Lekha Books

A+ A A-

தங்க மோதிரம் - Page 5

thanga mothiram

"மோதிரத்தைப் பார்க்குறப்பவே கம்பீரமாக இருக்கு!'' இந்துக்கள் சொன்னார்கள்: "இது யாரோட கையில கிடந்தது? மோதிரத்துல ஒரு ராஜகளை தெரியுது. இது அசோகன் கையில் கிடந்ததா? இல்லாட்டி அக்பரோட கையிலயா? இல்லாட்டி... ஹாரூண் அல் ரஷீதோட கையில கிடந்தா?''

"என்னோட விரல்ல கிடந்தது.'' என் மனைவி சொன்னாள்: "என்னோட அம்மாவோட, அம்மாவோட, அம்மாவோட, அம்மாவோட தந்தை ஒரு ராஜாவை எதிரிகள்கிட்ட இருந்து காப்பாத்தினாரு. அதற்குப் பரிசா பல பொருட்களையும் மகாராஜா கொடுத்தாரு. அதுல ஒண்ணு இந்த மோதிரம். இதோட உண்மையான சொந்தக்காரி நான்தான். ஆனா, இவர் வந்து கழற்றி இவர் கையில போட்டுக்கிட்டாரு...''

"என்ன இருந்தாலும் சுல்தானேச்சே! பிறகு...''

என் மனைவி சொன்னாள்:

"எங்க ரெண்டு பேருக்குமிடையில் ஒரு சின்ன பந்தயம். நான் ஆண் குழந்தையைப் பெற்றால் என் விரல்ல இருந்த மோதிரத்தை இவருக்கு தந்திடணும். எனக்குப் பிறந்தது பெண் பிள்ளையா இருந்தால், எனக்கு இவர் ஐம்பது ரூபா தரணும். பிரசவம் ஆனவுடனே இவர் வந்து மோதிரத்தை என் விரல்ல இருந்து கழற்றுறப்போ, நான் சிரிச்சேன்...''

"அடியே... பொய்யா. சொல்ற!'' நான் சொன்னேன்: "நீ எங்கேடி சிரிச்சே? நான்தான் பார்த்தேனே! வியர்வை வழிஞ்சு தளர்ந்துபோய் நீ படுத்துக் கிடந்தது தெரியாதா?''

"ஏன்- மனசுக்குள்ளேயே நான் சிரிச்சுக்கக் கூடாதா?'' மனைவி கேட்டாள். நான் இந்துக்களைப் பார்த்துச் சொன்னேன்: "தர்ம கணக்குல ஒரு உபதேசம் சொல்றேன், கேட்டுக்கோங்க. பெண்களோட மட்டும் எந்தக் காலத்திலயும் வாக்குவாதம் பண்ணாதீங்க.''

"ரொம்ப சந்தோஷம்.'' இந்துக்களில் ஒரு வளைந்த பல்லைக் கொண்டிருந்தவன் சொன்னான்: "எல்லாரும் படுத்தாச்சா?''

இந்துக்கள் ஐந்து பேரும் பக்கத்தில் இருந்த சிமெண்ட் திண்ணையில் காலை நீட்டிப் படுத்தார்கள்.

நான் கேட்டேன்:

"என்ன செய்றீங்க?''

இந்துக்கள் சொன்னார்கள்:

"சத்யாக்கிரகம்! மரணம் வரை உண்ணாவிரதம். கோஷங்கள் நிறையவே கை வசம் இருக்கு. இந்துக்களுக்குக் கொடுக்க வேண்டியதை இந்துக்களுக்குக் கொடுக்கணும்... மனைவிக்குத் தர வேண்டியதை மனைவிக்குத் தரணும்... இங்கிலாப் சிந்தாபாத்!''

அப்போது மகள் ஷாஹினா சிணுங்கி அழ ஆரம்பித்தாள். நான் சொன்னேன்:

"மகளே, பயப்படாதே!''

இந்துக்கள் மணம் பிடித்தவாறு எழுந்து, சமையலறைப் பக்கம் போனார்கள்.

"மாமிசம் சமைக்கிறீர்களா? நல்லதாப் போச்சு! உண்ணாவிரதத்தை இப்போ மாத்திக்கிறதா முடிவெடுத்துட்டோம். மரணம் வரை உட்கார்ந்தவாறே சத்யாக்கிரகம்.'' இந்துக்களில் ஒரு தடியன் சொன்னான்: "ஆறரை மணிக்கு எங்களைப் பார்க்கலைன்னா எங்களோட பொண்டாட்டிகளும் நாற்பத்தியேழு குழந்தைகளும் இங்கே வந்திடுவாங்க. அவுங்களும் எங்க கூடவே இருந்திடுவாங்க!''

என் மனைவி என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சொன்னேன்:

"அவுங்க சொன்னது காதுல விழுந்ததா? இந்துக்கள் ஒவ்வொருத்தருக்கும் சராசரி ஒன்பது சொச்சம் குழந்தைகள். இதுல பாவப்பட்டவங்களும் அறிவில்லாதவங்களும் முஸ்லிம்கள்தான்...''

"முன்னூறு பேரைக்கூட கல்யாணம் பண்ணிக்கிட்டு...''

பாவப்பட்டவனும் அறிவில்லாதவனுமான முஸ்லீமான நான் சொன்னேன்: "உலகில் உள்ளோரே! நம்முடைய பூமி இருக்குதே... இது லட்சம் வருடங்களுக்கு முன்பே இருக்கு. அப்போ எந்த அளவில் இருந்ததோ அதே பரப்பளவுதான் இப்போதும். ஆனா, மனிதர்களோட தொகை மட்டும் நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்குல ஆட்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே இருக்கு. சாப்பிடுறதுக்கு உணவு இல்ல. இருக்குறதுக்கு இடம் இல்ல. காடுகளும் வயல்களும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுக்கிட்டேவருது.

எல்லாமே ஒரே நெரிசலா இருக்கு. அதை முஸ்லிம்கள் நினைச்சுப் பார்த்தாங்க. ரெண்டு பிள்ளைங்க நமக்கு இருந்தா போதும்ன்ற முடிவுக்கு அவுங்க வந்தாங்க. ஆனா, இந்துக்கள்...''

"இந்துக்கள்தான் இந்த விஷயத்தை முதல்ல சொன்னது!'' ஒரு இந்து சொன்னான்.

இன்னொரு இந்து சொன்னான்:

"கிறிஸ்துவர்கள்தான் இதை முதல்ல சொன்னாங்கன்னு நான் நினைக்கிறேன்!''

நான் சொன்னேன்:

"உண்மையை யார் சொன்னா என்ன? முஸ்லிம்கள் தாங்கள் எடுத்த முடிவுப்படி நடந்தாங்க. மனைவி ஒண்ணு, பிள்ளைங்க ரெண்டு... ஆனா,  இந்துக்களோ? நீதான் கேட்டியேடி.. ஒரு ஆளுக்கு ஒன்பது சொச்சும் குழந்தைங்க...''

என் மனைவி மெதுவாக எழுந்தாள். இந்துக்களை முறைத்துப் பார்த்தாள். நான் சொன்னேன்:

"அடியே... உனக்கு பிள்ளை பெத்த உடம்பு. நீ இந்துக்களை அடிக்கவோ, உதைக்கவோ செஞ்சா நல்லா இருக்காது. மெல்ல ரெண்டு கெட்ட வார்த்தைகளால அவுங்களைத் திட்டு. நான் அதை லவுட் ஸ்பீக்கர்ல சொல்ற மாதிரி உரத்த குரல்ல சொல்றேன். ஒன்பது சொச்சும் பிள்ளைங்க...''

ஒரு இந்து என் மனைவியைப் பார்த்து சொன்னான்:

"எங்க மேல வேணும்னே குற்றச்சாட்டு சொல்லணும்ன்றதுக்காக இதைச் சொல்றாரு. இவருக்கு இனியும் கல்யாணங்கள்

பண்ணிக்கணும்னு எண்ணம் இருக்கு. என்ன இருந்தாலும் சுல்தான் ஆச்சே!''

"கட்டிக்கிட்டு வரட்டும்.'' மனைவி சொன்னாள்: "ஒரு உலக்கையோட நான் கேட்டுக்குப் பக்கத்துல நிற்பேன். ஒவ்வொருத்தியா வரட்டும். எல்லாரையும் உலக்கையாலயே அடிச்சுக் கொல்றேன்!''

"இதுதான் பெண் தர்மம்ன்றதா?'' நான் ஆச்சரியத்துடன் சொன்னேன்: "கிருஷ்ண பகவான் இருந்த காலத்துல இந்த உலக்கையைப் பயன்படுத்துற பழக்கமெல்லாம் கிடையாது!''

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே என் மனைவி என்னவோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள்.

"பாருக்குட்டி, தாக்ஷு, விஸ்வலட்சுமி, லலிதா, நாணிக்குட்டி- இதுல நாணிக்குட்டிக்கு மட்டும்தான் மூன்று குழந்தைகள் இருக்காங்க.''

நாணிக்குட்டியின் கணவனான தடியன் சொன்னான்:

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? ரெண்டாவது தடவை பிரசவம் ஆகுறப்போ நாணிக்குட்டி ரெட்டைக் குழந்தையா பெத்துட்டா!''

இந்துக்கள் பல நியாயங்களும் சொல்வார்கள். நான் சொன்னேன்: "அவங்க நினைச்சாங்கன்னா எப்ப வேணும்னாலும் ரெட்டைக் குழந்தை பெத்துக்கலாம்!''

மனைவி கேட்டாள்:

"அப்படின்னா இவுங்க சொல்ற முப்பத்தாறு குழந்தைங்க யாரு?''

நான் சொன்னேன்:

"இந்துக்களோட கள்ளச்சந்தையில பிறந்த குழந்தைங்க...''

"கள்ளச்சந்தை குழந்தைங்க!'' என் மனைவி இந்துக்களை வியப்புடன் பார்த்தாள். "அந்தக் குழந்தைகள் எங்கள் சகோதரியின் குழந்தைகள்” என்று அவர்கள் சொல்வதற்கு இடம் தராத வகையில் நான் சொன்னேன்:

"அடியே... அந்தக் கயிறைப் பிடிச்சு ஒண்ணு ரெண்டு தடவை நீ இழு. பிறகு அரை பத்திரியும், ஒரு சிறு துண்டு கறியும் எடுத்து வச்சு எல்லா இந்துக்களும் கொடுக்கச் சொல்லு. எல்லா விஷயமும் நல்லாவே முடிஞ்சிருச்சு. நாயர்களுக்கு அஞ்சு ரூபா வீதமும் திய்யர்களுக்கு நாலரை ரூபா வீதமும் கொடுக்குறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்!''

என் மனைவி சொன்னாள்:

"பத்திரியும் கறியும் வயிறு நிறைய எல்லாருக்கும் கொடுக்குறேன். அதோட சாயாவும்...''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel