Lekha Books

A+ A A-

உயிரின் வழி

uyirin vali

ரு மாலை நேரத்தில்தான் முருங்கை மரம் சாய்ந்து கீழே விழுந்தது. அப்போது காற்றோ மழையோ எதுவும் இல்லை. நான் தைலத்தைத் தேய்த்தவாறு குளியலறையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் "டே'' என்ற அந்த சத்தம் கேட்டது. முதலில் அந்த ஒரு சத்தம் மட்டும்தான் கேட்டது. பிறகு மழைக்காலத்தின் ஆரம்பத்தில் லேசாக இடி இடிப்பதைப்போல இரண்டு மூன்று முறை "டே, டே'' என்று கேட்டது. முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பிறகு சிரமப்பட்டு வெளியே வந்து பார்த்தபோதுதான் எனக்கே தெரிந்தது- என் முருங்கை மரம் சாய்ந்து கீழே விழுந்திருக்கிறது!

முற்றத்தில், வராந்தாவோடு சேர்ந்து வளர்ந்திருந்தது அந்த முருங்கை மரம். வயதுக்கு மீறிய வளர்ச்சி அதற்கு இருந்தது. அதனால்தான் ஆறடி உயரத்திலிருந்து அது கீழே சாய்ந்துவிட்டது. சாய்ந்த பகுதி கீழே விழாமல் கான்க்ரீட்டாலான மேற்கூரையின்மீது விழுந்திருந்தது.

முருங்கை மரம் முழுமையாக இரண்டு துண்டுகளாக ஆகவில்லை. மேற்கூரை தாங்கிக் கொண்டதால் மரத்தின் ஒரு சிறு பகுதி முறியாமல் அப்படியே இருந்தது. இருந்தாலும் ஒரு சிறு காற்று வீசினால் மேலே இருக்கும் பகுதி கீழே இருக்கும் அடி மரத்தை விட்டு முறிந்து கீழே விழப் போவது உறுதி என்று என்னுடைய மனம் கூறியது.

மரத்தின் முறிந்த பாகம் அப்படியே அசையாமல் கிடந்தது.

முதலில் அதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம்தான் உண்டானது. அந்த மரம் எப்படி முறிந்து விழுந்தது? அதுவும் காற்றோ மழையோ எதுவும் இல்லாமல்... எவ்வளவு பெரிய மரம் அது!

முருங்கை மரம் முறிந்த இடத்திலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. நான் அந்த இடத்தில் கையை வைத்து, மனதில் வருத்தம் தோன்ற நின்றிருந்தேன்.

"முருங்கை மரம் சாதாரணமாகவே ஒடியக் கூடியதுதான். வீட்டுக்குப் பக்கத்துல அதை நடக்கூடாது'' என்று மனைவி முதலிலேயே என்னிடம் சொல்லியிருந்தாள். இருந்தாலும் அவள் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, என்னுடைய இந்த பாறை போன்ற இறுகிப்போன நிலத்தில் முருங்கையை நடுவதற்கு ஏற்ற மண்ணுள்ள வேறு ஒரு இடம் இல்லை. பல இடங்களிலும் கொத்திப் பார்த்த பிறகுதான் வராந்தாவை ஒட்டியிருக்கும் அந்த இடத்தில் கொஞ்சம் மண் இருப்பதைப் பார்த்தேன். அதனால் அந்த இடத்தில் நான் முருங்கையை நட்டேன். பிறகு என்ன காரணத்தாலோ என்னுடைய முருங்கை எந்த நேரத்திலும் விழவே விழாது என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருந்தது.

அதுதான் இப்போது...

மனைவி என்னைத் தேடி வந்தபோது நான் ஒரு முட்டாளைப்போல அந்த இடத்திலேயே நின்றிருந்தேன். மனைவி என்னவோ சொன்னாள். அது எதுவுமே என் காதில் தெளிவாக விழவில்லை. அவளின் எல்லா கேள்விகளுக்கும் பதிலாக நான் சொன்னது இதுதான்.

"முருங்கை மரம் முறிஞ்சிடுச்சு...''

அப்போது மனைவி சொன்னாள்:

"அது எனக்கும் தெரியும். ஆனா, நான் தெரிஞ்சுக்க வேண்டியது நீங்க இங்கே என்ன பண்ணுறீங்கன்றதைப் பற்றித்தான்.''

அதற்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

அப்போது மனைவி கடுகடுப்பான குரலில் சொன்னாள்: "இன்னைக்கு குளிக்கிறதா இல்லியா? இப்போ தண்ணியோட சூடு குறைஞ்சு போயிருக்கும். தைலம் தேய்ச்சு எவ்வளவு நேரமாச்சு?''

நான் மீண்டும் முருங்கை மரம் யாருமே எதிர்பார்க்காமல் முறிந்து விழுந்ததைப் பற்றி பேசத் தொடங்கியதை மனைவி கேட்கத் தயாராக இல்லை.

"வேண்டாம்... வேண்டாம்... அதைப் பற்றி பிறகு பேசலாம். போயி குளிச்சிட்டு வாங்க. இப்போ ஒரு கையிலதான் பிரச்சினை இருக்கு. இப்படியே இருந்தா ரெண்டு கைகளுக்கும் பிரச்சினை வந்திடும். அது தேவைதானா?''

நான் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. முறிந்து விழுந்த இந்த மரத்தின்மீது பெரிய அளவிற்கு ஈடுபாடு முதலிலிருந்தே என் மனைவிக்கு இல்லையே!

குளியலறைக்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட வலது கையின் தோளில் நீரை எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தேன். மனைவி சொன்னதைப்போல நீரின் வெப்பம் குறைந்துதான் போயிருந்தது. இருந்தாலும் நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் தொட்டியிலிருந்து நீரை எடுத்து தோள்மீது ஊற்றிக் கொண்டேயிருந்தேன். நான் எப்போதும் தனியாகத்தான் இந்த காரியத்தைச் செய்வேன். வலது கையின் தோள் முதல் முட்டி வரை கையால் அழுத்தித் தடவி விட்டு, வெந்நீரை மெதுவாக ஊற்றி... இதுதான் நான் ஒவ்வொரு நாளும் செய்வது. ஆனால், இன்று எல்லாமே சற்று தாளம் மாறிவிட்டது. மனைவி வாசலில் வந்து நின்று, "இன்னைக்கு குளிச்சு முடிச்சிருவீங்கள்ல?'' என்று கேட்ட பிறகுகூட நான் சூடே முற்றிலும் இல்லாமல் போயிருந்த நீரை ஒரு சடங்கைப்போல தோள்மீது ஊற்றிக் கொண்டேயிருந்தேன்.

கஞ்சி குடித்துவிட்டு நான் எப்போதும் படுப்பதைவிட சற்று முன்னதாகவே படுக்கச் சென்றேன். ஆனால், சீக்கிரம் படுத்துவிட்டேனே தவிர, என்னால் உறங்கவே முடியவில்லை. மனம் என்னவோபோல் இருந்தது. மனைவி இன்று அதைப் பற்றி அதிகமாக எதுவும் பேசவில்லையே! வழக்கமான குரலில் "இனி இதோட காய்களை பையில வச்சி ஊர் முழுக்க அலைஞ்சு ஆளுங்களுக்கு பரிசா தரவேண்டிய அவசியம் இல்லியே!'' என்றாவது அவள் கூறுவாள் என்று நான் நினைத்தேன். ஆனால், அவள் அப்படி எதுவும் சொல்லவில்லை. மொத்தத்தில் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அந்த அமைதிதான் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.

இரவில் எப்போதோ மனைவியின் விரல்கள் என்னைத் தொட்டன.

"தூங்கல... அப்படித்தானே?''

சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு நான் கேட்டேன்.

"உனக்கு சந்தோஷம்தானே.''

மனைவி கேட்டாள்:

"எதுக்கு?''

நான் சொன்னேன்:

"நீ எப்பவும் விரும்பாத அந்த மரம் முறிஞ்சி விழுந்திருச்சுல்ல?''

மனைவி அப்போது என்னவோ மனதில் நினைத்துக் கொண்டு சொன்னாள்.

"அப்படிச் சொல்றது சரியில்ல. எனக்குப் பிடிக்கலைன்னா, அதுக்கு நான் தண்ணி ஊற்றியிருப்பேனா? நான் அதுக்கு உரம் போட்டிருப்பேனா? நான்தானே இதையெல்லாம் செஞ்சேன்? முதல்ல அதுல இருந்து இலையைப் பறிக்க முயற்சி பண்ணினப்போ, அதைத் தடுத்தது நான்தானே? இது சின்ன பிள்ளை... இன்னும் கொஞ்சம் வளரட்டும்... அதுக்குப் பிறகு இதுல இருந்து இலையைப் பறிச்சு கூட்டு வைக்கலாம்னு சொல்லித்தானே உங்களை நான் தடுத்தேன்?''

நான் எதுவும் பேசாமல் படுத்திருந்ததைப் பார்த்துவிட்டு மனைவி கேட்டாள்:

"நான் சொன்னது ஞாபகத்துல இல்லியா?''

ஞாபகத்தில் இருந்தது.

மனைவி மீண்டும் சொன்னாள்:

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel