Lekha Books

A+ A A-

கரடி வேட்டை - Page 5

karadi vettai

அதேநேரத்தில்அந்தக் கரடி தலைமுடிக்குக் கீழே இருக்கும் என் தலையின் முன்பகுதியை தன்னுடைய கீழ் தாடையின் பற்களைக் கொண்டு இழுத்துப் பிடித்தது. தொடர்ந்து கண்களுக்குக் கீழே இருக்கும் சதைப்பகுதியை மேற்தாடையைக் கொண்டு கவ்வியது. இப்போது தன் பற்களை மூடியது. என் முகம் கத்திகளால் வெட்டுப்படப் போவதைப்போல் நான் உணர்ந்தேன். நான் என் முகத்தை எப்படியும் வெளியே எடுப்பதற்காகப் போராடினேன். ஆனால் கரடியோ நாய் கொட்டாவி விடுவதைப் போல தன்னுடைய தாடைகளை மூட முயற்சித்துக் கொண்டிருந்தது. நான் என்னுடைய முகத்தைச் சற்று திருப்ப நினைத்தேன். அதே நேரத்தில் கரடி என்னுடைய முகத்தை மீண்டும் தன் வாய்க்குள் கொண்டு போக முயன்றது.

'இப்போ...'-நான் நினைத்தேன்: 'என் முடிவு வந்த மாதிரிதான்...'

திடீரென்று என் மீது இருந்த கனம் இல்லாமற்போனது. நான் மேலே பார்த்தேன். அந்தக் கரடியை இப்போது காணோம். அது அங்கிருந்து வேகமாக ஓடிப் போயிருந்தது.

கரடி என்னைக் கீழே தள்ளிக் கஷ்டப்படுத்துவதைப் பார்த்த என் நண்பரும் டெம்யானும் என்னைக் காப்பாற்ற ஓடி வந்திருக்கிறார்கள். என் நண்பர் ஓடிவந்த அவசரத்தில் இருக்கக்கூடிய பாதையில் ஓடிவராமல் குழம்பிப் போய் ஆழமான பனியில் ஓடி கீழே விழுந்து விட்டார். கரடி என்னை வாயால் கவ்வ முயற்சித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் துப்பாக்கி எதுவும் இல்லாமல் கையில் ஒரே ஒரு குச்சியை மட்டும் வைத்தவாறு டெம்யான் பாதை வழியே ஓடிவந்து கொண்டே உரத்த குரலில் கத்தினான்:

"கரடி மாஸ்டரைத் தின்னுது! கரடி மாஸ்டரைத் தின்னுது!”

ஓடி வந்துகொண்டே அவன் கரடியைப் பார்த்து சத்தம் போட்டான்:

"ஏ, முட்டாளே! என்ன செய்ற நீ? அவரை விடு! அவரை விடு!"

கரடி டெம்யானின் சத்தத்தைக் கேட்டு என்னை விட்டு அப்பால் ஓடியது.

நான் இருந்த இடத்தைவிட்டு எழுந்தபோது, ஒரு ஆடு கொல்லப்பட்டால் எப்படி இரத்தம் கிடக்குமோ, அந்த அளவிற்கு இரத்தம் பனிமீது கிடந்தது. என் கண்களுக்கு மேலே சதை தனித் தனியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. இருந்தாலும் அப்போது ஏற்பட்ட சுவாரசியத்தில் எனக்கு உண்டான வேதனையையே நான் உணரவில்லை.

என்னுடைய நண்பர் அதற்குள் அங்கு வந்தார். மற்ற ஆட்களும் வந்து என்னைச் சுற்றி நின்றிருந்தார்கள். அவர்கள் என் மீது இருந்த காயத்தைப் பார்த்து, அதன் மேல் பனிக்கட்டியை வைத்தார்கள். எனக்கு உண்டான காயத்தை மறந்துவிட்டு நான் கேட்டேன்:

"கரடி எங்கே? அது எந்த வழியே போனது?"

அப்போது என் காதில் ஒரு சத்தம் விழுந்தது:

"இங்கேதான் இருக்கு! இங்கேதான் இருக்கு!"

அடுத்த நிமிடம் கரடி எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் துப்பாக்கிகளை எடுத்தோம். ஆனால், நாங்கள் சுடுவதற்கு முன்பே கரடி படுவேகமாக எங்களைக் கடந்து ஓடியது. அது பயங்கர கோபத்தில் இருந்தது. என்னை மீண்டும் கவ்வி சாகடிக்க வேண்டும் என்பதுதான் அதன் ஆசையாக இருந்திருக்கும். ஆனால், ஏராளமான பேர் நின்றிருந்ததால், பயந்துபோய் அது ஓடிவிட்டது. அது போகும்போது பார்த்ததில் எங்களுக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. அதன் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அதை நாங்கள் பின்பற்றிச் செல்ல நினைத்தோம். ஆனால், என்னுடைய காயங்கள் மிகவும் வேதனை தந்ததால், நாங்கள் நகரத்திற்குச் சென்று ஒரு டாக்டரைப் பார்க்க முடிவெடுத்தோம்.

டாக்டர் என் காயங்களுக்குத் தையல் போட்டார். அது சீக்கிரம் ஆறவும் செய்தது.

ஒரு மாதம் கழித்து நாங்கள் அந்தக் கரடியை மீண்டும் வேட்டையாடுவதற்காகப் புறப்பட்டோம். ஆனால், அதைக் கொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அந்த சுற்றுப்புறத்தை விட்டு அந்தக் கரடியால் வெளியே வரமுடியவில்லை. அந்தப் பகுதிக்குள்ளேயே அது சுற்றிச்சுற்றி வந்து உரத்த குரலில் கத்திக் கொண்டே இருந்தது.

டெம்யான்தான் அதைக் கொன்றான். கரடியின் கீழ்தாடை பிய்ந்து போயிருந்தது. அதன் ஒரு பல் என் குண்டடி பட்டு கீழே விழுந்திருந்தது.

அது உண்மையிலேயே பெரிய உருவத்தைக் கொண்ட ஒரு கரடிதான். அதன் உடலில் ஏராளமான கருபபு நிற உரோமங்கள் இருந்தன.

நான் அந்தக் கரடியை பாடம் செய்து வைத்தேன். அது இப்போது என்னுடைய அறையில்தான் இருக்கிறது. என் நெற்றியில் இருந்த காயங்கள் ஆறி விட்டன. எனினும் தழும்புகள் இலேசாக அங்கு தெரியத்தான் செய்கின்றன.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel