Lekha Books

A+ A A-

தர்மசாலையில் - Page 4

dharmasalaiyil

நான் சொன்னதைக் கேட்டு கிழவனின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. "சாஹேப், உங்களுக்கு லஞ்சப் பணம் தந்து உங்களை இந்த அறையை விட்டு என்னால போக வைக்க முடியாது. நான் எனக்கு இந்த அறைதான் வேணும்னு பிடிவாதமா கேக்குறதுக்கான காரணம் என்னன்னு நீங்க கேக்குறீங்க. அதற்கு பதில் தெரிஞ்சுக்கணும்னா, நீங்க ஒரு காதல் கதையையே கேட்டு ஆகணும். நீங்க கேட்க தயாரா இருந்தா, அந்தக் கதையைச் சொல்றேன். அந்தக் கதையை முழுசா கேட்டா, நிச்சயம் நீங்க என்னோட விருப்பத்தை நிறைவேற்றுவீங்க..."

என் மனதில் இருந்த ஆர்வம் மேலும் அதிகாரித்தது. நான் அவன் சொல்லப்போகிற கதையைக் கேட்கத் தயாராக இருப்பதாகச் சொன்னேன்.

அவன் அடுத்த நிமிடம் தன் கையிலிருந்த சுமையைக் கீழே இறக்கி, அதன் மேல் உட்கார்ந்து தோளில் வைத்திருந்த பிடிலை எடுத்து அதற்கு அருகில் வைத்தான். பிறகு ஒரு பெரிய புராண இதிகாசத்தைப் பற்றி சொற்பொழிவு நடத்துவதற்குத் தயாராவதைப்போல சிறிது நேரம் தியானத்தில் இருப்பதைப் போல் இருந்தான். சில நிமிடங்கள் கழித்து மெதுவான குரலில் சொன்னான்.

"என் பேரு மோகன்பாக். சொந்த ஊர் பாட்னா. நல்ல வசதியான குடும்பத்துல நான் பிறந்தேன். நான் வளர்ந்து வந்தப்போ, வயதான என்னோட தாய் மட்டும்தான் என் கூட இருந்தாங்க. எனக்கு இருபத்தஞ்சு வயசு நடக்குறப்போ பயங்கரமான அம்மை நோய் என்னை வந்து தாக்கினதுல, என் கண்கள் இரண்டும் பாதிச்சிடுச்சு. பார்வை முழுசா என்னைவிட்டுப் போன பிறகு, என்னோட முழு நேரத்தையும் நான் சங்கீதத்தை கத்துக்குறதுக்காகவே செலவழிச்சேன். பிடில் வாசிக்குறதுல தனிப்பட்ட கவனம் செலுத்தினேன். என்னோட தொடர் முயற்சியின் பலனா, ஒரு புகழ்பெற்ற பிடில் வாசிக்கிற மனிதனா என்னால ஆக முடிஞ்சது.

என் வீட்டுக்குப் பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் வந்து தங்க ஆரம்பிச்சது. ராமகோபால் வர்மான்ற தையல்காரனும் அவனோட ஏழு பெண் பிள்ளைகளும்தான் அது.

"தயவு செய்து இங்கேயிருந்து நான் சங்கீதத்தைக் கேட்கலாமா?"- பிடிலைக் கையிலெடுத்து பாடத் தொடங்கினப்போ ஒரு நாள் காலையில இப்படியொரு கேள்வி எனக்குப் பக்கத்துல கேட்டது.

"தாராளமா..."- நான் எனக்குப் பக்கத்துல வந்து நின்ன இளம் பெண்ணை அன்போட வரவேற்றேன். "ஆமா... நீ யாரும்மா?"

"நான் பக்கத்து வீட்டுல இருக்குற தையல்காரன் ராமகோபாலனோட நாலாவது பொண்ணு. என் பேரு பிரபாவதி."

எல்லா காலை வேளைகளிலேயும் நான் பிடில் வாசிப்பதைக் கேட்கிறதுக்காக என்னைத் தேடி வந்திடுவா. அவள் ரொம்பவும் அழகான பொண்ணுன்னு என் தாய் ஒரு நாள் ஏதேச்சையா என்கிட்ட சொன்னாங்க. ஆனா, அவளோட இனிமையான குரல்தான் என்னை ரொம்பவும் பாதிச்சது. அவளோட உடலழகைப் பார்த்து சந்தோஷப்படுற வாய்ப்பு எனக்குக் கிடைக்காமற் போனாலும், அவளோட குரலை நான் ரொம்பவும் ஈடுபாட்டோட ரசிச்சேன். நான் பிடில் வாசிக்கிறதை அவள் கவனமா கேக்குறான்ற எண்ணம் என்னோட பாட்டுக்கு ஒரு உயிர்ப்பையும் பலத்தையும் தந்துச்சு. அவ எதுவுமே பேசாம அமைதியா இருந்தாலும், அதுல ஒரு சங்கீதம் இழையோடி இருப்பதை நான் மனப்பூர்வமா உணர்ந்தேன்.

கொஞ்ச நாள் கழிச்சு பிரபாவதி தேவி என்னோட சிஷ்யையா மாறிட்டா. அவளுக்கு நான் படிப்படியா சங்கீதப் பாடங்களைச் சொல்லித்தர ஆரம்பிச்சேன்.

தன்னுடைய சுமையை அவிழ்த்து அதிலிருந்த தாம்பூலத்தைத் தடவி கண்டுபிடித்து கிழவன் போட ஆரம்பித்தான். கூடை நிறைய முட்டைக்கோஸ்களையும் வேறு சில காய்கறிகளையும் சுமந்துகொண்டு ஒரு கிழவி அப்போது வராந்தாவில் வந்து நின்றாள். அவள் என்னுடைய அறையைப் பார்த்து நின்றாள். நான் அவளைப் பார்த்து போகும்படி சொன்னேன்.

வெற்றிலையைப் போட்டவாறு கிழவன் பேசத் தொடங்கினான்.

"என்னோட வயதான தாய் ஒரு நாள் இறந்துட்டாங்க. என்னோட மூத்த அக்காவை ராஜகிரியில கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தோம். அம்மா செத்துப்போன பிறகு எந்தவித ஆதரவும் இல்லாத ஒரு மனிதனா நான் ஆன பிறகு, என்னை ராஜகிரிக்கு வரும்படி என்னோட அக்கா பலதடவை கூப்பிட்டாங்க. ஆனா, நான் தான் போகல. பிரபாவைவிட்டு ஒரு அங்குலம்கூட அப்பால நகர்ந்து போறதுக்கு என் மனசு இடம் கொடுக்கல. கண் பார்வை தெரியாமல் இருள்ல இருந்த இந்த குருட்டு பாடகனோட மனசுக்குள்ளே ஒரு தீப ஒளியா இருந்தா அந்த பிராமண இளம் பெண். பிரபாவைத்தான் சொல்றேன். ஆமா... அவ ஒரு பிராமண குடும்பத்துல பிறந்த பெண்தான். நானோ வைசியன். என் வாழ்க்கையை முழுசா பிரபா பாதிச்சிருந்தா.

இருட்டுல மலர்ற முல்லைப் பூவைப் போல என்னோட இதயத்துல காதல்ன்ற ஒரு உணர்வு மலர ஆரம்பிச்சது. ஒரு நிலாவைப் போல அவள் என் வாழ்க்கையில கலந்துட்டா. எங்களையும் அறியாமலே நாங்க ரெண்டு பேரும் இரண்டறக் கலந்தோம். ஆனால், எங்களைச் சுற்றியிருந்த சூழ்நிலை எங்களோட காதலுக்கு ஆதரவா இல்ல.

பிரபா சொன்னபடி நாங்க ரெண்டு பேரும் அந்த ஊரை விட்டு ஓடிவிடுறதா தீர்மானிச்சோம். நான் பாட்னாவுல இருந்த எங்களோட சொத்துக்களையெல்லாம் விற்றேன். ஒரு நாள் சாயங்காலம் யார்கிட்டயும் ஒருவார்த்தை கூட சொல்லாம நானும் பிரபாவும் ஊரைவிட்டு கிளம்பிட்டோம். மீர்காபூருக்குப் பக்கத்துல இருக்குற பிந்தாசலம்ன்ற ஊர்ல கங்கை நதியோட வலது பக்கம் இருக்குற கரையில சின்ன ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நாங்க வாழ்க்கையைத் தொடங்கினோம். எங்களோட திருமணம் அங்கேதான் நடந்தது.

ஒரு குருடனோட திருமணம்! நல்ல கண் பார்வையோட இருக்குற உங்களுக்கு அதை மனசுல கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. சங்கீதத்துல ஓசையைப் போல பிரபா என்னோட ஒவ்வொரு துடிப்புலேயும் கலந்திருந்தா. சொத்தை விற்று என் கையில இருந்த பணத்துல கொஞ்சம் எடுத்து அவளுக்கு நான் நகைகள் செய்து போட்டேன். அவளோட கழுத்துல நிறைய தங்க மாலைகளும், கைகள்ல நாலஞ்சு வகைப்பட்ட தங்க வளையல்களும் செய்து போட்டேன். எல்லா நகைகளையும் போட்டு எனக்கு முன்னாடி அவளை நிற்க வைத்து, அந்த தங்கச் சிலையை என் மனக்கண்ணால நான் பார்த்தேன். கொஞ்ச நாட்கள் ஆன பிறகு நான் பணம் போட்டு வைச்சிருந்த வங்கி திவாலாயிடுச்சு. பிரபாவோட நகைகள் மட்டும்தான் கடைசியில மீதமா இருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel