Lekha Books

A+ A A-

மரணம் - Page 2

maranam

மற்ற இளம்பெண்கள் உடலில் சோப்பு தேய்த்துக் கொண்டிருக்கும் கருப்பு ஆளை வெட்கமே இல்லாமல் பார்த்தவாறு நின்றிருந்தார்கள்.

அவனைப் பார்த்ததும் அவர்களுடைய கண்கள் கருப்புநிற மனிதனை விட்டு விலகின. கருப்பு நிறத்தில் இருக்கும், பார்க்க சகிக்காத உண்மை அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு டெரிலின் ஆடை போதும்... செருப்பு போதும்.

வாடிய முல்லைப் பூக்களாலான மாலைகள் அவிழ்ந்து, அவர்களுடைய கூந்தலை விட்டு விலகித் தொங்கிக் கொண்டிருந்தன.

அவர்களில் பலரையும் அவனுக்குத் தெரியும். அவர்களுக்கு அவனையும், அவனுடைய அறையின் வாசனை அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்று. அவர்களுடைய வியர்வை வாசனை அவனுக்கும்.

எனினும், புதிய கண்களால் முதல் தடவையாகப் பார்ப்பதைப் போன்று அவன் அவர்களைப் பார்த்தான்.

இல்லை. அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய கொஞ்சல்கள்தான். நேற்றைய உதட்டைக் கடிக்கும் திருட்டுச் சிரிப்புதான். கறுத்த இருள் நிறைந்த சேற்றுக் குவியலில் இரண்டறக் கலந்து விழுந்து கிடக்கும் பழைய, சேறு அப்பிய முகங்கள்தான் அவை அனைத்தும்.

அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மேலே வந்து கிடக்கும் கல் துண்டுகளைத் தட்டிச் சிதற விட்டவாறு அவன் முன்னோக்கி நடந்தான்.

எண்ணெய் மில்லின் தகர கேட்டையும் நீளமான சுவரையும் கடந்தான். சகிக்க முடியாத சத்தத்தையும் ‘பளிச்’ என்ற வெளிச்சத்தைத் துப்பிக் கொண்டிருக்கும் வெல்டிங் கூடாரத்தையும் தாண்டினான். செய்தாலியின் கடைக்கு முன்னால் வந்தான்.

நடந்து கொண்டே கடையைப் பார்த்தான். ஏதாவது புதிதாக அங்கு இருக்கிறதா ?

எதுவும் இல்லை. பழைய மரக்கால்களில் நின்று கொண்டிருக்கும் கடை. எலுமிச்சம்பழம் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பியாலான கூடு. பழைய கண்ணாடிப் பெட்டிக்கு மேலே பீடி, சீட்டு மார்க் தீப்பெட்டி, பாசிங் ஷோ சிகரெட்… தமிழ்த் திரைப்படக்காரர்களின் படங்கள் இருக்கும் பலகையாலான சுவர்... மடியில் முறத்தை வைத்துக் கொண்டு, முறத்தில் கத்திரியை வைத்து பீடி சுற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கூர்மையான நகத்தைக் கொண்ட பழைய... பழைய... செய்தாலி... முழுமையாக வெட்டப்பட்ட பழைய தலைமுடி... நரைத்த, பழைய தாடியும் மீசையும். பழைய வளைந்த பற்கள்.

‘‘சிகரெட் வேணுமா சார்?” - கேட்டுப் பழகிப்போன குரல்.

‘‘வேண்டாம்.”   

அவன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நடந்தான். உலகம் எங்கே இருக்கிறது?

பிரதான சாலைக்கு வந்தான்.

இங்கு ஒரு வேளை புதிய உலகம் ஆரம்பிக்கலாம். பழைய சுவர்களைப் பார்த்தான். சந்திப்பிற்குச் சற்று தெற்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குஷ்ட நோயாளியின் மிகவும் பழமையான- பலவீனமான குரல் காதில் விழுந்தது.

‘‘சார்... ஏதாவது தாங்க சார்...”

அவன் வேகமாக நடந்தான்.

எப்போதும் தேநீர் அருந்தக் கூடிய கடையைத் தெரிந்தே வேண்டாம் என்று ஒதுங்கி நடந்தான். அங்கு நுழைய அவனுக்கு மனம் வரவில்லை. தேநீர் வியாபாரம் செய்யும் குட்டன் நாயர் அழைத்துக் கேட்டான்: ‘‘என்ன சார், வழியை மறந்துட்டீங்களா ?”

‘‘இல்ல... அவசர வேலை...”-அவன் பொய் சொன்னான்.

இன்னொரு தேநீர்க் கடைக்குள் நுழைந்தான். என்ன வேறுபாடு? மேஜைக்கு அருகில் இன்னொரு குட்டன் நாயர்.

‘‘என்ன சார்”வழக்கமா இல்லாமல் இந்தப் பக்கம்?”

‘வேண்டுமென்றுதான் ‘ என்று கூற வேண்டும்போல இருந்தது.

இந்த மனிதனும் குட்டன் நாயர்தான். அதே பார்வை. அதே குருல்.

ஒரு வேறுபாடும் இல்லை. தொடர்ந்து மிகவும் பழைய, சொறி பிடித்த அலுமினியக் கிண்ணத்தில் பழைய இட்லிகள் வந்தன. வழக்கமான சாம்பார் மலை நீரைப்போல வழிந்தது. கருகல் வாடை அடித்த பால் கலந்து உண்டாக்கிய தேநீர் என்ற திரவம் வந்தது.

தேநீரைக் குடித்து முடித்து வெளியேறினான். பத்திரிகை அலுவலகத்தை நோக்கி நடந்தான். நடந்து சென்ற பாதையெங்கும் புதியவற்றைத் தேடினான். படவில்லை. எதுவும் கண்ணில் படவில்லை. பழைய, விழுந்து கிடக்கும் பாலத்தைப் பார்த்தான். மர வியாபாரிக** ஷோ ரூம்களைப் பார்த்தான். பேக்கரியைப் பார்த்தான். இறுதியில் பத்திரிகை அலுவலகத்தை அடைவதற்கு முன்னால் பாதையோரத்தில் ஆலமரத்திற்குக் கீழே இருந்த பீடத்தைப் பார்த்தான். கல்விளக்கைப் பார்த்தான்.

பீடத்தில் இருந்த கல்விளக்கிற்கு அருகில் சிலையாக தெய்வம் நின்று கொண்டிருந்தது.

அவன் தெய்வத்தைப் பார்த்துச் சிரித்தான். அதுவும் பழையதுதான். கல்லால் செய்யப்பட்ட பழைய தெய்வம்.

‘நீங்கள் என்ன அவதாரம்? தசாவதாரங்களில் கல் என்ற ஒன்று இல்லையே!’

அவனுக்கு வெறுப்பு உண்டானது. தெய்வமும் புதியது அல்ல; பழையதுதான்.

தெய்வங்களும் பழையவை தான் என்றால் பிறகு எதற்குத் தெய்வங்கள்? சிலைகள் பழையவை என்றால், பிறகு எதற்கு சிலைகள்?

‘நான் எல்லாவற்றையும் அடிச்சு உடைக்கப் போறேன்’- அவன் பற்களைக் கடித்துக் கொண்டு தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

ஆனால், அதற்கான சக்திக்கு எங்கே போவது? இன்று... இன்று தான் அவன் பிறந்திருக்கிறான். இதுவரை மிதித்து நகர்த்திவிட்ட வருடங்கள் வீணானவை என்று, அர்த்தமே இல்லாதவை என்று, முட்டாள்தனமானவை என்று அவன் இன்றுதான் கண்டுபிடித்தான். அப்போது கண்களைத் திறந்தான். அவன் பிறந்தான். புதியவற்றை மட்டும் பார்க்க விரும்பினான். ஆனால், பார்த்தவையோ எல்லாம் பழையவை தான். தெய்வங்கள் உட்பட... சிலைகள் உட்பட...

இந்தப் பழைய சிலைகளைப் பார்ப்பதற்கா புதிய கண்களுடன் அவன் அலைந்தான்?

இதற்கு முன்பு தெரிந்தவர்களைப் பார்க்காமல் இருக்க, அவர்களுடன் சிரிக்காமல் இருக்க இயன்ற வரையில் முயற்சித்தவாறு அவன் நடந்தான்.

பத்திரிகை அலுவலகத்தின் பச்சை நிறத்தைக் கொண்ட கேட்டை அடைந்தபோது, மேனேஜரின் நீல நிறத்தில் இருக்கும் ஃபியட் அருகில் வந்து நின்றது. அழகிய தோற்றத்தைக் கொண்டவனும் இளைஞனுமான மேனேஜர் தலையை நீட்டினான்.

‘‘குட் மார்னிங்.”

‘‘குட் மார்னிங்.”

மேனேஜர் காரிலிருந்து இறங்கினான். அவர்கள் ஒன்று சேர்ந்து உள்ளே நடந்தார்கள். பச்சை நிறக் கண்களையும் இறுகிப் போன முகத்தையும் கொண்ட காவலாளி சலாம் வைத்தான்.

‘‘என்ன சார் நடந்து போறீங்க? நான் வந்த உடனே காரை அனுப்புறதா இருந்தேனே!”

‘‘அப்படியா?” - அவன் சிரித்தான்: ‘‘காலையில் நடக்குறது ஒரு சுகமான அனுபவமாச்சே!”

மேனேஜர் பழைய ஆள்தான். டெரிலின் மனிதன். குட்டிக்குரா பவுடரின் வாசனை. ப்ளேயர்ஸ் சிகரெட்டின் புகைக்குள் தெரியும் சிரிப்பு.

‘‘சிகரெட்?”- மேனேஜர் நீட்டினான்.

‘‘நன்றி!”

மேனேஜர் தினமும் சிகரெட்டை நீட்டுகிறான். அவன் வேண்டாம் என்று மறுக்கிறான். கென்னடி முனையில் விண்வெளி ஆய்வு நடக்கிறது. சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தங்கம்

தங்கம்

June 14, 2012

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel