Lekha Books

A+ A A-

மர பொம்மைகள் - Page 2

Mara Pommaigal

“கச்சேரியில கேள்வி கேக்குற மாதிரி இருக்கு இது.”

“கச்சேரியில உங்கக்கிட்ட கேள்வி கேட்டிருக்காங்களா?”

“எல்லாம் அந்த துரோகியால வந்தது...”

“யாரு? உங்க கணவனைச் சொல்றீங்களா?”

“அவனா கணவன்? கணவன்னு ஒருத்தன் இல்லைன்னே எழுதுங்க. அப்படி எழுதுறதுக்கு நான் வேணும்னா ஏதாவது தர்றேன். தங்கமே...”

“அது இருக்கட்டும். உங்களுக்கு வருமானம்னு எதுவும் இல்லியா?”

“வருமானமெல்லாம் இருக்கு. நான் யாரையும் நம்பி இல்ல. மாசம் பதினஞ்சு ரூபா வரை வருமானம் வருது.”

“சரி... தொழில் என்ன?”

“இந்த அரசாங்கம் எதையெல்லாம் தெரிஞ்சிக்க விரும்புது? தொழில் ஒண்ணு இல்ல... நிறைய தொழில்...”

“அதையெல்லாம் என்னன்னு விளக்கமா சொல்லுங்க... எழுதுறதுக்கு தாள்ல இடம் நிறைய இருக்கு.”

“நான்தான் இந்த வீட்டுல கஞ்சி காய்ச்சுறேன். இந்தத் திண்ணையை மெழுகியது நான்தான்...”

“மெழுகியது நல்லா இருக்கு. கண்ணாடிபோல மின்னுதே!”

“என் கன்னம் கண்ணாடிபோல பளபளப்பா இருக்குன்னு என் ஆளு ஹா... என் யாருமில்ல. அந்த ஆளு சொல்வாரு. அப்போ இந்தத் திண்ணை என் கன்னத்தைப்போலன்னு சொல்லுங்க...” அவள் ஏதோ தமாஷ் சொன்ன மாதிரி சிரித்தாள்.

அவனும் சிரித்தான்.

பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு சிறு பெண் வாசலுக்கு வந்து கணக்கெடுப்பு அதிகாரியையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

“இந்தப் பொண்ணுக்கு வயசு பத்துதான் ஆகுது. பார்வையைப் பார்த்தீங்களா? ரெண்டு வருடங்கள் கழிஞ்சா, இந்த வழியில் ஆம்பளைங்க நடக்க முடியாது.”

அதைக் கேட்டு அந்தச் சிறு பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. “நான் பார்த்ததுனால உனக்கு பெரிய நஷ்டம் வந்திருச்சாக்கும்... எதுக்கு வீண் வம்பு? நான் போறேன்...” என்று சொல்லியவாறு அவள் வந்த வழியே திருப்பிச் சென்றாள். போகும்போது அவள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டே போனாள்.

நளினி சொன்னாள்: “அவளுக்கு எப்படி கோபம் வருது பார்த்தீங்களா? யார் தலையையாவது பார்த்துவிட்டால் போதும். எங்கேயிருந்துதான் வருவான்னு தெரியாது- வாசல்ல வந்து நிப்பா பொண்ணு...”

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிக்கு அங்கு உட்கார்ந்திருக் கவே பயமாகிவிட்டது.

“பிறகு... தொழில் என்னன்னு சொல்லல.”

“அதுதான் சொன்னேனே, ஒரு வீட்டுல என்ன வேலையெல்லாம் இருக்கோ அது எல்லாத்தையும் நான்தான் செய்யிறேன்!”

“இது வருமானம் வர்ற தொழில் இல்லையே?”

“வருமானம் வர்ற தொழில் இல்லைன்னா நீங்க ஏதாவது தருவீங்களா?”

“தருவீங்களான்னு கேட்டா...” அவனுக்கு அதற்குமேல் பேச்சைத் தொடர்வதற்கு தயக்கமாக இருந்தது.

“கேட்டா தருவீங்க. அப்படித்தானே?”

அவன் சுற்றிலும் பார்த்தான்.

அவள் சொன்னாள்: “வீட்டுக்கு யாராவது வந்தா மரியாதையா நடக்கணுமா இல்லியா?”

அவன் அடுத்த நிமிடம் சொன்னான். “நான் மரியாதைக் குறைவா ஏதாவது சொல்லிட்டேனா என்ன?”

“சொல்லல. நான் உங்களை மரியாதையா நடத்தல. வெற்றிலை, பாக்கு போடுவீங்கன்னு தோணுது...” என்று சொல்லியவாறு அவள் அறைக்குள் சென்றாள். ஏதோ தேடி எடுக்கும் சத்தம் அவனுக்குக் கேட்டது.

சிறிது நேரம் கழித்து அவள் வெற்றிலையுடன் திரும்பி வந்தாள். அவன் வெற்றிலை போடத் தொடங்கினான். அவள் மீண்டும் அறைக்குள் சென்றாள். மூன்று மர பொம்மைகளைக் கொண்டு வந்தாள். பிறகு அவள் சொன்னாள்:

“என் தொழில் இதுதான். ஒரு பொம்மை செய்ய  எனக்கு ஒருநாள் போதும்.”

அவன் பொம்மைகளை வாங்கிப் பார்த்தான். ஒரு சாண் உயரத்தில் உருவாக்கப்பட்ட பெண் உருவங்கள். எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தன. பிரகாசமான வண்ணங்கள் கொண்டு செய்யப்பட்டிருந்தன அந்த பொம்மைகள். பளபளப்புடன் அவை இருந்தன. ஒவ்வொரு உறுப்பும் மிகவும் அழகாக அமைந்திருந்தன. பெரிய மார்புகள், தடித்த பின்பகுதி, அளவான வயிற்றுப் பகுதி, அடர்த்தியான கூந்தல் பகுதி, கவர்ச்சியான சிரிப்பு- மொத்தத்தில் பெண்மைத்தனம் குடி கொண்டிருக்கும் அழகான சிலைகள். அவன் கண்களை இமைக்காமல் அந்த பொம்மைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவளைப் பார்த்தான்.

“நாலும் ஒரே மாதிரி இருக்கே! ஆச்சரியம்தான்...”

“மூணு பொம்மைகளைப் பார்த்துட்டு அதை நாலுன்னு சொல்றதுதான் ஆச்சரியம்.” அவள் சொன்னாள். அதற்கு அவன் பதிலெதுவும் சொல்லவில்லை.

“இது அச்சுல வார்த்ததா?”

“நாங்க வார்ப்பு வேலை செய்றவங்க இல்ல...”

“கடைஞ்சு எடுத்து செஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். பாற்கடலைக் கடைஞ்சப்போ கிடைச்ச லட்சுமியைப்போல இருக்கு!”

“எனக்கு பாற்கடலைக் கடையத் தெரியாது. அதனால லட்சுமியை நான் பார்க்கல. என் தொழில் என்னன்னு உங்களுக்கு நான் காட்டினேன். நாலுன்னு எப்படி சொன்னீங்க?”

“இந்த உயிரில்லாத மூணும், இவற்றை உருவாக்கிய உயிருள்ள ஒண்ணும்- அப்ப நாலு வருதுல்ல! எல்லாம் ஒரே மாதிரி இருக்குறதுதான் அதிசயம்!”

“அப்படின்னா உயிரில்லாததைப்போல உயிருள்ளதும் இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? அதுல ஆச்சரியப்படுறதுக்கு எதுவுமே இல்ல. எல்லாம் என் தலையெழுத்து...”

அவளின் கண்கள் பனித்தன. மீண்டும் அறைக்குள் சென்று அவள்  திரும்பி வந்தபோது அவளுடைய முகம் சற்று துடைத்தெடுத்ததைப் போல் இருந்தது. அவள் கையில் ஒரு பொம்மை இருந்தது. அதை அவள் அவனுக்குப் பக்கத்தில் வைத்தாள். அவன் அதை எடுத்துப் பார்த்தான்.

“கம்ஸ வதம் செய்யிற கிருஷ்ணனா இது? இல்லாட்டி முந்தியரப்பனுக்கு கிருஷ்ணன் வேடம் கட்டியிருக்கா? இது கொஞ்சம் பெருசா இருந்தா வெள்ளரி வேலிக்குள்ளே கொண்டு போய் வைக்கலாம்- கண் திருஷ்டி படாம இருக்குறதுக்கு. இல்லாட்டி ரொம்பவும் சின்னதா இருந்திருந்தா...”

அவள் இடையில் புகுந்து சொன்னாள்: “இந்த பொம்மை இப்படி ஆயிருச்சு. ஐம்பது பொம்மைகள் வரை செஞ்சதுல இந்த பொம்மை இப்படி வந்திருச்சு. கிருஷ்ணன் உருவம் உண்டாக்கி பார்த்தவங்க எல்லாம் வாங்கிட்டுப் போனாங்க. மூணோ நாலோ அணாக்கள் அதுக்கு விலையா கிடைக்கும். படிப்படியா அணிகலன்கள் ஸ்ரீ கிருஷ்ணனைப்போலவும் வடிவம் இன்னொரு கிருஷ்ணனைப்போலவும் வர ஆரம்பிச்சுடுச்சு. இன்னொரு கிருஷ்ணன்னா ஒரு காலத்துல நான் கிருஷ்ணனைப்போல மனசுல நினைச்சிருந்த அந்த ஆளைச் சொல்றேன். அந்த ஆளைப் பற்றி நினைக்கிறப்போ எனக்கு பயங்கர கோபம் வரும். பொம்மையை செஞ்சு முடிக்கிறப்போ அது அந்த ஆளைப்போலவே இருக்கும். என் கோபம் முழுவதும் பொம்மையோட முகத்துல பிரதிபலிக்கும். கடைசியில் என்ன நடந்ததுன்னா, ஆளுங்க இந்த பொம்மையை வாங்குறதே இல்ல. அதுக்குப் பிறகுதான் கிருஷ்ணன் பொம்மை செய்யிறதையே நிறுத்திட்டேன். ஆண் உருவத்தை உருவாக்குறதே இல்லைன்ற முடிவுக்கு வந்தேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel