Lekha Books

A+ A A-

காளை வண்டிகள்

காளை வண்டிகள்
மாதவிக்குட்டி
தமிழில்: சுரா

'என்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை' - அவள் அதைக் கூறவில்லை. ஆனால், அவளுடைய கண்களிலும் விரல் நுனிகளிலும் நடையிலும் அந்த வார்த்தைகள் தங்கி நின்றிருந்தன. அவன் அதைப் பார்க்காமல் இருப்பதற்கு முயற்சித்தான். நாளிதழுக்குப் பின்னால் மறைந்து கொண்டு அவன் சாந்தம் நிறைந்த ஒரு குரலில் கூறினான்: 'சென்னையில் நேற்று நல்ல மழை பெய்ததாம்.'

'ம்...'

அவன் நாளிதழை ஒதுக்கி வைத்து விட்டு, அவளைப் பார்த்தான். தூணின் மீது சாய்ந்து நின்று கொண்டு, தூரத்தில் தெரிந்த தெருவை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். உச்சி வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஏரிகளைப் போல அவளுடைய கண்கள் இருந்தன. அவள் மீண்டும் அழ ஆரம்பிக்கிறாளோ என்று அவன் சந்தேகப்பட்டான்.

'மாதவிக்குட்டி, நீ தேநீர் அருந்துவாய் அல்லவா?'

'ம்...'

அவள் அவிழ ஆரம்பித்திருந்த கூந்தலை இடது கையின் மீது சுற்றி கட்டியவாறு, மெதுவாக நடந்து உள்ளே சென்றாள். அவளுடைய தலையிலிருந்து நரைத்த தலைமுடி பறந்து அவனுடைய சாய்வு நாற்காலியில் போய் விழுந்தது. அவன் அதை எடுத்து நீக்கவில்லை. முந்தைய நாள் அலமாரிகளைத் திறந்து, பொருட்களை ஒதுக்கி வைக்கும்போது அவள் பல புட்டிகளையும் எடுத்து வெளியே வைத்தாள். கூந்தலை மீண்டும் கறுப்பாக ஆக்குவதற்காக அவள் பயன்படுத்தியிருந்த சாயம். முகத்தில் குளிர் காலத்தில் தேய்த்திருந்த களிம்புகள், வாசனைப் பொருட்கள்...

'இவற்றையெல்லாம் ஏன் வீசி எறியப் போறே?' - அவன் கேட்டான்.

அவள் துடைப்பத்தால் தூசியை நீக்குவதற்கு மத்தியில் தலையை உயர்த்தாமல் கூறினாள்: 'இனி எனக்கு இவையெதுவும் தேவையில்லை. இப்போது இவை எதையும் தேய்க்கக் கூடிய வயது இல்லை...'

அவன் சிரிப்பதற்கு முயற்சித்தான். ஆனால், அவளுடைய கண்களைப் பார்த்தபோது, அவனுக்கு சிரிக்க இயலவில்லை. இடையிலாவது அவள் வாய் விட்டு அழுதிருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவன் சிந்தித்தான். அப்படியென்றால், அவன் அவளிடம் கேட்டிருக்கலாம்:

'மாதவிக்குட்டி, உனக்கு ஏன் இந்த அளவிற்கு கவலை?' அவள் பதிலே கூறாமல் இருந்தால் கூட, அவனால் அதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், அவளை சந்தோஷப்படுத்துவதற்கு இரண்டே இரண்டு வழிகள்தாம் இருந்தன. இந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் வேலை செய்ய வைத்து கட்டிய இந்த வீட்டை விட்டு விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிச் செல்வது, இல்லாவிட்டால் - குழந்தைகளை இங்கு வர வைப்பது... இரண்டுமே சாத்தியமில்லாதவை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவனால் எல்லோரிடமும் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள முடியும்? 'எனக்கு தவறு நேர்ந்து விட்டது. என்னால் கிராமத்தில் வாழ முடியவில்லை' - இப்படி கூற முடியுமா? மூத்த மகனான மனோகர் என்ன நினைப்பான்? வங்கியில் பணியாற்றிய அவனுடைய பழைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?

'நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று மிஸ்டர். மேனன் கூறினார். இந்த கேடு கெட்ட காலத்தில் இவை எதுவுமே தெரியாமல் நீங்கள் கிராமத்தில் சந்தோஷமாக வாழலாமே!'

'ராமசந்திரன் திரும்பி வந்து உங்களுடைய புதிய வீட்டைப் பற்றி நிறைய வர்ணித்தார்...' - ரெட்டி எழுதியிருந்தான். பல வருடங்கள் அவன் பயன்படுத்திய அந்த அறையில், சக்கரங்களைக் கொண்ட அந்த கறுப்பு நிற நாற்காலியின் மீது இப்போது அவனுக்குப் பதிலாக, ரெட்டி அமர்ந்திருப்பான். பங்கு முதலீட்டாளர்களின் கூட்டங்களில், ரெட்டி எழுந்து தன்னுடைய இயல்பான ஆட்டத்துடன் பேசிக் கொண்டிருப்பான். ரெட்டியை இயக்குநர்களின் சம்மதத்துடன் வட இந்தியாவிலிருந்த ஒரு வங்கியிலிருந்து இறக்குமதி செய்தார்கள். அவன் இந்த வங்கியைப் பற்றி படித்து வந்திருக்கிறான். அவ்வளவுதான். அதனால் அவனுடைய தவறுகள் ஏற்றுக் கொள்ளப்படும். புருவங்களை உயர்த்தி, இளமை தவழும் அந்த சிரிப்பை வெளிப்படுத்தி, கைகளை விரித்தவாறு அவன் கூறலாம்.... 'விஷயங்கள் இப்படித்தான்.... நான் என்ன செய்வது? சொல்லுங்க....' என்று.

இயக்குநர்கள் புருவத்தை உயர்த்தவில்லை. கோபம் வரும்போது கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மீது வைக்கக் கூடிய சஞ்சீவராவ் கூட ஒருவேளை தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளலாம். காரணம் -- ரெட்டி புதிய ஆள். அமெரிக்காவில் இரண்டு வருட பயிற்சி முடிந்து திரும்பி வந்திருக்கும் மனிதன்....

அஞ்சல் ஊழியர் கடிதங்களைக் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்தான். நீல நிற ஓரங்களைக் கொண்ட உறை மனோகருடையது. பொதுவாக அவனுடைய பிள்ளைகள் தங்களின் தாயின் முகவரிக்கு மட்டுமே கடிதங்களை அனுப்புவார்கள். ஆனால், மனோகர் தன்னுடைய முகவரியை எழுதியிருப்பதைப் பார்த்ததும், அவன் அதைத் திறந்தான்.

உடல் நலத்தைப் பற்றியும் கால சூழ்நிலையைப் பற்றியும் உள்ள ஆரம்ப வார்த்தைகளுக்குப் பிறகு மனோகர் எழுதியிருந்தான்:

'லில்லிக்கு சிறிது ஓய்வு வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது. அவளுடைய சரீரம் கொஞ்சம் கொஞ்சமாக மெலிந்து வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல - எப்போதும் அழுது கொண்டே இருக்கிறாள். நான் பணி முடிந்து திரும்பி வரும்போது அவள் ஏதாவது குறைகளைக் கூறுவாள். நான் எப்போதும் அவளுடைய கண்களில் தவறு செய்பவனாகவே இருக்கிறேன். அவள் மீது அன்பு செலுத்துவதில்லை. குழந்தைகளின் மீது பாசம் கிடையாது என்றெல்லாம் கூறி அழ ஆரம்பிப்பாள். என்னுடைய பொறுமை முடிவுக்கு வர ஆரம்பித்து விட்டது. இவற்றையெல்லாம்.... அப்பா, உங்களுக்கு எழுதுவதற்குக் காரணம், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாததால்தான். லில்லியின் இந்த நிலை இதே மாதிரி நீடித்துக் கொண்டிருந்தால், வேலை செய்யக் கூட முடியாத சூழ்நிலை எனக்கு உண்டாகி விடும் என்று நினைக்கிறேன். இரவில் தூக்கமில்லாமல் இருக்கக் கூடிய சூழ்நிலையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். சில நாட்களுக்கு அவளை, அவளுடைய தாயிடம் அனுப்பி வைத்தால் என்ன என்று நான் சிந்திக்கிறேன். பிரசவத்திற்குப் பிறகு அவளுடைய நரம்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.'
அலுவலகத்தில் நான் ஒரு ரகசியத்தைக் கேள்விப்பட்டேன். எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தென்னிந்தியாவில் ஒரு கிளை திறக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறதாம். அரசாங்கம்....’

அவன் கடிதத்தை மடித்து சட்டையின் பைக்குள் வைத்தான். அதன் உறையை எடுத்து சுருட்டி வாசலில் எறிந்தான். எஞ்சியிருந்த மூன்று கடிதங்களும் மாதவிக்குட்டிக்கானவை. அவன் அவற்றை எடுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel