Lekha Books

A+ A A-

தர்மசாலையில் - Page 5

dharmasalaiyil

கையில இருந்த கொஞ்ச பணத்தை எடுத்துக்கிட்டு நானும் பிரபாவும் வட இந்தியாவுல இருக்கிற புண்ணிய இடங்களைப் பார்க்கிறதுக்காக கிளம்பினோம். அப்படித்தான் நாங்க பனாரஸுக்கு வந்தோம். இந்த தர்மசாலையிலதான் நாங்க ரெண்டு பேரும் தங்கினோம். இந்த முப்பத்திரெண்டாம் எண் அறையிலதான். மனசுல ஏகப்பட்ட கவலைகள் அலைக்கழிச்சுட்டு இருக்க நான் அந்த சாயங்கால வேளையில பிரபாவைப் பார்த்து சொன்னேன், "கண்ணு... என் கையில இருந்த கடைசி காசு கூட செலவாயிடுச்சு. இனி உன் நகைகள்ல ஏதாவது ஒண்ணை விற்கிறதைத் தவிர நமக்கு வேற வழியே இல்ல..."

"இப்பவே வேணுமா?"

அவளோட குரல்ல இலேசான ஒரு தடுமாற்றம் தெரிஞ்சது.

"வேண்டாம். நாளைக்குக் காலையில கொடுத்தா போதும்" - என்னோட மனசுல இருந்த வேதனையை ஒரு பக்கம் அடக்கிக்கிட்டு நான் சொன்னேன்.

அடுத்த சில நிமிடங்களுக்கு கிழவன் எதுவுமே பேசாமல் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தான். பிறகு கவலை தோய்ந்த குரலில் அவன் சொன்னான். 

"அன்னைக்கு ராத்திரி அவள் இறந்துட்டா..."

அதைக்கேட்டு நான் உண்மையிலேயே அதிர்ந்துபோய்விட்டேன். அவன் சொல்லிக் கொண்டிருந்த கதையில் திடீரென்று எதிர்பாராத ஒரு திருப்பம் உண்டானதுபோல் இருந்தது. அவனுடன் இருந்த பெண்தான் பிரபா என்று இவ்வளவு நேரமும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

"இறந்துட்டாளா? எப்படி?"

"எப்படி அவ இறந்தான்னு நான் சொல்றது? மறுநாள் காலையில பொழுது விடியிற நேரத்துல அவளை நான் எழுப்பினேன். அவள் எழுந்திரிக்கல. நான் அவளை உலுக்கினேன். அவளோட உடம்பு ரொம்பவும் குளிர்ந்து போய் இருந்துச்சு. கொஞ்சம்கூட அதுல அசைவு இல்ல. இருந்தாலும் என்னால நம்ப முடியல. நான் உரக்க வாய்விட்டு அழுதேன். பக்கத்து அறைகள்ல இருந்து ஆளுங்க அழுகைச் சத்தம் கேட்டு ஓடிவந்தாங்க. அவங்க அமைதியாக நின்னுக்கிட்டு இருந்ததை வச்சு நானே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். பிரபா இனிமேல் எந்தக் காலத்திலேயும் நான் கூப்பிடுறதைக் கேக்கப்போறதில்லேன்னு."

அந்தக் கிழவனின் சாம்பல் நிறக் கண்களிலிருந்து இரண்டு சொட்டு தண்ணீர் கீழே விழுந்தது. "இன்னைக்குத்தான் அவள் இறந்தநாள். ஒவ்வொரு வருடமும் நானும் வாசந்தியும் இந்த தர்மசாலைக்கு வருவோம். இந்த முப்பத்திரெண்டாம் எண் அறையிலதான் எப்பவும் நாங்க தங்குவோம். ராத்திரி முழுக்க நான் பழைய பாடல்களைப் பிரபா கேட்கணும்ங்கறதுக்காக பாடிக்கிட்டு இருப்பேன்..."

அந்தக் கிழவன் கெஞ்சலான ஒரு கோரிக்கையுடன் முகத்தை வைத்துக் கொண்டு எனக்கு நேராக தன் பார்வை தெரியாத கண்களை உயர்த்தினான்.

அவன் சொன்னது அப்படி ஒன்றும் ஆச்சர்யப்படக்கூடிய காதல் கதை இல்லைதான். இருந்தாலும் ஒவ்வொரு ஆண் மகனுக்கும் தன்னுடைய காதல் கதைதான் உலகத்திலேயே மிகவும் ஆச்சர்யப்படத்தக்க, ஆனந்தமயமான ஒன்று என்று தோன்றுவதுதான் உண்மையிலேயே வினோதமானது.

முப்பத்தியிரண்டாம் எண் அறையை அந்தக் கிழவனுக்காக நான் விட்டுக் கொடுக்கத் தீர்மானித்தேன். ஆனால், அதற்கு முன்னால் அந்த ஆளைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேட்டேன்.

"ஆமா... இந்த வாசந்தி யார்?"

இந்தக் கேள்வியைக் கேட்டதும் கிழவனின் முகம் மிகவும் பிரகாசமானது. "இவள் என்னோட மகள். கடவுளா பார்த்து எனக்காக அனுப்பி வைச்ச மகள். இந்த தர்மசாலையில தான் இவ எனக்குக் கிடைச்சா. பிரபா என்னை விட்டுப்போன இரண்டு நாட்கள் கழிச்சு உலகத்துல இருக்குற தனிமை எல்லாம் ஒண்ணு சேர்ந்து எனக்குள்ள நுழைஞ்சு என்னைப் பாடாய்ப்படுத்திக்கிட்டு இருந்த நிமிடத்துல மனதுக்கு நிம்மதி தர்ற ஒரு குரல் என் பக்கத்துல கேட்டது. "பாபுஜி, நான் உங்களோட ஆதரவில்லாத நிலையை நல்லா அறிவேன். நானும் ஒரு ஆதரவில்லாத அனாதைதான். நீங்க என்னை ஒரு மகளா ஏத்துக்குவீங்களா?"

நான் அதற்கு மேலே அவள்கிட்டே எந்தக் கேள்வியும் கேட்கல. தெய்வமா பார்த்து அனுப்பின அந்தப் பெண்ணை நான் மார்போடு சேர்த்து இறுக அணைச்சு கண்ணீர் விட்டேன். பிரபாவோட இழப்புக்கு கடவுள் எனக்கு ஈடுகட்டி விடுறார்னு நான் நினைச்சேன். இந்தச் சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் கடந்தோடியாச்சு. இன்னைக்கும் வாசந்தி எனக்கு ஒரு ஊன்றுகோலாகவும் துணையாகவும் இருந்து என்னை வழிநடத்திக்கிட்டு இருக்கா. இங்க பாருங்க... பிரபாவோட தங்க நகைகளை அதற்குப் பிறகு நான் தொட்டுக் கூட பார்க்கல. அவளோட எல்லா நகைகளையும் நான் வாசந்திக்கே கொடுத்துட்டேன். நாங்க நினைச்ச இடத்துல பாட்டு கச்சேரிகள் நடத்தி வயிறை வளர்த்துக்கிட்டு இருக்கோம். நீங்களே சொல்லுங்க தங்க நகைகள் அணிஞ்சிருக்கிற இந்தப் பெண்ணைப் பார்த்தால் பாட்டு பாடி வாழுற பிச்சைக்காரனோட மகள்னு யாராவது நினைப்பாங்களா?"

கிழவன் இதைச் சொல்லிவிட்டு புன்னகைத்தான்.

அப்போது என் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. வாசந்தியின் உடலில் நான் பார்த்த நகைகள் தங்கத்தால் ஆனவைதானா என்பதே என் சந்தேகம். நிறம் மங்கி கறுத்துப் போய் காணப்பட்ட அந்த கவரிங் நகைகளை சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் என்று இந்தக் கிழவன் கூறுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இருந்தாலும், நான் இந்த விஷயத்தைப் பற்றி பெரிதாக மேலும் சிந்தித்துக் கொண்டிராமல், கங்காராமை அழைத்தேன். என்னுடைய எல்லா பொருட்களையும் அடுத்த அறையில் கொண்டு போய் வைக்கும்படி சொன்னேன்.

கிழவன் அளவுக்கு அதிகமான நன்றியை என் மீது வெளிப்படுத்தினான். என் கால்களில் விழக்கூட அவன் தயாராகிவிட்டான்.

அன்று சாயங்காலம் நான் குளக்கரையில் வாசந்தியைப் பார்க்க நேரிட்டது. அவள் பார்த்திரங்களைக் கழுவுவதற்காக வந்திருந்தாள். நான் பார்த்த சமயத்தில் அவள் புடவையால் முகத்தை மூடிக் கொள்ளவோ, ஆண்களின் பார்வையிலிருந்து தான் முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்ற முயற்சியோ செய்யவில்லை. என்னைப் பார்த்ததும் நன்றிப் பெருக்குடன் அவள் ஒரு மென்மையான புன்சிரிப்பைத் தவழவிட்டாள். அப்போதும் நான் அவள் உடம்பில் இருந்த நகைகளைப் பார்த்தேன். அவை நிச்சயம் அசல் கவரிங் நகைகள் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

"வாசந்தி பாய், நீங்க போட்டிருக்கிற இந்த நகைகள் உண்மையிலேயே தங்கத்தால் ஆனவையா?"- நான் இலேசாகப் புன்னகைத்தவாறு கேட்டேன்.

அதைக்கேட்டு அவளின் முகம் மாதுளம் பூவைப் போல சிவந்துவிட்டது.

"அவர் அந்தக் கதையெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டாரா?"- நிராசையும் ஏதோவொரு மனக்குறையும் கலந்த குரலில் அவள் கேட்டாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel