Lekha Books

A+ A A-

யானைக்கும் அடி சறுக்கும்

"மேனகா! அடுத்த வாரத்து பத்திரிகை வெளியாகற நாள் நெருங்கிடுச்சு. பிரபல சினிமா நடிகர்கள் கலந்துரையாடல் எழுதலாம்னு இருந்தோம். நீங்க இன்னும் அதைத் தயார் பண்ணவே இல்லையே?" பிரபல 'ரோஜா வார இதழ் பத்திரிகையின் உதவி ஆசிரியரான நளினி, ரிப்போர்ட்டர் மேனகாவிடம் கேட்டாள்.

"ஸாரி மேடம். ஒரு நடிகர் கிடைச்சார்னா இன்னொரு நடிகரோட அப்பாயிண்ட்மென்ட் கிடைக்க மாட்டேங்குது. மூணு பேரையும் ஒண்ணா சந்திக்க வச்சு கட்டுரை எழுதறதுதான் நம்ம ஐடியா. ஆனா, அந்த மூணு பேரும் சேர்ந்தாப்ல கிடைக்க மாட்டேங்கறாங்க. அதனாலதான் லேட்டாகுது..." மெதுவாக தயங்கியபடி பேசினாள் மேனகா. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பத்திரிகையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் 'ரோஜா பத்திரிகையில் சமீபத்தில் சேர்ந்திருந்தாள்.

பத்திரிகையின் அலுவல்களில் நேர்மையும், நேரம் தவறாமையும் கடைப்பிடிப்பதில் மிகவும் கண்டிப்பானவள் நளினி என்பதை புரிந்துக் கொண்டு செயல் படுபவள்.

"அப்படின்னா, இந்த வாரத்துக்கு வேற ஏதாவது இன்ட்ரஸ்டிங்கான ஆர்ட்டிகல் ரெடி பண்ணுங்க. அடுத்த வாரத்துக்குள்ள நடிகர்கள் கலந்துரையாடல் கட்டுரை ரெடி பண்ணிக்கலாம்."

"ஓ.கே. மேடம். மேடம், நான் வேலைக்கு சேர்ந்து ரெண்டு வாரமாச்சு. உங்க கணவரை நான் பார்க்கவே இல்லை. தினமும் உங்களை அழைச்சிட்டுப் போறதுக்கு வருவார்ன்னு சொன்னாங்க..."

"அவர் வர்றப்ப நீ வெளியில இன்ட்டர்வியூவுக்கு போயிடற. நீ ஆபீஸ் திரும்ப லேட்டாயிடுது. என்னிக்கு சந்தர்ப்பம் வாய்க்குதோ அன்னிக்கு பார்க்கலாம்."

"ஓ.கே. மேடம்."

நளினியின் அறையை விட்டு வெளியேறினாள் மேனகா.

நளினியின் கைதொலைபேசி ஒலித்தது. நம்பரை பார்த்த நளினி, புன்னகையுடன் பேச ஆரம்பித்தாள்.

"என்னங்க, என்ன விஷயம்?" மறுமுனையில் அவளது கணவன் ஸ்ரீராம் தொடர்ந்தான்.

"ரொம்ப நாளா, தியேட்டருக்கு போய் படம் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேனே, இன்னிக்கு உனக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சுட்டா நாம போகலாம்."

"ஸாரிங்க. இந்த வாரத்துக்கே மேட்டர் இன்னும் முடிஞ்ச பாடில்லை. அடுத்த வாரம் கண்டிப்பா போலாம். உங்க ஆபீஸில என்ன வேலையே இல்லையா? ரெண்டாவது தடவை ஃபோன் போட்டுட்டீங்க?"

"அ... அ... அது வந்து... அது வந்தும்மா, இன்னிக்கு வேலையெல்லாம் நேத்தே முடிச்சுட்டேன். அதனால கொஞ்சம் இன்னிக்கு ஃப்ரீயா இருக்கேன். சரி நீ வேலையா இருப்ப. வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்."

"சரிங்க." தன் வேலைகளில் மூழ்கிப் போனாள் நளினி.

நளினியும், ஸ்ரீராமும் வீட்டிற்குள் நுழைந்தனர். வக்கீல் மூர்த்தி மாமாவின் குரல் கேட்டது.

"வாங்க.. வாங்க ரெண்டு பேரும் ஆபீஸ் வேலையை முடிச்சுட்டு இப்பதான் வர்றீங்களா? உங்களுக்காகத்தான் காத்திக்கிட்டிருக்கேன்."

மூர்த்தி, நளினியின் அப்பாவுடைய ஆத்மார்த்த நண்பர். நளினியின் குடும்பத்தில் ஒருவரைப் போல் உரிமையுடன் பழகுபவர். இவர்களது நலனில் மிக்க அக்கறை கொண்டவர். நளினியின் தந்தை இறந்தபிறகு, நளினியின் படிப்பில் இருந்து அவளது திருமணம் வரை, உற்ற துணையாய் உதவி செய்தவர். நளினியின் அம்மாவிற்கு உடன்பிறந்த சகோதரன் போல் ஆறுதல் கூறி ஆலோசனைகளையும் வழங்குவார்.

"என்ன மாமா வீட்ல விசேஷமா?" நளினி கேட்டு முடிப்பதற்குள் சமையலறைக்குள் இருந்து, அவளது அம்மா கௌரி, மணக்க மணக்க காபி டபராவுடன் வந்தாள்.

"இரும்மா, உனக்கும் மாப்பிள்ளைக்கும் காபி கலந்து எடுத்துட்டு வரேன்" மறுபடியும் உள்ளே போனாள்.

"சொல்லுங்க மாமா. நம்ப மாலுவுக்கு வரன் பார்த்தீங்களா?"

"அதைத்தாம்மா சொல்ல வந்தேன். வீட்ல விசேஷமான்னு நீயே கேட்டுட்ட. மாலுவுக்கு ஒரு நல்ல இடத்துல வரன் அமைஞ்சுருக்கு. பையன், பேங்க்ல வேலை பார்க்கிறான். ரொம்ப நல்ல பையன்."

"அப்பாடா, மாலுவோட கல்யாணம் ஒண்ணுதான் உங்களுக்கு கவலையா இருந்துச்சு. இப்ப அந்தக் கவலையும் இல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா."

அனைவரும் மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

"நளினி, மூர்த்தி மாமாவுக்கு இருக்கற திறமைக்கு அவர் இந்நேரம் பெரிய பணக்காரர் ஆகியிருக்கணும். விவாகரத்து வழக்குல மிகத் திறமையா வாதாடக் கூடியவர். ஆனா, கணவன் பக்கமும், மனைவி பக்கமும் தீர விசாரிச்ச பிறகுதான் விவாகரத்து வாங்கிக் கொடுப்பார். சின்ன சின்ன காரணங்களுக்கெல்லாம் விவாகரத்துன்னு வர்றவங்கள சமாதானமா பேசி அவங்களுக்குள்ள பிரச்சனையை தெளிவாக்கி அவங்களை சேர்த்து வைச்சுடுவார். அந்தக் குடும்ப நேயத்தையெல்லாம் பார்க்காம, பணமே குறியா இருந்திருந்தார்னா, ஏகப்பட்ட தம்பதிகளுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்திருப்பாரு. நிறைய பணம் சம்பாதிச்சிருப்பாரு. அவரோட நல்ல மனசுக்கு அவர் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா கிடைச்சிருச்சு."

"இந்த சந்தோஷமான சமாச்சாரத்தை சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். நான் கிளம்பறேன்." மூர்த்தி கிளம்பினார்.

"சரிம்மா... நான் போய் முகம் கழுவிக்கிட்டு வரேன்." நளினி எழுந்தாள்.

"அத்தை, இனிமேல் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. ராத்திரி டிபன் வேலையை நானும், நளினியும் சேர்ந்து செஞ்சுடறோம்."

"சரி மாப்பிள்ளை. பூரிக்கிழங்கு பண்றதுக்கு கிழங்கை வேக வச்சிருக்கேன். மத்ததை நீங்க பார்த்துக்கங்க." சொல்லிவிட்டு கௌரி தன்னறைக்குள் சென்றாள். பதினொரு மணி சீரியல் முடியும் வரை அவளுக்கு உலகம் தொலைக்காட்சிதான்.

சமையலறையில் சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி ஸ்ரீராமும், நளினியும் ஆளுக்கொரு வேலையாக பகிர்ந்துக் கொண்டு இரவு டிபன் வேலையை முடித்தனர்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அதன் பயனாய் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது போல ஓருயிராய் வாழ்ந்து வந்தனர் நளினியும், ஸ்ரீராமும்.

நளினியின் அடக்கமான அழகும், அபாரமான அறிவுத் திறனும், பிரபல பத்திரிகையின் உதவி ஆசிரியராக உயர்ந்த நிலையில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் ஆற்றலையும் கண்டு அவள் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டான் ஸ்ரீராம். நளினியைப் பார்த்த நிமிடத்திலிருந்து அவளைத்தான் தன் மனைவியாக அடைய வேண்டும் என்று துடித்தான் ஸ்ரீராம்.

தீவிரமான ஆசை கொண்டான். அதன் பலன்? நளினியிடம் பொய் சொல்ல நேர்ந்தது. தனக்குக் கணவனாக வருபவன் பெரிய வேலையில் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு உத்யோகத்தில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நளினியிடம், 'தான் வேலையில் இல்லை; வேலையைத் தேடிக் கொண்டிருப்பவன் என்ற உண்மையை மறைத்து உத்யோகத்திலிருப்பதாக பொய் சொன்னான்.

அரசு பணியில் இருந்து ரிட்டயர் ஆன தன் தாயின் சேமிப்பும், பனிக்காலத் தொகையின் வட்டி மற்றும், தாயின் சொந்த வீடுகள் இரண்டை வாடகைக்கு விடுவதால் வரும் பணம் என்று தாராளமாய் பணம் இருப்பதைக் கூறியிருந்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel