Lekha Books

A+ A A-

கரடி வேட்டை - Page 3

karadi vettai

மீண்டும் சாலைக்கு வந்து நாங்கள் நடையைத் தொடர்ந்தோம். பனிக்காலணிகளை அணிந்துகொண்டுதான். இப்போது நடப்பது சற்று எளிதாகவே இருந்தது. எங்களின் பனிக்காலணிகள் அந்தக் கடுமையான சாலையில் எங்களை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக இழுத்தன. காலணிகளுக்குக் கீழே பனிக்கட்டிகள் நொறுங்கின. எங்களின் முகங்களில் பனிப்படலம் படர்ந்திருந்தது. மரங்களின் கிளைகள் வழியாக நட்சத்திரங்கள் வேகமாக எங்களைச் சந்திக்கப் பாய்ந்தோடி வருவதைப் போல் இருந்தது. சில நேரங்களில் கண்களைச் சிமிட்டிக் கொண்டு, சில நேரங்களில் மறைந்து கொண்டு என்று அவை இருந்தன. மொத்தத்தில்- முழு ஆகாயமும் உயிரோட்டத்துடன் இருந்ததை எங்களால் உணர முடிந்தது.

என்னுடைய நண்பர் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை எழுப்பி, கரடியைத் தேடி நாங்கள் எப்படியெல்லாம் சுற்றினோம் என்பதை விவரித்தேன். அங்கிருந்த விவசாயியிடம் காலையில் தப்பட்டை அடிக்கும் ஆட்களைத் தயார் பண்ணும்படி சொல்லிவிட்டு, சாப்பிட்டு முடித்து நாங்கள் தூங்க ஆரம்பித்தோம்.

நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன். என்னுடைய நண்பர் வந்து எழுப்பியிருக்காவிட்டால், உச்சிப் பொழுதுவரை தூங்கிக் கொண்டே இருந்திருப்பேன். நான் படுக்கையைவிட்டு வேகமாக எழுந்தபோது, என் நண்பர் ஆடைகளை அணிந்து தயாராக இருந்தார். அவர் தன் துப்பாக்கியில் என்னவோ செய்து கொண்டிருந்தார்.

“டெம்யான் எங்கே?” - நான் கேட்டேன்.

“அவன் எப்பவோ காட்டை நோக்கிப் போயிட்டான். நீங்க போன பாதையில போயிட்டுவந்த அவன் இங்கே திரும்பி வந்துட்டான். இப்போ தப்பட்டை அடிக்கிற ஆட்களைப் பார்க்குறதுக்காக போயிருக்கான்.”

நான் குளித்து முடித்து ஆடைகளை அணிந்தேன். என் துப்பாக்கிகளில் குண்டுகளை நிரப்பினேன். பிறகு சக்கரமில்லாத வண்டியில் ஏறிப் புறப்பட்டோம்.

பனி இன்னும் விழுந்து கொண்டுதானிருந்தது. சுற்றிலும் நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. சூரியனே கண்ணில் படவில்லை. எங்களுக்கு மேலே பனி அடர்த்தியாகப் படர்ந்திருந்தது. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பனிக்குவியல்தான்.

சாலையில் இரண்டு மைல்கள் பயணம் செய்த பிறகு நாங்கள் காட்டிற்கு மிகவும் நெருக்கமாக வந்தோம். அந்த இடத்தில் பள்ளத்திலிருந்து புகை மூட்டம் மேல்நோக்கி வந்து கொண்டிருந்தது. சற்று அருகில் சென்றபோது ஆண்கள், பெண்கள் அடங்கிய விவசாயிகள் கூட்டமாக அங்கு இருந்தார்கள். அவர்கள் கையில் குறுந்தடிகள் இருந்தன.

நாங்கள் கீழே இறங்கி அவர்களை நோக்கிச் சென்றோம். அங்கு அமர்ந்திருந்த ஆண்கள் உருளைக்கிழங்குகளை நெருப்பில் சுட்டவாறு அங்கிருந்த பெண்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

டெம்யானும் அங்கு இருந்தான். நாங்கள் அங்கு சென்றவுடன் அங்கிருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். டெம்யான் முந்தையநாள் நாங்கள் சுற்றிய இடத்தில் கொண்டுபோய் அவர்களை நிறுத்தினான். ஒருவர் பின் ஒருவராக அவர்கள் வரிசையில் நடந்தார்கள். ஆண்கள், பெண்கள் என்று அவர்கள் மொத்தத்தில் முப்பது பேர் இருந்தார்கள். பனி மிகவும் கடுமையாக இருந்தது. அவர்களின் இடுப்புப் பகுதிக்கு மேலேதான் எங்களால் பார்க்க முடிந்தது. அவர்கள் காட்டை நோக்கித் திரும்பினார்கள். என்னுடைய நண்பரும் நானும் அவர்களைப் பின்பற்றி நடந்தோம்.

என்னதான் அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு பாதை இருந்தாலும், நடந்துசெல்வது என்பது மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. இன்னொரு வகையில் பார்க்கப்போனால் யாரும் கீழே விழமாட்டார்கள். இரண்டு பனியால் ஆன சுவர்களுக்கு மத்தியில் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்ததே காரணம்.

இதே முறையில் நாங்கள் கிட்டத்தட்ட அரைமைல் தூரம் நடந்திருப்போம். அப்போது டெம்யான் வேறொரு திசையிலிருந்து எங்களை நோக்கி வேகமாகத் தன்னுடைய பனிக்காலணிகளுடன் ஓடிவந்து, தன்னுடன் வந்து எங்களைச் சேர்ந்துகொள்ளும்படி சொன்னான். நாங்கள் அவனை நோக்கிச் சென்றோம். நாங்கள் எங்கே நிற்க வேண்டுமென்று அவன் சொன்னான். நான் என்னுடைய இடத்தில் நின்றவாறு என்னைச் சுற்றிலும் நோட்டம் விட்டேன்.

என்னுடைய இடது பக்கம் அத்தி மரங்கள் இருந்தன. மரக்கிளைகளுக்கு நடுவில் ஒரு அருமையான பாதை தெரிந்தது. கருப்புப் புள்ளியைப் போல மரங்களுக்குப் பின்னால் அந்தப் பாதை தெளிவாக எனக்குத் தெரிந்தது. நான் ஒரு தப்பட்டை அடிக்கும் மனிதனைப் பார்த்தேன். எனக்கு முன்னால் அத்திச் செடிகள் புதரைப் போல வளர்ந்திருந்தன. அவை ஒரு மனிதனின் உயரத்திற்கு இருந்தன. அவற்றின் கிளைகள் வளைந்து கீழ்நோக்கித் தொங்கி பனியைத் தொட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் இடைவெளியில் தான் அந்தப் பாதை தெரிந்தது. பாதை முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது. என்னுடைய வலது பக்கம் புதர்கள் காடென வளர்ந்திருந்தன. அந்தப் புதர்களின் முடிவில் இருந்த ஒரு வெற்றிடத்தில் என்னுடைய நண்பரை நிறுத்திக் கொண்டிருந்தான் டெம்யான்.

நான் என்னுடைய இரண்டு துப்பாக்கிகளையும் சோதித்துப் பார்த்து, எங்கு நின்றால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எனக்குப் பின்னால் மூன்று அடிகள் தூரத்தில் ஒரு உயரமான அத்தி மரம் இருந்தது.

‘அந்த இடத்தில் நின்றால்தான் சரியாக இருக்கும்’ -எனக்குள் நான் சொல்லிக்கெண்டேன்: ‘என்னோட இன்னொரு துப்பாக்கியை மரத்து மேல சாய்ச்சு வைக்க சரியா இருக்கும்.’ பிறகு நான் அந்த மரத்தை நோக்கி நடந்தேன். என் முழங்கால்வரை பனி இருந்தது. ஒவ்வொரு அடியையும் பனிக்குள் விட்டுத்தான் எடுக்க வேண்டி இருந்தது. நான் பனியைச் சற்று ஒதுக்கிவிட்டு, ஒரு கஜம் அளவிற்கு நிற்பதற்கேற்றபடி சதுரமாக ஒரு இடத்தை உண்டாக்கினேன். ஒரு துப்பாக்கியை என் கையில் வைத்துக் கொண்டேன். இன்னொரு துப்பாக்கியைச் சுடுவதற்குத் தயார் நிலையில் அதை மரத்தின்மீது சாய்த்து வைத்தேன். பிறகு உறையிலிருந்த கத்தியை எந்த நேரத்திலும் மிகவும் எளிதாக எடுக்கும் வண்ணம் சரி செய்து வைத்தேன்.

நான் இந்த முன்னேற்பாடுகளையெல்லாம் முறைப்படி செய்து முடிக்கவும் காட்டுக்குள்ளிருந்து டெம்யான் கத்தவும் சரியாக இருந்தது.

“கரடி வருது! கரடி வருது!”

டெம்யான் கத்தியவுடன் சுற்றிலும் இருந்த விவசாயிகள் மாறுபட்ட தங்கள் குரலில் பதில் சொன்னார்கள்.

“ஓ! ஓ! ஓ!” -ஆண்கள் கத்தினார்கள்.

“அய்! அய்! அய்!” - பெண்கள் உரத்த குரலில் ஓசை எழுப்பினார்கள்.

கரடி அந்த சுற்றுப் பகுதியில்தான் இருந்திருக்கிறது. டெம்யான் அதை விரட்டியவுடன், சுற்றிலுமிருந்த மக்கள் உரத்த குரலில் கத்தினார்கள். என்னுடைய நண்பரும் நானும் மட்டும்தான் அமைதியாக எந்தவித அசைவுமில்லாமல் நின்றிருந்தோம். கரடி எங்கள் பக்கம் வரட்டுமே என்பதற்காக நாங்கள் காத்திருந்தோம். நான் மிகவும் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது என்னுடைய இதயம் படுவேகமாக அடித்துக் கொண்டது. நான் மெதுவாக நடுங்கியபடி துப்பாக்கியை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel