Lekha Books

A+ A A-

மாட்டுச் சந்தை - Page 2

Mattu Santhai

திண்ணையின்மீது உட்கார்ந்திருந்த இளைஞன் ஒரு சிகெரட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

“அவளுக்கு யாரும் இல்லை. இருக்கறதே ஒரு மாமாவும் இந்த பாட்டியும் மட்டும்தான். ஆனால், நான் அவளுக்கு என்னவெல்லாம் வேணுமோ, அவை எல்லாவற்றையும் கொடுத்துத்தான் வளர்த்திருக்கேன். அதற்கான பணத்தை அவளுடைய அப்பா இறப்பதற்கு முன்பே வங்கியில் போட்டிருந்தாரு. ஐயாயிரம் ரூபாய்... சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தாரு. கொரட்டில் மாதவன் நாயர் என்று சொல்லுவாங்க. வெளுத்து மெலிஞ்ச ஒரு ஆள்.'' பாட்டி தன்னுடைய மேல் துண்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மீண்டும் தொடர்ந்து சொன்னாள்:

“அவளை நான் வெளியே விட்டதே இல்லை. இப்போ பார்க்குற பெண்பிள்ளைகளைப் போல எல்லாத்தையும் காட்டிக் கொண்டு கடை வீதிகளிலும் திரை அரங்கிலும் அலைந்து திரிவதற்கு நான் அவளை அனுப்பியதில்லை. அவள் அதனால எங்கேயும் போறது இல்லை. அவள் இங்கே இருக்கிற சமையலறையிலேயே இருப்பாள். சமையல் செய்வது, அதைப் பரிமாறுவது இப்படி... ஒரு பாவம்.''

“பெண்பிள்ளைகளை வீட்டிற்குள் அடைத்து வைப்பது தவறான ஒரு விஷயம். கொஞ்சமாவது உலக அனுபவம்...''

“உலக அனுபவம்? இதுக்கு மேலே அதுவும் இருக்கே! நான் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். கமலாட்சி இடையில் அவ்வப் போது அவளுடைய அத்தை வீட்டுல போய் தங்கிட்டு வருவா. அது திருச்சூர்ல இருக்கு. அங்கே தங்கிட்டு திரும்பி வர்றப்போ முகம் முழுக்க வெள்ளைப் பொடியும், கையின் நகத்தில் சாந்தும்... எல்லாம் இருக்கும். அவளுக்கு நாகரீகம் என்றால் பெரிய மோகம்... ஆங்கிலப் புத்தகம் வாசிப்பதிலும் ஆங்கிலத்தில் சுலோகங்கள் சொல்வதிலும் ரொம்பவும் விருப்பம்...''

கமலாட்சி ஒரு கோப குணத்துடன் வாசலுக்கு வந்து தன்னுடைய கையில் இருந்த தண்ணீரையும் தேநீரையும் திண்ணையின்மீது வைத்தாள்.

“எதுக்கு தேநீர்லாம்?'' வந்திருந்த ஆள் சிரித்துக் கொண்டே கேட்டான்.

கமலாட்சி முகத்தைக் குனிந்து கொண்டாள். அவள் மாநிறத்தில் உயரம் குறைவான ஒரு பெண்ணாக இருந்தாள். பார்ப்பதற்கு அழகு என்று கூற முடியாத ஒருத்தி. ஆனால், பாட்டி கூற ஆரம்பித்தாள்: “கமலாட்சி பிறந்தப்போ எல்லாரும் சொன்னாங்க- பாட்டி, குழந்தை உங்க சாயல்... குழந்தைக்கு என்ன நிறம்! தங்கம்தான்! பிறகு... வெயில்ல ஓடித் திரிந்து அந்த நிறமெல்லாம் போயிடுச்சு. ஆனால், பெண்களின் நிறம் பிரசவம் ஆனால்தான் தெரியும்னு சொல்வதென்னவோ உண்மைதான். நான் கறுப்பாத்தான் இருந்தேன். ஒன்றிரண்டு பெற்றெடுத்த பிறகு என்னுடைய நிறம் வெள்ளையா ஆயிடுச்சு...''

“பாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு.'' கமலாட்சி முணுமுணுத்தாள். ஆனால், அவள் உள்ளே செல்லாமல் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். இடையில் அவ்வப்போது அந்த இளைஞன் தன்னைப் பார்க்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

“ஒரு... அப்பிராணி!'' பாட்டி தொடர்ந்து சொன்னாள்: “ எதுவும் வேண்டாம், எதையும் பார்க்க வேண்டாம்... இப்படியொரு குணம். சமீபத்துல இங்கே ஓட்டு போடுறதுக்காக பெண்கள் எல்லாரும் சேர்ந்து புறப்பட்டுப் போனப்போ நான் கேட்டேன்- என்ன கமலாட்சி, நீயும் ஓட்டு போட வேண்டாமான்னு. அவள் சொன்னாள்- எனக்கு இப்போ ஓட்டும் வேண்டாம்; காங்கிரஸும் வேண்டாம்னு.“அது நல்லது இல்லை.'' இளைஞன் சொன்னான்: “நாட்டு விஷயங்களிலும் பெண்களுக்கு ஈடுபாடு இருக்கணும்.''

கமலாட்சியின் கண்கள் திடீரென்று ஈரமாயின.

“நான் அதை எப்படியோ சொல்லாமல் விட்டுட்டேன். கமலாட்சி ஓட்டு போடுறதுக்குப் போகவில்லை. உண்மைதான். ஆனால், ஓட்டு எண்ணுவது தொடங்கினப்போ கமலாட்சிதான் முன்னால போய் நின்றாள். எல்லா ஓட்டுக்களையும் இங்கே தாங்கன்னு அவள் சொல்கிறாள்- நான் எண்ணித் தர்றேன்னு சொல்கிறாள். அன்னைக்கு ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இருந்தவள் அவள்தான்.''

அந்த இளைஞன் காரணமே இல்லாமல் விழுந்து விழுந்து சிரித்தான். பாட்டி சிறிது நேரத்திற்கு அமைதியாக இருந்தாள். பிறகு ஒரு கோப குணத்துடன் கமலாட்சியிடம் சொன்னாள்:

“உள்ளே போ. சாப்பாடு தயார் பண்ண வேண்டாமா? இங்கே நின்னு பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தால் போதுமா?''

கமலாட்சி முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மீசை

மீசை

April 2, 2012

அடிமை

அடிமை

June 18, 2012

தேன் மா

தேன் மா

March 8, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel