Lekha Books

A+ A A-

விடுமுறை

vidumurai

விடுமுறை

அஜீத் கவுர்

தமிழில் : சுரா

ட்டியின் நுனியைப்போல சூரியன் வானத்தின் மார்பைப் பிளந்து கொண்டிருந்தது. குளையில் இருப்பதைப் போல அனைத்தும் பிரகாசமாக இருந்தன. வறட்சி, வெப்பத்தின் காரணமாக எல்லா இடங்களும் ஆளரவமற்று இருந்தன. சிறிய ஓசைகள் கூட கேட்கவில்லை.

பற்றி பரிந்து கொண்டிருந்த இந்த மதிய வேளையில், பிரகாசித்துக் கொண்டிருந்த வானமெனும் சூளைக்குக் கீழே, நிழலெதுவும் இல்லாத வயலில் வேலை செய்து கொண்டிருந்த சாதாரண விவசாயி அவன். அவனுடைய வயலும் சாதாரணமானதுதான். சாதாரண கிராமத்தைப் போன்றதுதான் அவனுடைய சில குடிசைகள். இந்த நேரத்தில் அவன் கிராமத்திற்கு வெளியில் நிலத்தை உழுது கொண்டிருந்தான்.

‘உலகத்தைப் படைத்த கடவுளே, பரவாயில்லை... உங்களுடைய இந்த சிரமங்கள் நிறைந்த வாழ்க்கை உண்மையிலேயே அபாரமானதுதான். இளம் வெய்யில் படாமல் கோதுமை விளையாது. அறுவடை செய்யும்போது, கோதுமை மணிகளின் அளவைக் கொண்ட வியர்வைத் துளிகள் மண்ணில் விழுந்து கொண்டிருக்கும். தானியத்தைப் பிரித்து ஒன்று சேர்க்கும்போது, பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போல சூரியன் சிவப்பு நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்திலா? இல்லை... மங்கள்சிங் பாய். அது எப்படி சிவப்பு நிறமாகும்?’ இப்படி தனக்குத்தானே உரையாடிக் கொண்டிருந்தான். அவன். ‘ஏய், மங்கள்சிங், போய் குளி. குளித்துவிட்டு என்ன செய்வது? ஏதாவது பசுவை தானம் செய்யப் போகிறாயா மங்கள்சிங்?’

அவனுடைய மூத்த மகன் கர்த்தாரா கொலை செய்யப்பட்டுவிட்டான். போலீஸ்காரர்கள்தான் கொன்றுவிட்டார்கள் என்று சிலர் சொன்னார்கள். தீவிரவாதிகளுக்கு அவன்மீது ஏதோ கோபம் இருந்த காரணத்தால் கொன்றுவிட்டார்கள் என்று சிலர் கூறினார்கள். உறவினர்களில் யாரோ பழைய பகையைத் தீர்த்துக் கொண்டார்கள் என்று வேறு சிலர் கூறினார்கள். மது அருந்திவிட்டு கடைவீதியில் சிலரிடம் சண்டை போட்டான் என்று சிலர் கூறினார்கள். ஏதோ பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று போலீஸ்காரர்கள் கூறினார்கள்.

‘பரவாயில்லை மங்கள்சிங் பாய்... போக வேண்டியவன் போய்விட்டான். போன பிறவிக் கடனைத் தீர்த்துவிட்டு அவன் இங்கேயிருந்து போய்விட்டான். அதற்காக மனதில் வேதனைப்பட்டுக் கொண்டு நீ இப்படி உட்கார்ந்திருந்தால், வீட்டில் இப்போது இருப்பவர்களின் பசியைப் போக்குவதற்கு யார் இருக்கிறார்கள்? கடவுளா? அவர் கண்களை மூடி உறக்கத்தில் இருக்கிறார்... உனக்கு உதவுவதற்கு கடவுள் வரப்போவதில்லை. மங்கள்சிங், எழுந்து நட.’

அவன் எழுந்து நடந்தான். வேலை செய்தான். காயங்களில் தோல் காய்ந்து காணப்பட்டது. லேசாக சொறிந்தால் ரத்தம் வந்துவிடும். அதனால் அவன் வேறு பலவற்றைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தான். கர்த்தாராவைப் பற்றிய நினைவுகள் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தன.

அப்படியே இல்லையென்றாலும் காளைகளைப் பூட்டக்கூடிய நாட்கள்தான் இவை. மண்ணைக் கிளறி சீர்ப்படுத்தும் நாட்கள். நிறைய வேலைகள் இல்லையென்றாலும், தான் முழுமையான ஈடுபாட்டில் இருக்கவேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையை அவன் தேடிப்பிடிப்பான். இப்படிக் கூறுவான். ‘மனம் என்பது சொல்வதைக் கேட்காத குதிரை, மங்கள்சிங். கடிவாளத்தை எப்போதும் இறுகப் பற்றியிருக்க வேண்டும்.’ இல்லாவிட்டால் இப்படிக் கூறுவான்- ‘கடவுளிடமிருந்து என்ன கிடைக்கப் போகிறது மங்கள்சிங்? இங்கேயிருப்பதைப் பிடுங்கி அங்கே நட வேண்டும் என்றுதானே துறவி சாயி கூறியிருக்கிறார்.’

எனினும், கடவுளைப் பற்றி அவன் இதுவரை சிந்தித்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவர் இருந்திருக்கலாம். தனக்கென்றிருக்கும் சொர்க்கத்தில் ஆனந்தக் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பார். ஆழ்ந்த உறக்கத்தில் அவர் இருப்பார். தன்னுடைய இளம் வயதில், மழை பெய்து முடித்து நிர்மலமான வானத்தில் இளம்வெயில் பரவியிருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஏழு நிறங்களைக் கொண்ட ஊஞ்சல் தோன்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனுடைய தந்தை கூறுவதுண்டு- ‘நீ ஆடவேண்டும் என்பதற்காக கடவுள் படைத்திருக்கும் ஊஞ்சல் அது.’

‘அவருக்கு வேறென்ன வேலை, மங்கள்சிங்? ஊஞ்சலில் ஆடுவதும் தூக்கமும் முடிந்தால், வானத்தில் ஒரு பயணம்... பொசுக்கிக் கொண்டிருக்கும் இந்த உச்சிப்பகல் பொழுதில் காளையைப் பூட்ட வேண்டிய சூழ்நிலை வந்தால் அவருக்குப் புரியும்... இந்த உலகத்தைப் படைத்ததன் மூலம் எப்படிப்பட்ட துன்பத்தை தான் உண்டாக்கியிருக்கிறோம் என்ற உண்மை...’

சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்த இந்த மதிய வேளையில் அவன் காளையைப் பூட்டிக் கொண்டிருந்தான். காளைகளைக் கொஞ்சுவதற்கு மத்தியில், வந்து கொண்டிருந்த ஒற்றையடிப் பாதையையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தான். பஸந்த் கவுர் உணவு கொண்டு வருவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதே. தாகம் எடுத்து தாகம் எடுத்து தொண்டையே வறண்டுபோய்விட்டது. நீர் பருகினால், சூடாகிவிட்ட அடுப்பின் நிலையிலிருக்கும் வயிற்றிலிருந்து வெடிச் சத்தமோ, சீறலோ உண்டாகும். அதற்குப் பிறகு உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அப்போது அவளுடைய வருத்தத்தைக் கேட்க வேண்டியதிருக்கும்- ‘இவ்வளவு தூரத்திலிருந்து நான் கஷ்டப்பட்டு...’

அப்போது ஒற்றையடிப் பாதையில் தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. ஆனால் அது கிராமத்தின் திசையிலிருந்ததல்ல. வெளியே எங்கோ இருந்து வரும் ஆள்...

‘இந்த சுட்டுப் பொசுக்கும் உச்சிப்பொழுதில் இங்கே யார் வந்து கொண்டிருப்பது மங்கள்சிங்?’

‘இதில் ஒரு புதுமை தோன்றவில்லையா? முன்பெல்லாம் தூரத்தில் யாராவது வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அது யாரென்பதைத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆர்வம் மனிதர்களுக்கு இருந்தது. விருந்தாளி எந்த வீட்டுக்கு வருகிறாரென்ற ஆர்வம்... அது யாருடைய மாமாவாகவோ சித்தப்பாவாகவோ இருக்கும். இல்லாவிட்டால் மனைவியின் வீட்டிலிருந்து வரக்கூடிய உறவினராக இருக்கும். எந்த வீட்டிற்கு வரக்கூடிய உறவினராக இருந்தாலும் சரி, முதலில் பார்க்கக்கூடிய வீட்டுக்காரர்கள் வரும் நபருக்கு லஸ்ஸியோ அல்லது வேறு ஏதாவதோ கொடுத்து உபசரிக்காமல் போக விடமாட்டார்கள்.’

‘இப்போது காலத்திற்கு வந்திருக்கும் மாற்றத்தைப் பார். தூரத்தில் ஆள் வருவதைப் பார்க்கும்போதே, மனிதர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. மனிதனைப் பார்த்து மனிதன் பயப்படக்கூடிய நிலைமையைச் சற்று சிந்தித்துப் பார் மங்கள்சிங். சிங்கம் இன்னொரு சிங்கத்தைப் பார்த்து பயப்படுவதில்லை. நேருக்கு நேராக வந்து கொண்டிருக்கும் அவன் தன்னைவிட பலசாலியாக இருந்தால்கூட.’

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel