Lekha Books

A+ A A-

கமலம்

kamalam

தாயின் சிதையிலிருந்து ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்தவாறு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான் தம்பி. கமலம் தன் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரை விரல்களால் துடைத்தாள். மனதில் ஆட்சி செய்து கொண்டிருந்த துயரத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அவள் தன்னுடைய தம்பியின் அருகில் சென்றாள். அவனை இறுக அணைத்துக் கொண்டாள். “தம்பி, அழக்கூடாது. என் தம்பிக்கு நானிருக்கேன். அழாதே... அழாதே...”

அவள் அவனுடைய கண்ணீரைத் துடைத்தாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் சகோதரியின் தோளில் தன்னுடைய தோளைச் சாய்த்துக் கொண்டான். அதற்குப் பிறகும் அவனால் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏங்கி ஏங்கி அழுத வண்ணம் இருந்தான்.

அப்போது தம்பிக்கு ஏழு வயதும், கமலத்திற்கு பன்னிரண்டு வயதும் நடந்து கொண்டிருந்தது. இத்தனைப் பெரிய உலகத்தில் அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் மட்டுமே ஆதரவு என்று இருந்தனர். தாய் இறந்த துயரம் அவர்களை விட்டு இன்னும் நீங்கவில்லை. அந்த நினைவுகள் இன்னும் அவர்கள் மனதை விட்டு மறையாமல் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தன. அதற்குள் வாழ்க்கையின் கொடுமையான போராட்டங்களில் காலடி எடுத்து வைக்க வேண்டிய கட்டாயம் அந்த இருவருக்கும் உண்டானது. கமலம் அதற்காகக் கவலைப்படவில்லை. தன்னுடைய தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் போராட்டத்தைத் தைரியமாக எதிர் கொண்டாள்.

தாயும் தந்தையும் சம்பாதித்து வைத்திருந்த வீட்டுப் பொருட்கள் ஒவ்வொன்றையும் விற்றும், பக்கத்து வீடுகளில் வேலை செய்தும் அவர்கள் இரண்டு வருடங்கள் எப்படியோ வாழ்க்கையை ஓட்டினார்கள்.

பல நேரங்களில் கமலம் பட்டினியுடன் கடுமையாகப் போராடினாள். ஆனால், பட்டினியின் கொடும்பிடி தன் தம்பி மீது படாத அளவிற்கு அவள் பத்திரமாக அவனைப் பார்த்துக் கொண்டாள். கஞ்சி தயாரித்தால் அவள் நீரை மட்டும் குடிப்பாள். தம்பிக்கு சோற்றைத் தந்துவிடுவாள். சில நேரங்களில் அவளுக்கு குடிப்பதற்கு அந்த கஞ்சி தண்ணீர் கூட இருக்காது. தம்பிக்கு நல்ல ஆடைகள் எடுத்துத் தருவாள். ஆனால், அவளோ ஏதாவது கிழிந்து போன ஆடைகளை அணிந்திருப்பாள்.

அவர்களின் தாய் இறப்பதற்கு முன்பு, அவர்கள் இருவரும் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள். தாய் இறந்த பிறகு, அவள் பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்டாள். தம்பியை மட்டும் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைத்தாள். அவள் எப்போதும் தன் தம்பியின் படிப்பு விஷயத்திலேயே மிகவும் கவனமாக இருந்தாள். அவனும் தன் படிப்பு விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டவனாகவே இருந்தான்.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடி முடிந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் இல்லாமல் போயிருந்தன. பக்கத்து வீடுகளில் கிடைப்பதை வைத்து தம்பியின் தேவைகளை அவளால் நிறைவேற்ற முடியவில்லை. தன் தம்பியின் தேவைகள் மட்டுமே கமலத்தின் மனத்தில் சதா நேரமும் வலம் வந்து கொண்டிருந்தன. கமலத்திற்கென்று தனிப்பட்ட முறையில் எந்தத் தேவையும் இருக்கவில்லை. தம்பி ஆசைப்படும் பொருள் எதுவானாலும், அதை உடனே அவனுக்குக் கிடைக்கும்படி செய்வதொன்றே அவளின் வாழ்க்கையில் இலட்சியமாக இருந்தது.

பக்கத்து வீடுகளில் வேலை செய்வதுடன், அவள் கோழிகளை வளர்க்கவும் ஆரம்பித்தாள். அவளுக்கு கூடைகள் பின்னத் தெரியும். அதைச் செய்யவும் ஆரம்பித்தாள். இப்படிப் பல தொழில்களைச் செய்து அவள் சம்பாதிக்க முயற்சித்தாள். காலைப் பொழுது புலர்ந்தது முதல் நள்ளிரவு நேரம் வரை கூட அவள் கஷ்டப்பட்டு வேலை செய்தாள். அவள் எந்த வேலையைச் செய்தாலும், தன்னுடைய தம்பியைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பாள். அவன் உடல்நிலை, படிப்பு, எதிர்காலம்- இவை மட்டும் அவள் மனம் முழுக்க நிறைந்திருக்கும்.

தம்பி நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். அவள் விருப்பம் கூட அதுதான். ஆனால், அவளால் என்ன பண்ண முடியும்? புத்தகங்கள் வாங்க வேண்டும், ஃபீஸ் கட்ட வேண்டும், மற்ற மாணவர்கள் அணிவதைப் போல தன் தம்பிக்கு நல்ல ஆடைகள் வாங்கித் தர வேண்டும்- இதற்குத் தேவையான பணத்திற்கு அவள் எங்கே போவாள்? என்ன செய்வது? என்ன செய்வது? இப்படி அவள் தன்னைத் தானே கேட்டுக் கொள்வாள்.

வறுமைக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியிலும் அவளுடைய இளமை திரண்டு முன்னுக்கு வந்து கொண்டிருந்தது. இளமையின் மலர்மொட்டு அவள் மார்பில் தெரிந்தது. கஷ்டங்களின் நிழலில் அழகு புன்னகை புரிந்தது. அவள் இளமை பூத்துக் குலுங்கும் பேரழகியாகத் தோன்றினாள்.

யாருமே இல்லாத அனாதையின் அழகு மிகவும் ஆபத்தானது. பலரும் அவள் அழகை அனுபவிக்க முயற்சி செய்தார்கள். அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவளை எப்படியாவது காதலிக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்தார்கள். ஆனால், அவர்களின் ஆசை வலையில் அவள் விழுந்தால்தானே? அவள் முழு வாழ்க்கையும் அவளுடைய தம்பியின் எதிர்காலத்திற்காகவே அர்ப்பணிக்கப் பட்டுவிட்டதே!

ஒரு நாள் ஒரு மனிதன் அவளிடம் வந்து அவள் தம்பியின் கல்விக்கு ஆகிற செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். அவன் உண்மையாகவே நல்ல வசதி படைத்தவன்தான். ஆனால், அவன் பல நோய்களைத் தன்னிடம் கொண்டிருந்தவன். பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு அழகற்றவனாக இருந்தான். இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள். அவளைப் பொறுத்தவரை அந்த மனிதனின் உடல் ஆரோக்கியமோ, அழகோ முக்கியமாகப் படவில்லை. தன் தம்பியின் படிப்பு ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவளின் மனதில் அப்போது இருந்தது. அதன் விளைவாக அவள் அந்த மனிதனின் மனைவியாக மாறினாள். அவன் தன்னுடைய மனைவியின் மனம் முழுமையான திருப்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக அவளின் தம்பிக்கு எந்தக் கவலையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.

கமலம் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் நீந்தினாள். கணவன் மீது கொண்ட அன்பால் உண்டான மகிழ்ச்சியல்ல அது. மாறாக, தன்னுடைய தம்பியை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் படிக்க வைக்க முடிந்ததே என்ற எண்ணத்தால் உண்டான மகிழ்ச்சியே அது. ஒரு நாள் அவள் தம்பி கமலத்தைப் பார்த்து சொன்னான். “அக்கா நான் ஒரு வக்கீலாகணும்னு ஆசைப்படுறேன். அதற்காக நான் கல்லூரியில படிக்கணும்.”

“ம்... தம்பி, நீ வக்கீலாகணும். அதற்குப் பிறகு ஒரு நீதிபதியா வரணும்...”

“நீதிபதியா. வேண்டாம்க்கா. ஒரு வக்கீலா நான் வந்தா போதும். அக்கா நீ என்னைக் கல்லூரிக்கு அனுப்பி வைப்பியா?”

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel