Lekha Books

A+ A A-

மரணம்

maranam

முப்பத்தொன்றாவது வயதில்தான் அவன் பிறந்தான். பிறந்தபோது அவனுக்கு ஆங்காங்கே நரைத்து வளர்ந்திருந்த முடிகளும், மங்கலான இரண்டு கண்களும், சரியான வடிவத்தில் இல்லாத மூக்கும், தடிமனான உதடுகளும், பெரிய மேல் மீசையும், மிகவும் மெலிந்து போய் காணப்படும் ஒரு உடலும், ஒல்லியான கைகளும் கால்களும், வெப்பத்தாலான புண்ணும், முப்பது வருடங்களும் அவனுடைய சொத்துக்களாக இருந்தன.

ஆனால், அவனுக்கு சொந்த சொத்துக்கள் மீது நம்பிக்கை கிடையாது. குறிப்பாக வருடங்களுடைய விஷயத்தில். வருடங்கள் மட்டுமல்ல... மணிகளின்... நிமிடங்களின்... வினாடிகளின் விஷயத்தில் பொதுவாகவே காலத்தின் விஷயத்தில்...

அதற்குத் தெளிவான ஒரு காரணம் இருக்கிறது. காலம் என்பது பொதுச் சொத்து. காற்றைப் போல... மழையைப் போல... வெப்பப் புண்ணைப் போல...

யார் என்ன முயற்சி பண்ணினாலும், ஒரு வினாடியை ஒரு வினாடிக்கும் அதிகமாக நீடிக்கச் செய்ய முடியாது. ஒரு நிமிடத்தை ஒரு நிமிடத்திற்கம் குறைவாக வெட்டிச் சிறியதாக ஆக்கவும் முடியாது. காலம் மாற்ற முடியாதது. நிரந்தரமானது. அது இழுத்தால் நீளமாகக் கூடியதோ, விட்டால் சுருங்கக் கூடியதோ இல்லை.

அவனுக்கு வேறு சில சொத்துக்களும் இருந்தன. நகரத்தில் அழுக்குகள் சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் கருப்புநிற ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு வாடகை அறை, செருப்புகள், சட்டைகள், கால் சட்டைகள், பீடிகள், சிகரெட்டுகள், சாராயப் புட்டிகள், நண்பர்கள்... இவற்றில் பெரும்பாலானவை சொத்துக்கள் என்பதைவிட சுமைகளாக இருந்தன என்று கூறுவதுதான் சரியானது.

பிறந்தவுடன் அவன் அழவில்லை. சிரித்தான். பிறகு எழுந்து நின்றான். கண்களைக் கசக்கித் துடைத்தான். திரும்பிப் பார்த்தான்.

அப்போது...

கடந்த வருடம் வெறுமனே கிடக்கிறது. காலியான சாராய புட்டிகள், சிகரெட் சாம்பல், கிழிந்த தாள் துண்டுகள், வெயில் விழுந்து கொண்டிருக்கும் தெருக்கள், சொறி பிடித்த சிறிய அறைகள்... இவையெல்லாம் இருந்தும் அனைத்தும் சோர்வைத் தருவனவாக இருந்தன. எல்லாவற்றிலும் வெறுமை படர்ந்திருந்தது. மிகுந்த வெறுமை.

அவன் மேலும் கொஞ்சம் பின்னால் எட்டிப் பார்த்தான்.

அதற்கு முந்தைய வருடமும் அதே மாதிரிதான் இருந்தது.

இப்படிக் கண்கள் பின்னோக்கிச் செல்லும்போது, முதலில் வெறுமையில் தெளிவில்லாமல் இருந்தாலும் ஓசை எழுப்பியவாறு நகர்ந்து கொண்டிருந்த உருவங்களும் பொருட்களும் கூட மறைந்து கொண்டிருந்தன.

தொடர்ந்து காலி சாராய புட்டிகளோ வெப்பப் புண்களோ கூட இல்லாத வெறுமை.

முப்பது வருடங்களுக்குப் பின்னால் ஒரு வடிவம் இருக்கிறது. வடிவத்தின் பழமையான ஒரு நினைவாவது இருக்கிறது.

ஒரு கோணிப் பையிலோ ஒரு தோலாலான உறையிலோ நெளிந்து கொண்டிருக்கும் அவன்!

அதுதான் உண்மையான வடிவம். முதல் வடிவம். பிறவிக்கு முன்னால் இருந்த வடிவம் அதுதான்.

பிறகும் காலத்தைப் பிடித்து நிறுத்தி, பின்னோக்கி நடக்கும் போது, அடர்த்தி குறைந்த, வெள்ளை நிற திரவத்திற்குள் ஒரு புழுவாக, அணுவாக, இருளாக, சக்தியாக அவன் நீந்திக் கொண்டிருக்கிறான்.

எதுவுமே தெரியாத, தனக்கென்று சொத்து எதுவும் இல்லாத, முழுமையான விடுதலை கொண்டவனாக, படைப்பு- இருப்பு- இறப்பு கொண்டவனாக, பலம் படைத்தவனாக, கடந்த ஆசைகளின் உறைவிடமாக அவன் சத்தம் உண்டாக்கியவாறு அலைந்து திரிகிறான்.

எதிர்ப்பு எதுவும் இல்லாத சக்தி அவன். தடுத்து நிறுத்த முயற்சிப்பவற்றைத் தகர்த்து சாம்பலாக்கும் சக்தி.

அதற்கும் முன்னால்...?

மீண்டும் வெறுமையா?

இல்லை. சுற்றிலும் இருட்டு இருப்பதென்னவோ உண்மை. இருட்டில் ஆங்காங்கே நண்பர்கள் இருக்கிறார்கள். ஒளிரும், பிரகாசிக்கும் நண்பர்கள்.

அவன் ஒரு நட்சத்திரம். மிகப்பெரிய, பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம்.

மற்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில், நட்சத்திரங்களின் கூட்டத்தில், பிரபஞ்சத்தின் இருள் பரப்பில் ஒரு நட்சத்திரமாக அவன் பயணிக்கிறான்.

பெயரில்லை. வயதில்லை. காமம் இல்லை. காலத்தின் சங்கிலிகள் இல்லை.

சுதந்திரமான நட்சத்திரம்.

அதற்கு அப்பால் கண்கள் செல்லவில்லை.

அருகில் கிழிந்து கிடக்கும் பத்திரிகைத் தாளின் துண்டில் சந்திரனின் முகம். பழைய அழகான- அரசனுக்கு நிகரான சந்திரனின் முகமல்ல.

சந்திரனின் புதிய முகம். அப்போலோ படமெடுத்த முகம். கடலும் கரையும் நெருப்பு மலைகளும் உள்ள முகம். சிரங்கு பிடித்த சதையைப் போல இருக்கிறது. சுட வைத்த அப்பளம் போல இருக்கிறது. அசிங்கமான - அவலட்சணமான முகம்.

மனிதனின் வளர்ச்சிக்கு ஆதாரம் அது. வளர்ச்சி அழகை ஒரு ஓரத்தில் ஒதுக்கியது. அந்த இடத்தில் உண்மையை இடம் பெறச் செய்தது. அழகற்ற, மிகப்பெரிய உண்மையை.

சந்திரன் என்ற உண்மையின் முகத்தை உற்றுப் பார்த்தபோது அவனுக்கு சோர்வும் வெறுப்பும் உண்டானது.

சிரங்கு பிடித்த இந்தக் கரை, பிரகாசித்துக் கொண்டிருக்கும் கடலின் அழகே இல்லாத இந்தக் கரை, இந்த உண்மை- இது யாருக்கு வேண்டும்?

அவன் மீண்டும் கண்களைத் தடவித் துடைத்துவிட்டு, முன்னால் பார்த்தான்.

இனி உலகத்தைப் பார்க்க வேண்டும். பிறந்து விட்டால் உலகத்தைப் பார்க்க வேண்டாமா ? புதிய உலகம். புதிய வண்ணங்களின், புதிய வாசனைகளின், புதிய சத்தங்களின் உலகம்.

இதுதானா அந்த உலகம்?

சிலந்தி வலை பிடித்த அறை. கரையான் அரித்த மரக்கதவு. சொறி பிடித்த சுவர்கள். துரும்பு பிடித்த சாளரக் கம்பிகள்.

அந்தக் கம்பிகளுக்கு அப்பால் அசுத்த நீர் ஓடிக் கொண்டிருக்கும் துரும்பு பிடித்த ஆறு. ஆற்றுக்கு அக்கரையில் மிகவும் சிறிய ஒற்றையடிப் பாதை. பாதையின் ஓரத்தில் கடைகள்... வீடுகள்... மரங்கள்...

மரக்கிளைகளின் வழியாகப் பார்க்கும்போது தூரத்தில் தெரியும் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல்.

இதுதான் உலகம் என்ற பொருளா?

அவனுக்கு வெறுப்பு தோன்றியது.

இதுதான் காட்சிப் பொருளா? இதைப் பார்ப்பதற்காகவா பிறந்தான்?

அவன் பற்களைத் தேய்த்தான். குளித்தான். தலை வாரினான். தாடியைத் தடவிப் பார்த்துக் கொண்டான். சிறு சிறு ரோமங்கள் இருந்தன. ஆனால், அதை அகற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆடைகளை அணிந்தான். காசுகளைப் பைக்குள் போட்டான்.

புறப்பட்டான்.  

வெளியே போய்ப் பார்ப்போம். வெளியே இன்னொரு உலகம் இருக்கும்.

அகலம் குறைவான, மெலிந்த மாடியை விட்டு இறங்கி, பழைய சிதிலமடைந்த மரத்தாலான படிகளில் இறங்கி, கற்கள் வெளியே வந்து சிதறிக் கிடக்கும் தெருவை அடைந்தான்.

தெருவின் ஓரத்திலிருந்த தண்ணீர்க் குழாயைச் சுற்றி ஆட்கள் நின்றிருந்தார்கள். ஒரு ஆண் குளித்துக் கொண்டிருந்தான். மெலிந்து போன உடலை மூடிக் கொண்டிருந்த சுருக்கங்கள் விழுந்த கருப்புநிறத் தோல் மீது அவன் விலை குறைந்த ஒரு சோப்புத் துண்டைத் தேய்த்து நுரை வரச் செய்ய பாடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு இளம்பெண் செம்புக் குடத்தைக் குழாய்க்கு அடியில் வைத்து நீர் நிறைத்துக் கொண்டிருந்தாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பழம்

பழம்

July 25, 2012

விரக்தி

விரக்தி

October 18, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel