Lekha Books

A+ A A-

ஒழுக்கம்

ozhukkam

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க வேண்டும். சரஸ்வதி பவனத்தில் இரண்டாவது மாடியிலிருந்து பெரிய அறையில் நாங்கள் படுத்து நீண்ட நேரமாகிவிட்டது. சலவை வேலை செய்பவர்கள் மது அருந்தி விட்டுக் கீழே பண்ணிக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் எனக்குத் தூக்கமே வரவில்லை.

அவர்களின் ஆரவாரமெல்லாம் முடிந்து அவர்களும் முழுமையான உறக்கத்தில் மூழ்கிப்போன பிறகும் கூட என்னிடம் சண்டை போட்டு விட்டுப்போன தூக்கம் என்னைத் தேடி வருவதாகத் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் எல்லாரும் ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். நான் மட்டும் கண்களை அகல விரித்துக் கொண்டு படுத்திருந்தேன். கடைசியில் நான் ஏமாற்றமடைந்த காதலனைப் போல படுக்கையை விட்டு எழுந்துபோய் திறந்து கிடந்த ஜன்னல் வழியாக மேற்குத் திசையைப் பார்த்தவாறு நிற்க ஆரம்பித்தேன்.

கடலை வருடிக் கொண்டுவரும் குளிர்ந்த காற்று அவ்வப்போது ஜன்னல் வழியாக அறைக்குள் வந்து கொண்டிருந்தது. சுற்றிலும் பயங்கர அமைதி நிலவிக் கொண்டிருந்தது. 'பாணகங்கா'வைச் சுற்றி அமைந்திருக்கும் கோவில்களிலிருந்தும், சத்திரங்களிலிருந்தும் மின் மினிப் பூச்சிகளைப் போல சில மங்கலான வெளிச்சங்கள் தெரிந்தன. இருந்தாலும் அங்கேயும் இரவு நேரத்தின் அமைதி வலை வீசியிருந்தது. ஒரு மங்கலான ஓவியத்தைப் போல தூரத்தில் கடல் தெரிந்தது. மகாதேவ ஆலயத்திற்கு மேலே சந்திரன் தெரிந்தது. ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது, அது அந்த ஆலயத்தின் உச்சியில் பதித்த பொன் நகையைப் போல காட்சியளித்தது.

கடலில் குளித்துவிட்டு வந்த குளிர்ந்த காற்று என்னை வருடியவாறு சென்றது. உலகம் முழுவதும் ஆழமான அமைதியிலும் உறக்கத்திலும் இருக்க, நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தேன். பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை அளித்தது. என்னுடைய குளிர்ந்துபோன மூளையிலிருந்து மெதுவாகக் கிளம்பி வெளியே செல்லும் சிந்தனைகள் ஒன்றிற்குப்பிறகு இன்னொன்றாக தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்று ஆராய்ந்தன. 'நைஸா'மின் அரண்மனையும் அங்கிருந்த பூந்தோட்டங்களும் என் முன்னால் வந்து நின்று கொண்டிருந்தன. அதோடு 'வால்கேஸ்வர'த்தில் இருக்கும் கடலின் கரும்பாறைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருக்கும் முக்கால் நிர்வாண கோலத்திலிருக்கும் ஒரு பைத்தியக்காரியின் முகத்தையும் நான் பார்த்தேன். நான் ஆழமான சிந்தனையில் மூழ்க விரும்பினேன். ஏழைகளைப் பற்றியும், பட்டினி கிடப்பவர்களைப் பற்றியும், பிச்சைக்காரர்களைப் பற்றியும், திருடர்களைப் பற்றியும், கொலை செய்பவர்களைப் பற்றியும் விலை மாதர்களைப் பற்றியும் நான் சிந்தித்தேன்.

இந்தியாவின் ஒரு எல்லை முதல் இன்னொரு எல்லை வரை நடந்து கொண்டிருக்கும் கணக்கிலடங்காத சமுதாய ஒழுங்கீனங்கள் சட்டத்தின் மறைவில் நடந்து கொண்டிருக்கும் அக்கிரமங்கள்- இவையெல்லாம் என்னுடைய சிந்தனைக்கு விஷயங்களாக அமைந்தன.

திடீரென்று அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு அழுகைச் சத்தம் காற்றில் மிதந்துவந்து என்னுடைய சிந்தனையைக் கலைத்தது. அதைத் தொடர்ந்து ஒரே ஆரவாரம் கேட்டது.

நான் காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பூசாரி ஒரு சிறு குடிசை கட்டி வாழ்ந்து கொண்டிருந்தான். அங்கிருந்துதான் அந்த அழுகைச் சத்தம் வந்தது. "இங்க பாரு மகனே. ஒவ்வொரு நாளும் ஒண்ணு ரெண்டு தடவை நான் சம்மதிக்கத்தான் செய்யிறேன். இன்னைக்கு அம்மாவுக்கு எதுவுமே செய்ய முடியல. நான் இந்த ஆளுகிட்ட முடியாதுன்னு சொன்னேன். அதுக்கு என்னை இப்படி அடிச்சு உதைச்சா எப்படி?"

தேம்பித் தேம்பி அழுவதற்கு மத்தியில் நான் இப்படி சில மலையாள வார்த்தைகளைக் கேட்டேன். தொடர்ந்து மனித உடலின்மீது விழும் அடி, உதைகளின் சத்தம் பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய அழுகைச் சத்தம். 'எங்கம்மாவைக் கொன்னுடாதீங்கப்பா' என்றொரு கெஞ்சல் குரல். கன்னடமும் இந்தியும் கலந்த கோபக் குரல். தொடர்ந்து அடி,உதை, ஓலம். அந்த ஆர்ப்பாட்டம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் தொடர்ந்திருக்கும். பிறகு ஒரே அமைதி.

அந்தக் குளிர்ந்த காற்று பிறகும் தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தது. கடலின் இரைச்சல் சத்தம் தெளிவாகக் காதில் விழுந்தது. அந்த நிலவு கோவிலுக்கு மேலேயிருந்து நகர்ந்து வானத்தின் உச்சியில் பளிச் சென்று தெரிந்தது. அந்தக் குடிசையிலிருந்து கேட்ட அழுகைச் சத்தத்திற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.

அந்தக் கர்நாடகக்காரனின் மனைவி ஒரு மலையாளி. அவள் ஒரு பிராமணப் பெண். அவளின் வாழ்க்கைக் கதையை எங்கள் அய்யப்பன் நாயர் சில நாட்களுக்கு முன்பு எங்களிடம் சொன்னார்.

தெற்குக் கேரளத்தில் ஒரு மூலையில் இருக்கிறது அவளுடைய வீடு. மிகவும் இளம் வயதிலேயே அவள் விதவையாகிவிட்டாள். குறுகிய காலம் மட்டுமே இருந்த அவளுடைய குடும்ப வாழ்க்கையின் விளைவாக, அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தான். சிறிது காலம் அவள் மிகுந்த கடவுள் பக்தியுடன் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டினாள். ஆனால் இயற்கையின் சக்திக்கு முன்னால் அவளால் வெறுமனே நீண்ட நாட்கள் அடங்கி இருக்க முடியவில்லை. சமுதாயம் அவள் மீது உண்டாக்கிவிட்டிருக்கிற ஒழுக்கக் கோட்பாடுகளை தன்னுடைய சிந்தனைகளால் சில இரவுகளில் அவள் மீற ஆரம்பித்தாள். கடைசியில் அவளிடம் உண்டான உணர்ச்சிப் பெருக்கம் அந்தச் சங்கிலியை முழுமையாக அறுக்கச் செய்தது.

சிறிது காலம் ஒழுக்கக் கோட்பாட்டை ஏமாற்றிய அவள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். அவளை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைத்த இயற்கையே அவளுக்கு எதிராகத் திரும்பியது. அவள் கர்ப்பமானாள். சமுதாயத்தில் அவளுக்கு இடமில்லாமல் போனது. அவள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றினார்கள். குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு காசிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள். எங்கெங்கோ சென்றாள். யார் யாரெல்லாமோ அவளை அனுபவித்தார்கள். கடைசியில் பலவித கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் இங்குவந்து சேர்ந்தாள். எத்தனையோ ஆட்கள் அவள் பின்னால் அலைந்தார்கள். இறுதியில் பலமுள்ளவன் வெற்றி பெறுவான் என்ற விதிப்படி அந்தக் கன்னடக்கார பூசாரி அவளைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான்.

அந்தப் பூசாரி சற்று வயது அதிகம் ஆனவனாகவும், அழகற்ற தோற்றத்தைக் கொண்டவனாகவும், கொடூர குணம் கொண்டவனாகவும் போக்கிரித்தனமான காரியங்களைச் செய்யக்கூடியவனுமாகவும் இருந்தான். கோவில் வாசலில் காசு வாங்குவதற்காக வந்து நின்றிருக்கும் பிச்சைக்காரர்களிடம் அவன் ஒரு பகுதியைத் தட்டிப் பறிப்பான். அவனுக்குக் கள்ளு குடிக்க வேண்டும்; கஞ்சா இழுக்க வேண்டும். அது மட்டுமல்ல- தினந்தோறும் அவனுக்குப் பெண்ணும் இருந்தாக வேண்டும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel