Lekha Books

A+ A A-

ஒரு சிறை கைதியின் புகைப்படம்

oru sirai kaithiyin pugaipadam

டுவில் இயேசு கிறிஸ்துவின் பெரிய படம். அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சாதாரண புகைப்படங்கள். ஒன்று- வாழ்க்கையின் கஷ்டங்களை எல்லாம் அனுபவித்துத் தளர்ச்சியடைந்த ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய மனிதனின் படம். இன்னொன்று- அழகான சுருண்ட கேசத்துடனும், புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருக்கும் முகத்துடனும், பெரிய கண்களுடனும் இருக்கும் ஒரு இளைஞனின் படம்.

வீட்டுக்குள் நுழைந்ததும் இந்தப் படங்களைத்தான் முதலில் பார்த்தாள் மரியாம்மா. அந்தப் படத்தில் இருந்த இளைஞனின்மீது ஒருவித ஆர்வம் உண்டானது அவளுக்கு. அப்படித்தான் சொல்ல வேண்டுமே தவிர, அப்போது ஆழமான காதல் உண்டானது என்று சொல்ல முடியாது. அந்தப் புகைப்படத்தில் இருந்தவன் எத்தனையோ மைல்களுக்கு அப்பால் சிறையில் கடுங்காவல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜோசப் என்பது அவளுக்குத் தெரியாது.

அந்தப் படங்களையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு கவலை தோய்ந்த முகத்துடன் அந்த அறையில் அமர்ந்திருந்தாள் ஜோசப்பின் தாய். அந்த வயதான கிழவியின் கணவன் எப்போதோ மரணத்தைத் தழுவி விட்டான். இப்போது மகனோ சிறையில் இருக்கிறான். யாருமே இல்லாமல் தன்னந்தனியாய் அவளின் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

தாய் மகனின் வரவுக்காகக் காத்திருக்கிறாள்.

தந்தை இறந்துபோன செய்தியை சிறையில் இருக்கும் தன் மகனுக்கு அவள் தெரிவிக்கவே இல்லை.

மகனை ஏன் தேவையில்லாமல் கவலைக்குள்ளாக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம்.

அந்த மகனை, யாரென்றே தெரியாமல்- எப்படி இருப்பான் என்று கூடத் தெரியாமல் மரியாம்மா காதலித்தாள். அவன் இருக்கும் சிறைக்கு எத்தனையோ கடிதங்களை எழுதினாள் அவள்.

அதன் ஆரம்பம் இப்படித்தான்:

கன்னியாஸ்திரீகள் தங்கி இருக்கும்- உயர்ந்த கல் சுவருக்குள் அடங்கியிருக்கும் மடம். அங்கு தங்கியிருப்பவள் தான் மரியாம்மா. உணர்ச்சிகளை மனதிற்குள்ளேயே போட்டு அடக்கிக் கொண்டு, தனக்குள் ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டுக் கொண்டு, உயிரற்ற பொருள்போல் தன்னை பாவித்துக் கொண்டு, மற்றவர்களைப்போல் அமைதியாக அங்கு தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பவள்தான் மரியாம்மா. துறுதுறுவென்ற மனதையும், வனப்பான மார்பையும் கொண்ட மாணவி அவள். இப்போது அவளுக்கு இருபத்தியிரண்டு வயது நடக்கிறது. கருப்பு நிறம். பெரிய அழகி அவள் என்று கூறுவதற்கில்லை. அதற்காக காதலோ மற்ற அந்த மாதிரியான ஏக்கங்களோ ஒரு பெண்ணுக்கு இல்லாமற் போய்விடுமா என்ன? அவளின் தோழிகளில் பலருக்கும் காதலர்கள் இருக்கவே செய்கிறார்கள். மடத்தில் இருக்கும் சட்டதிட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் சர்வ சாதாரணமாக மீறித்தான் அவர்களின் கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை மரியாம்மா காதல் கடிதம் எதுவும் எழுதியது இல்லை. அப்படியொரு கடிதத்தைப் படித்ததும் இல்லை. ஆனால், எழுதத் தெரியும். அவளின் இதயம் முழுக்க காதல் உணர்வுகள் இருக்கின்றன. ஆனால், யாருக்கு எழுதுவது? இதுவரை அவளை யாரும் காதலித்தது இல்லையே! அவள் யாரையாவது காதலிக்க நினைப்பதென்னவோ உண்மை. கட்டாயம் காதலிக்க வேண்டும் என்பது அவளின் ஆசை. சில நாட்களில் விடுமுறைக் காலம் வருகிறது. அவள் தனக்கே தெரியாமல் காதலியாகிறாள்.

இது எப்படி நடந்தது?

விடுமுறையில் அவள் செல்வது புதிய வீட்டிற்கு என்பதை அவள் எற்கெனவே அறிந்திருந்தாள்.

அவளின் தந்தைக்கு வேறொரு வங்கியில் வேலை மாற்றம் ஆகியிருந்தது. அதனால், அவளின் பெற்றோர்கள் புதிய இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தார்கள். அவர்கள் அங்கு போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன.

அந்த வீட்டுக்குத்தான் விடுமுறையில் மரியாம்மா சென்றாள். வீட்டில் அப்படியொன்றும் அவளுக்கு வேலை இல்லை. சாப்பிட்டுவிட்டு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் எதையாவது கனவு கண்டவாறு, வீட்டின் முன் இருந்த வெற்றிடத்தில் நடந்து கொண்டிருப்பாள். அவளின் வீட்டைச் சுற்றி சிறிய சுவர் கட்டப்பட்டிருந்தது. அதைத் தாண்டிப் பார்த்தால், ஒரு வீடு தெரிந்தது. அந்த வீட்டைச் சுற்றி நிறைய மரங்கள். அங்கே ஒன்றிரண்டு பெண்கள் நடமாடுவது மட்டும் அவ்வப்போது தெரியும். வேறு அந்த வீட்டைப் பற்றி மரியாம்மாவுக்கு எதுவும் தெரியாது. மரியாம்மாவின் தாய்கூட இன்னும் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குப் போன மூன்றாம் நாள் மரியாம்மா அந்தச் சுவரின் மேல் ஏறி உட்கார்ந்திருந்தாள். பின் என்ன நினைத்தாளோ, அந்தப் பக்கமாய் மெல்ல இறங்கினாள்.

"யார் அது?'' ஒரு பெண் அடுக்களையில் இருந்தவாறு கேட்டாள்.

எதுவுமே நடக்காதது மாதிரி சாதாரணமாக மரியாம்மா சொன்னாள்:

"ஓ... ஒண்ணுமில்ல... நான்தான்... உங்ககூட கொஞ்ச நேரம் பேசலாம்னு வந்தேன்!''

அவள் மெதுவாக நடந்து வீட்டின் முற்றத்திற்கு வந்தாள். உள்ளே இருந்து வாசலுக்கு வந்தாள் ஜோசப்பின் தாய். அவள் யார் என்று மரியாம்மாவிற்கு அந்த நிமிடத்தில் தெரியாதே! ஒரு கிழவி. தலை முழுக்க முழுக்க நரைத்து விட்டிருந்தது. சோகம் கப்பிக் கொண்டிருந்த விழிகள். பேச்சே கிடையாது. ஒரே அமைதி. அந்த வயதான கிழவி மரியாம்மாவையே உற்றுப் பார்த்தாள். மரியாம்மா லேசாகப் புன்னகைத்தாள். அந்தக் கிழவியின் உதட்டிலும் பலவீனமான புன்னகை ஒரு நிமிடம் அரும்பியது.

"வா மகளே... இங்க வந்து உட்காரு!''

மரியாம்மா அந்த அறைக்குள் போய் உட்கார்ந்தாள். அப்போதுதான் அவள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தது.

புகைப்படத்தில், சுருட்டை முடியுடன், புன்னகை செய்தவாறு, பெரிய கண்களுடன் இருந்த அந்த அழகான இளைஞன்.

அவனையே பார்த்தாள் மரியாம்மா.

"இவன் என்னோட மகன்.'' அந்தக் கிழவி சொன்னாள்.

தொடர்ந்து தன் மகனைப் பற்றி எத்தனையோ விஷயங்களைச் சொன்னாள் அந்தத் தாய். பேச்சுக்கு இடையில் மரியாம்மா தன்னை கிழவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள். தற்போது இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருப்பதையும், மடத்தில் தங்கி இருப்பதையும் அவள் கிழவியிடம் சொன்னாள். அப்போது கிழவி சொன்னாள், "இன்டர்மீடியட் படிக்கிறப்போதான் என் மகன் ஜோசப் முதல் தடவையா தண்டனை வாங்கி ஜெயிலுக்குப் போனான்'' என்ற தகவலை. அப்போது

ஜோசப்பிற்கு வயது பதினெட்டு. அப்போது எடுக்கப்பட்ட படம்தான் சுவரில் மாட்டப் பட்டிருப்பது.

"இப்போ அவனுக்கு இருபத்தாறு வயசு நடக்குது. இதற்கிடையில் நாலு தடவை தண்டனை கிடைச்சு ஜெயிலுக்குப் போயிருக்கான். நாலாவது தடவை ஜெயிலுக்குப் போன பிறகுதான் அவனோட அப்பா செத்துப்போனது. ஆனா, அவனுக்கு நான் தகவலே தெரிவிக்கல...''

"ஏன்?...''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel