Lekha Books

A+ A A-

ஞாபகம்

ஞாபகம்

பி.பத்மராஜன்

தமிழில் : சுரா

சில நாட்களுக்கு முன்பு-

சங்கரநாராயணப் பிள்ளையும் அவரது குடும்பமும், தேசிய நெடுஞ் சாலையின் வழியாக வாடகைக் காரில் திருவனந்தபுரத்திலிருந்து கற்றானம் என்ற இடத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளை முன்னிருக்கையில் கனத்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பின்னிருக்கைகளில் மனைவி கமலம்மாவும் மகள் ஷைலஜாவும் மகளின் கணவன் சோமன் நாயரும் அவர்களுடைய குழந்தை ப்ரீதியும்... எல்லாருடைய முகங்களிலும் இறுகிய தன்மையும் கண்ணீரால் உண்டான சிறிது ஈரமும்...

குடும்பத்தில் நீண்டகாலத்திற்குப் பிறகு நடக்கும் ஒரு மரணம் என்பதைத் தாண்டி அந்த அளவுக்கு மிகவும் கவலைப்படக்கூடிய எதுவும் நடைபெறவில்லை. சங்கர நாராயண பிள்ளையின் அத்தை, அதாவது அப்பாவின் சகோதரி கெ.எம்.கவுரியம்மா தான் தன்னுடைய எழுபத்து மூன்றாவது வயதில் முதுமையினால் மரணமடைந்து விட்டாள். பிள்ளையும் வந்து சேர்ந்த பிறகுதான் பிண அடக்கம் நடக்குமென்ற தகவல் கிடைத்ததும், இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சாதாரணமாகவே வெளிப்படுத்தக்கூடிய அவசரம், பரபரப்பு ஆகியவற்றை நிரப்பிக் கொண்டு, வாடகைக்காரைப் பிடித்து புறப்பட்டுவிட்டார்.

பாரிப்புள்ளியை நெருங்கியபோது, பிள்ளையின் மனம் எங்கெங்கோ பறந்து விட்டு, அத்தையின்மீது வந்து விழுந்தது. தந்தை இறக்கும் வரை அவளுடன் கொண்டிருந்த உறவு கிட்டத்தட்ட ஆழமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகும் இடையில் அவ்வப்போது விடுமுறைக்குச் செல்லும்போது பார்ப்பார். கடைசி கடைசியாகப் பார்த்தது ஒரு ஓணத்திற்கு துணி எடுத்துக் கொண்டு சென்றபோதுதான். ஜரிகை கரைபோட்ட ‘முண்டை’ (வேட்டி) விரித்துப் பார்த்து விட்டு அத்தை கேட்டாள்: ‘இப்போ எனக்கு எதுக்குடா குழந்தை, ஜரிகையும் மேல்துண்டும்?’

‘அத்தை, நீங்க வெளியே போறப்போ அணிய வேண்டாமா? கறால் கடையில் வாங்கிய முண்டு.’

‘ஓ... இனி போறதுக்கு ஒரே இடம்தான் இருக்கு...’ அத்தை அதைக் கூறியபோது, அவளுடைய கண்கள் நிறைந்தது. அதைப் பார்த்ததும் பிள்ளைக்கும் மனதில் வேதனை உண்டானது.

இளம் வயதில் அத்தைக்கு, அவளுடைய மகன் பிரபாகரைவிட பிள்ளையின் மீதுதான் விருப்பம். எதிர்காலத்தில் தன் பிள்ளைகளின் பாதுகாவலராக, அத்தை அப்போது தீர்மானித்து வைத்திருந்ததும் சங்கர நாராயணனைத்தான். பிரபாகரன் தேவையற்ற செயல்களைச் செய்து ஊரில் சிறிது சிறிதாக கெட்ட பெயர் எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் அத்தை மனம் வெதும்பிக் கூறினாள்: ‘நீ யாரையாவது குத்திவிட்டு சிறைக்குப் போய்விட்டாலும், என் மகளுக்கு சங்கர நாராயணன் இருக்கிறானே என்ற ஒரு நிம்மதி இருக்கு.’ அதைக் கேட்டபோது தன்னுடைய முகத்தில் ரத்தம் பாய்ந்தோடியதையும், தொடர்ந்து சரீரம் முழுவதும் ஒரு உஷ்ணம் பரவியதையும் சங்கரநாராயணப் பிள்ளை இப்போதும் நினைத்துப் பார்க்கிறார். அத்தையின் மகளுக்கும் அவருக்குமிடையே நினைத்துப் பார்க்க முடியாத ஒருவகை நெருக்கம் தோன்றத் தொடங்கிய நாட்கள் அவை. மாமாவின் மகள் என்பதைப்போல, அத்தையின் மகளும் நாயர்களுக்கு முறைப்பெண்தானே!

அன்னியர் என்ற நினைப்புடன் பெண் ஒருத்தியின் சரீரத்தை முதல்முறையாகத் தொட்டது அவளுடைய சரீரத்தைதான். இறுதியில் கைனிக்கரையைச் சேர்ந்த கோவிந்தக்குறுப்பு என்ற நிலாச்சுவான்தாருக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்பிய போது, அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்று சிந்தித்தார்.

முப்பது... முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த அந்த வியர்வைத் துளிகளின் ருசி இப்போதும் நாக்கில் வந்து நிறைவதைப்போல சங்கரநாராயணப் பிள்ளைக்குத் தோன்றியது. தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்து அதிக வருடங்கள் ஆகிவிட்டாலும், அவளுடைய முகம் இப்போதும் அப்படியே மனதில் தோன்றிக் கொண்டிருக்கிறது.

இன்று உண்மையாகவே அவளைச் சந்திக்காமலிருக்க வாய்ப்பில்லை. அம்மா இறந்துவிட்டாள் அல்லவா? வருவாள். அழுது கூப்பாடு போட்ட முகத்துடன் தன் தாயின் இறந்த உடலுக்கு அருகில் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் அவளுடைய உருவத்தை இப்போதே பார்க்க முடியுமென்று தோன்றியது.

திடீரென்று சங்கரநாராயணப் பிள்ளைக்கு முன்னால் இடி மின்னலைப் போல ஒரு கேள்வி வந்து விழுந்தது. அவளுடைய பெயர் என்ன?

அப்போது கார் சின்னக்கடையில் ட்ராஃபிக் ஜாமில் சிக்கி, திணறிக் கொண்டு நின்றிருந்தது. அவளுடைய பெயர் ஞாபகத்திற்கு வருவதில் நேரம் அதிகம் ஆக ஆக பிள்ளையின் மனம் படாதபாடு பட ஆரம்பித்தது. அவளுடைய பெயர் என்ன? எவ்வளவு முயற்சி செய்தும் அந்தப் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை. ‘குட்டி மகளே’ என்று அழைத்திருந்தாலும், அதுவொரு செல்லப்பெயர் மட்டும் தானே! அவளுடைய உண்மையான பெயர்...?

கற்றானத்தை அடையும்வரை அவருக்கு பெயர் கிடைக்கவில்லை. தனக்கு தற்காலிகமாக ஏதோ தகராறு உண்டாகியிருக்கிறதென்று பிள்ளைக்குத் தோன்றியது. பொதுவாகவே ஞாபகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தான் அபார சக்தி எடைத்தவன் என்ற விஷயம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடன் வேலை செய்யும் பலரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு அணுகுவதே பிள்ளையைத்தான். ஞாபகத்திலிருந்து அவர் கூறுவதை, இரண்டாவதாக ஒருமுறை சரியாக இருக்கிறதா என்றுகூட பார்க்காமல் அவர்கள் எல்லாரும் வேதவாக்கியத்தைப்போல எடுத்துக் கொள்வார்கள். ஒரு அகராதி அல்லது என்ஸைக்ளோ பீடியாமீது இருக்கக்கூடிய நம்பிக்கை தன்மீது இருக்கிறது என்ற உண்மையை பல நேரங்களில் பிள்ளையே உணர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட தனக்கு இப்போது ஒரு பெயரை நினைவுபடுத்த முடியாத சூழ்நிலை உண்டாகியிருக்கிறதென்பதை அறிந்தபோது அவருக்கு மிகப் பெரிய பதைபதைப்பு உண்டானது. அத்தையின் மரணமும் அதோடு சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து விஷயங்களும் அத்துடன் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஒரு பெயருக்காக- ஒரு சாதாரண சொல்லுக்காக அவருடைய மனம் நிலையற்ற நீரில் தேடிக் கொண்டிருந்தது.

பிண அடக்கம் சம்பந்தப்பட்ட சடங்குகளுக்கு மத்தியில் துணி அணிவிப்பதற்குச் சென்றபோது, உறவினர்களும் முன்பே நன்கு தெரிந்தவர்களும் கேட்ட நலம் விசாரிப்புகளுக்கெல்லாம் இயந்திரத்தனமாக பதில் கூறினார். அவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் ஞாபகத்தில் வந்தும் அவளுடைய பெயரை மட்டும் நினைவில் கொண்டுவர முடியவில்லையென்ற விஷயம் அவளுக்குள் கவலையையும் பதைபதைப்பையும் அதிகமாக்கின.

மறுநாள் திரும்பிவிட்டார். திரும்பி வந்தபோது, மனதிற்குள்ளிருந்த கவலை மறையவில்லை. வேறு யாருடைய பெயரை மறந்திருந்தாலும், அவளுடைய பெயர் மறக்கக்கூடியதா? எவ்வளவு முறை திரும்பத் திரும்ப உச்சரித்த பெயரது! எத்தனை கனவுகளில் கூறிய பெயரது! உலகத்திலுள்ள அனைத்து பெண்களின் பெயர்களையும் மறந்துவிட்டாலும், முதன்முதலாக மனதிற்குள் வந்து விழுந்த அவளுடைய பெயரை மறப்பதற்கு அவரால் எப்படி முடிகிறது?

திரும்பி வந்து தலைமைச் செயலகத்தில் வேலையில் மூழ்கியபோதும், மனம் அதே பிரச்சினையைப் பற்றியே சுழன்றுகொண்டிருந்தது அவளுடைய பெயரை மறந்துவிட்ட குற்ற உணர்வோ, மன சாட்சியின் உறுத்தலோ அல்ல- பிள்ளையை பெரிய அளவில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய ஞாபக சக்திக்கு குறிப்பிட்டுக் கூறுகிற வகையில் ஏதோ தகராறு உண்டாகிவிட்டிருக்கிறது என்ற பயம்தான் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. வேண்டுமென்றால், கமலம்மாவிடம் கேட்டால், தெரிந்து கொள்ளலாம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel