Lekha Books

A+ A A-

தர்மசாலையில் - Page 2

dharmasalaiyil

இந்த உலகமே ஒரு தர்மசாலைதான் என்று யாரோ எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சொன்னது இப்போதும் என் ஞாபகத்தில் இருக்கிறது. முப்பத்தி இரண்டாம் எண் அறையில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக நான்கு பக்கமும் பார்த்தபோது இந்த வார்த்தைகளின் அர்த்தம் எந்த அளவிற்கு உண்மையானது என்பது புரிந்தது. மூன்று பக்கங்களிலும் வரிசை, வரிசையாக அறைகளைக் கொண்ட ஒரு பழைய கட்டிடம். முற்றத்தின் மத்தியில் சில மரங்களும் பூந்தோட்டமும் இருக்கின்றன. முன்னால் ஒரு ஸ்ரீகிருஷ்ணன் கோவில். வலது பக்கத்தில் ஒரு பெரிய குளம். எங்கிருந்தோ இங்கு மனிதர்கள் வருகிறார்கள், நடமாடுகிறார்கள், இந்த இடத்தை விட்டுப்போகிறார்கள். முன்னாலிருக்கும் மாமரக் கிளைகளில் அமர்ந்து சிலர் அடுப்பை மூட்டி கோதுமையால் ரொட்டி சுட்டு தின்று கொண்டிருக்கிறார்கள். தங்களின் பொருட்களை ஒரு கோணியில் கட்டி தலையில் வைத்து சுமந்தவாறு தீர்த்த யாத்திரைக்கு வந்த ஒரு கூட்டம் வராந்தாவில் நின்று கொண்டிருக்கிறது. என்னுடைய அறைக்குப் பக்கத்து அறையில் இருக்கும் ஒரு விதவையான சீனாக்காரப் பெண்ணும் அவளின் நான்கு பிள்ளைகளும் இரண்டு குச்சிகளைக் கையில் வைத்துக் கொண்டு வாய்க்குள் எறிந்து எறிந்து சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவள் பிரம்புக் கூடைகள் தயார் பண்ணி, இங்கு வரும் மனிதர்களுக்கு விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் அவர்கள் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். முகம் முழுவதும் சொறி பிடித்த ஒரு தடிமனான மனிதன் முன்னாலிருக்கும் தோட்டத்தின் உயரம் குறைவான சுவரின் மீது அமர்ந்தவாறு ஒரு பூச்செடிக் குச்சியால் பற்களைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய கழுத்தில் தங்கத்தால் ஆன ஒரு பெரிய ருத்ராட்ச மாலை தொங்கிக் கொண்டிருக்கிறது. பருமனான உடம்புகளைக் கொண்ட ஐந்து திபெத்தைச் சேர்ந்த மனிதர்கள் தெற்கு பக்கம் இருக்கும் வாசலில் கோணியைத் தரையில் விரித்து வைத்து உட்கார வைத்திருக்கிறார்கள். முழங்கால்வரை வரக்கூடிய கறுப்பு நிறத்தில் இருக்கும் தோலால் ஆன காலணிகளை அணிந்து, வினோதமான ஒருவகை வண்ணத்தில் அமைந்த திரைச்சீலை போன்ற ஆடையை அணிந்து வித்தியாசமான தொப்பியையும் அணிந்து, மொத்தத்தில் பனிக்கட்டியைப் போல் தோற்றமளிக்கும் அந்த மனிதச் சிலைகளைப் பார்க்கும்போது மனதில் பயம்தான் தோன்றும். அவர்கள் ஒரு சிறிய மரப்பாத்திரத்தில் என்னவோ ஒரு பொடியைத் தூவி அதை விரலால் தடவியபடி வாயில் போட்டு தின்பதும், பால் கலக்காத தேநீரை ஒரு சிறு குடுவையில் ஊற்றி ரசித்து ரசித்து குடிப்பதுமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேராக இருக்கும் அறையில் பட்டு மெத்தை விரிக்கப்பட்ட கட்டிலின் மேல் மிகவும் குள்ளமாக இருக்கும் ஒரு திபெத்துக்காரர் சப்பணம் போட்டு அமர்ந்து ஒரு ஜெபமாலையைக் கையில் வைத்துக் கொண்டு தன்னுடைய விரல்களால் அவற்றைத் தடவியவாறு வாயில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் அவர்களின் தலைவரான லாமா. நான் அந்தப்பக்கமாய் எட்டிப் பார்த்தபோது அந்த மஞ்சள் நிறத்தில் இருந்த மனிதன் நட்புணர்வுடன் என்னைப் பார்த்து இலேசாகப் புன்னகை புரிந்தார்.

ஆனால், அவர்கள் சிரிப்பதைப் பார்க்கும்பொழுது அழுவது போலவே இருக்கும். அவர்கள் லாஸாவில் இருந்து வந்திருக்கிறார்கள். கௌஸாம்பிக்கு தற்போது போய்க் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு அறையிலிருந்து இசைத்தட்டு முழங்கிக் கொண்டிருந்தது. கங்காஸ்நானம் செய்வதற்காக வந்திருக்கும் அதிகாரியும், அவரின் குடும்பமும், பிள்ளைகளும் ஐந்தாறு அறையைச் சேர்ந்தாற்போல் எடுத்துக் கொண்டு விளையாட்டும் ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமுமாக இருக்கிறார்கள். கைகளில் இருபத்தைந்து வெள்ளி வளையல்களையும், காலில் தடிமனான வெள்ளிக் கொலுசுகளையும், கால் விரல்களில் வெள்ளி மோதிரங்களையும் கழுத்தில் வெள்ளி மாலைகளையும் அணிந்து கை, மார்பு, கழுத்து, நெற்றி என்று ஒரு இடம் பாக்கி இல்லாமல் பச்சை குத்தியிருக்கும் ஒரு பெண். மென்மையான ஒரு வெள்ளை நிறப் புடவையால் உடம்பையும் தலையையும் மறைத்து, ஒரு கையில் ஒரு கட்டு விறகையும் ஒரு வெள்ளிப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் கண்பார்வை தெரியாத ஒரு சிறுவனை இடுப்பில் சேர்த்து பிடித்தவாறு நடந்து போய்க் கொண்டிருந்தாள். பெரிய தலையும் சிறு உடம்பும் கொண்ட ஒரு இளைஞன் தனக்குத்தானே என்னவோ உரத்த குரலில் சொல்லியவாறு எனக்கு முன்னால் வந்து நின்றான். நான் யாராக இருந்தாலும் பரவாயில்லை- பஞ்சாபியாக மட்டும் இருக்கக்கூடாது என்றான் அவன். பஞ்சாபிகள் என்றாலே அவர்கள் நூறு சதவீதம் சுயநலம் உள்ளவர்களாகவும் துரோகம் செய்யக்கூடியவர்களாகவும் வஞ்சகர்களாகவும்தான் இருப்பார்கள் என்று பயங்கர சத்தத்துடன் அவன் பேசினான். கிருஷ்ணகுமார் பாலி- இதுதான் அந்த நண்பனின் பெயர். அவன் லாகூரில் இருக்கும் ஒரு துணி நிறுவனத்தில் ஏஜெண்டாக இருக்கிறான். பல ஆர்டர்களைப் பிடித்து கம்பெனிக்கு அனுப்பியும், இதுவரை அவனுக்கு அந்தக் கம்பெனி சம்பளமோ, கமிஷனோ எதுவும் அனுப்பவில்லை. இப்போது இந்த மனிதன் கையில் காசே இல்லாமல் பனாரஸ் வீதிகளில் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் பணம் வந்திருக்கிறதா என்று விசாரிப்பதற்காக அவன் தபால் நிலையத்தைத் தேடிப் போவான். திரும்பி வந்ததும் பஞ்சாபிகளை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு மறுநாள் காலை வரை காத்திருப்பான். பிறகு தபால் அலுவலகத்துப் போவான். இதுதான் அவனின் அன்றாட வேலை. மூன்று நாட்கள் ஆனதும், தர்மசாலையில் இருக்கும் மேத்தாஜிக்கு இரண்டணா கொடுத்துவிட்டு வேறொரு அறைக்குப் போய்விடுவான். இப்படி பீகாரைச் சேர்ந்த பாலி பதின்மூன்று நாட்களாக இதே சத்திரத்தில் தன்னுடைய நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

குளக்கரையில் மனிதர்கள் சடங்குகள் முடித்து விட்டெறிந்த மண் பாத்திரங்கள் ஆங்காங்கே உடைந்து கிடந்தன. அவற்றின் மீது ஒரு கமண்டலமும் ஒரு கழியும் கிடந்தன. நேற்று அங்கு கிடந்து இறந்துபோன பிச்சைக்காரன் தனக்கென்று வைத்திருந்த சொத்துக்கள் அவை மட்டுமே. 'புராணமயா கித்தாப்' - ஒரு புத்தக வியாபாரி இப்படிக் கூறியவாறு ஒவ்வொரு அறையாக எட்டி எட்டிப் பார்த்தவாறு போய்க் கொண்டிருந்தான். சுமைகளைக் கட்டி தலையில் வைத்தவாறு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் சுமந்து கொண்டும் மனிதர்கள் போய்க் கொண்டுமிருக்கிறார்கள். இசைத்தட்டிலிருந்து கிளம்பி வரும் இசை மீண்டும் ஒலிக்கிறது. வாசல் பகுதியில் இப்போது அடுப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் புகை மயமாகவே இருக்கிறது. பக்தர் ஒருவர் வாசலில் அமர்ந்து உரத்த குரலில் துளஸிதாச ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோவிலில் மணியோசை ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel