Lekha Books

A+ A A-

விடுமுறை - Page 2

vidumurai

இப்போது தூரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் ஆளை நன்கு பார்க்க முடியும். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து நடக்க நடக்க, தேய்ந்து பழையதாகிவிட்ட செருப்பு தூசியைக் கிளப்பி, தேய்ந்து தேய்ந்து மேலும் மோசமாகிக் கொண்டிருந்தது. தூசி படிந்த பைஜமாவும் குர்த்தாவும் தலையில் அணிந்திருந்த அழுக்கடைந்த பகடி (தலைப்பாகை)யும்... தோளிலும் சால்வையைப் போல ஏதோ ஒன்றை அணிந்திருக்கிறார். வெயில்படாமல் இருப்பதற்காக ஒரு பழைய துணியைக் கொண்டு தலையை மூடியிருக்கிறார். குனிந்த தலையைப் பார்க்கும்போது ஆள் பல மைல்களைக் கடந்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவருடைய முழுக்கவனமும் தன்னுடைய கால் வடுகளிலேயே இருந்தது. கையில் வைத்திருந்த கழி ஊன்றுவதைவிட, நிலத்தில் இழுபட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. முகத்தில் ஆழமான சுருங்கங்கள். வயது அதிகமாகிவிட்ட அதிர்ஷ்டமில்லாத ஒரு ஆளைப்போல அந்த மனிதர் தோன்றினார்.

மங்கள்சிங் முதலில் நினைத்தான். ‘அந்த மனிதர் அவர் வழியில் போகட்டும்... யாராக இருந்தாலும் எனக்கென்ன? பிறகு... இப்போதைய காலமும்... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.  போர்வைக்குள் ஏ.கே.47 மறைத்து வைத்திருக்கவில்லை என்று யாருக்குத் தெரியும்? இந்தக் காலத்தில் வெறும் ஒரு முட்டாளாக இருப்பதுதான் நல்லது மங்கள் சிங்.’

வயதான அந்த மனிதர் மேலும் சற்று அருகில் வந்தார். வயலின் வரப்பில் நின்று, இமை மூடாமல் அவர் மங்கள்சிங்கை நேரடியாகப் பார்த்தார்.

“தண்ணீர் கிடைக்குமா?” பலவீனமான குரலில் அவர் கேட்டார்.

மரத்திற்குக் கீழிருந்த முக்காலியில் மண் குடம் வைக்கப்பட்டிருந்தது. மங்கள்சிங் உழுவதை நிறுத்திவிட்டு காளைகளை அவிழ்த்துவிட்டு, மரத்தின் நிழலுக்கு அவற்றை வாஞ்சையுடன் போகச் செய்தான். தொடர்ந்து அந்த மனிதரிடம் கூறினான்- “வாங்க பெரியவரே, வேண்டும் என்கிற அளவுக்கு தண்ணி இருக்கு. எவ்வளவு வேணும்னாலும் குடிங்க,”

‘நீரைக் குடித்துவிட்டுப் போக வேண்டிய இடத்திற்கு சீக்கிரமா போங்க...’ மங்கள்சிங் தன் மனதிற்குள் கூறினான்.

மென்மையான மண்ணை மிதித்து அந்த வயதான கிழவர் மரத்தின் அடிப்பகுதியை நோக்கி வந்தார். மங்கள்சிங் குடத்திலிருந்து ஒரு குவளை நிறைய நீரை எடுத்து அவருக்குக் கொடுத்தான். அப்போதுதான் அவர் தன் மார்போடு, சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்த பொட்டலம் மங்கள்சிங்கின் கவனத்தில் பட்டது.

மங்கள்சிங்கின் மனம் அமைதியில்லாமல் தவித்தது. நிவேதனத்துக்கான மலர்கள் கொண்ட பொட்டலத்தை இதேபோல மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு கர்த்தார் பூர் ஸாஹப்பிற்குச் சென்ற விஷயம் அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. அவனுடைய மனம் இளகியது. ‘இந்த கிழவருக்கும் சொந்தமான யாராவது...’

திடீரென்று அவன் பயந்துவிட்டான். ‘இதில் வெடிமருந்து இருக்கக்கூடாது என்றில்லை மங்கள்சிங்.’

அவன் தன் மனதை அமைதிப்படுத்த முயன்றான். இந்த வயதான மனிதருக்கு அருகிலும் ஒரு பஸந்த்கவுர் இல்லையென்று யாருக்குத் தெரியும்? பயணத்திற்கு மத்தியில் பசி தோன்றும்போது சாப்பிடுவதற்காக ‘மிஸ்ஸி பராடி’ தயார் செய்து அவள் அவருக்குக் கொடுத்திருக்கலாம். மிஸ்ஸி பராடியாக இருந்தால், அதில் கட்டாயம் ஊறுகாய் இருக்கும். அவனுடைய முகத்தில் புன்சிரிப்பு மலர்ந்தது. ‘நம்ம பெண்களை வெல்வதற்கு யாருமே இல்லை மங்கள்சிங். வெண்ணெய் தேய்த்து மிஸ்ஸி சப்பாத்தி சுட்டு, அதற்கிடையில் மசாலா கலந்த மாங்காய் ஊறுகாய்த் துண்டுகளை வைத்துத் தரும் ஆற்றல் கொண்ட பெண்கள் இந்த உலகத்தில் வேறெங்கு இருக்கிறார்கள்?’

‘எங்குமில்லை. கிழவர் இங்கே நிழலில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிடுவதாக இருந்தால், பஸந்தி கொண்டு வந்த லஸ்ஸியை வயிறு நிறைய குடிப்பதற்கு நான் இந்த மனிதருக்குத் தருவேன். அந்த மனிதர் எந்த சமயத்திலும் மறக்க மாட்டார்.’

‘சரி... அந்த மனிதர் பஞ்சாபி இல்லையென்றால், மங்கள்சிங்...? மிஸ்ஸி சப்பாத்திற்கு பதிலாக அந்த மனிதரின் பொட்டலத்தில் வறுத்த கடலையோ சாதமோ வேறு ஏதாவதோ இருந்தால்? எது இருந்தாலும் நமக்கென்ன? வெளியே எங்கோ இருக்கக் கூடிய ஆளாக இருந்தால், இங்கு... இந்த பஞ்சாபில் எதற்கு இப்படி அலைந்து திரிய வேண்டும்? இங்கு இப்போது என்ன இருக்கிறது? கூலிவேலை செய்பவர்கள்கூட இங்கேயிருந்து இடம் மாறிப்போய்க் கொண்டிருக்கிறார்கள். பிறகு... இந்த, ஆளை எடுத்துக்கொண்டால், வேலை செய்யக்கூடியவராகத் தெரியவில்லை. வாசலில் கட்டிலைப் போட்டுக் கொண்டு இருக்கவேண்டிய வயது இவருக்கு. வறண்ட இடத்தில் அலைந்து திரியக்கூடிய வயதல்ல.’

அப்போது பஸந்த் கவுர் உணவுப் பொட்டலத்தையும் லஸ்ஸி நிறைந்திருந்த பாத்திரத்தையும் அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தாள். அவள் எப்போது அருகில் வந்தமர்ந்தாள் என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை. அவளும் அந்த வயதான மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மங்கள்சிங் முஷ்டியைச் இறுக்கிக் கொண்டு வெங்காயத்தை உடைத்தான். பொட்டலத்திலிருந்து சப்பாத்தியை வெளியே எடுத்தான். ஊறுகாயின் வாசனை சுற்றிலும் பரவியது.

இரண்டு சப்பாத்திகளில் ஒரு வெங்காயத்தின் பகுதியையும் ஊறுகாய்த் துண்டையும் வைத்து கிழவருக்கு முன்னால் நீட்டினான். வயதான மனிதர் அதை வாங்கி மென்று சாப்பிட ஆரம்பித்தார்.

நீர் நிறைக்கப்பட்டிருந்த குடத்தின் மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த குவளை ஒன்றே ஒன்றுதான் இருந்தது. பிரச்சினையாக இருந்தது. பஸந்த் கவுர் அதில் லஸ்ஸியை நிறைத்து முதலில் கிழவருக்குக் கொடுத்தாள். அவர் அதை உறிஞ்சிப் பருகினார். தொடர்ந்து பஸந்த் கவுர் சிறிது நீரால் குவளையைக் கழுவி, அதில் லஸ்ஸியை ஊற்றி மங்கள்சிங்கின் முன்னால் வைத்தாள். அவனும் அதை உறிஞ்சிக் குடித்தான். லஸ்ஸி குறைந்து போய்விடக்கூடாது என்பதற்காக பஸந்த் கவுர் குடத்திலிருந்த நீரைப் பருகினாள்.

சப்பாத்தி சாப்பிடும் நேரத்தில், கிழவன் மங்கள் சிங்கையோ பஸந்த் கவுரையையோ பார்க்கவேயில்லை. தன் கணவனுக்குத் தெரிந்த ஆளாக அவர் இருப்பார் போலிருக்கிறது என்று அவள் நினைத்தாள். காரணம்- அவள் வரும்போது இருவரும் மரத்தின் நிழலில் ஒன்றாக அமர்ந்திருந்ததுதான்.

உணவு கொடுத்துவிட்டு பஸந்த் கவுர் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாள். கிழவர் இப்போதும் பொட்டலத்தை தன் வயிற்றோடு சேர்த்துப் பிடித்தவாறு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். தரையில் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளை எண்ணுவதைப்போல அவர் கீழே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel