Lekha Books

A+ A A-

பசி - Page 4

Pasi

“இல்லை...” கொச்சு கிருஷ்ணன் அவளுடைய கையை எடுத்து முத்தமிட்டான். “நாளைக்கு நான் அறை எடுக்கிறேன்.”

“எடுங்க... நாளைக்கு ஆறு மணிக்கு நான் இங்கே இருப்பேன்.”

“வராம போயிடுவீங்களா?”

“வருவேன். பிறகு... என்ன வேலை?”

“அரசாங்க வேலை.”

“காவல் துறையிலா?”

“இல்லை... கல்லூரியில்... ப்யூன்.”

“சம்பளம்?”

“எட்டு ரூபாய்.”

அதற்குப் பிறகு அவள் எதுவும் கேட்கவில்லை. கரிய நிழல்கள் அசைந்தன. தூரத்தில் ஒரு இருமலும். எலிஸபெத் அனுமதி கொடுத்தாள். “அப்படியென்றால், போங்க.”

“நாளைக்கு...”

“ம்...”

அதற்குப் பிறகும் என்னவோ கூறவேண்டுமென்று கொச்சு கிருஷ்ணன் நினைத்தான். எனினும், கொச்சு கிருஷ்ணன் நடந்தான். ஏங்கி ஏங்கி தேம்பித் தேம்பி அழுதவாறு... எலிஸபெத்... அந்த சினேகிதி... கண்ணீரைத் துடைப்பதற்கு கொச்சு கிருஷ்ணனுக்கு மனமே வரவில்லை. கொச்சு கிருஷ்ணனின் தலை, மரங்களைவிட கட்டடங்களைவிட உயர்ந்து மேகங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.

கண்ணீருக்கு மத்தியில் கொச்சு கிருஷ்ணன் புன்னகைத்தான். அடக்கமுடியாமல் கொச்சு கிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

அறைக்குள் நுழைந்தபோது அவுஸேப்பும் தாமோதரனும் கண்களை அகலத்திறந்து பார்த்தார்கள். ஆச்சரியத்துடன் அவர்கள் வாயைப் பிளந்தார்கள். கொச்சு கிருஷ்ணன் கேட்டான்-

“உங்களுக்கு என்ன கோபம்?”

“உனக்கு ஏதாவது புதையல் கிடைத்ததா என்ன?” அவுஸேப் ஆச்சரியப்பட்டான். “உனக்கு என்ன இவ்வளவு சந்தோஷம்?”

“சந்தோஷம்?” கொச்சு கிருஷ்ணன் புன்னகைத்தான். “நாளைக்கு நான் அறையை மாற்றப் போகிறேன்.”

“எதற்கு?” தாமோதரன் கேட்டான்.

கொச்சு கிருஷ்ணன் சொன்னேன்.

“எனக்கு விருந்தாளிகள் வர்றாங்க.”

“உனக்கு விருந்தாளிகள் யார்?”

“இருக்காங்க...”

கொச்சு கிருஷ்ணன் வேறெதுவும் கூறாமல் விளக்கை அணைத்துவிட்டுப் புன்னகைத்தான்.

“நீ சாப்பிடலையா?”

“சாப்பாடு...” கொச்சு கிருஷ்ணன் கிண்டல் கலந்த குரலில் சொன்னான். “ சாப்பாடு எதுவும் வேண்டாம்.”

“பசி இல்லையா?”

“பசி...” கொச்சு கிருஷ்ணன் தன் உதடுகளை மெல்ல தடவியவாறு புன்சிரிப்பைத் தவழவிட்டான். தாமோதரனுக்கு அவுஸேப்பும் என்னவோ கேட்டார்கள். கொச்சு கிருஷ்ணன் அவை எதையும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

அதைத் தொடர்ந்து அவர்களுடைய குறட்டை ஒலி கேட்க ஆரம்பித்தது. கொச்சு கிருஷ்ணன் முணுமுணுத்தான்.

‘உறங்கிக்கொண்டிருக்கின்றன கழுதைகள்.’

அந்த வகையில் நள்ளிரவு தாண்டும்வரை கொச்சு கிருஷ்ணன் சுகமான கற்பனைகளில் மூழ்கியிருந்தான். அறை எடுக்கப்போகும் விஷயத்தை நினைத்துப் பார்த்தபோது கொச்சு கிருஷ்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. குறைந்தபட்சம் இரண்டு ரூபாய்களாவது வேண்டும்.... என்ன வழி? கொச்சு கிருஷ்ணன் வலி உண்டாக... வலி உண்டாக சிந்தித்தான். அறை மாறிச்சென்றுவிட்டால் எப்படி வாழ்வது? அரிசியை வேகவைத்து சாப்பிடுவது- அது நடக்காத விஷயம். கொச்சு கிருஷ்ணன் மனதில் கணக்கு போட்டுப் பார்த்தான்.

                                           ரூபாய்         அணா        பைசா

காலையில் தேநீர்                       0                 0             9

மதியம் சாப்பாடு                         0                 1             6

மாலையில் தேநீர்                       0                 0             6

இரவு உணவு                              0                 1             6

மண்ணெண்ணெய், பீடி                 0                 0             6

ஒரு நாளைக்கு                           0                 4             9

அப்படியென்றால், ஒரு மாதத்திற்கு 8                14            6

சலவைக்கும் சவரம் செய்வதற்கும் 0                 4             0

அறை வாடகை                           2                 0             0

மொத்தம்                                  11                2             6

கிடைப்பது                                  8                 0             0

அதிகம்                                       3                 2             6

 

கடவுளே. மூன்று ரூபாய், இரண்டணா, ஆறு பைசா, எப்படி முடியும்? ஒரு நேர உணவை விட்டுவிடலாம், தேநீர் வேண்டாம், பீடி வேண்டாம், சலவை வேண்டாம், சவரம் வேண்டாம், எதுவும் வேண்டாம், எட்டு ரூபாயில் நிறுத்த வேண்டும். நாளைக்கு இரண்டு ரூபாய்க்கு என்ன வழி?

இரண்டு ரூபாய், அந்தச் சிந்தனையுடனேயே நேரம் வெளுத்தது. கொச்சு கிருஷ்ணன் அன்று ப்யூன் வேலைக்குச் செல்லவில்லை, நகரம் முழுக்க அலைந்து தனக்குத் தெரிந்த எல்லாரையும் பார்த்துக் கேட்டான். யாருடைய கையிலும் இல்லை. கடைகளில் பணப்பெட்டிக்கு முன்னால் அமர்ந்துகொண்டு முதலாளிகள் வெள்ளி ரூபாய்களை எண்ணி எண்ணி அடுக்கி வைக்கிறார்கள். நோட்டுகளை கட்டாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்... கடவுளே. கொச்சு கிருஷ்ணனிடம் ஏன் பணம் இல்லை? கொச்சு கிருஷ்ணனின் தலைக்குள் ஒரே போராட்டம். ஒரு வழியும் கிடைக்கவில்லை. வெறும் இரண்டு ரூபாய்... இறுதியாக இருக்கும் ஒரே வழி.

கொச்சு கிருஷ்ணன் சென்றான். ப்ரின்ஸிப்பல் உறங்கிக் கொண்டிருந்தார். மனைவி ரவிக்கை இல்லாமல் மார்புக் கச்சை மட்டும் அணிந்து சாய்வு நாற்காலியில் படுத்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். கொச்சு கிருஷ்ணன் வணங்கியபடி நின்றான். கொட்டாவி விட்டவாறு, நெளிந்து கொண்டே புன்னகை தவழ அந்தப் பெண் கேட்டாள்.

“என்ன கொச்சு கிருஷ்ணா?”

கொச்சு கிருஷ்ணன் வியர்க்க நின்று கொண்டிருந்தான். அவள் மீண்டும் கேட்டாள். “என்ன ஆச்சு கொச்சு கிருஷ்ணா?”

கொச்சு கிருஷ்ணன் வெளிறிப்போய் காணப்பட்டான். குலுங்கிக் குலுங்கி அழுதான்.

“அம்மாவுக்கு உடல் நலமில்லை.”

“என்ன நோய்?”

கடவுளே. அவள் ஏன் இதையெல்லாம் கேட்கிறாள்?

கொச்சு கிருஷ்ணன் சொன்னான்-

“கிட்டத்தட்ட பெரிய நோய்தான்...”

அதற்குப் பிறகு எதுவும் கேட்காமல் அவள் எழுந்து உள்ளே சென்று வேகமாகத் திரும்பிவந்து கொச்சு கிருஷ்ணனின் கையில் ஒரு தாளைத் தந்துவிட்டு சென்றாள்.

“கொண்டுபோய் மருந்து வாங்கிக்கொள். சிரமம் இருக்கும்போது என்னை வந்து பார்க்கணும்.”

கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். ஒரு பத்து ரூபாய் நோட்டு. கொச்சு கிருஷ்ணனின் கண்கள் நிறைந்து விட்டன. அந்தப் பாதங்களில் விழுந்து சற்று வணங்க வேண்டும்போல அவனுக்குத் தோன்றியது.

அன்று நான்கு மணி ஆனபோது கொச்சு கிருஷ்ணன் புதிய அறைக்கு மாறினான். கொச்சு கிருஷ்ணன் மனதிற்குள் நினைத்தான். எலிஸபெத்தை சற்று ஆச்சரியப்பட வைக்க வேண்டும். சந்தோஷம் நிறைந்த அந்தச் சூழ்நிலையை கொச்சு கிருஷ்ணன் பார்க்க வேண்டும்.

 

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel