Lekha Books

A+ A A-

யானைக்கும் அடி சறுக்கும் - Page 3

"பொய் சொல்றது மனுஷ லட்சணம். பொய் சொல்லாத மனுஷங்களே கிடையாது. ஏன், நீ கூட எப்பவாவது ஏதாவது ஒரு காரணத்துக்கு பொய் சொல்லி இருப்ப. யாராவது ஃபோன் பண்ணினா 'எங்க அப்பா ஊர்ல இல்லைன்னு சொல்லுன்னு பொய் சொல்லச் சொல்லி, நாமளும் பொய் சொல்லி, மத்தவங்களையும் பொய் சொல்ல வைக்கிறோம். நல்ல விஷயம் நடக்கணும்னா அதுக்கு பொய் சொல்லலாம்னு புராணக் கதைகள் கூட இருக்கு. பொய்யே சொல்லாத அரிச்சந்திரனைத்தான் இன்னிக்கு வரைக்கும் உதாரணமா காட்டறோமே தவிர, 'என் அக்காவை மாதிரி உண்மை பேசறவ, எங்க அப்பாவைப் போல உண்மை மட்டுமே பேசறவர்ன்னு நம்பள்ல்ல யாரையுமே பொய் சொல்லாம இருக்கறதுக்கு உதாரணம் காட்டறதில்லை. ஏன்னா எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்கு பொய் சொல்லிக்கிட்டுதான் இருக்கோம். இது பொய் கலப்பில்லாத உண்மை. நீ படிச்சவ. பத்திரிகை நிறுவனத்துல பொறுப்பான வேலை பார்க்கறவ. உன் கிட்ட கடைசியா கேக்கறேன். ஸ்ரீராம் வேலையில இல்லைங்கற விஷயத்தை பொய்யாக்கி அவனுக்கு ஒரு உத்யோகத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன்... நீ சம்மதம் சொல்லு..."

"இல்லை மாமா. அவர் என்னை ஏமாத்தினது தப்பு. அந்த நெருடல் என் மனசுக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்கும். என்னால அவர் கூட வாழ முடியாது."

நளினியின் பதிலைக் கேட்டு சோர்ந்து போனார் மூர்த்தி. கோபத்தின் உச்சக்கட்டத்திற்குப் போனாள் கௌரி.

"விடுங்க அண்ணா. அவளுக்கு புத்தி தெளியறப்ப தெளியட்டும்." கோபமாக பேசி விட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டாள் கௌரி.

பதிலேதும் கூறாமல் மௌனமாக வெளியேறினார் மூர்த்தி.

இயற்கை, இயல்பாக தன் கடமைகளை செய்து வந்தது. ஏழு நாட்கள் ஏழு வருடங்கள் போல் நகர்ந்தது நளினிக்கு. அலுவலகத்தில் வேலை முடிந்து ஆட்டோவில் ஏறுவதிலிருந்து வீட்டிற்குள் வந்து அன்றாடப் பணிகளைக் கவனிப்பது வரை அவளது எண்ணங்கள் அனைத்தையும் ஸ்ரீராமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் அவளுக்குக் காபி போட்டுக் கொடுப்பது, இரவு சமையலுக்கு அவளுடன் ஒரு உடன் பிறந்த தங்கையைப் போல, தாயைப் போல உதவி செய்வது, அவளது துணிமணிகளை அயர்ன் செய்துக் கொடுப்பது, லேஸாக தலை வலித்தால் கூட பதறிப் போய் இதமாக தைலம் தேய்த்து விடுவது போன்ற அன்பான கவனிப்புகளை நினைத்துப் பார்த்தாள்.

கௌரிக்கு வயதிற்கு மீறிய தளர்ச்சி ஏற்பட்டுவிட்டபடியால் காபி போடுவது, குக்கரில் சாதம் வைப்பது போன்ற எளிமையான வேலைகளை மட்டுமே பார்க்க முடியும். இதைப் புரிந்துக் கொண்டு கௌரியையும் தொல்லைப்படுத்தாமல், நளினிக்கும் அதிக வேலை பளு கொடுக்காமல் குடும்பப்பணிகள் அனைத்தையுமே பகிர்ந்து கொண்டான் ஸ்ரீராம். எல்லாம் புரிந்தும் கூட 'தான் ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர், அந்த நிறுவனத்தின் மேம்பாடுகள் தன் கையில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தன் நிர்வாகத் திறமை உயர்ந்தது என்ற சுய பிரதாப இயல்பு ஏற்படுத்திய ஆணவம், நளினிக்குள் தலை விரித்தாடியது. எனவே ஸ்ரீராம் பொய் சொல்லி ஏமாற்றியதைப் பற்றி நினைத்து கோபம் மாறாமலிருந்தாள்.

படுக்கையில் புரண்டபடி இருந்த நளினியின் கவனத்தைக் கலைத்தது காற்றில் காகிதம் படபடத்துப் பறக்கும் ஒலி. எழுந்தாள். தரையில், படபடத்துக் கொண்டிருந்த பேப்பரைப் பார்த்தாள். எடுத்துப் படித்தாள்.

"ஐயோ... " அலறினாள்.

அவளது அலறலைக் கேட்டு ஓடி வந்தாள் கௌரி.

"என்னம்மா... என்ன?"

"அம்மா, ஸ்ரீராம் தற்கொலை பண்ணிக்கப் போறதா எழுதி வச்சிருக்கார்ம்மா. என்னோட ரூம்ல வச்சிருக்காரு. காத்துல பறந்து கீழே விழுந்திருக்கு போல... ஐயோ நான் என்ன பண்ணுவேன்...."

"சரி வா, மூர்த்தி அண்ணா வீட்டுக்கு போய் அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லலாம்."

ஹேண்ட் பேக் ஐ எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடி ஆட்டோ பிடித்தாள் நளினி. கௌரியும் உடன் கிளம்பினாள்.

"வேகமா போப்பா."

ஆட்டோ விரைந்து பறந்தது.

"என்னமோ, ஸ்ரீராமை பிரிஞ்சு வாழத் தயாரா இருக்கேன். விவாகரத்து வாங்கிக் குடுத்தே ஆகணும். அவரோட என்னால சேர்ந்து வாழ முடியாதுன்னு சொன்ன. இப்ப தற்கொலை பண்ணிக்க போறார்ன்னதும் பதறிக்கிட்டு ஓடற? பிரிஞ்சு வாழத் தயாரா இருக்கற உன்னால அவனோட உயிர் பிரியறதை ஏன் தாங்கிக்க முடியலை...?"

"அம்மா... என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு புரிஞ்சுடுச்சு. அவர் இல்லாம நான் இல்லை. என் ஆணவமும், அகம்பாவமும் என் அறிவுக் கண்ணை மறைச்சுடுச்சு. எனக்கு அவர் வேணும். எனக்கு அவர் வேணும்." கதறி அழுத நளினியை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள் கௌரி.

மூர்த்தி மாமா வீட்டிற்குள் சென்றனர். அங்கே ஸ்ரீராம், சோகம் கப்பிய முகத்துடன் தளர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். ஸ்ரீராமை பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் நளினி. மூர்த்தி மாமா சோகம் மாறாத முகத்துடன் காணப்பட்டார்.

இவர்களைப் பார்த்ததும் திடுக்கிட்டனர் இருவரும்.

"என்னம்மா.. என்ன ஆச்சு? மணி பத்தாகுது. இந்நேரம் ரெண்டு பேரும் வந்திருக்கீங்க?" கேட்ட மூர்த்தியிடம் தன் கையில் இருந்த கடிதத்தைக் கொடுத்தாள் நளினி. படித்துப் பார்த்த மூர்த்தி சிரித்தார்.

"இந்த லெட்டரை நீ நல்லா பார்த்தியா? இது ஸ்ரீராமோட கையெழுத்து இல்லைன்னு கூட உனக்குத் தெரியலை. ஏன்னா... நீ அந்த அளவுக்கு மன சஞ்சலத்துல இருந்திருக்க. உன் மனசெல்லாம் ஸ்ரீராம்ங்கற மந்திரம்தான் ஒலிச்சிக்கிட்டிருக்கு. இப்பவாவது மனசு மாறி வந்திருக்கியே. ரொம்ப சந்தோஷம்மா..."

"மூர்த்தி மாமா, நான் நளினி மேல என் உயிரையே வச்சிருக்கேன். இந்த உயிர் அவளோடது. அதைப் போக்கிக்க எனக்கு உரிமை இல்லை. இன்னொரு விஷயம், நளினியைப் பிரிஞ்சு வாழறது எனக்கு மிகவும் கொடுமையான விஷயம்தான். ஆனா, அதுக்காக தற்கொலைக்கெல்லாம் போக மாட்டேன். ஏன்னா, என் அன்பைத் தேடி, என் பாசத்தையும், நேசத்தையும் தேடி நளினி வருவாள்னு எனக்குத் தெரியும். நான் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகலை. இதோ என் நளினி வந்துட்டா..."

இருவரும் கைகோர்த்துக் கொண்டனர்.

"அப்படின்னா இந்த தற்கொலை கடிதம்?" கௌரி நிதானமாய் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

"இந்தக் கடிதம் நளினியோட ஃபைல்ல இருந்திருக்கணும். அவதான் நிறைய எழுத்தாளர்கள் எழுதி அனுப்பற கதைகளை படிக்கறவளாச்சே.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel