Lekha Books

A+ A A-

பசி

Pasi

பசி

வைக்கம் முஹம்மது பஷீர்

தமிழில் : சுரா

பொன்னின் ஒளியில் மூழ்கிவிட்ட அழகான கனவைப் போல, பிரின்ஸிப்பலின் மனைவி மொட்டை மாடியில், இறுக்கமான பட்டு ரவிக்கைக்குள்ளிருந்த தூய வெள்ளைநிற மார்புக் கச்சையில் அடங்காத மார்பகங்களை, கறுத்து திடமாக இருந்த மரத்தாலான கைப்பிடியில் முத்தமிடச் செய்து, முகத்தைக் கைகளால் தாங்கியவாறு தெருவைப் பார்த்து நின்றிருந்தாள்.

அதில் மட்டுமே சிந்தனையை வைத்து, தேநீர்க்கடையின் இருள் நிறைந்த மூலையில், இடது கையால் தலையைத் தாங்கியபடி, பாம்பின் நாக்கைப்போல பற்கள் எழுந்து நிற்கும் வாயைப் பிளந்துகொண்டு, கறுத்து மெலிந்த கற்சிலையைப் போல அமர்ந்திருந்தான் கொச்சு கிருஷ்ணன். தன் உதடும் நாக்கும் வலிய பற்றியெரிவதைப் போலவும், கண்களுக்கு பார்வை சக்தி குறைந்து வருவதைப் போலவும் அவனுக்குத் தோன்றியது. மிகவும் நீளமான ஒரு பெருமூச்சுடன் கொச்சு கிருஷ்ணன் எழுந்து நின்றான். அப்போது-

வயதான தேநீர்க்கடைக்காரன் வேலு விளக்கைப் பற்ற வைப்பதைப் பார்த்து கொச்சு கிருஷ்ணன் ஆச்சரிப்பட்டான்.

“நேரம் இருட்டிடிச்சா?”

“பிறகென்ன? நமக்காக நேரம் நின்றுகொண்டிருக்குமா?”

அதற்கு பதிலெதுவும் கூறாமல், கொச்சு கிருஷ்ணன் குவளையை எடுத்து, இரண்டு மூன்று முறை ‘குடுகுடா’வென்று நீரைப் பருகினான்.

“உனக்கு என்ன இவ்வளவு தாகம்?” வேலுவின் இரண்டாவது கேள்விக்கு கொச்சு கிருஷ்ணன் பதிலெதுவும் கூறவில்லை. அவன் ஒரு பிடியைப் பற்றவைத்துக் கொண்டு தெருவிற்கு வந்தான். குட்டிக்குரா பவுடரும் வியர்வையும் வேறு பல வாசனைப் பொருட்களும் சேர்ந்து உண்டாக்கிய வாசனையுடன், புடவையின் மூலம் ரவிக்கையையும், அதன் மூலம் மார்பகங்களை மறைத்திருந்த மார்புக் கச்சையையும் காட்டியவாறு, அலட்சியமான சிந்தனைகளுடனும் சிரித்து சந்தோஷத்தில் மூழ்கியவாறும் பூங்காவிலிருந்து திரும்பி வரும் மாணவிகளுக்கு வழிவிட்டவாறு கொச்சு கிருஷ்ணன் நடந்தான்- வெளிச்சம் வந்து கொண்டிருந்த சாளரங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே.

பெண்களுக்கான மருத்துவமனையின் மேல்பகுதி, கடுமையான மனம்கொண்டவர்களின் புன்னகையைப்போல உயிர்ப்பில்லாமல் எரிந்துகொண்டிருந்த மின்விளக்குகள், மின்னலைப் போல தென்பட்ட முகங்கள், மலர்கள் மூடிய கூந்தல்கள், வண்ணப் புடவைகளால் மூடப்பட்ட அழகான சரீரங்கள், இங்குமங்குமாகக் கேட்டுக்கொண்டிருந்த கிலுகிலா சிரிப்பு... அந்த வகையில் நேரத்தையும் காலத்தையும் மறந்து கொச்சு கிருஷ்ணன் அந்த சாலையின் அருகில் நின்றிருந்தான். மழை பெய்வதைப்போலவும் குளிர்ந்த காற்று வீசுவதைப்போலவும் கொச்சு கிருஷ்ணன் உணர்ந்தான்.

அவன் வசித்துக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தபோது, அவுஸேப்பும் தாமோதரனும் பாய்விரித்துப் படுத்திருந்தார்கள். அடுப்புக் கல்லுக்கு அருகில் மூடிவைத்திருந்த பீங்கான் கிண்ணத்தின் அருகில், மண்ணெண்ணெய் விளக்கை நகர்த்தி வைத்துவிட்டு தாமோதரன் கேட்டான்:

“நீ எங்கே போயிருந்தே?”

“நடப்பதற்கு...” கொச்சு கிருஷ்ணன் கைகழுவிவிட்டு, சாதத்தின் அருகில்சென்று அமர்ந்தான்.

“நடை... நடை! என்ன ஒரு நடை இது!”

“நீ ஏன் கோபித்துக் கொண்டு போனாய்?” அவுஸேப் கேட்டான்: “நீ ஏன் வாயே திறக்காமல், எதுவுமே பேசாமல் நடந்து திரிகிறாய்?”

கொச்சு கிருஷ்ணன் இரண்டு மூன்று உருண்டை சாதத்தை தொண்டைக்குள் இறக்கிவிட்டு, நீரை ‘குடுகுடா’ என்று பருகிவிட்டு, பாத்திரத்தை நகர்த்தி வைத்துவிட்டு எழுந்து கையைக் கழுவினான்.

“இது என்ன ஒரு போக்கு? எங்காவது ஏதாவது சாப்பிட்டு முடிச்சிட்டு வர்றியா?” ஆச்சரியம் நிறைந்த தாமோதரனின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் கொச்சு கிருஷ்ணன் பதில் சொன்னான்.

“இல்லை...”

“அப்படியென்றால், ஏன் சாப்பிடல? பசி இல்லையா?”

‘பசி!’ நீண்ட பெருமூச்சுடன் கொச்சு கிருஷ்ணன் பாயை விரித்துப் படுத்துக் கொண்டு விளக்கை அணைத்தான்.

“நீ ஒரு காரியம் செய்யணும்.” அவுஸேப்பின் குரல் தூரத்திலிருந்து கேட்பதைப்போல கேட்டது: “நாளை மறுநாள்... சனிக்கிழமைதானே? நீ கொஞ்சம் பேதி மருந்து சாப்பிடு.”

“அது சரிதான்...” தாமோதரன் அவன் சொன்னதை ஆமோதித்தான்.

“ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் போதும்; வயிறு சரியாயிடும்.”

அதற்கு எதுவும் பதில் கூறாமல், கொச்சு கிருஷ்ணன் இருட்டில் கண்களை அகலத் திறந்து பார்த்தவாறு அதே இடத்தில் படுத்திருந்தான்- அழகான முகங்களை, வடிவெடுத்ததைப் போன்றே சரீரங்களை, உருண்டு... முன்னோக்கிப் புடைத்துக்கொண்டு... வெள்ளை நிறக் கச்சைக்குள் மூடப்பட்ட மார்பகங்களைப் பார்த்தவாறு.

அப்போது மீண்டும் கேட்பதற்காக அவுஸேப்பின் குரல்- இருள் நிறைந்த மகா பிரபஞ்சத்தின் மூலையிலிருந்து கேட்பதைப்போல அது இருந்தது.

“எங்களுடைய சகோதரிக்கு ஒரு மனக்குறை.”

“எதைப் பற்றி?”

“பிறகு... தேவைப்படுற துணியைக் கொண்டு போகலைன்னு...”

“போனவாரத்துக்கு முந்தின வாரம் வெள்ளிக்கிழமைதானே நீ சட்டைக்கென்று கூறி, துணி வாங்கிக் கொண்டு போனாய்?”

“ஆமாம்... ஆமாம். இப்போ... அங்கே... சட்டைக்குள்ளே அணியறதுக்கு ஏதோ ஒண்ணு...  என்ன அது?”

“மார்புக் கச்சை...” தாமோதரன் விளக்கிக் கூறினான். “அது என்னோட அவளுக்கும் இருக்கு. அந்தமாதிரி விஷயங்கள் ஊர்ல இருக்கறதுதான். இல்லாவிட்டால், ஒரு குறைச்சல்தான்.”

“அது சரிதான்...” அவுஸேப் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

கொச்சு கிருஷ்ணன் தனக்குள்ளிருந்து மேலே எழுந்து வந்ததை, அசைவே இல்லாமல் நிறுத்தி நிறுத்தி விட்டான். அவர்கள் நாளை வீட்டிற்குச் செல்கிறார்கள். கொண்டுசெல்வதற்கு பல பொருட்களும் இருக்கின்றன. கொடுப்பதற்கு ஆட்களும் இருக்கிறார்கள்... மார்புக் கச்சை! உருண்டு, முன்பக்கம் தள்ளிக்கொண்டிருக்கும் மார்பகங்களை அருமையாகப் பாதுகாக்கக் கூடிய கருவி... நாளை அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள்... அவர்களுடைய குறட்டைச் சத்தம்! கொடுத்து வைத்தவர்கள்... பாயில் தலையைச் சாய்த்தால், அவர்களால் மரக்கட்டை போல உறங்க முடியும். நாளை அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள்... மார்புக் கச்சை... அன்று பிரின்ஸிப்பலின் மனைவி வண்டியிலிருந்து இறங்கியபோது- அந்த அழகான மார்பகங்கள்- திறந்த காரின் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த கொச்சு கிருஷ்ணனின் இடதுகை விரல்களில் சற்று- உ... ர... சி... ய... து! கொச்சு கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்து நின்றதை அந்தப் பெண் பார்த்தாள். கொச்சு கிருஷ்ணனின் கையிலிருந்து குடையை வாங்கிக் கொண்டு சிரித்தவாறு அப்படியே... அவள் நடந்து சென்றாள். அந்த சாரல் மழையில் கொச்சு கிருஷ்ணன் நின்று கொண்டிருந்தான்- தன்னை மறந்த நிலையில். பின்பகுதி- என்ன அழகு!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel