Lekha Books

A+ A A-

தங்க மோதிரம் - Page 4

thanga mothiram

என்னைத் தேடி வருபவர்களைப் பார்க்கக்கூடிய அறையைத் தாழ்ப்பாள் போட்டு பூட்டியாகிவிட்டது. என் மனைவி குழந்தை பெற்றிருப்பதைப் பார்ப்பதற்கு பெண்கள் வருவார்கள். எல்லா விஷயத்தையும் இந்துக்கள் தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். வேறு எங்காவது யாருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு வீட்டை மாற்றிவிட்டால் என்ன? மனைவி கேட்பாள்! ஆனால், இந்துக்கள் இதைத் தெரிந்திருப்பார்களா? அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படியே எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டு நான் வீட்டிலேயே அமர்ந்திருந்தேன். மகளுடன் விளையாடியவாறு மனைவியின் அருகே

உட்கார்ந்திருந்தேன். அப்போது பகல் மூன்று மணி இருக்கும். சமையலறையில் தூய வெண்மை நிறத்தில், தாளின் அடர்த்தியில் "அரிசி பத்திரி” தயார் பண்ணுகிறேன். (கேரளத்தில் காலை நேர உணவிற்காக தயாரிக்கப்படும் ஒரு வகை டிஃபன் இது). ஸ்டைலாக ஆட்டுக்கறி சமைக்கிறேன். இந்த நேரத்தில் வெளியே யாரோ கேட்டைத் திறக்கும் சத்தம்! தொடர்ந்து ஒருவர் இல்லை- வீட்டின் ஐந்து பக்கங்களில் இருந்தும் ஐந்து பேர் உரத்த குரலில் கேட்கிறார்கள்.

"புஹோயி! குரு இங்கே இருக்காரா?''

இந்துக்கள்தான். அவர்கள் வீட்டைச் சுற்றிலும் நின்றிருக்கிறார்கள்!

என்ன செய்வது?

நான் என் மனைவியைப் பார்த்து மெதுவான குரலில் சொன்னேன்:

"அடியே... நான் இங்கே இல்லைன்னு சொல்லு. முக்கியமான விஷயமா எகிப்து நாட்டுக்குப் போயிருக்கேன்னு சொல்லுடி... இல்லாட்டி... சும்மா திருப்புணித்துறை வரை போயிருக்கேன்னு சொல்லு. ம்... வேண்டாம்டி. மதராஸ் போயிருக்கேன்னு சொல்லு...''

அப்போது வெளியே இருந்து சத்தம்-

"நாங்க உள்ளே வரணும். அம்மாவையும் குழந்தையையும் நாங்க பார்க்கணும்...''

"வரக்கூடாதுன்னு சொல்லுடி” என்று நான் கூறுவதற்கு முன்பே தடியர்களான அந்த ஐந்து இந்துக்களும் மானம், மரியாதையுடன் ஒரு முஸ்லிம் பெண் பிரசவம் ஆகி படுத்திருக்கும் அறைக்குள் வருகிறார்கள். அக்பர், ஹைதரோட் ஷாஜஹான்- கடவுளே, ரத்தம் கொதிக்கிறது.

நான் அவர்களை முறைத்துப் பார்த்தேன். ஆனால், அந்த இந்து தடியர்கள் என்னைப் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ள வில்லை. ஒருவன் கையில் ஒரு பெரிய தேன் பாட்டில் இருந்தது. அவர்கள் அதை என் மனைவியின் கையில் கொடுத்தார்கள். மனைவி அதை என்னிடம் தந்தாள். நான் அதன் மூடியைத் திறந்து, இரண்டு அவுன்ஸ் என் வாய்க்குள் ஊற்றி ருசித்துப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. அரை அவுன்ஸ் மனைவி வாயிலும் இரண்டு துளிகள் சூழந்தையின் நாக்கிலும் ஃபீட் செய்து, பாட்டிலை மூடி மேஜை மேல் வைத்தேன்.

இந்துக்களில் ஒருவன் குழந்தையைத் தூக்கினான். எல்லாரும் குழந்தையைச் சுற்றி நின்றிருந்தார்கள். அதையே வைத்த கண் எடுக்காது பார்த்தார்கள். பிறகு சொன்னார்கள்:

"சரிதான்... பெண் குழந்தை!''

நான் ஒன்றும் பதில் பேசவில்லை. கணவன் சொன்னபடி மனைவி கேட்டிருக்க வேண்டும். நான் கொடுத்த அந்த அழகான துண்டுத் துணியை ஒழுங்காக குழந்தையின் உடம்பில் அணிவித் திருந்தால், இந்த நிலை உண்டாகி இருக்குமா?

இந்துக்களில் ஒருவன் கேட்டான்:

"மகளுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?''

என் மனைவி  சொன்னாள்:

"ராஜகுமாரின்ற அர்த்தத்துலன்னு நினைக்கிறேன்- ஷாஹினா...''

"ஷாஹினா.'' இந்துக்கள் சொன்னார்கள்: "என்ன இருந்தாலும் சுல்தானோட மகளாச்சே. குழந்தையும் தாயும் நல்லா இருக்கணும். நல்ல உடல் ஆரோக்கியத்தோட எல்லா செல்வங்களையும் வாழ்க்கையில பெற்று நீண்ட காலம் வாழணும்.'' சிறிது நேரம் கழித்து மெல்லிய குரலில் சொன்னார்கள்.

"தந்தையும்தான்!''

அவர்கள் மேஜை மேல் இருந்தவற்றில் பெரியனவாகப் பார்த்து ஐந்து நேந்திர வாழைப்பழங்களை எடுத்து ஒவ்வொருவராக தோலை நீக்கிச் சாப்பிட ஆரம்பித்தார்கள். நான் சொன்னேன்:

"ஒரு முஸ்லிம் தந்தையோட ரத்தமும், நரம்பும், எலும்பும், சதையும் இந்த ஏத்தப் பழத்துல இருக்கு. அதைத்தான் இந்துக்களான நீங்க இப்ப சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க...''

இந்துக்கள் எதுவுமே பேசவில்லை. அவர்கள் பழத்தோலை மேஜை மேல் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆப்பிளாக எடுத்தார்கள். அதற்குப் பிறகு அங்கே இருந்த பெரிய கோரைப் பாயைச் சுவரோடு சேர்த்து விரித்து, இந்துக்கள் ஐந்து பேரும் சுவரில் சாய்ந்து அதில் உட்கார்ந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தார்கள். ஒரு தடிமனான இந்து விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு மற்ற இந்துக்களிடம் சொன்னான்:

"நாணிக்குட்டியை ஏமாற்ற முடியுமா? அவள் பார்த்துக்கிட்டு இருக்குறப்போ, குடையை மறைச்சுப் பிடிச்சுக்கிட்டு, குனிஞ்ச தலை நிமிராம வேறொரு ஆளு மாதிரி போறாரு ஒரு முஸ்லிம் தந்தை!''

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு இந்துக்கள் மெதுவான குரலில் சொன்னார்கள்.

"ம்ஹும்... பெண் குழந்தைதான்!''

அப்போது என் மனைவிக்கு ஒரு சந்தேகம். திடீரென்று ஒரு வெளிச்சம் வந்ததைப் போல அவள் கேட்டாள்:

"உங்கக்கிட்ட ஏதாவது பந்தயம் போட்டிருக்கிறாரா என்ன?''

நாணிக்குட்டியின் கணவனான தடிமனான இந்து சொன்னான்:

"ஆமா... பெண் குழந்தை பிறந்தால், முஸ்லிம் தந்தை அப்பிராணி இந்துக்களுக்கு தலா பத்து ரூபா தர்றதா பந்தயம். பொறக்குறது ஆண் குழந்தையா இருந்தால், அப்பிராணி இந்துக்கள்கிட்ட இருந்து முஸ்லிம் தந்தை ஐம்பது ரூபா வாங்கிக்கலாம்!''

"அதுக்காக...?'' என் மனைவி அவர்களைப் பார்த்துக் கேட்டாள். அவள் பார்வை என் முகத்தின் மேல் இருந்தது.

இன்னொரு தடிமனான இந்து சொன்னான்:

"முஸ்லிம் தந்தை பிரசவமான விஷயத்தைச் சொல்லி, அப்பிராணி இந்துக்கள்கிட்ட இருந்து ஐம்பது ரூபா வாங்கிட்டாரு. அதுதான் விஷயம்...''

என் மனைவி என்னையே பார்த்தாள். அவள் கேட்டாள்:

"பொறந்தது ஆண் பிள்ளைன்னு இவர் சொன்னாரா?''

"சே... அப்படிச் சொல்லல.''

"பிறகு என்ன சொன்னாரு?'' என் மனைவி குரலில் ஏதோ சந்தேகம்.

ராணிக்குட்டியின் கணவனும் தடியனுமான இந்து சொன்னான்:

"முஸ்லிம் தந்தை எங்களைத் தேடி வந்து ரொம்பவும் கவனமா இருக்குற மாதிரி சிரிச்சுக்கிட்டே, "மனைவி பிரசவமாயிட்டா”ன்னு சொன்னாரு. "இந்துக்கள் தோத்தாச்சு”ன்னும் சொன்னாரு. அப்பிராணி இந்துக்களான நாங்க இலேசா சிரிச்சிக்கிட்டே முஸ்லிம் தந்தை கையில ஐம்பது ரூபா தந்தோம்!''

கள்ள இந்துக்கள்! பணம் தந்தது உண்மை. ஆனால் அதை சிரித்துக்கொண்டு தரவில்லை. பிறகு ஏன் அப்படி பொய் சொல்ல வேண்டும்?

அங்கு ஒரே நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் இந்துக்கள் அப்பிராணி முஸ்லிமின் ஆப்பிளை எடுத்து கருமுரா என்று கடித்து, மென்று தின்று கொண்டிருக்கும் சத்தம் அங்கு பயங்கரமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

என் மனைவி என் விரலில் இருந்த தங்க மோதிரத்தைச் சுட்டிக்காட்டியவாறு கேட்டாள்:

"இந்த மோதிரத்தைப் பார்த்தீங்களா?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel