Lekha Books

A+ A A-

பசி - Page 2

Pasi

அதற்குப் பிறகு- கொச்சு கிருஷ்ணனை எப்போது பார்த்தாலும், அவள் ஏன் அப்படி சிரிக்கிறாள்? இதயம் கனிந்து வெளியேவரும் புன்னகை- அந்தக் கண்களின் வழியே... அந்த உதடுகளின் வழியே... அது எந்த அளவிற்கு அழகாக இருக்கிறது? ஒடுங்கி, வறண்டு போய் காணப்படும் அவர்... வெண்மையான மாடப் புறாவைப்போன்ற மனைவி... அவர் நல்ல குணத்தைக் கொண்டவர். கொச்சு கிருஷ்ணனுக்கு பல நேரங்களிலும் பரிசுப் பொருட்களைத் தந்திருக்கிறார்.

கொச்சு கிருஷ்ணனைப் பெரிதாக நினைப்பார். எனினும், கொச்சு கிருஷ்ணனுக்கு அவரைப் பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் நல்ல ஒரு தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதாலா? இல்லாவிட்டால் அந்த இரண்டு மாடிகளைக் கொண்ட மாளிகையும் பூந்தோட்டமும் இருப்பதாலா? எது எப்படியோ... பன்னீர் மலரைப்போன்ற அந்த சரீரம்...

அதைத் தொடர்ந்து கொச்சு கிருஷ்ணன் எழுந்து உட்கார்ந்து, தலையை கைகளில் தாங்கிக் கொண்டு, நீண்ட பெருமூச்சு விட்டான்: ‘அதிர்ஷ்டசாலிகள் உறங்குகிறார்கள்!’

விரக்தியின் இறுதி எல்லையை அடைந்துவிட்டிருந்தான் கொச்சு கிருஷ்ணன்! ஒரேயொரு சிந்தனை- பெண்ணின் காதல், பெண்ணின் அண்மை, சரீரம், மணம், மார்பகங்கள், தொடைகள், தொப்புள்... கொச்சு கிருஷ்ணனின் அனைத்து அவயங்களும் மிகுந்த உயிர்ப்புடன் இருந்தன. ஆனால், ஒரு முகம்கூட கொச்சு கிருஷ்ணனை வரவேற்கவில்லை. கொச்சு கிருஷ்ணனை யாருமே திரும்பிப் பார்க்கவில்லை.

குளிர்ந்த நீருக்காக பாலைவனத்தில் அலையும் அனாதையைப் போல, கொச்சு கிருஷ்ணன் அன்றும் நகரம் முழுவதையும் சுற்றித் திரிந்தான். மனமும் சரீரமும் தளர்ந்துபோய், மாதவனின் துணிக்கடையில் வந்து உட்கார்ந்தான். புதிதாக திருமணமான ஒருவன் பட்டுத் துணிகளை வாங்கிக் கொண்டிருந்தான். பல வண்ணங்ளைக் கொண்ட பட்டுத் துணிகள் விரித்துப் போடப்பட்டிருந்தன. கொச்சு கிருஷ்ணன் ஒவ்வொன்றிலும் கையை ஓடவிட்டான். அவன் சரீரம் அதிர்ச்சியில் உறைந்துபோனது. நீண்ட பெருமூச்சுடன் கொச்சு கிருஷ்ணன் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய வருகை... சற்று தடித்து, உயரமாக இருந்தாள். ஒரு சோகம் நிறைந்த புன்னகை முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவள் விலை குறைவான ஒரு ஜப்பான் புடவையை அணிந்திருந்தாள். கறுத்த புள்ளிகளைக்கொண்ட மஞ்சள் வண்ண ரவிக்கையும் ஜப்பானைச் சேர்ந்ததுதான். அனைத்தும் பழையனவாக இருந்தன. எனினும், ஒரு மிடுக்கு இருந்தது. குடை பிடித்திருந்த கையில் சிறிய துவாலை இருந்தது. தையல்காரன் மம்மதின் கடை வாசலில் சற்று நின்றுவிட்டு, மெஷினின் அருகில் அவள் அமர்ந்தாள். மம்மதுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். விளையாட்டாகத்தான். துணி வாங்கிக் கொண்டிருந்த வயதான கிழவனுக்குப் பின்னால் மறைந்துகொண்டு கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். இளமையின் துடிதுடிப்பு இல்லாமல்போய்விட்டிருந்தது. கண்களைச் சுற்றியிருந்த தோலில் கருமை படர்ந்திருந்தது. அவ்வப்போது அவள் தெருவையே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். குரலில் இனம்புரியாத ஒரு சோகம் கலந்திருந்தது. அந்த மார்பகங்கள்... அவைதான் அவளிடம் இருந்தவற்றிலேயே மிகவும் விலைமதிப்புள்ள சொத்து என்பதைப்போல, அவற்றின் சதைப் பிடிப்பை உலகத்திற்குக் காட்டுவதைப்போல... அந்த வீழ்ச்சியில் கிழவன் துணியை வாங்கிக் கொண்டு எழுந்தான். வெளிப்படையான அவளுடைய பார்வை கொச்சு கிருஷ்ணனின்மீது பதிந்தது. இதயத்தைப் பிழிந்தெடுத்த ஒரு பார்வை! கொச்சு கிருஷ்ணனின் சுவாசமே நின்றுவிட்டது. கடை வீதியும் ஆட்களின் கூட்டமும் மறைந்துவிட்டன. அவளும் கொச்சு கிருஷ்ணனும் மட்டும்தான் உலகத்திலேயே இருந்தார்கள்... கொச்சு கிருஷ்ணனுக்கு மீண்டும் சுய உணர்வு வந்தபோது, அவள் வெளியேறி நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய பின்பாகத்தைப் பார்த்து பலரும் வெறுப்புடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பலரும் கிண்டல் கலந்த வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள். கொச்சு கிருஷ்ணனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் மெதுவாக எழுந்து நடந்தான். அவன் ரிக்ஷா வண்டியில் ஏறிப் போய்க் கொண்டிருந்தாள். பார்வை எட்டும் தூரம்வரை கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். மறைந்தவுடன் கொச்சு கிருஷ்ணன் மனதில் சுமை குடியேற ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

அது நடந்து இருபதாவது நாளன்று இரவு வேளையில், கொச்சு கிருஷ்ணன் வேலுவின் தேநீர்க்கடையில் இருந்தபோது, இரண்டு ரிக்ஷா வண்டிகள் செருப்புக்கடையின் வாசலுக்கருகில் வந்து நின்றன. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் இறங்கினார்கள். பழக்குலைகளுக்கு மத்தியில் கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். அவள்! அவள்... அவளேதான்! அதே புடவை, அதே ரவிக்கை- எதிலும் மாற்றமில்லை! பதினான்காம் எண் விளக்கிற்கு முன்னால் அவள் நின்று கொண்டிருந்தாள். அவளுடன் சுருள்முடியைக் கொண்ட மனிதனும். அவன் துறைமுகத்தில் வேலை பார்ப்பவன். அவள் குனிந்து, பல செருப்புகளையும் காலில் அணிந்து சோதித்துப் பார்த்தாள். திறந்த ரவிக்கை, மார்புக் கச்சைக்குள் நசுங்கிக் கிடக்கும் மார்பகங்கள்... அவள் நிமிர்ந்தாள். கால்களை இப்படியும் அப்படியும் திருப்பி வைத்துப் பார்த்தாள். திருப்தியை வெளிப்படுத்தினாள். துறைமுகத்தில் வேலை பார்ப்பவன் செருப்புக்கான விலையைக் கொடுத்தான். புன்னகையுடன் அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். அவளுக்குப் பின்னால் சுருள் முடியைக் கொண்ட மனிதனும். இரண்டு வண்டிகளும் வேகமாகப் பாய்ந்து சென்றன. கொச்சு கிருஷ்ணன் பலமாக ஒரு பெருமூச்சை விட்டான்.

தொடர்ந்து, மாலையில் வேலுவின் தேதீர்க்கடையில் போய் அமர்ந்து கொச்சு கிருஷ்ணன் பிரின்ஸிப்பலின் மனைவியைப் பார்ப்பான். இப்படியே இரண்டு வாரங்கள் ஓடி மறைந்தன. இருள் நிறைந்த தென்னந்தோப்புகளுக்குப் பின்னால் அடர்த்தியான சிவப்பு வண்ணத்தைப் பரவச் செய்தவாறு சூரியனும் மறைந்து விட்டிருந்தது. கொச்சு கிருஷ்ணன் பூங்காவிற்குச் சென்று நின்றபோது- சிவப்பு நிற ஜப்பான் புடவை, கறுத்த புள்ளிகள் போட்ட மஞ்சள் நிற ரவிக்கை... சுவரில் தனியாக!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel