Lekha Books

A+ A A-

பசி - Page 3

Pasi

கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். அவள்! அவளே தான்! கொச்சு கிருஷ்ணன் பூங்காவில் அவளுக்கு முன்னால் இங்குமங்குமாக நடந்தான். ஐந்நூறு முறை நடந்தான். குளிர்ந்த காற்றும் வீசிக் கொண்டிருந்தது. இடிமுழக்கமும். உள்ளே நெருப்பு நெற்றியை நக்கிக் கொண்டிருந்தது. கொச்சு கிருஷ்ணனால் தலையை உயர்த்தி நிற்க முடியவில்லை. ஆட்கள் எல்லாரும் கொச்சு கிருஷ்ணனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கொச்சு கிருஷ்ணன் உணர்ச்சி வேறுபாடுகளைத்தான் அவர்கள் அனைவரும் சந்தேக எண்ணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் எல்லாரும்... மாணவிகள் எல்லாரும்... அனைவரும்! கொச்சு கிருஷ்ணன் சாலைக்கு வந்தான். வேலுவின் தேநீர்க்கடையில் போய் உட்கார்ந்தான். இரண்டு மூன்று குவளை நீரைப் பருகினான். இடையில் பிரின்ஸிப்பலின் வீட்டைப் பார்த்தான். அங்கு யாருமில்லை. கொச்சு கிருஷ்ணனால் இருக்கமுடியவில்லை. தாகம்! பசி! வறட்சி! மாலை நேரமாகிவிட்டிருந்தது. கொச்சு கிருஷ்ணன் நடந்தான். பூங்காவின் எல்லா இடங்களிலும் மெல்லிய இருள் பரவிவிட்டிருந்தது. காணோம்! கடவுளே! அவள்... அவள் எங்கே? பிரார்த்தனையின் விளைவு என்பதைப் போல ஒரு மின்னல் வீசியது! திடீரென்று தோன்றிய அந்த வெளிச்சத்தில்- புள்ளி போட்ட ரவிக்கை நீண்டு வளைந்து கடக்கிறது அரைச் சுவரில்!

கொச்சு கிருஷ்ணன் சுவரின் மீது தூரத்தில் உட்கார்ந்தான். அவளுக்கு அப்பால் இருளில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். கழுகுகளைப்போல இருந்த அவர்களுடைய வாய்களில் பீடியின் நெருப்பு!

இருட்டிற்கு அடர்த்தி அதிகரித்துக்கொண்டு வந்தது. பூங்கா காலியாகிக்கொண்டிருந்தது. அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அங்குமிங்கும் பார்த்துவிட்டு, எழுந்து சற்று முதுகை நிமிர்த்தினாள். வானத்தின் விளிம்பு சற்று அதிர்ந்தது. கொச்சு கிருஷ்ணனுக்குள் துடிப்பு நின்றுவிட்டது! அவள் அருகிலிருந்த ஒவ்வொருவரின் அருகிலும் சென்று, என்னவோ முணுமுணுத்துவிட்டு நடந்தாள். கொச்சு கிருஷ்ணனைப் பொருட்படுத்தாமல் அவள் நடந்து செல்கிறாள்! கடவுளே! கொச்சு கிருஷ்ணன் ஒருமுறை இருமினான். இதயம் வெந்து உண்டான ஒரு இருமல்! மிகுந்த பரவசம் கலந்திருந்த ஒரு இருமல்! அவள் அதைக் கேட்டாள். அவள் கொச்சு கிருஷ்ணனின் அருகில் நெருங்கி வந்தாள். ஆமை தலையை நீட்டுவதைப்போல, இருட்டுக்கு மத்தியில் கொச்சு கிருஷ்ணனின் முகத்தை நோக்கி அவள் முகத்தை நெருக்கமாகக் கொண்டுவந்தாள். மெதுவாக, மிகவும் மெதுவாக: 

“குளத்தில்...”

கொச்சு கிருஷ்ணனின் நினைவில் இருந்தது அவ்வளவு தான். குட்டிக்குரா பவுடர் வியர்வையில் கலந்த தோலின் மணம். அவள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தாள். கொச்சு கிருஷ்ணனுக்கு எதுவுமே புரியவில்லை. கொச்சு கிருஷ்ணனின் வாயில் நீரில்லை. நிமிடங்கள் கடந்து கொண்டிருந்தன. உட்கார முடியவில்லை. கொச்சு கிருஷ்ணன் எழுந்து சென்றான். கனவில் நடப்பதைப் போல, பூங்காவின் சிறிய குளத்திற்கருகில் நின்று அவள் தலைமுடியைக் கட்டிக் கொண்டிருந்தாள். சிமெண்ட் படியில் கால் வைத்து, கொச்சு கிருஷ்ணன் நின்றிருந்தான். துடிப்பு. சத்தம் வெளியே கேட்கவில்லை. உயிர்ப்பே இல்லாமல், பலமே இல்லாமல் கொச்சு கிருஷ்ணன் மெதுவான குரலில் கேட்டான். “என்னிடம் என்ன சொன்னீங்க?”

“நான் காலையும் முகத்தையும் கழுவிட்டு வருகிறேன் என்றல்லவா சொன்னேன்.” அவள் மெதுவான குரலில் சொன்னாள். அடுத்து என்ன கூறுவது? கொச்சு கிருஷ்ணனுக்கு எதுவும் தோன்றவில்லை. பேரமைதி! பேரமைதி! நாக்கு அடங்கிப்போய் விட்டதா? அவளுடைய மூச்சு! கட்டிப்பிடித்த முத்தமிட்டால் என்ன!

“பிறகு...” கொச்சு கிருஷ்ணனுக்கே தெரியாமல் குரல் வெளியே வந்தது: “பிறகு... எங்கே போறீங்க?”

“புகைவண்டி நிலையத்திற்கு அருகில்.”

“பெயர் என்ன?”

“எலிஸபெத்.”

“திருமணம் ஆகிவிட்டதா?”

“நான்கைந்து வருடங்களாகி விட்டன. கணவர் இலங்கைக்குப் போனார். அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. இரண்டு மூன்று தங்கைகள் இருக்காங்க. அம்மா இருக்காங்க.”

“வேறு ஆண்கள் யாருமில்லையா?”

“யாருமில்லை...”

அவன் மேலும் சற்று நெருங்கினான். அவள் கேட்டாள்:

“உங்களுடைய வீடு?”

“வீடு இல்லை. ஒரு அறையில் தங்கியிருக்கிறேன்.”

“வேறு ஆட்கள் இருக்காங்களா?”

“வேறு இரண்டு பேர் இருக்காங்க?”

“அம்மோ” அவள் மெதுவான குரலில் சொன்னாள். “அது தொந்தரவான விஷயம். வேறு ஒரு அறை எடுக்க முடியாதா?”

“எடுக்கலாம்...” கொச்சு கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். “நாளைக்கே எடுக்கலாம்.”

“அதுதான் நல்லது.”

“ஆமாம்...” கொச்சு கிருஷ்ணன் ஏக்கத்துடன் சொன்னான். அவள் நெருங்கி, மிகவும் நெருங்கி வந்தாள். கொச்சு கிருஷ்ணனுக்கு ஒரு ஆசை. வெறும் ஒரு தொடல், ஒரு முத்தம். கேட்பதற்கு தைரியமில்லை. கடவுளே. கொச்சு கிருஷ்ணனின் சரீரம், அவனுடைய இதயம், அவனுடைய ஆன்மா- யுகங்களின் ஆவேசத்துடன், யுக யுகங்களின் தாகத்துடன், நிலையில்லாமல் மோகத்துடன், இனம்புரியாத வகையில் கெஞ்சியது:

“நான் ஒரு முறை முத்தமிடட்டுமா?”

அதற்கான பதில்... கடவுளே. கொச்சு கிருஷ்ணன் எரிந்து உருகி உஷ்ண நிலையில் இருந்தான்... அதற்கான பதில். கொச்சு கிருஷ்ணனின் உணர்வு, அவனுடைய உயிர்- அனைத்தும் மறையப் போகின்றன. பெண்ணின் சக்தி. ஆணின் பலவீனம். அதற்கான பதில். இருளில் மூழ்கியிருந்த நீர்ப்பரப்பு அசைவே இல்லாமல், ஓசை இல்லாமல் காணப்பட்டது. வானமும் கட்டடங்களும் மவுனம் பூண்டு நின்றிருந்தன. அதற்கான பதில். குளிர்ந்த நீர் நிறைந்திருந்த கார்மேகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் காய்ந்து வறண்ட பாலைவனத்தைப் போல கொச்சு கிருஷ்ணன் நின்றிருந்தான். யுகங்கள்... யுகங்கள் கடந்து சென்றன. அவள் அலட்சியமாக முணுமுணுத்தாள்.

“முத்தம் கொடுங்க...”

அருளின் அமிர்த மழை. கொச்சு கிருஷ்ணன் விழுந்துவிட்டான். அந்த உதடுகளில், அந்தக் கன்னங்களில், அந்த கழுத்தில், அந்த மார்பகங்களில்... கொச்சு கிருஷ்ணன் ஹா! ஒரு குளிர்ந்த காற்று வீசியது. இலைகள் ஓசை உண்டாக்கின. குளத்தில் அலைகள் சத்தம் உண்டாக்கின. நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தன. குளத்தின் கரையிலிருந்த மின் விளக்குகள், இருளின் கழுத்தில் வைர மாலையைப் போல பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. கொச்சு கிருஷ்ணன் அந்த மார்பகத்தில் கன்னத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு மெதுவான குரலில் முனகினான்.

“உங்களை நான் எவ்வளவோ நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“அப்படியா?” அவள் கொச்சு கிருஷ்ணனின் முடியை வருடினாள். “பிறகு... திருமணம் ஆகிவிட்டதா?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel