Lekha Books

A+ A A-

மர பொம்மைகள் - Page 3

Mara Pommaigal

ஸ்ரீ பார்வதியோட உருவத்தை உண்டாக்கிப் பார்த்தேன். அதாவது- ஒரு பெண் உருவத்தைப் படைச்சேன். அதுக்கு ஸ்ரீ பார்வதின்னு பேர் வச்சேன். நான் பார்வதியைப் பார்த்திருக்கிறேனா என்ன? பார்வதி தவம் செய்வாங்கன்னும் சிவன்கூட சேர்ந்து நடனம் ஆடுவாங்கன்னும் நான் கேள்விப்பட்டிருக்கேன். சினிமாவுலயும் அதைப் பார்த்திருக்கேன். பிறகு பார்வதி பரமேஸ்வரன்கூட சில நேரங்கள்ல சண்டை போடுவாங்கன்னும் கேள்விப்பட்டிருக்கேன். அதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு நான் பொம்மையை உருவாக்கினேன். சில நேரங்கள்ல கண்ணாடியைப் பார்த்து பார்வதியைப்போல நான் ஒவ்வொரு விதத்துல முக பாவனையைக் காட்டி, அதைப்போல பொம்மையைச் செய்வேன். என்னை பார்வதியா நினைச்சுக்கிட்டு நான் பொம்மையைப் படைப்பேன். அதுனால பாருங்க... எல்லா பார்வதியும் ஒரே மாதிரி இருக்கும்...”

அவள் தொடர்ந்து கூறுவதற்கு முன்பு அவன் சொன்னான்: “நீங்களும் பார்வதியும் ஒரே மாதிரி இருக்கீங்க.”

“நானும் பார்வதியும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்? பார்வதிக்கு என் வடிவத்தை  நான் படைச்சிட்டேன். எனக்கே அது ஒரு மாதிரியா இருந்துச்சு. என் உருவத்தையே பொம்மையா செஞ்சு விலைக்கு  விக்கிறதுன்னா...”

அவன் வேகமாகச் சொன்னான்: “நிறைய ஆளுங்க வாங்கியிருப் பாங்களே!”

“நிறைய பேர் வாங்கினாங்கன்றது உண்மைதான். அப்படி அந்த பொம்மைகளை நிறைய பேர் வாங்க வாங்க படகுத் துறையில இருக்குற காத்த என்னை ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டா. “பொம்மை அழகா இருக்கலாம். இவ ஏன் பொம்மை விக்கிறா தெரியுமா? தன் உருவத்தை பொம்மையா செஞ்சு ஆம்பளைகளைக் கவர்றதுக்குத்தான்”னு என் முகத்துக்கு நேராவே அவ சொல்ல ஆரம்பிச்சா. அவ்வளவுதான் நான் ஒரு பேயாட்டம் ஆடினேன். அதுல அவ கதிகலங்கிப் போயிட்டா. பிறகு யோசிச்சுப் பார்த்தேன். நான் இல்லாத நேரத்துல என்னைப் பற்றி அவ ஏதாவது சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்? அதே நேரத்துல இன்னொன்னையும் நான் யோசிச்சேன். இதே காரியத்தை வேற யாராவது ஒருத்தி செஞ்சிருந்தா நான் சும்மாவா இருப்பேன்? நான்கூட அப்படி சொல்லத்தான் செய்வேன்!”

“நீங்க சொல்றது சரியா இருக்கலாம். இருந்தாலும் அவங்கவங்களோட உருவத்தை இந்த அளவுக்கு கனகச்சிதமா உருவாக்குறதுன்னா சாதாரண விஷயமா?”

அதற்கு அவள் சொன்னாள். “நீங்க வேணும்னே என்னை அளவுக்கு அதிகமா புகழ்றீங்க. ஒரு பொம்மையை உருவாக்கிட்டா, பிறகு அதைப் பார்த்து எத்தனை பொம்மைகள் வேணும்னாலும் உருவாக்கலாம். கண்ணாடியில பார்த்து கண்டதைப்போல முதல்ல ஒண்ணு உண்டாக்கணும். அது ஒரு பெரிய பிரச்சினையில்ல.”

“நீங்க சொல்றது சரிதான்.”

“நான் என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்னு இந்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதுனாலயே அவங்களைப் பார்த்து நான் பயந்தேன்!”

“இப்போ என்னைப் பார்த்து பயமொண்ணுமில்லியே?”

“இப்போ யாரைப் பார்த்தும் எனக்கு பயம் கிடையாது. என்னைத் தவிர, வேற யாரும் இருக்குறதாகவே நான் நினைக்கிறது இல்ல.”

“கலைகள்ல ஈடுபடுறவங்கள்ல பெரும்பாலானவங்க அப்படித்தான் இருப்பாங்க.”

அவள் அறைக்குள் போய் திரும்பி வருவதற்கிடையில், “அதுக்குப் பேர்தான் ஆணவம்” என்று அவன் மெதுவான குரலில் சொன்னான்.

அவள் மேலும் நான்கு உருவங்களைக் கொண்டு வந்து அவனுக்கு முன்னால் வைத்தாள். கருணை, கோபம், வியப்பு, காதல்- இந்த உணர்வுகளின் உச்ச நிலையைக் காட்டும் அவளின் உருவங்கள்தான்.

“இந்த பொம்மைகள் ரொம்பவும் சிறப்பா இருக்குன்னு சொன்னா, நான் அளவுக்கதிகமா புகழ்றேன்னு என்னைப் பார்த்து நீங்க சொல்வீங்களா?”

“அப்படி நான் சொல்லாம இருக்கேன். இந்த பொம்மைங்க ரொம்பவும் சிறப்பா இருக்குன்னு எதை வச்சு சொல்றீங்க? இந்த பொம்மைகளை நான் இப்போ விக்கிறது இல்ல. பகல்ல தூங்காம இருக்குறதுக்காக செய்யிற வேலை இது. என்னைக்காவது ஒருநாள் இந்த பொம்மைகள் தேவைப்படும். என்னைப் பார்க்காதவங்க கையில இந்த பொம்மைகள் போய் சேர்றப்போ, இது தேவிடியா தனக்கு செஞ்சிக்கிற விளம்பரம்னு அவங்க சொல்ல மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும்.”

“ஒரு தொழில் தெரியும். நல்லாவே தெரியும். அதுல வருமானம் கிடைக்க வழியில்லைன்றது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்தான். நீங்க ஏன் மத்தவங்க உங்களைப் பத்தி அப்படிச் சொல்றாங்க, இப்படிச் சொல்றாங்கன்றன்னு கவலைப்படுறீங்க! ஆளுங்க உங்களைப் பத்தி எது வேணும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். இந்த பொம்மைக்கு ஒரு ரூபாவை எந்தக் குருடன் வேணும்னாலும் கொடுப்பான். உங்க வாழ்க்கையும் பிரச்சினை இல்லாம நடக்கும். தொழில்- பொம்மைகள் செய்வதுன்னு நான் எழுதப் போறேன்.”

அவன் எழுதினான். தொடர்ந்து மேலும் என்னென்னவோ எழுதினான். அவளுடைய தம்பியைப் பற்றிய விவரங்களைக் கேட்டு எழுதினான். இதற்கிடையில் அவள் ஒரு பொம்மையைத் தவிர, மீதி எல்லா பொம்மைகளையும் வீட்டுக்குள் கொண்டு சென்றாள். அந்த ஒரு பொம்மையை அவள் தன் கையில் வைத்திருந்தாள்.

அவன் மேலும் ஒருமுறை வெற்றிலை போட்டான்: “பொம்மை விக்கிறதே இல்லைன்னா சொன்னீங்க?”

“நான் இதைத் தின்றது இல்ல. அடுப்புலயும் போடுறது இல்ல.”

“நிறைய பொம்மைகள் உங்க கையில இருக்கா?”

“மக்கள் தொகையில சேர்ந்ததா இந்தக் கேள்வி?”

“சரி... கணவனைப் பற்றி...”

அவள் சொன்னாள்: “அதைத்தான் நான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! வழியில பார்க்குறவங்க எல்லார்கிட்டயும் கணவனைப் பற்றி இதுக்குமேல சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? அந்த ஆளு ஒரு மிருகம். கள்ளு குடிப்பாரு. பிறகு... ஒரு வெறி பிடிச்ச நாயைப்போல நடப்பாரு. வழியில யாரைப் பார்த்தாலும் தேவையில்லாம அவங்கக்கிட்ட போய் வம்புச்சண்டை இழுப்பாரு. நல்லா உதை வாங்குவாரு. கள்ளு போதை இறங்குறது வரை இந்த நிலைமைதான். அதாவது- காலையில பொழுது விடியிறதுவரை அந்த ஆளு இருக்குறது போலீஸ் ஸ்டேஷன்ல தான். ஒருநாளு ராத்திரி நேரத்துல ஒரு போலீஸ்காரனை இங்கே ஸ்டேஷன்ல இருந்து அனுப்பியிருந்தாங்க. நான் வந்து அந்த ஆளை ஜாமீன்ல எடுக்கணும்னு. பொழுது விடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்னு சொன்னேன் நான். வீட்டுல ஆம்பளை இல்லாத நேரத்துல யாராவது உள்ளே புகுந்து வம்பு பண்ணினா என்ன செய்வேன்னு அந்த ஆளு கேட்டான். அதுக்கு நான் சொன்னேன்: “அப்படி யாராவது வந்தா, தலையணைக்குக் கீழே உளியை மறைச்சு வச்சிருக்கேன்”னு. அவ்வளவுதான்- அந்த போலீஸ்காரன் போயிட்டான். ரெண்டு மணி நேரம் கழிச்சு என் கணவன் ஆடிக்கிட்டே வீட்டுக்குள்ளே வந்தாரு. நான் எதுவும் கேட்கவோ, பேசவோ இல்ல.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel