Lekha Books

A+ A A-

மாட்டுச் சந்தை - Page 3

Mattu Santhai

“நாகரீகம், படிப்பு எல்லாம் எனக்குப் பிடிக்கும். ஆனால், பெண் பிள்ளைகள் வாசலில் நின்று கொண்டு நேரத்தைக் கடத்துவது எனக் குப் பிடிக்காத விஷயம்.'' பாட்டி சொன்னாள்: “நான் கேட்பது உண்டு- கமலாட்சி, இப்போத்தானே உனக்கு விளையாட்டும் சிரிப்பும் இருக்கு! கல்யாணமாகி ஒரு வீட்டுக்குப் போய்விட்டால், பிறகு மாமியார் சொல்றதைக் கேட்க வேண்டாமா? அம்மாவும் அப்பாவும் இருப்பார்களா? என்று!''

“ம்...''

“வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க?''

“எல்லாரும் இருக்காங்க. நாங்க மொத்தம் பதினேழு பேர்...''

“ஆஹா! அதுதான் நல்லது. பாகத்தைப் பிரித்து ஒவ்வொரு வீட்டையும் கட்டி வாழ்றது, ஒண்ணா வாழ்றதுக்கு இணையா ஆகவே ஆகாது.''

பாட்டி தன்னுடைய கால்களை நீட்டி வைத்துக் கொண்டு, அந்த இளைஞனைப் பார்த்து சிரித்தாள். அவன் "மாத்ருபூமி'யைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினான்.

“முன்கூட்டியே சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படித்தானே?'' பாட்டி கேட்டாள்: “அவள் இப்போ சமைச்சிடுவா. அவளுக்கு சமையல் மிகவும் பழகிப் போன ஒண்ணு.''

“ம்...''

“நான் கொஞ்சம் போயி குளிச்சிட்டு வர்றேன். நாமம் சொல்லணும்ல! வயதாகிவிட்டால்... பிறகு... அந்த மாதிரியான விஷயங்கள்தானே மிகவும் முக்கியமான வேலையாக இருக்கும்?''

அவன் சிரித்தான்.

பாட்டி சமையலறைக்குள் சென்று கமலாட்சியை அருகில் அழைத்தாள்.

“உனக்கு இந்த முண்டுதான் அணியிறதுக்கு கிடைச்சதா? இந்த கரி வேஷம் போட்டுக் கொண்டு வாசலுக்கு வர தோணுச்சுல்ல! போயி முண்டை மாற்று. அந்த சிகப்பு ரவிக்கையை எடுத்து அணிஞ்சிக்கோ. வெளி ஆளுங்க வர்றப்போ கொஞ்சம் பார்க்கிறதுக்கு லட்சணமா இருக்கணும். உனக்கு ஒண்ணுமே தெரியல...''

சாப்பிட்டு முடித்து, தனக்கு விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தூங்குவதற்காகப் படுத்தபோது, அவன் உள்ளே செல்லும் பாட்டியிடம் சொன்னான்:

“நான் இப்போதே விடை பெற்றுக் கொள்கிறேன். நாளைக்கு அதிகாலையில் பேருந்தைப் பிடிப்பதற்கு எழுந்து போகணும்.''

“அதெல்லாம் வேண்டாம். பத்து மணிக்குக்கூட ஒரு பேருந்து இருக்கு. அதில் போனா போதும். அதற்குள் ராமன்குட்டியும் வந்திடுவான்!''

அவன் எதுவும் கூறவில்லை. பாட்டிக்குப் பின்னால் விளக்கைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த கமலாட்சி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவன் அதைப் பார்க்காததைப் போல காட்டிக் கொண்டான்.

“காலையில் காப்பி, பலகாரம் ஆகியவற்றைச் சாப்பிட்டு முடித்து மெதுவாகப் போகலாம்.'' பாட்டி சொன்னாள்.

“நாளைக்கு சாப்பாட்டு நேரத்துல வீட்டுக்குப் போயிடணும்.'' அவன் சொன்னான்: “மூத்த மகனின் பிறந்த நாள்.''

“யாருடைய மூத்த மகன்?''

“என்னோட...''

பாட்டி தலையை ஆட்டினாள். பிறகு எதையும் பேசுவதற்காக நிற்காமல் அவள் உள்ளே சென்று கதவை அடைத்துத் தாழ்ப்பாளைப் போட்டள். கமலாட்சி விளக்கை தரையில் வைத்துவிட்டு, வேகமாகத் தன்னுடைய படுக்கையறையை நோக்கிச் சென்றாள். அங்கு வெறும் பாயில் படுத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்களைப் பற்றி சிந்தித்து அவள் சிறிது நேரம் தேம்பித் தேம்பி அழுதாள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel