
சங்கரி தொடர்ந்து உரத்த குரலில் சொன்னாள்; “படிக்கிறதுக்கு வசதியில்லாம தெருத்தெருவா அலைஞ்சு எங்ககிட்ட வந்து நின்னப்போ, எங்கப்பாதான் பணம் தந்தாரு. நாங்க கொடுத்த பணத்தை வச்சு படிச்சு, வக்கீலா மாறி பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சதைக் கேள்விப்பட்டு சொந்தமும் பந்தமும் தேடி வரத் தொடங்கிட்டீங்களா? சொந்தம்னு சொல்லிக்கிட்டு இங்கே யாரும் வரக்கூடாது. தெரியுதா? யாருக்கும் ஒரு பைசா தர நான் சம்மதிக்க மாட்டேன்.”
அதற்கு யாரோ மெதுவான குரலில் என்னவோ சொன்னார்கள்.
“தம்பியைப் பார்க்கணும்னா வழியில எங்காவது நின்னு பார்த்துக்க வேண்டியதுதான்...”
அடுத்த நிமிடம் அவன் வீட்டுக்குள் புயலென நுழைந்தான்.
கமலம் சுவர் மீது சாய்ந்தவாறு நின்றிருந்தாள். அவள் கிட்டத்தட்ட ஒரு எலும்புக்கூட்டைப் போலவே மாறியிருந்தாள்.
“அக்கா... என் அக்கா...” - அந்த அன்புத்தம்பி அந்த எலும்புக்கூட்டைக் கட்டிப் பிடித்தான்.
“என் பிள்ளையே! தம்பி...” - அவள் தன்னுடைய தம்பியின் கைப்பிடிக்குள் போய் விழுந்தாள்.
அவ்வளவுதான் - சங்கரியின் பெரிய கண்கள் பயங்கரமாக கோபத்துடன் மேலும் பெரிதாயின. அவள் கத்தினாள். “இதெல்லாம் இங்கே வேண்டாம்... பிச்சை எடுத்து தெருவுல அலையிறவளையெல்லாம் கட்டிப்புடிச்சு அழுற இடம் இது இல்ல...”
“அடியே...!”- கமலத்தின் தம்பியின் குரல் முதல் தடவையாக அந்த வீட்டில் உரத்து ஒலித்தது. “அடியே... என் சகோதரியைப் பார்த்தா நீ பிச்சைக்காரின்ற? என் சகோதரி பிச்சைக்காரின்னா, அதற்குக் காரணம் நான்தான். எனக்காகத்தான் அவங்க பிச்சை எடுக்குற நிலைமைக்கு வந்ததே!”
“ஒரு பிச்சைக்காரியும் என் வீட்டுக்குள்ளே வரக்கூடாது...”
“உன் வீடு... உன் வீடு...!” அவனுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. தன்னுடைய சகோதரியை மார்பில் தாங்கியவாறு அவன் சொன்னான்; “உன் வீட்டுல மனிதப் பண்புக்கு இடமே இல்ல... அடியே! நாசமாப் போறவளே! என்னை நீ ஒரு தொழிற்சாலையா நினைச்சிட்டே! உங்கப்பா முதல் போட்டு உனக்கு லாபம் சம்பாதிச்சுத் தர்ற ஒரு வியாபார இடமா என்னை நீ கணக்கு போட்டுட்டே... போதும். இவ்வளவு லாபம் நீ சம்பாதிச்சது போதும். இனிமேல் நான் மனிதனா ஆகுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தச் பிச்சைக்காரியோட தம்பியா நான் வாழப் போறேன். உன்னை இனிமேல் நான் பார்க்குறதாகவே இல்ல...”
அவன் தன் சகோதரியைத் தூக்கி தோளில் போட்டவாறு, வேகமாக வெளியே நடந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook