Lekha Books

A+ A A-

உயிரின் வழி - Page 3

uyirin vali

நேற்று காலையில் நான் வராந்தாவில் வெறுமனே நின்றிருந்தேன். வெறுமனே என்று சொன்னாலும் உண்மையில் என் கண்கள் முறிந்து கிடந்த மரத்தின் கீழ்ப்பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்தன என்று கூறுவதே சரியானது. அப்போது திடீரென்று எனக்குத் தோன்றியது- மரத்தின் அடிப்பகுதியிலிருந்து சில கிளைகள் புதிதாக முளைக்கின்றனவோ? நான் மரத்தினருகில் சென்று கூர்ந்து கவனிக்க மட்டுமல்ல- ஒன்றிரண்டு முறை மெதுவாக கையால் தடவிக்கூட பார்த்தேன். தெளிவாக எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் இரண்டு மூன்று இடங்களில் ஒரு சிறிய...

என் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டானது.

அப்போது மனைவி சொன்னாள்:

"இதை வெட்டி நீக்க வேண்டாமா?''

நான் மனைவியை அதிர்ச்சி நிறைய பார்த்தேன்.

மனைவி சொன்னாள்:

"இந்த அடிப்பகுதியைச் சொல்லல. நான் சொல்றது மேலே முறிஞ்ச பகுதியை. அது இப்போது காய்ஞ்சு போயிருக்கும். காற்று வீசுறப்போ அது சாய்ஞ்சு கீழே விழுந்திடுதுன்னு வச்சுக்கங்க... அப்போ எலெக்ட்ரிக் வயர், டெலிஃபோன் கம்பி எல்லாமே அறுந்து விழுறதைத் தவிர வேற வழியில்ல. அதுக்கு முன்னாடி யாரையாவது அழைச்சு...''

நான் எனக்குள் முணுமுணுத்தேன். பிறகு மெதுவான குரலில் சொன்னேன்:

"பார்ப்போம்...''

உண்மையாகச் சொல்லப் போனால் மனைவி சொன்ன விஷயம் சில நாட்களாகவே என்னுடைய மனதிலும் இருந்ததுதான். முறிந்த மரம் கீழே விழுந்தால் டெலிஃபோன் கம்பியும் எலெக்ட்ரிக் கேபிளும் அறுந்துவிடும் என்பது உண்மைதான். எப்படி விழுந்தாலும் கட்டாயம் அது நடக்கும். அப்படி இல்லாமல் யாராவது மேலே ஏறி மரத்தைத் துண்டு துண்டாக வெட்டி கம்பிக்கு எந்தவொரு பிரச்சினையும் வராமல்...

வராந்தாவிலும் முற்றத்திலும் நின்று நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கும்பொழுது சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த சிலரிடம்- அவர்கள் இத்தகைய வேலைகளைச் செய்பவர்கள்- நான் இந்த விஷயத்தைப் பற்றி கூறியிருந்தேன். ஆனால், அவர்கள்

வருவதாகச் சொன்னார்களே தவிர யாரும் வரவில்லை. இனியும் தாமதிக்காமல் இந்த விஷயத்தைச் செய்து முடித்தே ஆகவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் மனைவியும் அதைச் சொன்னாள்.

பல நாட்களுக்குப் பிறகு நான் அன்று சாயங்காலம் சட்டையை எடுத்து அணிந்தேன். அதைப் பார்த்துவிட்டு மனைவி கேட்டாள்.

"இது என்ன?''

நான் சொன்னேன்:

"பள்ளிக்கூட சந்திப்பு வரை போயி இந்த மரத்தை வெட்டி எடுக்குறதுக்கு யாராவது ஆள் கிடைப்பாங்களான்னு பார்த்துட்டு வர்றேன்.''

அப்போது மனைவி சொன்னாள்:

"வேண்டாம்... இந்தக் கையை வச்சுக்கிட்டு நீங்க... நான் அப்புக்கிட்ட சொல்றேன்.''

அப்பு பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவன்.

நான் சொன்னேன்:

"அப்பு சொன்னா யாரும் வர மாட்டாங்க. நானே போயி பார்க்குறேன். சீக்கிரமா வந்திடுறேன்.''

மனைவி பார்த்துக் கொண்டிருக்க, நான் இறங்கி நடந்தேன்.

பள்ளிக்கூடத்திற்கு  முன்னாலிருக்கும் தேநீர் கடைக்கு அருகில் யாராவது இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. ஆனால், அங்கு சென்றபோது யாரும் இல்லை. தேநீர் கடைக்காரனிடம் விசாரித்ததற்கு சைக்கிள் கடைக்கு முன்னால் யாராவது கட்டாயம் இருப்பார்கள் என்று

சொன்னான். ஆனால், அங்கு சென்றபோதும் யாரும் இல்லை. என்னுடைய முகத்தில் இருந்த வெறுப்பைப் பார்த்ததும் சைக்கிள் கடைக்காரன் கேட்டான்: "என்ன?''

நான் விஷயத்தைச் சொன்னதும் அவன் சொன்னான்:

"நீங்க அந்த நாராயணனோட வீட்டுல போய் விசாரிங்க. அவன் அங்கே இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு.''

என் முகத்தில் தெரிந்த அவநம்பிக்கையைப் பார்த்துவிட்டு சைக்கிள் கடைக்காரன் மீண்டும் சொன்னான்:

"அவன் கொஞ்ச நாட்களாகவே வேலைக்குப் போறது இல்ல. ஏன்னு விஷயம் தெரியல. எதுக்கும் போய் பாருங்களேன்...''

நாராயணனின் வீட்டிற்குப் போகக்கூடிய வழியை அவனே சொன்னான்.

அங்கு சென்றபோது நாராயணன் இருந்தான்.

நாராயணன் எனக்காக சிறுசிறு வேலைகளை இதற்கு முன்பு செய்திருக்கிறான். அந்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு நான் வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் சர்வ சாதாரணமான குரலில் கேட்டான்:

"பெரிய மரமா?''

நான் சொன்னேன்:

"அப்படிச் சொல்ல முடியாது. ஒரு முருங்கை மரம். இப்போ அது நல்லா காய்ஞ்சு போயிருக்கும்.''

நாராயணன் அப்போது சொன்னான்:

"இருந்தாலும் உதவிக்கு யாராவது தேவைப்படும். எதுக்கும் நான் வந்து பார்க்குறேன்.''

நான் அப்போது ஆர்வத்துடன் கேட்டேன்:

"இன்னைக்குத்தானே?''

எதிர்பார்க்காத ஒன்றை நான் சொல்லிவிட்டதைப்போல நாராயணன் சொன்னான்:

"இன்னைக்கா? இன்னைக்கும் நாளைக்கும் முடியாது. எனக்கு ஏராளமான வேலைகள் இருக்கு. எதுக்கும் வர்றதுக்கு முன்னாடி நான் உங்களுக்குச் சொல்லுறேன்!''

அதற்குமேல் நான் எதுவும் பேசவில்லை.

ஏமாற்றத்துடன் நான் வேறொரு வழியில் திரும்பி வந்தேன். வேறு யாரையாவது பார்த்தால் அந்த ஆளிடம் சொல்லிப் பார்க்கலாமே என்ற எண்ணம் மனதில் இருந்தது.

ஆனால், யாரையும் பார்க்கவில்லை.

வீட்டை அடைந்தபோது, மிகவும் களைப்பாக இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக நான் வீட்டை விட்டு அன்றுதான் வெளியே போயிருந்தேன்.

வராந்தாவிலோ நடுவிலிருக்கும் அறையிலோ மனைவியைக் காணவில்லை. முற்றத்தில் காலை நீட்டிக் கொண்டு வராந்தாவில் சிறிது நேரம் அமர்ந்திருந்த நான் வீட்டின் பின்பக்கம் போனேன். குறிப்பாகக் கூறும்படி எந்தவித நோக்கமும் இல்லை. வெறுமனே அங்கு போனேன்.

வீட்டின் சரிவான மேற்கூரைமீது ஏறுவதற்கான வழி பின்னால்தான் இருந்தது. வழி என்று சொன்னால் அலுமினியத் தாலான எடுத்து நீக்கக்கூடிய ஒரு ஏணிதான். அது மண்ணில் ஊன்றப்பட்டிருக்கவில்லை. வெறுமனே மேற்கூரைமீது அது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அவ்வளவுதான்.

அந்த ஏணி வழியாக ஏறித்தான் நான் தண்ணீர்  தொட்டியில் நீர் இருக்கிறதா என்று பார்ப்பேன். முருங்கைக் காய்களைப் பறிப்பதுகூட அதில் ஏறிச் சென்றுதான். அப்போது ஏணியை பலமாகப் பிடித்துக் கொண்டு மனைவி கீழே நின்றிருப்பாள்.

ஏணியின் அருகில் சென்றதும் நான் நின்றேன். நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தேன். மனதில் குறிப்பிட்டுக் கூறும்படி ஒன்றும் தோன்றவில்லை. வெறுமனே மேல் நோக்கிப் பார்த்தவாறு...

இடது கையால் ஏணியைத் தொட்டேன். முதலில் மெதுவாகத்தான். அலுமினியத்தாலான தண்டுப் பகுதியை பிரியத்துடன் தடவினேன். என் பிடி தண்டின்மீது படிப்படியாக இறுகியது.

இப்போது வலது கையையும் மெதுவாக இன்னொரு தண்டின் மீது வைத்தேன். மேலே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தபோது ஆகாயம் அழைப்பதைப்போல் இருந்தது.

நான் மேல் நோக்கி ஏற ஆரம்பித்தேன்.

வலது கையில் உண்டான வலியைப் பற்றி அப்போது நான் பொருட்படுத்தவேயில்லை.

மேற்கூரை சரிவான இரண்டு அடுக்குகளாக இருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel