Lekha Books

A+ A A-

மாட்டுச் சந்தை

Mattu Santhai

மாலை நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு மனிதன் படிகளைக் கடந்து வருவதைப் பார்த்ததும், கமலாட்சி கையில் இருந்த துடைப்பத்தை தரையில் போட்டுவிட்டு, வாசலுக்கு ஓடி வந்து, ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்றாள். சிறிது நேரம் அவள் அவனுடைய பட்டு ஆடைகளையும் செருப்பையும் கையில் இருந்த தோல் பையையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் அருகில் வந்தபோதுதான் அவள் தன்னுடைய அழுக்கு ஆடைகளைப் பற்றி நினைத்தாள்.

அவள் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆனால், உள்ளே போவதற்கு முன்னால் வந்த மனிதன் கேட்டான்:

“இங்கே யாரும் இல்லையா?''

“இல்லை... மாமா குருவாயூருக்குப் போயிருக்கிறார். நாளைக் குத்தான் வருவார்.''

கமலாட்சி உள்ளே ஓடினாள். அவளுடைய பாட்டி காலின் பெருவிரலை ஊன்றி நின்று கொண்டு உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விபூதிப் பாத்திரத்தைத் தடவித் தேடிக் கொண்டிருந்தாள்.

“யாரோ வந்திருக்காங்க...'' கமலாட்சி சொன்னாள். அவளுடைய முகத்தில் தெரிந்த பிரகாசத்தையும் குரலில் உண்டான தடுமாற்றத் தையும் பாட்டி கவனிக்காமல் இல்லை. அவள் கொடியில் இருந்து ஒரு மேல் துண்டை எடுத்து மூடிக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

“யார்? தெரியலையே!'' பாட்டி சொன்னாள். வந்திருந்த மனிதன் அழகான தோற்றத்தைக் கொண்டவன் என்பதும், அவனுடைய பொருளாதார நிலை மோசம் அல்ல என்பதும் அவளுக்கு ஒரே பார்வையில் தெரிந்துவிட்டது.

“நான் இங்கே இருக்கும் சந்தைக்கு வந்தேன்- இரண்டு கன்றுக் குட்டிகளை வாங்குவதற்காக...'' அவன் சொன்னான். “பார்த்தேன். ஆனால், திருப்தி உண்டாகவில்லை. இனி வடக்காஞ்சேரிக்கு நாளைக்குக் காலையில்தான் பேருந்து இருக்குன்னு சொன்னாங்க. அதனால் ஏதாவது ஒரு இடத்தில் தங்கலாம்னு நினைச்சேன்... நான் நாயர்தான்.''

“அது புரிந்தது.''

பாட்டி சிரித்தாள். வந்திருந்த மனிதன் புதிதாக உண்டான தைரியத்துடன் தன்னுடைய செருப்புகளைப் படியின்மீது கழற்றி வைத்துவிட்டு, வாசலுக்கு வந்தான்.

“இங்கே தங்குவதைப் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், இங்கே இருக்கிற ஆளு குருவாயூருக்குப் போயிருக்கார். என்னோட மூத்த மகன்.'' பாட்டி சொன்னாள்.

“அப்படியென்றால் நான் வேறு ஏதாவது இடத்துக்குப் போறேன்.'' அவன் சொன்னான்.

உள்ளே செல்லும் வாசல் கதவிற்குப் பின்னால் தன்னுடைய முகத்தை மட்டும் வெளியே தெரியுமாறு காட்டிக் கொண்டு நின்றிருந்த கமலாட்சி திடீரென்று வேகமாக நடந்து சமையலறையை நோக்கிச் சென்றாள்.

“வேண்டாம்.'' பாட்டி சொன்னாள்: “எங்கும் போக வேண்டாம். இங்கேயே தங்கலாம். இந்த வாசலில் படுக்கை விரிச்சித் தர்றேன்.''

அவன் ஒரு திண்ணையில் உட்கார்ந்தான்.

“கொஞ்சம் தண்ணீர் குடிக்கணும்.'' அவன் சொன்னான்: “மிகவும் தாகமா இருக்கு.''

அவனுடைய கண்கள் உள்ளே இருந்த இருட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்தன.

“கமலாட்சி...'' பாட்டி உரத்த குரலில் அழைத்துச் சொன்னாள்: “கமலாட்சி... ஒரு சொம்பு நீர் கொண்டு வா... கொஞ்சம் தேநீர் போடட்டுமா?''

அவன் தலையை ஆட்டினான். அவனுடைய சட்டை வியர்வையில் நனைந்து விட்டிருந்தது. அவன் தன்னுடைய தோல் பையைத் திறந்து ஒரு "மாத்ருபூமி' வார இதழை எடுத்து அதை வைத்து வீச ஆரம்பித்தான்.

“ஊர் எது? வடக்காஞ்சேரியா?'' பாட்டி கேட்டாள்.

“ம்...''

“ராமன் குட்டி இடையில் அவ்வப்போது அங்கே போவது உண்டு. அவன் போகாத ஊர்கள் இல்லை. எப்போதும் பயணம்தான்.''

“யாருக்கு?''

“ராமன்குட்டி... என்னுடைய மூத்த மகன். அவனுக்கு கேஸ் அது இதுன்னு வீட்டில் இருக்க நேரமில்லை.''

“ம்...''

“நான் அவ்வப்போது சொல்லுவேன்... திட்டுவேன் -ராமன் குட்டி, நீ இப்படி நடந்து திரிஞ்சா போதுமா? அப்பாவும் இல்லாத ஒரு பிள்ளை இங்கே இருக்காள்ல! வயசுக்கு வந்து நிற்கிறாள். அவளுக்கு ஒரு ஆள் கிடைக்க வேண்டாமா? இந்தக் காலத்துல யாராவது இங்கே கேட்டு வருவாங்களா? இல்லை... நீ கொஞ்சம் விசாரிச்சுப் பாருன்னு. அவன் அப்போ சொல்லுவான்- அம்மா, பேசாம இருங்க. கமலாட்சிக்கு அதற்கான காலம் வர்றப்போ ஒரு ஆள் இங்கே வந்து கேட்பான் என்று. நான் என்ன பதில் சொல்றது?''

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel