கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து வைத்திருக்கும் அவளிடம், இப்போது முதுமையை அடைந்திருக்கும் வேளையில் அந்தப் பெயரைக் கேட்பதில் இருக்கக்வடிய மோசமான நிலையையும், அதனால் உண்டாகப் போகிற வேறு ஆபத்துகளையும் முன்கூட்டியே யூகிக்க முடிகிற காரணத்தால், பிள்ளை அந்த முயற்சியில் இறங்க வில்லை. அதுமட்டுமல்ல; யாருடைய உதவியும் இல்லாமலே அந்தப் பெயரை நினைவில் கொண்டு வர வேண்டுமென்பது ஒரு பிடிவாதமாக பிள்ளையைத் பின் தொடர ஆரம்பித்தது. மனதை எப்போதும் அந்த ஒரு புள்ளியிலேயே நிறுத்தி வைத்துக் கொண்டு, அவர் அந்தக் கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பதற்கு முயற்சித்தார்.

ஆனால், அது மேலும் பிரச்சினைகளுக்கு வழி உண்டாக்கிக் கொடுத்தது. பொதுவாகவே கூர்மையான அறிவைக் கொண்ட அவர், தன்னுடைய எல்லா சக்திகளையும் ஒரே முனையில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு, நாட்களை தள்ளி நகர்த்துவதற்கு ஆரம்பித்தபோது, உடன் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் வீட்டிலிருப்பவர்களுக்கும் பதைபதைப்பையும் மனவேதனையையும் உண்டாக்கிய எவ்வளவோ சம்பவங்கள் நடைபெற்றன.

எந்த தொலைபேசி எண்ணையும் நாவின் நுனியில் வைத்திருப்பதைப்போல எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த ஆள் சங்கரநாராயணப் பிள்ளை. உடன் பணியாற்றுபவர்கள் தொலைபேசி டைரக்டரியை நம்பிக் கொண்டிருக்காமல், பெரும்பாலும் பிள்ளையிடம் கேட்டுத்தான் ஐந்து எண்களை வாங்குவார்கள். பழைய வழக்கத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கேட்டபோது, பிள்ளை உறக்கத்திலிருந்து எழுவதைப்போல திடுக்கிட்டு கண்விழித்து, தொலைபேசி எண்களுக்காக பதறிக் கொண்டிருப்பார். பல நேரங்களில் அவர் கூறிய எண்கள் தவறாக இருந்தன. பைல்களை அடுக்கி வைப்பதிலும், நோட்டுகள் தயார் செய்வதிலும் அசாதாரணமான கவனத்தையும் திறமையையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் பெரும்பாலான நேரங்களில் சிறுசிறு தவறுகள் உண்டாவதை மேலதிகாரிகள் முதலில் கனிவாகவும், பிறகு... பிறகு... கடுமையாகவும் சுட்டிக்காட்டினார்கள்.

வீட்டிலும் பல அபத்தமான விஷயங்களும் நடைபெற்றன. ஒருநாள் தன்னுடைய டூத் பிரஷ்ஷின் நிறத்தை மறந்து போய்விட்ட அவர், மிகவும் சிரமப்பட்டுப் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியும்தான் மனைவிக்கு அந்த விஷயத்தையே கூறாமல் காரியத்தை சாதித்தார்.

பின்னர் ஒருமுறை வானொலியின் ‘பேண்ட்’ என்னவென்பதை மறந்துவிட்டு, சிறிது நேரம் திருகிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. வீட்டிலிருக்கும் அறைகளின் சாவிகளுக்கிடையே தவறுகள் உண்டாக ஆரம்பித்தன. அந்த நேரங்களிலெல்லாம் மனம் பிடி கொடுக்காமல் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் பெயரைப் பற்றியே திரம்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தது.

23 நாட்களின் சிரமங்களுக்கும் கவலைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகு, அவருடைய அந்தப் பெயர் ஒரு அருளைப் போல கிடைத்தது வனஜா.

வயது அதிகமான காரணத்தால்தானே தனக்கு இந்த ஞாபகக் குறைபாடே உண்டானது என்ற விஷயம் பிள்ளைக்குத் தெரிந்திருந்தது. வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று நான்கு வருடங்கள் இருக்கின்றன. வாசிப்பதற்கு கண்ணாடி பயன்படுத்த ஆரம்பித்ததே மிகவும் சமீபத்தில்தான். ஆங்காங்கே சிறுசிறு நரைமுடி தெரிகிறதென்று கூற முடியுமே தவிர, முற்றிலும் நரைத்துவிட்டதென்று கூறமுடியாது. பற்களுக்கும் கேடு எதுவும் உண்டாகியிருக்கவில்லை. பிறகு எப்படி இந்த ஞாபக மறதி,

தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மிகப் பெரிய ஆபத்த வேறு யாருக்கும் தெரியக் கூடாதென்று தனிப்பட்ட முறையில் பிள்ளை விரும்பினார். யாருக்கும் தெரியாமல் ஞாபக சக்தியையும், நாடி- நரம்புகளையும், மூளையையும் பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார். அதிகமாக புகைபிடிப்பவர்கள் மத்தியில் ஒரு சிறிய சதவிகிதத்தினருக்கு இப்படியொரு ஆபத்து ஏற்பட வழியிருக்கிறதென்ற விஷயத்தை எங்கேயோ படித்ததைத் தொடர்ந்து, எப்போதாவது புகை பிடிக்கக்கூடிய பழக்கத்தைக்கூட (நாளொன்றுக்கு அதிகபட்சம் ஐந்து) விட்டுவிட்டார். அதற்குப் பிறகும் தவறு நடக்கவே செய்தது. புகை பிடிப்பதை நிறுத்திவிட்ட விஷயத்தை மறந்துவிட்டு, ஒரு நாள் ஒரு நண்பரின் கையிலிருந்து சிகரெட்டை வாங்கிப் புகைத்துவிட்டார்.

அலுவலகத்தில் அவருக்கென்றிருந்த இமேஜ் திடீரென்று சரிய ஆரம்பித்தது. பிள்ளைக்கு ஏதோ குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதென்று உடன் பணியாற்றுபவர்களும் மேலதிகாரிகளும் ரகசியமாக தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். காரணம்- ஞாபகப் பிசகால் அவர் உண்டாக்கிய அபத்தங்களின் பட்டியல், நாட்கள் ஆக ஆக அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எலியாம்மா ஃபிலிப்பை, சாராம்மா ஜார்ஜ் என்று பெயரை மாற்றியழைத்த சம்பவம் அலுவலகத்தில் பெரிய ஒரு பேச்சக்கான விஷயமாக ஆனது.

அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறி வெளியேறிவிட்டு, அந்த விஷயத்தையே மறந்துவிட்டு மார்க்கெட்டுக்குச் சென்று ஒரு பை நிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த நாளன்று மனைவி அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டாள். பின்னர் ஒருமுறை எத்தனையோ வருடங்களாக சிறிதும் தவறாமல் பேருந்தை எதிர்பார்த்து நிற்கும் நிறுத்தத்தை மாற்றிவிட்டு, வேறொரு நிறுத்தத்திற்குச் சென்று நின்றதன் விளைவாக அலுவலகத்திற்குச் செல்வது தாமதமாகிவிட்டது. இன்னொரு முறை, மேலிடத்திற்கு மிகவும் முக்கியமாக அனுப்பி வைக்கப்பட வேண்டிய ஒரு ஃபைல் அங்கு போய் சேராமல், அலுவலகம் முழுவதும் அதை மூலைமுடுக்கெல்லாம் தேட வேண்டிய சூழ்நிலை உண்டானது. இரவில் வீட்டில் வந்து பார்த்தபோது, ப்ரீஃப்கேஸில் அந்த ஃபைல் இருந்தது.

இவ்வாறு... இவ்வாறு... நூறு... நூறு சம்பவங்களின் காரணமாக அலுவலக வாழ்க்கை தாங்கிக் கொள்ள முடியாததாகவும், கேலியும் கிண்டலும் நிறைந்த இடமாகவும் மாற ஆரம்பித்தபோது, யாரிடமும் ஆலோசனை கேட்காமலேயே இறுதியில் சங்கர நாராயணப் பிள்ளை விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டார்; வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த விஷயத்தையே மறந்து விட்டு மறுநாளும் இயந்திரத்தனமாக அலுவலகத்திற்குப் புறப்பட்டாலும், பேருந்தில் இருந்தபோதே விஷயம் ஞாபகத்திற்கு வந்த காரணத்தால், ஒரு பெரிய கேலிக்குரிய சம்பவத்தைத் தவிர்க்க முடிந்தது.

வெளியே காண்பதற்கு மேலாக, முற்றிலும் வித்தியாசமான- பயங்கரமான ஏதோ தகராறு அவளுக்கு உண்டாகி விட்டிருக்கிறதென்ற விஷயம் இதற்குள் கமலம்மாவிற்கும் ஷைலஜாவிற்கும் ஷைலஜாவின் கணவன் சோமன் நாயருக்கும் புரிந்துவிட்டிருந்தது. முதலில் பதைபதைப்பும் கவலையும் உண்டானாலும், போகப் போக அவர்கள் அந்த யதார்த்த நிலையுடன் ஒன்றுசேர்ந்து பயணிக்கப் பழகிக் கொண்டனர். மாதத்தின் ஆரம்பத்தில் பென்ஷன் வாங்குவதற்குச் செல்ல வேண்டுமென்ற விஷயத்தை பிள்ளை மறந்து போகாமல், மனைவி ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள். எனினும், கணக்கும் செயலும் தவறுகிறதென்பதைத் தெரிந்து கொண்டு, ஒரு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் மூலம் அதைப் பெற வழி ஏற்படுத்திக் கொண்டாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel