Lekha Books

A+ A A-

தங்க மோதிரம்

thanga mothiram

ரு நாள் என்னுடைய மனைவி ஒரு பழைய தங்கத்தால் ஆன மோதிரத்தை, அவள் பெட்டியின் அடியில் இருந்து தேடி எடுத்து, தன் விரலில் அணிந்து, அதன் அழகை ரசித்தவாறே என்னிடம் கேட்டாள்:

"நல்லா இருக்கா?''

நான் கேட்டேன்:

"இந்தப் பழைய மோதிரம் உனக்கு எங்கே இருந்து கிடைச்சது?''

"இது தங்கம்தான்.'' மனைவி சொன்னாள்: "இந்த மோதிரம் என்னோட அப்பாவுக்கு அம்மாவோட அம்மாவுக்கு அம்மாவோட அப்பாவுக்கு ஒரு மகாராஜா அன்பளிப்பா கொடுத்தது...''

அதைக்கேட்டதும் எனக்கு கோபம் வந்தது.

"நீ எப்படிடீ இந்தத் தங்க மோதிரத்தை அணியலாம்?'' நான் சொன்னேன்: "நியாயமா பார்க்கப் போனா, இந்தத் தங்க மோதிரத்தை அணிய வேண்டியது நான்தான். உனக்குத்தான் தெரியுமே...

சில தலைமுறைகளைத் தாண்டி நான் பின்னாடி போனா... போய் விழுறது மன்னர் அக்பரோட மடியிலயா இருக்கும். உண்மையான வரலாறு இதுதான். அப்படிப் பார்த்தால் தங்க மோதிரத்தோட உண்மையான சொந்தக்காரன் நான்தான். ஒழுங்கா எனக்கு அதைத் தந்திடு. “விரல்ல போட்டு நான் நாலு பேருக்குத் தெரியிற மாதிரி நடக்குறேன்!''

"இந்த மோதிரத்து மேல அப்படியொரு ஆசை உங்களுக்கு இருந்துச்சுன்னா, கேக்குற சமயங்கள்ல நான் தர்றேன்.'' மனைவி சொன்னாள்.

"அப்படியொரு ஈவு, இரக்கம் ஒண்ணும் எனக்குத் தேவையில்லை...''

"அப்படின்னா அதுவும் இல்ல...'' உறுதியான குரலில் என் மனைவி சொன்னாள்: "இந்தத் தங்க மோதிரத்தை உங்க கையால தொட நான் விட மாட்டேன்!''

"ஓ... ஹோ...!''

"ஆ... ஹா...!''

"அப்படியா? நான் யார்னு உனக்குக் காட்டுறேன்.'' நான் மீசையைத் திருகினேன்.

கடவுள் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என் மனைவி கர்ப்பமானாள். என் விரலில் தங்க மோதிரம் ஒளி வீசுவதற்கு உரிய நேரம் தேடி வந்தது. கர்ப்பம் என்ற ஒன்று ஸ்டைலாக என் மனைவியிடம் வந்து சேர்ந்தபோது, நான் அவளிடம் கேட்டேன்.

"அடியே... உன் வயித்துல இருக்குறது ஆணா, பெண்ணா?''

மனைவி புன்னகைத்தாள். பிறகு கேட்டாள்:

"எதுவோ இருக்கும்...''

நான் சொன்னேன்:

"ஆண்தான்!''

மனைவி சொன்னாள்:

"நான் சொல்றேன்... பொண்ணு...''

"பந்தயம் எவ்வளவு?''

மனைவி சொன்னாள்.

"அம்பது ரூபா...''

"சம்மதம்.'' நான் சொன்னேன்: "வயித்துல இருக்குறது ஆணா இருந்தா, உன் விரல்ல கிடக்குற மோதிரத்தை எனக்கு நீ தந்திடணும்.''

"இதையா?'' விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்தவாறு மனைவி சொன்னாள்: "இதோட விலை ரொம்பவும் அதிகமா இருக்கும். என்ன இருந்தாலும் பழைய தங்கமாச்சே! அதுவும் மகாராஜாவோட மோதிரம்!''

"மகாராஜாவோட மோதிரமா இருக்கலாம்.'' நான் சொன்னேன்: "இருந்தாலும் மோதிரம் பழையதாச்சே! அந்த ராஜாவோட செருப்புக்கு இப்போ என்ன விலை இருக்கும்? உன்னோட ஒரு பழைய ப்ளவுஸுக்கு இப்போ என்ன விலை?''

அவள் எந்தவித உற்சாகமும் இல்லாமல் மோதிரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் சொன்னேன்:

"இப்போ இந்த மோதிரத்தை எடை போட்டு விற்றால், பெரிசா ஒண்ணும் கிடைக்காது. நான் உன்னோட கணவனாச்சே! நஷ்ட ஈடா உனக்கு ஏதாவது நான் கட்டாயம் தரணும். அது என்னோட கடமை. புருஷ தர்மம்! அதனால அம்பது ரூபா தந்து, இந்த மோதிரத்தை நானே எடுத்துக்குறேன்....''

என் மனைவி சிறிது நேரம் என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தாள். பிறகு சொன்னாள்:

"அப்படியா? சரி... என் வயித்துல இருக்குறது பொண்ணா இருந்தால், எனக்கு அம்பது ரூபா நீங்க தரணும்.''

நான் சொன்னேன்:

"உன் வயித்துல இருக்குறது ஆணா இருந்தால் எனக்கு நீ இந்தப் பழைய மோதிரத்தைத் தந்திடணும்... அடியே... கையை இங்க கொடு...''

நானும் என் மனைவியும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கைகளைக் குலுக்கிக் கொண்டோம்.

காரியங்கள் இப்படிப் போய்க் கொண்டிருக்கிறபோது, எனக்கு ஒரு பயம். அவளுக்குப் பிறக்கப் போவது பெண்ணாக இருக்கும் பட்சம், எனக்கு ஐம்பது ரூபாய் நஷ்டமடைய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி ஒரு நிலை வராமல் இருப்பதற்கு என்ன வழி? இது பற்றி தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தேன். இது குறித்த சிந்தனையில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில், மூன்று நாயர்களையும், இரண்டு திய்யர்களையும் நான் பார்த்தேன். இவர்கள் எல்லாரும் என்னை "குரு” என்று பொதுவாக அழைத்துக் கொண்டிருந்தார்கள். (இப்போது எங்களுக்குள் உறவு அவ்வளவு சீராக இல்லை. இந்துக்கள் மேல்- சொல்லப்போனால்- எனக்கு நம்பிக்கை இல்லாமல் ஆகிவிட்டது. இனிமேலும் என்னை "குரு” என்று அழைக்கக்கூடாது என்று உறுதியான குரலில் கூறி விட்டேன்). சம்பவம் என்னவென்றால், மேலே நான் சொன்ன மூன்று நாயர்களும் இரண்டு திய்யர்களும் சேர்ந்து ஒவ்வொருவரும் பத்து ரூபாய் வீதம் பந்தயம் கட்டினார்கள். அவர்கள் என் மனைவியின் வயிற்றில் இருப்பது பெண் என்று பந்தயம் கட்டினார்கள். நான் வயிற்றுக்குள் இருப்பது ஆண் என்று பந்தயம் கட்டினேன். தொடர்ந்து நாங்கள் ஒருவரையொருவர் கைகளைக் குலுக்கிக் கொண்டோம். அப்போது இந்துக்களில் ஒருவன் சொன்னான்:

"இதற்கு எதிராக ஒரு சட்டத்தைக் கட்டாயம் கொண்டு வரணும். இந்த முட்டாள் அரசாங்கத்துக்கு ஏதாவது அறிவு இருக்கா? முஸ்லிம்கள் தங்கள் இஷ்டப்படி முன்னூறு பொண்டாட்டிகளைக்கூட வச்சுக்கலாம். அப்பாவி இந்துக்களுக்கு மட்டும் ஒண்ணே ஒண்ணா?''

நான் சொன்னேன்:

"எனக்கு இருக்குறது ஒரே ஒரு பொண்டாட்டிதானே?''

இன்னொரு தடிமனான இந்து சொன்னான்:

"நீங்க விருப்பப்பட்டால் இன்னும்கூட பொண்டாட்டிகளைச் சேர்த்துக்கலாமே! போதாததற்கு, மன்னர் அக்பர் உங்களோட சொந்தக்காரர் வேற. பிறகு... ஹைதராபாத் நைஸாம்! மொத்தம் முன்னூறு மனைவிமார்கள்...''

நான் சொன்னேன்:

"நீங்க சொல்றது சரிதான். விஷயத்தைக் கேக்குறப்போ நல்லாத்தான் இருக்கு. இது விஷயமா தீவிரமா யோசிக்கிறேன்...''

"விருப்பம்போல சிந்திங்க...'' தடிமனான இந்து சொன்னான்:

"நாங்க நரம்பு அறுந்து போய் ஆணுறைகளை பாக்கெட்ல வச்சுக்கிட்டு நடந்து திரியிறோம். இதுக்கு மேல நாங்க என்ன செய்ய முடியும்? அதே நேரத்துல பாருங்க... முஸ்லிம்கள் ஒவ்வொரு வீடா ஏறி இறங்கிக்கிட்டு இருக்காங்க. கர்ப்பம் சம்பந்தமான பந்தயம் வேற...''

நான் கேட்டேன்:

"உங்களைச் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணச் சொன்னது யாரு? என்னோட வயசுல கல்யாணம் செஞ்சிருந்தா போதாதா? உங்களைப் பந்தயம் வைக்கக்கூடாதுன்னு யாரு தடுத்தது?''

"இவர் சொல்றதும் சரிதான்...'' இந்துக்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: "நாம இந்த விஷயத்தை நினைச்சுப் பார்க்கவே இல்ல. நல்ல வாய்ப்பை நாம தவற விட்டுட்டோம்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel