Lekha Books

A+ A A-

தங்க மோதிரம் - Page 3

thanga mothiram

அவர்கள் வற்புறுத்தியதால் நான் குழந்தையின் பெயரில் ஒரு டிக்கெட் வாங்கினேன். அவர்கள் என்னுடன் வர, ஏத்த வாழைப்பழம், தக்காளி, முந்திரிப்பழம், ஆப்பிள், பலாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, பேரீச்சம்பழம், அல்வா ஆகியவற்றையும் ஒரு துணியும் வாங்கினேன். மாம்பழம் இல்லாததால் இலேசாக புளிக்கக்கூடிய மாங்காயை வாங்கினேன். எல்லாவற்றையும் சுமை தூங்கும் ஒரு ஆளிடம் கொடுத்து தூக்கி வரச் செய்தேன்.

"அடுத்த தடவை பந்தயத்துக்கு இந்துக்கள் தயாரா?'' என்று கேட்டவாறு நான் வீட்டுக்கு வந்தேன். என் மனைவியும் குழந்தையும் சுத்தம் செய்யப்பட்டு பெரிய ஹாலில் மாற்றப்பட்டிருந்தார்கள்.

நான் மனைவியின் கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மேஜையை இழுத்துப்போட்டு, பழங்களையும் மற்ற பொருட்களையும் அதில் வைத்தேன். என் மனைவி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நான் கொண்டு வந்த துணியை குழந்தைக்கு அணிவித்தேன். மனைவி அதை எடுத்துச் சுருட்டி தூரத்தில் எறிந்தவாறு என்னை முறைத்துப் பார்த்தாள். முகத்தை ஒரு மாதிரி "உம்”மென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் என்னவோ தப்பு செய்துவிட்ட மாதிரி தெரிந்தது எனக்கு. என்ன தப்பு நடந்துவிட்டது என்று யோசித்துப் பார்த்தேன். என்னவென்று எனக்கே தெரியவில்லை.

"அடியே... உனக்கு என்ன வேணும்?'' நான் கேட்டேன்: "நான் போய் பாரிஜாத மலர் கொண்டு வரணுமா? சொல்லு... வேணும்னா ஒண்ணோ ரெண்டோ கொண்டு வர்றேன்...''

மனைவி சொன்னாள்:

"எனக்கு என்னோட தங்க மோதிரம் வேணும். பிறகு... பந்தயத்துல ஜெயிச்சதுக்கு ஐம்பது ரூபா...''

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அவளிடம், "என்ன சொல்றன்னே புரியல!'' என்றேன். அவள் என்னையே முறைத்துப் பார்த்தாள். பிறகு மெதுவான குரலில் கேட்டாள்:

"எனக்குப் பிறந்த குழந்தை ஆணா பொண்ணா?''

நான் சொன்னேன்:

"பொண்ணு!''

"ஹா...'' மனைவி சொன்னாள்.

"ஹோ...'' நானும் சொன்னேன்.

மனைவி கேட்டாள்:

"பிறகு...?''

"சின்னத்துணியை வாங்கிட்டு வந்து மகளுக்குப் போட்டேன். வெட்கத்தை மறைக்கணும்ல... பண்பாடு!''

"ஓ... நீங்களும் உங்க பண்பாடும்! எல்லாரும் ஆரம்பத்துல இப்படிப் பொறந்து வந்தவங்கதான்!''

"ஓஹோ... நீ சொல்றதும் சரிதான்!''

"உண்மையாகவே சரிதான்...'' மனைவி சொன்னாள்: "எனக்கு உடனே என்னோட தங்க மோதிரமும் ஐம்பது ரூபாயும் வந்தாகணும்...''

"அடியே... பந்தயத்துல ஜெயிச்சது யாரு? பிரசவம் ஆகுறதுக்கு முன்னாடி நீ என்ன பாட்டு பாடினே? ஞாபகத்துல இருக்கா? "முதல் குழந்தை ஆணா இருக்கணும் -அவன் அப்பாவைப் போல அழகா இருக்கணும்'னு நீ பாடினப்போ, நான் என்ன பாடினேன்? "முதல் குழந்தை பொண்ணா இருக்கணும்- அவ அம்மாவைப் போல பேரழகியா இருக்கணும்'னு பாடினேன்... அந்த டூயட்ல நீ ஆண் குழந்தைன்னு சொன்னே... நான் பெண் குழந்தைன்னு சொன்னேன்!''

"ஒரு புளும்கூஸ் டூயட்டை சாட்சியா கொண்டு வர்றீங்களா?'' மனைவி சொன்னாள்.

நான் சொன்னேன்: "இன்னொரு விஷயம். இந்த பிரசவ வேதனைன்றது உண்மையிலேயே ஒரு பெரிய விஷயம்தான். வேதனை கலந்த பூகம்பமும், சூறாவளியும், இடியும், பேய் மழையும்... அடடா எத்தனை பயங்கரம்! இத்தனை பயங்கர விஷயங்கள் நடக்குறப்போ பெண்கள் பல சம்பவங்களையும் முழுசா மறந்துடுவாங்க. நீ அப்படித்தான் மறந்து போயிட்டே. உனக்கு சாட்சி சொல்ல ஒருத்தர்கூட இல்ல. நம்ம ரெண்டு பேரும் ஏதாவது எழுதி கையெழுத்துப் போட்டிருக்கோமா என்ன? நான் சொல்றது தான் உண்மை. நீ பல விஷயங்களையும் தப்பா புரிஞ்சுக்கிட்டே! என்னென்னவோ நீ சொல்ற? இதுதான் பெண் தர்மமா?''

சம்பவம் குஸால்! என் மனைவியிடம் "இதுதான் பெண் தர்மமா?” என்று எதற்கும், எப்போதும் கேட்பது ஒரு விதத்தில் நல்லதுதான். என் மனைவிக்கு இப்போது இலேசாக சந்தேகம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அவள் வலது கையை உயர்த்தி, "சலாம்... சரி... நீங்க போங்க'' என்று சொல்லியவாறு அங்கிருந்த பொருட்களுக்கு மத்தியில் இருந்து ஒரு பச்சை மாங்காயைக் கையில் எடுத்தாள்.

"புளிப்பான மாங்காய் திங்கணும்னு கொஞ்ச நாட்களாகவே நான் நினைச்சிருந்தேன். ஆனா, இது அதுக்கான சீஸன் இல்லைன்னு நினைச்சு உங்கக்கிட்ட சொல்லாம இருந்தேன். நான் சொல்லாமலே வாங்கிட்டு வந்ததற்கு நன்றி'' என்று சொல்லியவாறு என் மனைவி கையில் இருந்த மாங்காயை முகர்ந்து பார்த்தாள். "இதை கொஞ்சம் கழுவணும்.''

என் மனைவி ஒரு சணலைக் கொண்டு மாங்காயைத் துண்டாக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். நான் சொன்னேன்: "புளி மாங்காயைக் கழுவி இப்போ கருமுரான்னு கடிச்சு சாப்பிட வேண்டாம். வேணும்னா உங்க அம்மாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு அதுக்குப் பிறகு சாப்பிடு. இப்போ இனிப்பா ஏதாவது சாப்பிடு!''

நான் ஒரு ஆரஞ்சு பழத்தை உரித்து, அவள் கையில் தந்தேன். அவள் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

மனைவியின் கட்டிலில் கட்டப்பட்டிருக்கும் சணல் மிகவும் நீளமானது. அதன் மறுபக்கத்தில் அறுபது வயது இருக்கக்கூடிய ஒரு பெண் இருக்கிறாள். அவள் சமையலறைக்குப் பக்கத்தில் இருக்கும் ஸ்டோர் ரூமின் மூலையில் எப்போதும் தியானத்தில் இருப்பது மாதிரி அமைதியாக உட்கார்ந்திருப்பாள். காது கொஞ்சம்கூட கேட்காது. ஆனால், என் மனைவியும் அந்தக் கிழவியும் சர்வதேச விஷயங்கள் முதற்கொண்டு அவ்வப்போது பேசிக் கொள்வார்கள். ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு இருக்கிறது அல்லவா? அதை இரண்டு பேரும் சேர்ந்து விளக்குவார்கள். ஆனால், எனக்கோ அவர்களுடன் ஒரு வார்த்தைகூட பேசத் தெரியாது. நான் சொன்னேன்:

"நீ அவங்களைக் கூப்பிட்டு பழங்களை எடுத்து வைக்கச் சொல்லு. பச்சை மிளகாய் சட்னி தயாரிக்க உதவும்.''

நான் மகளுக்கும் மனைவிக்கும் ஒவ்வொரு முத்தம் தந்துவிட்டு, ஒருவித பரபரப்புடன் வெளியே வந்து, முன் பக்கமிருந்த மாமரத்தின் மேல் ஏறி தூரத்தில் இருந்த சாலையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தடியர்களான ஐந்து இந்துக்களும் வருகிறார்களோ?

சிறிது நேரம் சென்றபின் "மிஸ்ரு” என்று அழைக்கப்படும் முஸ்லிம் விரோதிகளான எறும்புகள் என்னைக் கடிக்க ஆரம்பித்ததால், வேறு வழியில்லாமல் மரத்தைவிட்டு நான் கீழே இறங்க வேண்டியதாயிற்று. என் தோட்டத்தின் ஒரு மூலையில் போய் யாருக்கும் தெரியாமல் நின்றேன். அங்கே ஒளிந்திருக்க இடமில்லை. என்ன செய்வது?

அவ்வளவுதான்- நான் அண்டர்கிரவுண்டாகி விட்டேன். ஒற்றையடிப் பாதை வழியே நடக்க ஆரம்பித்தேன். இந்துக்களின் வீடுகளுக்கு முன்னால் நடந்து செல்கிறபோது, குடையை வேண்டுமென்றே மறைத்துப் பிடித்தவாறு நடப்பேன். இல்லா விட்டால் வெளியே போவதே இல்லை. எப்போது பார்த்தாலும் வீட்டிற்குள்ளேயே இருக்க ஆரம்பித்தேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel