Lekha Books

A+ A A-

ஹேர்பின்

hairpin

“என் அன்பிற்குரிய நண்பனே, இந்தப் பெண் என்ற இனமே பயங்கரமானது.”

“ஏன் அப்படிச் சொல்றே?”

“அவர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்களே!”

“உன்னிடமா?”

“ஆமா... என்னிடம்தான்.”

“பெண்களா? இல்லாவிட்டால் பெண்ணா?”

“இரண்டு பெண்கள்.”

“ஒரே சமயத்தில் இரண்டு பெண்களா?”

“ஆமாம்.”

“அவர்கள் என்ன செய்தார்கள்?”

அந்த இரண்டு இளைஞர்களும் பொலி வார்டுக்கு வெளியே இருந்த ஒரு கஃபேயில் உட்கார்ந்து மதுவில் நீர் கலந்து பருகிக் கொண்டிருந்தார்கள். நீர் வண்ணப் பொருட்களை ஒன்றாகப் போட்டுக் கலந்து விட்டதைப்போல இருந்தது அந்த மதுவின் நிறம். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இருபத்து ஐந்துக்கும் முப்பதுக்கும் இடையில். ஒருவன் கருப்பு நிறத்தில் இருந்தான். இன்னொருவன் வெள்ளையாக இருந்தான். தரகு வேலை பார்ப்பவர்களைப்போல அவர்களுடைய நடவடிக்கைகள் இருந்தன. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிற்குள்ளும் வரவேற்பு அறைகளுக்குள்ளும் நுழைந்து செல்லும், எந்த இடத்திலும் வசிக்கக்கூடிய, எங்கும் பார்க்க முடிகிற, எந்த இடத்திலும் காதலில் ஈடுபடும் நிலையில் இருக்கும் மனிதர்களாக இருந்தார்கள் அவர்கள். அவர்களில் கருப்பாக இருந்த மனிதன் இப்படித் தொடர்ந்து சொன்னான்.

“டிப்பேயில் எனக்கு அறிமுகமான அந்த இளம் அழகியை... அந்த வியாபாரிகள் மனைவியைப் பற்றி நான் உன்னிடம கூறியிருக்கேன்ல?”

“ஆமா...”

“என் நண்பனே, அது எப்படி நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா? பாரிஸில் எனக்கு ஒரு காதலி இருக்கிறாள். என்னுடைய ஒரு பழைய சினேகிதி... அவள் எனக்கு நன்கு பழக்கமானவள்... உண்மையாகச் சொல்லப் போனால், நான் மிகவும் மதிக்கிற ஒருத்தி.”

“உன் சினேகிதியா?”

“ஆமாம்... நான் வழக்கமா பழகுற ஒருத்தி. அவளுக்கு அதே மாதிரி நான். அவளுடைய கணவன் திறமையானவன். நல்ல ஒரு மனிதன். பணக்காரன். அவன்மீது எனக்கு பெரிய மதிப்பு உண்டு.”

“அப்படியா?”

“ம்.... ஆனால், அவர்களால் பாரீஸை விட்டுப் போக முடியவில்லை. நான் டிப்பேயில் மனைவி இல்லாமல் வாழ்ந்தேன்.”

“நீ ஏன் டிப்பேயிக்குப் போனே?”

“ஒரு சின்ன மாறுதலுக்காக. இந்த நகரத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது என்பது யாருக்கும் சோர்வைத் தருகிற ஒரு விஷயமே.”

“அதற்குப் பிறகு?”

“அப்போது கடற்கரையில் நான் முன்பு சொன்ன அந்தப் பெண்ணைச் சந்திச்சேன்.”

“ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவரின் மனைவி...”

“ஆமாம். அவள் மிகவும் கவலையில் இருந்தாள். அவளுடைய கணவன் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வீட்டுக்கு வருவான். அவன் ஒரு மடையன்! எனக்கு விஷயம் முழுவதும் புரிஞ்சிடுச்சு. நாங்கள் சிரித்தும் விளையாடியும் சந்தோஷம் கண்டோம். ஒன்றாக நடனம் ஆடினோம்.”

“அதற்குப் பிறகு?”

“ம்... அது பின்னால்தான் நடந்தது. எனினும், நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம். விரும்பினோம். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு நான் அவளிடம் சொன்னேன். அதைத் திரும்பவும் சொல்லும்படி அவள் என்னிடம் கேட்டுக் கொண்டாள். என் வழியில் அவள் எந்தவொரு தொந்தரவும் உண்டாக்கவில்லை.”

“நீ அவளை உண்மையாகவே காதலிச்சியா?”

“ஆமா... முழுமையா... அவள் நல்ல பெண்...”

“சரி... இருக்கட்டும். நீ அவளைப் பற்றி சொல்லு.”

“அவள் பாரீஸ்ல இருந்தாள். ம்.. ஆறு வாரங்கள் மிகவும் சந்தோஷமான நாட்களாக இருந்தன. மிகவும் நெருங்கிய உறவுடன் இருந்து நாங்கள் திரும்பி வந்தோம். ஒரு பெண் உன்னிடம் தவறு எதுவும் செய்யவில்லை என்றால் கூட அவளைக் கழற்றி விடுவது எப்படி என்பது உனக்குத் தெரியுமா?”

“ம்... நல்லா தெரியும்.”

“அப்படின்னா சொல்லு... நீ எப்படி அவளைச் கழற்றி விடுவே?”

“நான் அவளை விட்டு ஓடிடுவேன்.”

“ம்... அதை எப்படிச் செயல்படுத்துவே?”

“அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவே மாட்டேன்.”

“ஆனால், அவள் உன்னைத் தேடி வருவாள்னு வச்சுக்கோ. அப்போ?”

“அப்போ நான் வீட்டில் இருக்க மாட்டேன்.”

“அவள் திரும்பவும் வந்தால்...?”

“எனக்கு உடல்நலம் இல்லைன்னு சொல்லுவேன்.”

“சரி... இருக்கட்டும். அவள் உன்னைக் கவனிக்க ஆரம்பிச்சுட்டா...?”

“நான் ஏதாவது ஒரு பொய் சொல்லுவேன்.”

“அவள் அதையும் பொறுத்துக் கொள்ளத் தயாரானால்?”

“நான் அவளுடைய கணவனுக்கு ஊமைக் கடிதம் எழுதுவேன். மீதி விஷயங்களை அவன் பார்த்துக் கொள்வான்.”

“அது மிகவும் பயங்கரமான விஷயம். என்னால் அதைச் செய்ய முடியாது. எப்படி உறவை முறித்துக் கொள்வது என்பது எனக்குத் தெரியவில்லை. அதனால் ஏராளமான காதலிகள் எனக்கு இருக்கிறார்கள். வருடத்தில் ஒரு முறைக்கு மேல் என்னுடன் தொடர்பு கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். பத்து மாதங்கள் ஆனவுடன் தொடர்பு கொள்பவர்கள் இருக்கிறார்கள். இனி வேறொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு விருப்பமான நாட்களில் ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு ஒன்று சேர்ந்து இருப்போம். நிரந்தரமாக நான் தொடர்பு வைத்திருக்கும் சினேகிதிகள் என்னைத் தொல்லைப் படுத்துவதில்லை. ஆனால், புதிய பெண்களை சரியான நேரத்தில் சரியான முறையில் கையாள்வது தான் சிரமமான விஷயம்.”

“பிறகு?”

“பிறகு... பிறகு அந்த இளம் பெண் ஒரேயடியா எரிந்து படர ஆரம்பிச்சிட்டா... அவளுடைய கணவன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதால், முன்கூட்டி அறிவிக்காமலே அவள் என் வீட்டிற்கு வந்துட்டா. இரண்டு தடவை பெரும்பாலும் அவள் என் நிரந்தரக் காதலியை படிகளில் ஏறி வர்றப்போ பார்த்திருக்கிறாள்.”

“ஓ.. ச்சே...”

“ஆமாம். அதனால் தேவையில்லாத பிரச்சினைகள் எதுக்குன்னு நான் அவர்களுக்கு சரியான நாட்களை நிச்சியத்தேன். பழைய பெண்ணுக்கு சனிக்கிழமையும் திங்கட்கிழமையும் என்று முடிவு செய்துவிட்டு, புதியவளுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களை ஒதுக்கினேன்.”

“புதியவளுக்கு நீ எப்படி முன்னுரிமை தந்தே?”

“அதுவா? என் நண்பனே, அவள்தானே வயதில் இளையவள்?”

“அப்படின்னா, உனக்கு சுதந்திரம் இரண்டு நாட்களுக்கு மட்டும்தான்.”

“ஓ! ஒரு மனிதனக்கு அது தாராளமா போதும்.”

“ஓ... உன்னைப் பாராட்ட என்னை அனுமதி நண்பா! எனக்கு அதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.”

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel