Lekha Books

A+ A A-

உன்னை விடமாட்டேன்

unnai vidamaten

“ஏ கல்யாணி, இங்கே வாயேன்...” அகமது அழைத்ததும் கல்யாணி திரும்பிப் பார்த்தாள். ஃபைல்கள் வைக்கும் பெரிய இரும்பு அலமாரியின் பின்பக்கம் இருந்து அவளை எதிர்பார்த்திருந்தான் அகமது.

அவனருகே சென்றாள் கல்யாணி.

“எதுக்காக கூப்பிட்டிங்க ஸார்?”

“என்ன ஸார்... மோர்ங்கற?”

“பின்ன? இது ஆபீஸ். நீங்க என்னோட மேனேஜர். ஸார்ன்னு கூப்பிடாம?...” செல்லமாக சிணுங்கிய கல்யாணியின் அழகிய முகம் கண்டு வயிறு முட்ட தேன் குடித்த வண்டாக... சொக்கினான் அகமது.

“எங்கேயும், எப்போதும். என்னிக்கும் நீ என் அருமை காதலி, அன்பு மனைவி, உயிர்த் துணைவி...”

“இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. அதுக்குள்ள அடுக்கடுக்கா வசனம் பேசறீங்க?”

“நான்தான் சொன்னேனே கொஞ்ச நாள் வெயிட் பண்ணுன்னு. அம்மா, அப்பாட்ட நம்ம காதலைப் பத்தி ‘பட்’ன்னு சொல்லிட முடியாது. நம்ம ரெண்டு பேர் காதலுக்கு நடுவுல வேற்று ஜாதிங்கற ஒரு காரணம் குறுக்கிடறதுனால அப்பா, அம்மாட்ட பேசறதுக்கு பயம்மா இருக்கு. ஆனா சொல்றதுக்கு ஒரு ச்சான்ஸை எதிர் பார்த்துக் காத்துக்கிட்டிருக்கேன்... நிச்சயமா சொல்லிடுவேன். இப்ப வா...”
அவளை அணைத்துக் கொள்ள முயற்சித்தான். ஃபைல் அலமாரியின் மறைவிற்கு அவளை இழுத்துச் சென்று கட்டிப்பிடித்தான்.

அவனது அந்த அணைப்பில் தன்னை மறந்தாள் கல்யாணி. கண்கள் மயங்க அவனது அணைப்பிற்குள் அடங்கினாள்.

“ஐ லவ் யூ மை டியர் வைஃப்...” கிசுகிசுப்பாய் அவளது காதோரம் கொஞ்சல் வார்த்தைகள் பேசினான் அகமது.

‘வைஃப்’ என்கிற அந்த வார்த்தை கல்யாணிக்கு கரும்பாய் இனித்தது. யாரோ அந்தப் பக்கம் வருவதை அறிந்து, இருவரும் விலகினார்கள்.

நாட்கள் கடந்தன. நாளொரு வண்ணமாக அவர்களது காதல் வளர்ந்தது. திருமண விஷயம் பற்றி அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி.

“ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்டிக்கவோ தட்டிக்கிட்டு போகவோ முடியாதுடி என் செல்லம். நீ என் பொண்டாட்டி. கொஞ்சம் பொறுடா. சீக்கிரமா அம்மா, அப்பாட்ட சொல்லிடுவேன். அப்புறம். டும்டும்தான்.” அகமதுவின் காதல் நிறைந்த பேச்சில் அவளது நெஞ்சில் நம்பிக்கை ஊற்று பொங்கியது. ஆனந்தப் பூங்காற்று வீசியது.

கலெக்டர் லஷ்மி கிருஷ்ணனின் எதிரே தலை குனிந்து உட்கார்ந்திருந்தான் அகமது. கல்யாணியின் தாய் வழியில் தூரத்து உறவான லஷ்மி கிருஷ்ணன், எளிய குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து, இளம் வயதிலேயே முன்னுக்கு வந்து கலெக்டராக உயர்ந்தவள். அவளை தொடர்பு கொண்டு தனக்காக அகமதுவிடம் பேச வேண்டும் என கல்யாணி வேண்டிக் கொண்டபடி வந்திருந்தாள் லஷ்மி கிருஷ்ணன்.

“சொல்லு அகமது... கல்யாணியை நீ உண்மையாதானே காதலிச்ச?”

“ஆமா மேடம்.”

“பின்ன? இப்ப வேற பொண்ணு கூட உனக்கு கல்யாணம் நிச்சயதார்த்தம் ஆகி இருக்காமே? அது உண்மையா?...”

“ஆமா மேடம்...”

“ஏன் ஒரு பொண்ணை காதலிச்சுட்டு இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க போற?...”

“ம்... அது... வந்து மேடம்... நாங்க வேற ஜாதி... அவ குடும்பம் வேற ஜாதி... எங்க அம்மா, அப்பா வேற்று ஜாதி பொண்ணை மருமகளா ஏத்துக்க மாட்டாங்க...”

“இவகிட்ட உங்க காதலை சொல்லும்போது இவளோட ஜாதி என்னன்னு தெரியாதா?...”

“அது... வந்து...”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. தெரியுமா... தெரியாதா?...”

“தெரி... தெரியும்...”

“தெரிஞ்சுதானே காதலிச்ச?... ஏன் உங்கம்மா... அப்பாட்ட சொல்லலை? சொல்லி இருந்தா உங்க காதலை ஆதரிச்சு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்கள்ல்ல?...”

“இல்லை மேடம். அவங்க. ஜாதி விஷயத்துல தீவிரமானவங்க...”

“பின்ன ஏன் இவளை தீவிரமா காதலிச்ச? நீ இவளை கல்யாணம் பண்ணிக்குவன்னுதானே நம்பிக்கையோட இருந்தா?...”

அப்போது குறுக்கிட்டுப் பேசினாள் கல்யாணி.

“இவன், என் கிட்ட உள்ள காதலை எப்பிடி சொன்னான்னு கேளுங்க மேடம்...”

உறவினள் எனினும் நெருங்கிய பழக்கம் இல்லாதபடியால் மேடம் என்றே அழைத்தாள் கல்யாணி.

“எப்பிடிம்மா சொன்னான்?”

“என்னை ‘ஹக்’ பண்ணி, கையைப் பிடிச்சு அழுத்திகிட்டே சொன்னான் மேடம்.”

கோபமாக அகமதுவிடம் திரும்பினாள் லஷ்மி கிருஷ்ணன்.

“ஏம்ப்பா... இவளைத் தொட்ட போது இவளோட ஜாதி தெரியலையா...? இவ வேற்று ஜாதிங்கறதுனால. உன்னோட பெற்றோர் மறுப்பாங்கன்னு தெரியலியா?...”

அகமது, திருட்டு முழி முழித்தபடி மெளனமாக இருந்தான்.

“ஒரு தடவை இவளோட அம்மா, அப்பா ஊர்ல இல்லைன்னு இவனோட வீட்டுக்கு கூப்பிட்டான் மேடம்.” கல்யாணி கூறினாள்.

“நீ போனியா?..” லஷ்மி கேட்டாள்.

“அ... ஆமா மேடம்...”

“கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால... அவன் கூப்பிட்டான்னா.... நீ... அவனோட வீட்டுக்குப் போயிடுவியா?” கடுமையாக கேட்டாள் லஷ்மி.

“நான் எதுக்கு மறுத்தாலும் அவன் ஒரு வார்த்தையை யூஸ் பண்ணி என்னோட வாயை அடைச்சுடுவான் மேடம். ‘வைஃப்... பொண்டாட்டி’ இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் அப்பிடியே ஆஃப் ஆகிடுவேன்.”

தலையில் அடித்துக் கொண்டாள் லஷ்மி கிருஷ்ணன்.

“ஏம்மா?... படிச்சவ நீ. ஒரு ஆபீஸ்ல வேலையும் பார்க்கற. கொஞ்சம் யோசிக்க மாட்டியா?... சரி, இவன் வீட்டுக்குப் போனியே... அங்கே என்ன நடந்துச்சு?”

“இவன்... என்னை யூஸ் பண்ணிக்கிட்டான் மேம்...” மிக்க தயக்கத்துடன் கூறினாள் கல்யாணி.

மீண்டும் கோபமானாள் லஷ்மி கிருஷ்ணன்.

“ஏம்ப்பா... இவளை உன்னோட ‘டைம் பாஸ்’க்காக யூஸ் பண்றதுக்குதான் காதல்ங்கற வார்த்தையையும், வைஃப், பொண்டாட்டிங்கற வார்த்தைகளையும் சொல்லி இவளை ஏமாத்தினியா?” அகமதிடம் கேட்டாள் லஷ்மி.

“அன்னிக்கு எங்க வீட்ல நான் எல்லை மீறி நடந்துக்கலை மேடம். லிமிட்டுக்குள்ளதான்... எல்லாமே...”

“ஷட் அப்...” மிகுந்த கோபத்துடன் கத்திய லஷ்மி கிருஷ்ணன் தொடர்ந்து கோபம் மாறாமல் பேசினாள்.

“அதென்னப்பா லிமிட்? உன்னோட அகராதியில இந்த ‘லிமிட்’டுக்கு என்ன அர்த்தம்? ஒரு பொண்ணை ஆசை வார்த்தை பேசி, அவ மனசைத் தொட்டதுக்கு அர்த்தமும் அவளைக் கெடுக்கறதுதான்.”
அப்போது கல்யாணி எரிமலை போல பொங்கினாள்.

“இவன் அனுப்பின மெஸேஜ் எல்லாம் என்னோட மொபைல்ல வச்சிருக்கேன் மேடம். நீங்களே பாருங்க...”
லஷ்மி கிருஷ்ணனின் கோபம் கல்யாணியின் மீது தாவியது. “நீயும் சேர்ந்துதான்ம்மா தப்பு பண்ணியிருக்க. கல்யாணம் ஆகறதுக்கு முன்னால இவன் கூப்பிட்டான்னு அவங்க வீட்டுக்குப் போனது மிகப் பெரிய தப்பு. ‘வைஃப்...’, ‘பொண்டாட்டின்னு...’ வாயால சொல்லிட்டா உன்னை நீ விட்டுக்குடுத்துடுவியா..? தாலி கட்டி கல்யாணம் ஆனப்பறம்தான் ஒருத்தனுக்கு ஒருத்தி பொண்டாட்டி ஆக முடியும். இது கூட தெரியாதா? என்னமோ மொபெல்... மெஸேஜ்... அது இதுங்கற...”

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel