Lekha Books

A+ A A-

தங்க மோதிரம் - Page 6

thanga mothiram

நான் சொன்னேன்:

"மகிழ்ச்சி...''

இப்படி எல்லா விஷயங்களும் ஒரு மாதிரி முடிவுக்கு வந்து கொண்டிருந்தபோது, இந்துக்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் ஏதாவது பிரச்சினையை உண்டாக்க வேண்டுமே! நாயர்கள் எதையோ நினைத்து சிரித்தார்கள். ஒரு நாயர் சொன்னான்:

"நீங்க சொன்னது சரிதான். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அரை ரூபா குறைவு. சரியான முடிவுதான்!''

நாணிக்குட்டியின் கணவனான தடியன் திய்யர் ஜாதியைச் சேர்ந்தவன். இதைக் கேட்டதும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

"யாரைப் பார்த்து தாழ்ந்த ஜாதின்னு சொல்றீங்க? திய்யர்களான எங்களுக்கு முஸ்லிம் தந்தை தர வேண்டியது நாற்பது ரூபா!''

நாயர்கள் என்ன இளப்பமானவர்களா? ஒரு நாயர் சொன்னான்:

"அந்தக் காலத்துல கொலை அது இதுன்னு இருந்தவங்கதான். இருந்தாலும் நாயர்களான எங்களுக்கு முஸ்லிம் தந்தை தரவேண்டியது அறுபது ரூபா. வட்டிக்கு பதிலா வயிறு நிறைய பத்திரியும் கறியும்...''

என் மனைவி என்ன இலேசுப்பட்டவளா? அவள் சொன்னாள்:

"என்னோட மகள் ஷாஹினாவோட அப்பா எனக்கு தர வேண்டியது ஒரு தங்க மோதிரம்... அதோட ஐம்பது ரூபாவும்...''

இப்படித்தான் என் மனைவியும் இந்துக்களும் பந்தயத்தில் வெற்றி பெற்றார்கள். அவர்கள் முன்னிலையில் என் மனைவி கையில் தங்க மோதிரத்தையும், ஐம்பது ரூபாயையும் தந்தேன். இந்துக்களுக்கு பத்திரியும், கறியும், தேநீரும், சிகரெட்டும், நூறு ரூபாயும் கிடைத்தது. இந்துக்கள் ஒன்றாகக்கூடி எங்களை எதிர்த்து நின்றார்கள். அப்போது என் மனைவி கேட்டாள்:

"தங்க மோதிரத்தைச் சும்மா அணியவா?''

நான் சொன்னேன்:

"வேண்டாம்டி புல்லே!''

மகள் சொன்னாள்:

"குங்குரு!''

நான் சொன்னேன்:

"சரிதான் மகளே!''

மனைவி கேட்டாள்:

"மகள் என்ன சொல்லுது?''

நான் சொன்னேன்:

"கடவுள் இருக்கார்னு சொல்லுது!''

கடவுளின் ஆசீர்வாதம் உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியுமா என்ன? சமீபத்தில் ஒரு நாள் நகரம் வரை போய்விட்டு வந்த நான் என் மனைவியைப் பார்த்து கேட்டேன்.

"அடியே... ரொக்கப்பணம்! உன்னோட அந்தப் பழைய மோதிரத்துக்கு என்னடி வேணும்?''

மனைவி சொன்னாள்:

"நூற்றியொரு ரூபா.''

"சரி...'' நான் சொன்னேன்: "சிரிச்ச முகத்தோட... கடவுளை மனசுல நினைச்சுக்கிட்டே அந்த மோதிரத்தைக் கழற்று... இந்தா பணம்...''

நான் நூற்றியொரு ரூபாயை என்னுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து அவள் கையில் தந்தேன். மனைவி மோதிரத்தைக் கழற்றி என்னிடம் தந்தாள். நான் அதை விரலில் மாட்டிக் கொண்டேன்.

"தங்க மோதிரம்... ஸ்டைலாத்தான் இருக்கு!''

தொடர்ந்து ஒற்றை நோட்டுகள் பலவற்றையும் எடுத்து மகளின் உடல்மேல் சிதற விட்டேன். மனைவி ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தவாறு, "மகள் கிழிச்சிடப் போகுது'' என்று சொல்லியவாறு நோட்டுகள் அனைத்தையும் பொறுக்கி எடுத்து எண்ணிப் பார்த்தாள்.

"முந்நூற்றி அறுபத்தஞ்சு ரூபா... ஆமா... இந்தப் பணம் எங்கே இருந்து கிடைச்சது?''

"கடவுள் கொடுத்தார். மகளோட பேர்ல வாங்கிய சீட்டுல ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ கிடைச்சது. இந்துக்களுக்கு ஒண்ணுமே கிடைக்கல. நாங்கள் ரேடியோவை விற்றோம். நானூற்றி எழுபத்தஞ்சு ரூபா கிடைச்சது. மீதி ரூபாய்க்கு நாங்க சாயா குடிச்சோம். இப்போ சொல்லு... யார்டி ஜெயிச்சது?''

மனைவி சொன்னாள்:

"நான்!''

"நீயா?'' நான் தங்க மோதிரத்தை விரலில் இருந்து கழற்றி, ஒரு நூலில் அதைக் கட்டி ஆட்டியவாறு சொன்னேன்: "பெயர்கூட மண்ணோடு மண்ணாக மறைந்துபோன ராஜாவே! உங்களோட ஆத்மாவுக்கு நிரந்தர அமைதி கிடைக்கட்டும்னு நாங்க வேண்டிக்கிறோம். உங்களின் ஆசீர்வாதத்தோடு மிகச் சாதாரணமான மனிதனான நான் இந்த மோதிரத்தை என்னோட மகளின் கழுத்தில் அணிவிக்கப் போறேன்!''

நான் அந்த மோதிரத்தை மகளின் கழுத்தில் கட்டித் தொங்க விட்டேன். தங்க மோதிரம் மகளின் நெஞ்சில் ஒளி வீசியது.

மகள் சொன்னாள்:

"டாட்டா.. குங்குரு..''

நான் சொன்னேன்:

"மகளே... குருகுரு...''

காலங்கள் கடந்தோடும். நானும் என்னுடைய பெயரும் கடந்து போன எத்தனையோ கோடி வருடங்களுக்குள் மூழ்கிக் கரைந்து போகும். அப்போது ஒரு பெண் கூறுவாள்: "என்னோட அம்மாவோட, அம்மாவோட, அம்மாவோட, அம்மாவோட கழுத்துல அவங்க அப்பா கட்டித் தொங்கவிட்டதுதான் இந்தத் தங்க மோதிரம்!''

மங்களம்

சுபம்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel