Lekha Books

A+ A A-

நெய் பாயசம்

nei payasam

மிகவும் சுருக்காகப் பிணத்தை அடக்கம் செய்துவிட்டு, அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு வேண்டிய அளவிற்கு நன்றியை வெளிப்படுத்தி, இரவில் வீட்டிற்குத் திரும்பி வரும் அந்த மனிதரை நாம் "அப்பா' என்று அழைக்கலாம். காரணம்- அந்த நகரத்தில் அவருடைய மதிப்பை அறிந்திருப்பவர்கள் மூன்று பிள்ளைகள் மட்டுமே. அவர்கள் அவரை "அப்பா' என்றுதான் அழைக்கிறார்கள்.

பேருந்தில் அறிமுகமில்லாதவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு அவர் அந்த நாளின் ஒவ்வொரு நிமிடங்களையும் தனித் தனியாகப் பிரித்து ஆராய்ந்து பார்த்தார்.

காலையில் அவளுடைய குரலைக் கேட்டுத்தான் அவர் எழவே செய்தார்.

"மூடிக் கொண்டு படுத்திருந்தால் சரியாக இருக்குமா, உண்ணி? இன்னைக்கு திங்கட்கிழமையாச்சே!' -அவள் மூத்த மகனை எழுப்பிக் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு கசங்கிய வெள்ளைப் புடவையை அணிந்து கொண்டு, அவள் சமையலறையில் வேலையை ஆரம்பித்தாள். அவருக்கு ஒரு பெரிய கோப்பையில் காப்பி கொண்டு வந்து தந்தாள். பிறகு... பிறகு... என்னவெல்லாம் நடந்தன? மறக்க முடியாத ஏதாவது வார்த்தைகளை அவள் கூறினாளா? எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும், அவள் அதற்குப் பிறகு கூறியது எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. "மூடிக் கொண்டு படுத்திருந்தால் சரியாக இருக்குமா, உண்ணி? இன்னைக்கு திங்கட்கிழமையாச்சே!' -இந்த வாக்கியம் மட்டும் மறையாமல் நினைவில் இருக்கிறது. அதை ஒரு கடவுளின் பெயரைப் போல அவர் முணுமுணுத்தார். அதை மறந்து விட்டால் தன்னுடைய இழப்பு திடீரென்று தாங்க முடியாத ஒன்றாக ஆகிவிடும் என்று அவருக்குத் தோன்றியது.

அலுவலகத்திற்குச் செல்லும்போது அவருடன் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது சாப்பிடுவதற்கான பலகாரங்களை சிறிய அலுமினிய பாத்திரங்களில் வைத்து அவள் எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். அவளுடைய வலக் கையில் சிறிது மஞ்சள் தூள் ஒட்டிக் கொண்டிருந்தது.

அலுவலகத்தில் இருந்தபோது அவளைப் பற்றி ஒருமுறைகூட அவர் நினைத்துப் பார்த்ததில்லை. ஒன்றிரண்டு வருடங்கள் நீடித்திருந்த ஒரு காதல் உறவின் விளைவாக அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்துடன் அது நடக்கவில்லை. எனினும், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று எந்தச் சமயத்திலும் தோன்றியதில்லை. பணத்தட்டுப்பாடு, குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்ட காலங்கள்... இப்படி சில பிரச்சினைகள் அவர்களைச் சோர்வடையச் செய்து கொண்டிருந்தன. அவளுக்கு வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய சூழ்நிலை கிட்டதட்ட இல்லாமல் போனது.

எனினும் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் பாசம் வைத்திருந்தார்கள். அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் அவர்கள்மீது பாசம் வைத்திருந்தார்கள். எல்லாரும் ஆண் பிள்ளைகளாக இருந்தார்கள். உண்ணி- பத்து வயது, பாலன்- ஏழு வயது, ராஜன்- ஐந்து வயது. முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிய நின்று கொண்டிருக்கும் மூன்று பிள்ளைகள். கூறும்படியான அழகோ திறமையோ எதுவும் இல்லாதவர்கள். ஆனால், தாயும் தந்தையும் ஒருவரோடொருவர் கூறிக் கொண்டார்கள்:

“உண்ணிக்கு என்ஜினியரிங்கில்தான் விருப்பம். அவன் எப்போது பார்த்தாலும் ஒவ்வொன்றையும் தயாரித்துக் கொண்டிருப்பான்.''

“பாலனை டாக்டராக ஆக்க வேண்டும். அவனுடைய நெற்றியைப் பார்த்தாயா? அவ்வளவு பெரிய நெற்றி அறிவின் அடையாளம்.''

“ராஜனுக்கு இருட்டில் நடப்பதில் பயமே இல்லை. அவன் திறமைசாலி. ராணுவத்தில் சேர வேண்டியவன்.''

அவர்கள் நகரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கக்கூடிய ஒரு சிறிய தெருவில் வாழ்ந்தார்கள். முதல் மாடியில் மூன்று அறைகளைக் கொண்ட ஒரு ஃப்ளாட். ஒரு அறைக்கு முன்னால் மிகவும் சிரமப்பட்டு இரண்டு பேர் நிற்கக்கூடிய இடத்தைக் கொண்டு ஒரு சிறிய வராந்தா இருந்தது. அதில் அம்மா தண்ணீர் ஊற்றி வளர்த்த ஒரு பனிநீர்ச் செடி ஒரு பூச்சட்டியில் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், இதுவரை பூ மலர்ந்ததில்லை.

சமையலறையின் சுவரின்மீது மாட்டப்பட்டிருக்கும் கொக்கியில் பித்தளைப் பாத்திரங்களும் கரண்டிகளும் தொங்கிக் கொண்டிருந்தன. ஸ்டவ்விற்கு அருகில் அம்மா அமர்ந்திருக்கக்கூடிய ஒரு தேய்ந்துபோன பலகை இருக்கிறது. அவள் அதில் உட்கார்ந்து சப்பாத்தி தயாரிக்கும் போதுதான் பொதுவாக அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பி வருவார்.

பேருந்து நின்றதும் அவர் இறங்கினார். முழங்காலில் மெல்லிய ஒரு வேதனை தோன்றியது. வாதமாக இருக்குமோ? தான் படுக்கையில் படுத்தால் பிள்ளைகளுக்கு இனி யார் இருக்கிறார்கள்? திடீரென்று அவருடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தன. அவர் ஒரு அழுக்கடைந்து போயிருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு, வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel