Lekha Books

A+ A A-

விடுமுறை - Page 3

vidumurai

மவுனத்தைக் கலைத்துக் கொண்டு மங்கள் சிங் கேட்டான்- “கொஞ்சம் படுப்பதற்கு போர்வை விரிக்கட்டுமா?” அதைத் தொடர்ந்து கிழவர் அந்த மரத்தடியில் தரையில் படுத்தார். பொட்டலத்தை தலைக்குக் கீழே வைக்கும்போது அவர் மிகவும் கவனமாக இருந்தார். அதைப் பார்க்கும்போது பொட்டலத்திற்குள் கண்ணாடிப் பாத்திரங்கள் இருக்கின்றன என்பதைப் போலவும், அவை உடைந்துவிடுமோ என்று அவர் பயப்படுகிறார் என்பதைப் போலவும் தோன்றியது. பொட்டலத்தில் தலை வைத்தவாறு அவர் கண்களை மூடினார்.

‘பாவம்... மிகவும் களைத்துப் போயிருக்கிறார் என்று தோன்றுகிறது.’ மங்கள் சிங் தனக்குள் நினைத்தான்.

பாவம்... தூங்கிக் கொள்ளட்டும் என்று முதலில் நினைத்தான். பிறகுதான் தோன்றியது. பொட்டலத்திற்குள் ஏதாவது அபாயத்தை உண்டாக்கும் பொருள் இருந்தால்? வெடிகுண்டாக இருக்கக் கூடாதென்றில்லையே. அதனால்தான் இப்படி பாதுகாப்பாக, அசையாமல் அதை அவர் வைத்திருக்கிறார். இறுதியில் அவன் கிழவரிடம் கேட்டான். “பெரியவரே, நீங்க எங்கேயிருந்து வர்றீங்க?”

கிழவர் கண்களைத் திறந்தார். பல யுகங்களாக இருந்த களைப்பும் விரக்தியும் அவற்றில் தெரிந்தன. அத்துடன் மெல்லிய ஒரு பிரகாசமும் அதில் கலந்திருப்பதைபோல மங்கள்சிங்கிற்குத் தோன்றியது.

களைத்துப் போயிருந்த கண்களால் ஒரு நிமிடம் அவர் வெறுமனே மங்கள்சிங்கைப் பார்த்தார்.

“பயணம் எங்கே?” மங்கள் சிங்கின் அடுத்த கேள்வி.

“எங்கேயுமில்லை...”

‘உச்சிப் பொழுதில் இந்தக் கடமையான வெய்யிலில் வெறுமனே யாரும் பயணம்  செய்யமாட்டார்கள். ஏதாவது இலக்கு இருக்கும்...’ மங்கள் சிங்கின் மனதிற்குள் ஆர்வமும் சந்தேகமும் அதிகரித்துக் கொண்டிருந்தன.

“எங்கேயுமில்லை. வெறுமனே புறப்பட்டேன். மனம் சோர்வடைந்தபோது கிளம்பிவிட்டேன்.”

“பெரியவரே, உங்க பெயரென்ன?”

“பெயரா?”

“ஆமாம்... பெயர்?”

“என் பெயர் கடவுள்.”

“கடவுள் என்றால்...?”

“என் பெயர் கடவுள் என்பதுதான்.”

“சரி... இங்கே இப்படி சுற்றித்திரிவது எதற்குக் கடவுளே?”

“மனதில் வெறுப்புண்டாகி, நான் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியேறி வந்துவிட்டேன்.”

“யாரிடமிருந்து விடுமுறை எடுத்தீங்க?”

“வேறு யாரிடமிருந்தும் அல்ல. என்னிடமிருந்துதான்...”- பெரியவரின் குரலில் பரிதாபம் கலந்திருந்தது.

‘அது எப்படி நடக்கும்? ஆகாயங்களில் சுகமாக வாழ்ந்து கொண்டும், நட்சத்திரங்களில் சுற்றித் திரிந்து கொண்டும் இருக்கக்கூடிய கடவுள்... சூரியனையும் சந்திரனையும் விளக்காகப் பயன்படுத்தும் கடவுள்... கிழவர் தமாஷாக ஏதோ பேசுகிறார்.’- மங்கள் சிங் தனக்குள் நினைத்தான்.

அவன் தன் மனதிற்குள் கூறியதைக் காதில் வாங்கியதைப் போல கடவுள் சொன்னார்-

“இல்லை... விளையாட்டாக இல்லை. உண்மையிலேயே நான் கடவுள்தான். நான் இந்த உலகத்தை எதற்காகப் படைத்தேன் என்பது தெரியுமா? இப்போது மனிதன் மனிதனைத் தின்று கொண்டிருக்கிறான். உலகத்தைப் படைக்கும்போது நான் இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.”

“நீங்கள் கடவுளாக இருக்கும் பட்சம், ஒரு கழியைச் சுழற்றி எல்லாரையும் நேர்வழிக்குக் கொண்டு வரவேண்டாமா? எதற்கு விடுமுறை எடுக்க வேண்டும்?”

“அப்படியல்ல. நான் தளர்ந்து போய்விட்டேன். என் பெயரைக் கூறித்தான் ஆட்கள் ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் விடுமுறை எடுத்தால், ஒருவேளை இந்த அக்கிரமங்கள் முடிவுக்கு வரலாம்.”

“முடிவுக்கு வருமா?”

“என்னவோ?” கடவுள் நீண்ட பெருமூச்சுவிட்டார்.

‘பாவம்... மனம் வெறுப்படைந்துவிட்டது. மிகுந்த விரக்தியும்...’ மங்கள் சிங் தன் மனதிற்குள் நினைத்தான்.

“விரக்தி என்றால்... கடுமையான விரக்தி. நான் முழுவதுமாக தகர்ந்து போய் இருக்கிறேன். உங்களுடைய வீட்டில் காலியாக ஏதாவது கட்டில் கிடக்கிறதா? இரவில் நான் வாசலில் படுத்துக் கொள்கிறேன். அதிகாலையில் எழுந்து போய்விடுகிறேன்.”

“நான்  இப்போது காளையைப் பூட்ட வேண்டுமே.”

“பரவாயில்லை... நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்யுங்கள். நான் இந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுக்கிறேன். கொஞ்சம் தூங்கிவிட்டு, உங்களுடைய வீட்டிற்கு வருகிறேன்.”

மங்கள்சிங்கிற்கு எதுவுமே புரியவில்லை. அவன் எழுந்து காளைகளுக்கு தீனியும் நீரும் கொடுத்து விட்டு நிலத்தை உழ ஆரம்பித்தான்.

சூரியன் மறைந்தபோது, அவன் காளைகளை அவிழ்த்துவிட்டான். கலப்பையைத் தோளில் வைத்தவாறு, கிழவரிடம் சொன்னான்-

 

“சாயங்காலம் ஆகிவிட்டது. இனி நாம் புறப்படுவோம். இருட்டு வருவதற்கு முன்பே வீட்டை அடையணும். போதாத காலம்...”

கிழவர் காலில் செருப்பை அணிந்து, போர்வையை இழுத்த தோளில் இட்டு, பொட்டலத்தை வயிற்றோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து நடந்தார்.

‘காப்பாற்றணும், என் கடவுளே. ஏதாவது போக்கிரியாக இருக்காது என்று யார் கண்டது? இல்லாவிட்டால்... தீவிரவாதியாக இருக்குமோ? இந்த மனிதரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது சரியான செயல்தானா?’ மங்கள்சிங் தன் மனதிற்குள் நினைத்தான்.

“நீ என்னிடம் அடைக்கலம் கேட்கிறாயா? இப்போது நான் யாருக்கும் எதையும் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை. நான் விடுமுறையில் இருக்கிறேன்.” கிழவர் கூறினார்.

‘இது... பரவாயில்லையே. என் மனதில் இருக்கக்கூடிய விஷயம் இந்த மனிதருக்கு எப்படிப் புரிகிறது?’ மங்கள் சிங் தன் மனதிற்குள் நினைத்தான்.

உச்சிப்பொழுதில் பார்த்த விருந்தாளியை மீண்டும் பார்த்ததும், பஸந்த் கவுர் பாத்திரத்தில் மைதாவைக் குழைக்க ஆரம்பித்தாள்.

எல்லாரும் சப்பாத்தி சாப்பிட்டார்கள்.

வாசலில் கட்டிலை இழுத்துப்போட்டு, அதில் போர்வையை விரித்தார்.

கிழவர் செருப்பை எடுத்து கட்டிலுக்குக் கீழே வைத்தார். தொடர்ந்து மிகுந்த கவனத்துடன் பொட்டலத்தை தலைப் பகுதியில் வைத்து, அதில் தலையை வைத்து அவர் படுத்தார்.

“ஒரு விஷயத்தைக் கேட்டால், தப்பாக நினைக்கக் கூடாது...” தாழ்ந்த குரலில் மங்கள்சிங் கேட்டான்.

“என்ன விஷயம்?”

“ஒரு நிமிடம்கூட கையை விட்டுப் போகாமல் இருக்க வேண்டுமென்று கவனம் செலுத்துமளவு இந்தப் பொட்டலத்திற்குள் என்ன இருக்கிறது?”

கிழவரின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. அவர் சொன்னார்- “இதில் ஒரு பிடி நட்சத்திரங்களும், ஒரு மேகக் கூட்டமும், பறவைகளின் ஓசைகளும், தளிர் இலைகளும், புற்களும் கொடிகளும், கொஞ்சம் பனித் துணிகளும், சிறிது நீரும், தொட்டிலில் ஆடும் குழந்தையின் முதல் கிளிக்கொஞ்சலும்... இவைதான் இருக்கின்றன. இவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.”

தொடர்ந்து அவர் கண்களை மூடி, பொட்டலத்தின் மீது தலையை வைத்துப் படுத்துறங்கினார்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel