Lekha Books

A+ A A-

தர்மசாலையில்

dharmasalaiyil

னாரஸ் கண்டோன்மென்டில் வண்டியை விட்டு இறங்கியவுடன் சிவப்பு ஆடையணிந்த ஒரு ரெயில்வே போர்ட்டர் என்னுடைய சாமான்களை எடுப்பதற்கு முயற்சித்தவாறு கேட்டான்: "கிதர் சாஹேப்?"

நான் சிறிது நேரம் தலையைக் குனிந்தவாறு யோசித்தேன். அந்த தர்மசாலையின் பெயர் என்ன என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தேன். அப்போது அந்தப் பெயர் ஞாபகத்தில் வந்தது... "கிருஷ்ண தர்மசாலை" நான் போர்ட்டரைப் பார்த்துச் சொன்னேன்.

"ஸ்ரீகிருஷ்ண தர்ம சாலை..."- அந்தப் போர்ட்டர் தர்ம சாலையின் பெயரை நான் சரியாகச் சொல்லவில்லை என்று திருத்தினான்.

"இங்கேயிருந்து அது எவ்வளவு தூரத்தில் இருக்கு?"

"அப்படியொண்ணும் அதிக தூரமில்ல..."

அவன் என்னுடைய படுக்கையையும் பெட்டியையும் பிரம்புக் கூடையையும் தலையில் வைத்தவாறு எனக்கு முன்னால் நடந்தான்.

ஐந்து நிமிடங்கள் இருவரும் நடந்திருப்போம். அதற்குள் தர்ம சாலையை அடைந்துவிட்டோம்.

வராந்தாவில் நீளமான பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை முன்னால் வைத்துக் கொண்டு ஒரு மேஜைக்குப் பின்னால் கண்ணாடி போட்ட, முதுகு வளைந்த ஒரு வயதான கிழவர் வெற்றிலையை வாயில் மென்றவாறு என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். போர்ட்டர் என்னுடைய பொருட்களை அவருக்கு முன்னால் இறக்கி வைத்தான். அந்த மனிதர் கண்ணாடி வழியாக என்னைப் பார்த்தார். என்னுடைய நாகரீகமான தோற்றத்தைப் பார்த்து அவரின் முகத்தில் ஒருவித புன்சிரிப்பு தவழ்ந்தது.

"நீங்க எங்கேயிருந்து வர்றீங்க, சாஹேப்?"- சிரிப்பு தாண்டவமாடிக் கொண்டிருந்த தன்னுடைய முகத்தை ஒரு பக்கம் சாய்த்து வைத்துக் கொண்டு அவர் கேட்டார்.

நான் சொன்னேன், "மதராஸ்."

"மதராஸ்!"- தெற்கு திசையை விரலால் சுட்டிக் காட்டியவாறு அவர் நான் சொன்னதையே திருப்பிச் சொன்னார்,  "ராமேஸ்வரத்துக்குப் பக்கத்துல... அப்படித்தானே?"

அந்த மனிதரிடம் எதற்குத் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த நான் 'ஆமாம்' என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினேன்.

"சீக்கிரம் சொல்லுங்க, அறை காலியாக இருக்கா?"- நான் பொறுமை இழந்து கேட்டேன்.

"மன்னிக்கணும், சாஹேப். அறை கிடைக்கிறது சந்தேகம்தான். நாளைக்கு சங்க்ராந்தியாச்சே! அதுனால இங்கே ஏகப்பட்ட கூட்டம் இருந்தாலும் பார்ப்போம். ரொம்ப தூரத்துலயிருந்து வர்ற உங்களைத் திருப்பி அனுப்புறது அவ்வளவு நல்ல விஷயம் இல்லையே!"

அந்த மனிதர் தன்னுடைய முகத்தில் மீண்டும் அந்தப் பழைய புன்சிரிப்பைத் தவழ விட்டார். மேஜை மீதிருந்த அந்த பைண்ட் செய்யப்பட்ட பெரிய புத்தகத்தை தனக்கு முன்னால் விரித்து வைத்து காதில் சொருகி வைத்திருந்த பேனாவை எடுத்து மையில் தோய்த்து புத்தகத்தில் என்னவோ எழுதினார். பிறகு என்னுடைய முழுபெயர், தந்தையின் பெயர், வயது, தொழில், மாநிலம், சொந்த கிராமம், தபால் அலுவலகம், இங்கு எப்போது வந்தேன், எதற்காக இங்கு வந்திருக்கிறேன், எங்கிருந்து வந்திருக்கிறேன், எத்தனை நாட்கள் இங்கு தங்கியிருப்பேன், எப்போது திரும்பப் போவேன், எங்கு போவேன் என்று பல கேள்விகளையும் அவர் அடுத்தடுத்து கேட்டார். நான் முடிந்தவரை அவர் திருப்திபடுகிற மாதிரி பதில்களைச் சொல்ல, அவற்றை அவர் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தார். இடையில் மதராஸ்காரர்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் பக்திமனம் கொண்டவர்கள் என்றும், கருணைமனம் உள்ளவர்கள் என்றும், தானம் செய்யும் குணம் கொண்டவர்கள் என்றும் பல விஷயங்களை அவர் சொன்னார். கடைசியில் புத்தகத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி, அந்த இடத்தில் என்னைக் கையெழுத்து போடும்படி சொன்னார். எல்லாம் முடிந்தபிறகு அவர் "கங்காராம்..." என்று உரத்த குரலில் அழைத்தார்.

அந்தச் சிறிய உருவத்தைக் கொண்ட மனிதருக்கு இவ்வளவு பயங்கரமான குரலில் அழைக்க முடியும் என்பதை யாரும் பொதுவாக நம்பமாட்டார்கள்.

"மேஹ்தாஜி" என்று சொன்னவாறு ஒரு சிறுவன் அடுத்த நிமிடம் அங்கு வந்து நின்றான்.

"சாஹேப்பிற்கு முப்பத்திரெண்டாம் நம்பர் அறையைக் காட்டு". போர்ட்டர் சாமான்களைத் தூக்கிக் கொண்டு பின்னால் நடந்தான். மேஹ்தாஜி என்னைக் கையால் காட்டி தடுத்து நிறுத்தினார்.

"சாஹேப், நீங்க அறையில மூணு நாட்கள் தங்கிக்கலாம். கட்டில் வேணும்னா கங்காராம்கிட்ட சொன்னா போதும். வாடகையா நாலணா கொடுக்கணும். அதைக் கொடுத்துட்டா அவன் கட்டிலைக் கொண்டு வந்து போட்டுடுவான். அதற்குப் பிறகு ஏதாவது தேவைப்பட்டால், கங்காராம் கிட்ட சொல்லிட்டா போதும். மதராஸ்காரர்கள் ரொம்பவும் பெரிய மனசுள்ளவங்கன்னு சொல்வாங்க."

அந்த தர்ம சாலையில் பணியாற்றுபவர்கள் இப்படி அடிக்கடி மதராஸ்காரர்களின் பெருந்தன்மையைப் பற்றி பாராட்டிப் பேசுவதில் அர்த்தம் இல்லாமலில்லை.

போர்ட்டர் என்னுடைய பொருட்களை முப்பத்து இரண்டாம் எண் அறையில் கொண்டு வந்து வைத்தான். நான் அவனுக்குத் தந்த இரண்டு அணாக்களைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். கங்காராம் அங்கேயே நின்றிருந்தான்.

முப்பத்திரெண்டாம் எண் அறை அவ்வளவு ஒன்றும் சுத்தமாக இல்லை. கடைசி கடைசியாக இந்த அறையில் தங்கியிருந்தவர்கள் பார்சல் கட்டுவதற்காகப் பயன்படுத்திய தாள்களும் இலையும் நாரும் மற்ற குப்பைகளும் ஆங்காங்கே தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. ஒரு சன்லைட் சோப் சுற்றப்பட்ட பேப்பரும் சிவப்பு வண்ணத்தில் இருந்த ஒரு கண்ணாடி வளையல் துண்டும் அறையின் மூலையில் கிடந்தன. அறைக்கு ஒரே ஒரு கதவு இருந்ததைத் தவிர, வேறெந்த ஜன்னல்களோ, ஓட்டைகளோ அங்கு இல்லை. அறையின் இரு பக்கங்களிலும் சுவரில் உண்டாக்கப்பட்ட அலமாரிகளிலொன்றில் மிகவும் தோய்ந்துபோன ஒரு சோப்புத் துண்டும் ஒரு அங்குலம் நீளத்தில் இருந்த மெழுகுவர்த்தியும் இருந்தன.

"இந்த அறையை நல்லபடி பெருக்கி சுத்தமாக்கணும்"- நான் கங்காராமைப் பார்த்துச் சொன்னேன்.

"இப்பவே செஞ்சிட்டா போச்சு!"

கங்காராம் அடுத்த நிமிடம் தோட்டியை அழைத்து வந்து அறையிலிருந்த குப்பை, தூசு எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வைத்தான். பிறகு அவன் ஒரு மடக்குக் கட்டிலை கொண்டு வந்து அறையின் ஒரு பகுதியில் போட்டான். சாமான்களை ஒரு மூலையில் ஒழுங்காக இருக்கும்படி வைத்தான்.

"வெளியே போறப்போ அறையைப் பூட்டுறதுக்கு பூட்டும் சாவியும் கையுல இருக்கா?"- கங்காராம் கேட்டான்.

"இல்ல. நீ ஒரு புது பூட்டும் சாவியும் வாங்கிட்டு வா. ஒரு பெரிய மெழுகுவர்த்தியும் ஒரு தீப்பெட்டியும் கூட வேணும்..."- நான் கங்காராமின் கையில் ஒரு எட்டணா நாணயத்தைக் கொடுத்தேன்.

கங்காராம் வெளியே போனபிறகு நான் அந்த மடக்குக் கட்டிலில் அமர்ந்து வெளியே தெரியும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel