Lekha Books

A+ A A-

தர்மசாலையில் - Page 3

dharmasalaiyil

பஜனைக்காரர்கள் 'ஹரே கிருஷ்ணா' என்று உரத்த குரலில் சத்தமிடுகிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைத் தாங்கிப் பிடித்தவாறு சிலர் குளக்கரையை நோக்கி அவளைக் கொண்டு போகிறார்கள். "மூணு நாட்கள்ல அறையை விட்டு போயிடணும்" என்று மேத்தாஜி யாத்திரை வந்திருக்கும் ஒரு மனிதரிடம் கண்டிப்பான குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இடுப்பில் வெள்ளியால் ஆன ஒரு கொடியும் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியும் அணிந்த, ஆடைகள் எதுவும் அணியாத ஒரு சிறுமி பூந்தோட்டத்திலிருந்த சில மலர்களைப் பறித்து தன்னுடைய வயிறோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு வாசலைத் தாண்டி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாள்.

பூட்டும் சாவியும் தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிக் கொண்டு கங்காராம் திரும்பி வந்தான்.

பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் பிறகும் வந்துகொண்டே இருக்கிறார்கள். நான் எல்லா காட்சிகளையும் பார்த்தவாறு மனதிற்குள் ரசித்தவாறு அங்கேயே அமர்ந்திருக்கிறேன்.

கண்பார்வை தெரியாத ஒரு குருடனும் வயதான மனிதனும் ஒரு இளம்பெண்ணும் அப்போது அங்கு வந்தனர். அறைகளுக்கு மேலே எழுதப்பட்டிருக்கும் எண்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்த அந்த இளம்பெண் நான் தங்கியிருக்கும் அறை வந்ததும், நிற்கிறாள். அவளின் தோள் மீது கை வைத்தபடி அந்தக் கிழவன் நின்றிருக்கிறான்.

முப்பத்தியிரண்டாம் எண்ணைக் கொண்ட அறை ஏற்கனவே இன்னொரு மனிதனுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது என்பது தெரிந்ததும், அவள் மெதுவான குரலில் கிழவனிடம் என்னவோ சொன்னாள். அவர்கள் இருவரும் அறைக்கு முன்னால் என்னவோ மனதில் சிந்தித்தவாறு நீண்டநேரம் நின்று கொண்டேயிருந்தார்கள்.

அவர்களையே நான் உற்றுப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பிச்சைக்காரர்களாகத் தெரியவில்லை. கிழவனின் முகம் சிவந்து போன பரங்கி மாம்பழம்போல இருந்தது. அதிகம் நீளமில்லாத நரைத்த தாடியும் மீசையும் அந்த முகத்திற்கு ஒருவித கம்பீரத்தையும் அழகையும் தந்து கொண்டிருந்தன. இலேசாக நரை விழுந்திருந்த சுருள் சுருளான தலைமுடியை பின்பக்கமாக அவன் போட்டிருக்க, அது கழுத்தைச் சுற்றிலும் பரவிக்கிடந்தது. அவன் காவி நிறத்தில் ஒரு ஆடையை அணிந்திருந்தான். கழுத்தில் ஒரு தடிமனான ருத்திராட்சமாலை தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு கையில் வெள்ளி பூண் போட்ட ஒரு தடி இருந்தது. தோளில் ஒரு பெரிய வீணை இருந்தது. சில நிமிடங்கள் அவர்கள் அதே இடத்தில் நகராமல் நின்றிருந்தார்கள்.

அந்தக் கிழவனின் மனம் பார்வை தெரியாத கண்கள் வழியாக அந்த அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். அந்தப் பெண் ஒருவித பரபரப்புடன் நான்கு பக்கமும் கண்களால் பார்த்தபடி கவலை பரவிய முகத்துடன் அமைதியாக நின்றிருந்தது என் மனதில் பலவித கேள்விகளை எழச் செய்தது. அவள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் அழகியில்லை. பெண்களுக்கே உரிய பல தகுதிகள் அவளிடம் குடிகொண்டிருப்பதாகக் கூறுவதற்கில்லை. அவளுடைய இளமைக்கு உரிய உயிர்ப்பும் சற்று குறைவாகவே அவளிடம் இருப்பதாக எனக்குப் பட்டது.

அந்த மடக்குக் கட்டிலின்மேல் அமர்ந்து அவர்களையே பார்த்தவாறு அமர்ந்திருந்த என்னுடைய முகத்தையே சிறிது நேரம் வைத்த கண் எடுக்காது பார்த்த அந்தப்பெண் கிழவனிடம் மெதுவான குரலில் என்னவோ சொன்னாள். அவளின் உதவியுடன் இரண்டு, மூன்று அடிகள் முன்னால் வந்த கிழவன் நான் அமர்ந்திருந்த கட்டிலுக்கு அருகில் வந்ததும் நின்றான். பிறகு தலையை உயர்த்தி கெஞ்சலான ஒரு பார்வையுடன் என்னை நோக்கியவாறு அவன் தயங்கிய குரலில் கேட்டான்: "சாஹேப், இந்த அறையில நீங்க இப்போ தங்கி இருக்கீங்களா?"

வேறொரு வேளையாக இருந்தால் சிறிதும் அர்த்தமே இல்லாத இந்தக்கேள்வியைக் கேட்டு நான் கோபத்தின் உச்சிக்கே சென்றிருப்பேன். ஆனால், அந்தக் கிழவனின் பணிவான தோற்றமும், அந்த இளம்பெண்ணின் அப்பாவித்தனமும் என்னிடம் கோபம் வராமல் தடுத்துவிட்டன.

"ஆமா... நான் இந்த அறையிலதான் தங்கியிருக்கேன். ஏன்? என்ன விஷயம்?"

என்னுடைய குரல் மென்மையாக இல்லை என்பதை நான் அறிவேன். அதில் அதிகாரத்தின் சாயலும், இலேசான வெறுப்பின் அடையாளமும் கலந்திருப்பதென்னவோ உண்மை.

"மன்னிக்கணும் சாஹேப். மன்னிக்கணும்"- அந்தக் கிழவன் ஒரு பழைய துணியைப் போல சுருங்கி என் முன்னால் நின்றான். "நான் வருடத்துக்கு ஒருமுறை இந்த ஊருக்கு வருவேன். ஒவ்வொரு முறை வர்றப்பவும் இந்த அறையிலதான் நான் தங்குவேன். இந்த வருடம் இந்த அறையில நீங்க தங்கியிருக்கீங்க. தயவுசெய்து இந்த அறையை எனக்காக நீங்க விட்டுத்தரமுடியுமா? அப்படி விட்டுத் தந்தீங்கன்னா, கடவுளோட அருள் உங்களுக்கு முழுமையா கிடைக்கும். அடுத்த அறை காலியா கிடக்குதுன்னு இவள் சொல்றா. சாஹேப், என்னை உங்களோட தகப்பனா நினைச்சு, நான் சொல்றதை நிறைவேற்றித் தருவீங்களா?"

கிழவனின் வார்த்தைகள் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல சந்தேகங்களை என் மனதில் உண்டாக்கின. சிறிது நேரம் அந்த மனிதனையே நான் உற்றுப் பார்த்தேன். அவன் வருத்தம் கலந்த உயிர்ப்பில்லாத ஒரு புன்சிரிப்பைத் தவழவிட்டவாறு வாயை இலேசாகத் திறந்து கொண்டு கவலைகள் இழையோடிக் கொண்டிருந்த துடிப்பில்லாத கண்களால் பேந்தப்பேந்த விழித்தபடி நின்றிருந்த கோலம் என் மனதிற்குள் புகுந்து என்னவோ செய்தது. அந்தப் பெண் அப்போதும் ஒருவித பதைபதைப்புடன் கையையும் காலையும் விறைப்பாக வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

"நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியல. இந்தத் தர்மசாலையில் எவ்வளவோ அறைகள் ஆள் இல்லாம காலியா இருக்கு. அதுல ஏதாவதொரு அறையில போய் தங்காம இந்த முப்பத்தி இரண்டாம் எண் அறைதான் வேணும்னு பிடிவாதம் பிடிக்கிறதுக்கு என்ன காரணம்?  இந்த அறையை நான் ஏற்கனவே எனக்குன்னு எடுத்துட்டேன். அதை உங்களுக்கு விட்டுத்தர்றதுன்னா, அதுல எனக்குப் பல பிரச்சினைகள் இருக்கு!"

நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ, அதைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன்.

அடுத்த சில நிமிடங்களுக்கு அந்தக் கிழவன் எதுவுமே பேசவில்லை. தேவையில்லாத தலைவலி நம்மை விட்டு நீங்கியது என்று நான் நினைத்தேன்.

"போனவருடம் இந்த அறையை எனக்குக் கிடைக்கச் செய்யிறதுக்காக, ஏற்கனவே இதுல தங்கியிருந்தவங்களுக்கு ஒரு ரூபா கொடுத்தேன்" கிழவன் என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய வலையை வீசினான்.

"ஆனா, லஞ்சம் தந்து என்னை இந்த அறையை விட்டு வேறொரு அறைக்கு மாறிப்போகச் செய்யலாம்னு உங்க மனசுல ஒரு நினைப்பு இருந்தா, அதை உடனடியா மாத்திக்கங்க. இந்த அறைதான் உங்களுக்கு வேணும்னு ஒரேயடியா பிடிவாதம் பிடிச்சு நிக்கறதுக்கான காரணத்தைத்தான் என்னால புரிஞ்சுக்கவே முடியல."

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel