Lekha Books

A+ A A-

மர பொம்மைகள்

Mara Pommaigal

வாசலில் சென்று நின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி, “212 ஆசாரி பறம்பில்” என்று தனக்குத்தானே கூறியவாறு உரத்த குரலில் கேட்டான்: “இங்கே யாருமில்லையா?”

ஓலையால் மறைத்து உண்டாக்கப்பட்ட அறைக்குள்ளிருந்து ஒரு பெண் வாசலை நோக்கி வந்தாள்.

“உங்க பேரு உம்மிணியா?” கையிலிருந்த தாளைப் பார்த்தவாறு அந்த மனிதன் கேட்டான்.

அந்த இளம் பெண்ணின் அகலமான விழிகள் மேலும் பெரிதாக விரிந்தன. வழக்கோ, போலீஸோ என்று அவள் மனதிற்குள் பதைபதைத்தாள்.

“மக்கள் தொகை கணக்கு எடுக்குறேன்... இங்க யாரெல்லாம் இருக்காங்க?”

“இப்போ நான் மட்டும்தான் இருக்கேன். அம்மா இப்பத்தான் வெளியே போனாங்க. குளக்கரையில இலை வெட்டுறதுக்குப் போயிருக்காங்க. தம்பி வேலைக்குப் போயிருக்கான்.”

“உம்மிணின்றது...?”

“அம்மாவோட பேரு.”

“சரி... உம்மிணின்றது ஆணா பெண்ணா?”

அதைக் கேட்டு அவள் சிரித்தாள். கிண்டல் சிரிப்பு. எனினும், அழகான சிரிப்பு.

“அம்மாவும் நானும் பெண்கள். தம்பி ஆண்.”

“அப்பா இருக்காரா?”

“இறந்துட்டாரு.”

“இப்போ உம்மிணி விதவை. அப்படித்தானே?”

“இப்போ விதவைதான்.”

தொடர்ந்து அவள் சொன்னாள்: “மக்கள் தொகை கணக்கு எடுக்குறப்போ குடையை விரிச்சு பிடிக்கக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? இந்த வேகாத வெயில்ல நின்னு மக்கள் தொகை கணக்கு எடுத்தா, ஆட்களோட எண்ணிக்கை கட்டாயம் குறைவாகத்தான் வரும். இந்த பெஞ்சுல வந்து உட்காரலாம்ல?”

சாணத்தால் மெழுகி சுத்தமாக இருந்த அந்த நீளம் குறைவான வராந்தாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவன் போய் உட்கார்ந்தான்.

உம்மிணியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து எழுதினான்.

“உங்க பேரு?”

“என் பேரு நளினி.”

இதைச் சொன்னபோது அவள் சிறிது வெட்கப்பட்டதைப்போல் இருந்தாள்.

“வயசு?”

“பார்க்குறப்போ என்ன தோணுது?”

“எனக்கொண்ணும் தோணல.”

அவள் புன்னகைத்தாள்.

“இருபத்து மூணு...”

“கல்யாணம் ஆயிடுச்சா?”

“ம்...”

“இப்போ கணவன் இருக்காரா?” அவள் சிறிது தயங்கினாள்.

“இப்போ இங்கே இல்ல. பதிமூணாவது மைல்ல மக்கள் தொகை கணக்கு எடுத்தாச்சா?”

“அதை இன்னொரு ஆளு எடுக்குறாரு. கணவன் இருக்காரு. அப்படித்தானே?”

“இருக்குன்னோ இல்லைன்னோ எழுதிக்கோங்க.”

அவள் ஒருவகை அலட்சியத்துடன் சொன்னாள்.

“இருக்குன்னு எழுதினாலும் இல்லைன்னு எழுதினாலும் அர்த்தம் ஒண்ணு இல்லியே!”

“அப்படின்னா இருக்குன்னு மொட்டையா எழுதிக்கோங்க.”

“கல்யாண விஷயமா பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்படித்தானே? அப்படின்னா, கல்யாணம் ஆயிடுச்சுன்னு எழுத வேண்டியதில்லை... கல்யாணம் ஆகலன்னுதான் எழுதணும்...”

“அப்படியில்ல... எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு.”

அவள் தலையின் பின் பகுதியைக் கையால் சொறித்தாள். அப்போது நீளமானதும் எண்ணெய் படாமலும் இருந்த கூந்தல் அவிழ்ந்து கீழே விழ, அது அவளின் அழகான தோற்றத்திற்கு மேலும் ஒரு அழகைத் தந்தது.

“கணவன்...?”

“கணவன் இருக்காரு. கணவன் இல்ல...”

“உங்களை விட்டுப் போயிட்டாரு. அப்படித்தானே? அப்படின்னா விவாகரத்து...”

“அப்படியொரு வார்த்தையை நானும் கேட்டிருக்கேன்னு நினைக்கிறேன். இன்னொரு முறை சொல்லுங்க. கேட்கிறேன். விவாகரத்து... அதைப்போல குழப்பமான ஒரு கேஸ்தான் இது. ஆனா, அவர் என்னைவிட்டு போகல. விட்டுட்டுப் போனா, பிறகு எதற்கு ஒவ்வொரு வாரமும் அந்த ஆளு ஒரு ஆளை என்கிட்ட தூது அனுப்பிக்கிட்டு இருக்கணும்?”

“அப்படின்னா நீங்க அவரை வேண்டாம்னு ஒதுக்கி இருப்பீங்க.”

“நான் அவரை வேணும்னும் சொல்லல. வேண்டாம்னும் சொல்லல. எதை எழுதணும்னு தோணுதோ எழுதிக்கோங்க. உங்களுக்குத்தானே அதெல்லாம் தெரியும்?”

“எனக்கு உங்க கணவனைப் பற்றி சரியா தெரிஞ்சிக்க முடியல. நீங்க சொல்றபடி எழுதுறேன். கணவன் இருக்காருன்னு.”

“அதுதான் நல்லது.”

“நல்லது, கெட்டது எழுதுற புத்தகமில்ல இது. உண்மையை எழுதணும்...”

“நான் சொன்னதுதான் உண்மை” என்று சொன்ன அவள் தன் கூந்தலை பின் பக்கம் முடிச்சுப் போட்டாள். தேவையில்லாமல் அவள் கூந்தல் முடிவதை அந்த மனிதன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பிரசவம் ஆயிடுச்சா?”

“ஆணுக்கும் பிரசவம் ஆகல. பெண்ணுக்கும் பிரசவம் ஆகல...”

“சிதைவு உண்டாகியிருக்கா?”

“உண்டாகாம எப்படி? அவர் போயி ஆறு மாசம் ஆகுறதுக்குள்ளே சிதைவு உண்டாக ஆரம்பிச்சது. ஒருநாள் இல்லைன்னா இன்னொரு நாள் சிதைவு இல்லாம இருக்குறது இல்ல...”

“தினந்தோறும் சிதைவா?”

“அதனாலதான் நான் இங்கேயே இருக்கேன்.”

“என்ன சொல்றீங்க? கர்ப்பச் சிதைவுன்னா கர்ப்பம் கலைஞ்சு போறதுன்னு அர்த்தம். அதைத்தான் நான் கேக்குறேன்.”

“என்ன கேடு கெட்ட கேள்விகளையெல்லாம் கேக்குறீங்க? என் தம்பி இங்கே இல்லாம இருந்தது நல்லதாப் போச்சு!”

அதற்கு அந்த மனிதன் சற்று கோபித்துக் கொண்டான். “தம்பி இருந்தா மட்டும் என்ன! இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம். தம்பி வீட்டுல இல்லாம போயி பெரிய மாமா இங்கே இருந்தாக்கூட கேட்க வேண்டியதை நாங்க கேட்கத்தான் செய்வோம். உண்மையை எங்கக்கிட்ட  சொல்லித்தான் ஆகணும். அப்படி உண்மையைச் சொல்லலைன்னா அது தப்பான காரியம். சொல்ற விஷயங்களை நாங்க ரகசியமா மனசுக்குள்ளே வச்சுக்குவோம்.”

“ரொம்பவும் உஷ்ணமா இருந்தா, இதை வச்சு வீசிக்கங்க” என்று சொல்லியவாறு நளினி ஒரு விசிறியை எடுத்து அந்த பெஞ்சின் ஒரு முனையில் வைத்தாள். “என் தம்பி கேக்குற மாதிரி இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்டால், எனக்கு வெட்கமா இருக்கும்னு சொல்ல வந்தேன்.”

“சரி... சொல்லுங்க.”

“இல்ல...”

“என்ன இல்ல? சொல்ல மாட்டேன்றீங்களா?”

“அதைச் சொல்லல. முன்னாடி கேட்டீங்கள்ல, சிதைவு உண்டாகியிருக்கான்னு. அதுக்கு பதில் சொல்றேன். இல்ல...”

“உங்களுக்கு ஒவ்வொரு மாசமும் எவ்வளவு வருமானம் வருது?”

“தம்பிக்கு மூணு ரூபா சம்பளம்.”

“தம்பி சம்பளத்தை கேட்கல. உங்க வருமானம்?”

“நான் வேலைக்கொண்ணும் போகலியே!”

“அப்போ வருமானம்னு எதுவும் இல்ல. இன்னொருத்தரைச் சார்ந்து இருக்குற ஆள்...”

“நானா? அப்படி யார் சொன்னது? அந்த படகுத் துறையில் இருக்குற  காத்த சொல்லியிருப்பா. அவளைப் பற்றி எனக்கும் சொல்றதுக்கு எவ்வளவோ இருக்கு.”

அவன் அவள் சொன்னதை ரசித்தவாறு சிரித்தான்.

“காத்தயா? என்ன சொல்றீங்க! நான் சொன்னதை நீங்க சரியா காதுல வாங்கல. ஒரு ஆளுக்கு சரியா வருமானம் இல்லைன்னா இன்னொரு ஆளோட வருமானத்துலதான் வாழ்க்கையை நடத்தணும். உங்களுக்கு வருமானம் இல்ல. சாப்பிடுறதுக்கும் ஆடைகளுக்கும் மற்ற விஷயங்களுக்கும் கட்டாயம் பணம் வேணும். அதைத் தர்ற ஆளை, அது பெற்ற தாயா இருக்கலாம். இல்லாட்டி தம்பியா இருக்கலாம். அவங்களை நம்பித்தான் நீங்க வாழ்றீங்க. நான் சொல்றது சரியா?”

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel