Lekha Books

A+ A A-

பசி - Page 5

Pasi

 

கொச்சு கிருஷ்ணன் கடைவீதியை நோக்கி ஓடினான். வாசனை சோப்-3 அணா, ஒரு சென்ட் புட்டி - 10 அணா, மார்பு கச்சைக்குத் தேவையான வெள்ளை நிற சில்க்- 1 ரூபாய் 4 அணா, ஓரத்தில் அகலமான சிவப்பு நிறக் கரையைக் கொண்ட வெள்ளை வண்ணப் புடவை - 3 ரூபாய். அனைத்தும் நல்ல முறையில் நடந்தன. பளபளத்துக் கொண்டிருந்த வெள்ளை அட்டைப் பெட்டிக்குள் வைத்து, சிவப்பு நிற நாடாவைக் கொண்டு கொச்சு கிருஷ்ணன் அறைக்கு வந்தான். மேலும் ஒருமுறை அறை முழுவதையும் பெருக்கி சுத்தம் செய்தான். பாயை விரித்துப் போட்டு, பழைய தலையணையை வெள்ளை நிறத் துணியைக் கொண்டு மூடினான். பெட்டியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு சந்தோஷத்துடன் தடவிக் கொண்டிருந்தான். எலிஸபெத்- அவளுடைய சரீரம் முழுவதும் சென்ட் தேய்க்க வேண்டும்.

இன்று இரவு- கொச்சு கிருஷ்ணன் புன்னகைத்தான். தொடர்ந்து முத்தமழை பொழிய வேண்டும்.

ஒரு மணமகனைப்போல கொச்சு கிருஷ்ணன் பூங்காவை அடைந்தான். சற்றே புன்னகையில் மூழ்கிக் காணப்பட்டது பூங்கா. வழியின் ஓரத்திலிருந்த செடிகளும், மலர்களும், புல்பரப்பும் புன்னகைத்துக் கொண்டிருந்தன. குளத்தின் நீர் வட்டங்களில் சூரியனின் சீற்றுகள் புன்னகையுடன் நடனமாடிக் கொண்டிருந்தன.

புன்னகையுடன் சூரியனும் மறைந்தது.

கொச்சு கிருஷ்ணனின் நெற்றியில் வியர்வை அரும்ப ஆரம்பித்தது. எலிஸபெத்தைக் காணவில்லை. பதைபதைப்புடன் பூங்காவின் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தான். எலிஸபெத் வந்திருக்கவில்லை. ஏழு மணி... எட்டு மணி... இல்லை எலிஸபெத் வரவில்லை. ஒன்பது - மணி பத்து.

புகைவண்டி நிலையம் வரை கொச்சு கிருஷ்ணன் நடந்தான். எலிஸபெத்தைக் காணோம்.

மறுநாள் புகைவண்டி நிலையம் வரை நடந்து சென்றுவிட்டு, கொச்சு கிருஷ்ணன் பூங்காவிற்கு வந்தான். குளத்தின் கற்சுவரில் காலை எடுத்து வைத்தவாறு பதைபதைப்புடன் நின்றான். மணி பத்து. பூங்காவைப் பூட்டினார்கள். எலிஸபெத் இல்லை.

அதற்கடுத்த நாள்- அதற்கு அடுத்த நாள்... இப்படியே வாரங்கள், மாதங்கள் கடந்து சென்றன. தினமும் புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பிவந்து, பூங்கா அடைக்கப்படும் வரை அமைதியாக கொச்சு கிருஷ்ணன் அந்தக் குள்ததின் சுவரில் காலை வைத்துக் கொண்டு நின்றிருப்பான். அந்த முத்தத்தின் இனிமை, அந்த மார்பகங்களின் குளிர்ச்சி, அவளுடைய தோலின் அந்த நறுவணம். நினைவு. நினைவு. இனிய மோகங்கள் நிறைந்த நினைவு. அதில்தான் வாழ்க்கை.

இப்படியே மூன்று வருடங்கள் கடந்தோடிவிட்டன. கொச்சு கிருஷ்ணனுக்கு எந்த சமயத்திலும் ப்ரின்ஸிப்பலின் மனைவி காசு, பணம் கணக்கு பார்க்காமல் உதவிக் கொண்டிருந்தாள். நான்காவது கிறிஸ்துமஸும் நெருங்கிக் கொண்டிருந்தது. பிரகாசமான ஒரு ஞாயிற்றுக் கிழமை. மாலை வேளை. புகைவண்டி நிலையத்தை நோக்கி கொச்சு கிருஷ்ணன் நடந்து போய்க் கொண்டிருந்தான். சும்மாவாகவே... வெறும் சும்மாகவே... அப்போது பாதையில் அருகிலிருந்து பலவீனமான ஒரு குரல்.

“ஏதாவது தந்துட்டுப் போங்க... பசிக்குது...”

கொச்சு கிருஷ்ணன் கண்கள் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த பெண்ணின் மீது பதிந்தன. நரைக்க ஆரம்பித்திருந்த தலைமுடி கிழிந்த ஆடைகள். பலவீனமான அந்தப் பார்வை. அதை எங்கு பார்த்திருக்கிறோம்?

“அம்மா, உங்க ஊர் எது?”

“இங்கேதான்...”

“தங்கியிருக்குறது..?”

“புகைவண்டி நிலையத்திற்கு அருகில்...”

“பெயர்?”

“எலிஸபெத்...”

எலிஸபெத். ஹோ... என்ன ஒரு மாற்றம். இறக்கும் நிலையில் இருக்கிறாள். கொச்சு கிருஷ்ணன் தலைக்குள் ஒரே போராட்டம். குளத்தை நோக்கி முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு, கொச்சு கிருஷ்ணன் வெறுமனே கேட்டான்-

“இந்த மாநிலத்திலேயே இல்லையா?”

“கோயம்புத்தூர்ல இருந்தேன். உடல்நலக்கேடு உண்டாயிருச்சு.”

கொச்சு கிருஷ்ணன் ஒரு நிண்ட பெருமூச்சை விட்டான்.

“வாங்க... நான் சோறு வாங்கித் தர்றேன்.”

கொச்சு கிருஷ்ணன் திரும்பி நடந்தான். அவள் ஊர்ந்து ஊர்ந்து செல்வதைப்போல அவனுக்குப் பின்னால்... அவளுக்கு ஏதோ பயங்கரமான உடல்நலக்கேடு உண்டாகியிருக்கிறது. என்ன நோய்?

அறையின் வாசலில் அவளை உட்காரச் செய்துவிட்டு, கொச்சு கிருஷ்ணன் ஹோட்டலிலிருந்து ஒரு சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து அவளுக்கு முன்னால் வைத்தான். அதை சாப்பிட்டு முடித்தவுடன், நன்றியுடன் அவள் போக முயன்றபோது, தடுமாறுகிற குரலில் கொச்சு கிருஷ்ணன் மெதுவாகக் கேட்டான்.

“என்னை ஞாபகத்துல இருக்குதா?”

ஆர்வத்துடன் நின்று கொண்டிருக்கும் கொச்சு கிருஷ்ணனை பாதத்திலிருந்து தலைவரை அவள் பார்த்தாள். எப்படி ஞாபகத்தில் வைத்திருக்க முடியும்.

“பார்த்ததாக ஞாபகத்தில் இல்லை” அவள் கூறினாள். “யாரு?”

கொச்சு கிருஷ்ணனின் சுவாசமே நின்றுவிட்டது. அவனுடைய தலைக்குள் மின்மினிப் பூச்சுகள் பறந்தன. கனவில் நடப்பதைப்போல கொச்சு கிருஷ்ணன் அறைக்குள் வந்தான். சிவப்புநிறக் கயிறால் கட்டப்பட்டிருந்த வெள்ளைநிற அட்டைப் பெட்டியை அவிழ்த்து எடுத்துக் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தான்.

“இதில் என்ன இருக்கு?” அவள் கேட்டாள்.

கொச்சு கிருஷ்ணன் கையால் சைகை செய்தான். அவள் ஊர்வதைப்போல நடந்து, திரும்பிப் பார்த்தவாறு சாலையின் மூலையில் திரும்பி மறைந்தாள்.

அசைவே இல்லாத கல் சிலையைப் போல கொச்சு கிருஷ்ணன் நின்றிருந்தான்- மாலைநேரச் சிவப்பில் தெரிந்த, குருதியைப்போல பிரகாசமாக வழிந்து கொண்டிருந்த கண்ணீருடன்.

அப்போதும் பொன்னின் பிரகாசத்தில் மூழ்கிவிட்ட அழகான கனவைப்போல ப்ரின்ஸிப்பலின் மனைவி மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள்- இறுக்கமாக இருந்த பட்டு ரவிக்கைக்குள் அணிந்திருந்த தூய வெள்ளை நிற மார்புக் கச்சைக்குள் அடங்கா மார்பகங்களை, கறுத்து, திடமாக இருந்த மரத்தாலான கைப்பிடியில் முத்தமிடச் செய்து, முகத்தைக் கைகளால் தாங்கியவாறு, தெருவைப் பார்த்துக் கொண்டு....

மங்களம்.

Page Divider

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel