Lekha Books

A+ A A-

காளை வண்டிகள் - Page 3

'மனோகர், நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் பார்க்கும் வேலையை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையை தாறுமாறாக ஆக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் வீட்டிற்கு சாயங்கால வேளையில் சரியான நேரத்திற்கு திரும்பி வந்து எவ்வளவு காலம் ஆகி விட்டது! உங்களுடைய மனைவியை ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் சென்று எவ்வளவு காலம் ஆகி விட்டது! அன்பின் ஒரு சிறிய பங்கினைக் கூட அவளுக்குக் கொடுக்காமல் அவளை நீங்கள் ஏன் இந்த அளவிற்கு கவலைக்குள்ளாக்குகிறீர்கள்....?'

ஆனால், மனோகர் அவனுடைய மகன். அறிவுரைகளையும், தத்துவ சிந்தனைகளையும் தன்னுடைய சொந்த பிள்ளைகளுக்கு முன்னால் வெளிப்படுத்த அவனால் சிறிதும் முடியாது. மிகவும் பிரகாசமான ஒரு இளைஞன் அவனுடைய மகளை திருமணம் செய்து கொள்வதற்கு தயாராக இருந்தான். படிப்பு, வசதி, ஈர்க்கும் சக்தி, மிகவும் நல்ல எதிர்காலத்தைக் கொண்ட பதவி - அனைத்தையும் கொண்ட ஒருவன். எனினும், அதை செயல் வடிவத்திற்குக் கொண்டு வர அவனால் முடியவில்லை. மகள் அழுதாள். தன் மகளைக் காதலிக்கிறான் என்ற ஒரேயொரு தகுதியை மட்டுமே கொண்டிருந்த ஒரு அழகான முட்டாளுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. காதலை மாதவிக்குட்டியும் நம்பவில்லை. எனினும், மகள் தான் கூறுவதைப் போல தற்கொலை செய்து விடுவாளோ என்று பயந்து அவளும் ஒத்துக் கொண்டாள். தன்னுடைய மகளின் கணவனை வேண்டிய இடங்களுக்கெல்லாம் அனுப்பி, பிரகாசமாக ஆக்கி வளர்த்துக் கொண்டு வருவதற்கு சிறிது காலம் ஆனது. எனினும், மகள் அவனைத் தேடி வந்து பல நேரங்களிலும் கூறினாள்:

'அப்பா, நான் இனி திரும்பிப் போகப் போவதில்லை. என்னுடைய விருப்பத்திற்கு எதிராக மோகனின் செயல்கள் அனைத்தும் விபரீதம் நிறைந்தவையாக இருக்கின்றன. நான் எவ்வளவு தடவைகள் கூறினாலும்....'

அந்த மாதிரி நேரங்களிலெல்லாம் அவளுக்கு ஆறுதல் கூறலாம். இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் தன்னுடைய குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன் கணவனிடம் திரும்பிச் செல்வாள். பிறகு அவன் அவளுடைய தடிமனான குரலில் உள்ள புகார்களையும், தன் பேரப் பிள்ளைகளின் சிரிப்புகளையும் பல நாட்கள் கேட்டுக் கொண்டேயிருப்பான். பிறகு... பிறகு... அவளுடைய புகார்கள் நின்றன. மோகன் பதவியில் உயர்ந்தான். அவர்களுடைய கார் புதியதாக ஆனது. அவர்களுடைய பிள்ளைகள் நகரத்திலேயே சிறப்பான ஆங்கில பள்ளிக்கூடங்களுக்குப் போக ஆரம்பித்தார்கள். லிப்ஸ்டிக் தேய்க்கப்பட்டிருந்த உதடுகளின் வழியாக அவனுடைய மகள் கூறினாள்:

'அப்பா, இப்போது எங்களுக்கு நல்ல காலம்.' அவளும் அவளுடைய கணவனும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு முழுமையான சந்தோஷத்துடன் அவனைப் பார்த்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு அவர்களுக்கும் அவனுக்குமிடையே ஒரு திரைச்சீலையைப் போல வந்து விழுந்தது. அதற்குப் பிறகு பல வேளைகளில், இரவு நேரத்தில் பக்கத்து கட்டிலில் படுத்து மாதவிக்குட்டி தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் சிரிப்பைப் பற்றி நினைத்துப் பார்ப்பான். அந்தச் சிரிப்பு அவனுடைய மகளின் வளர்ச்சியைக் காட்டும் முதல் இலக்காக இருந்தது. அது பலவற்றின் ஒரு மரணமாக இருந்தது. அந்தக் கண்களில் எப்போதும் மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்த சந்தோஷமற்ற தன்மை மறைந்து போய் விட்டது. அவளுடைய குரல் மிகவும் மென்மையானதாக ஆனது. எப்போதும் வேலைக்காரர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த அவள், அவர்களின் பிரியத்திற்குரியவளாக ஆனாள். அவளுடைய அழகு மேலும் அதிகரித்துக் கொண்டு வந்தது. அதற்குப் பிறகும் அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்:

'அவள் ஏன் மாறினாள்?' ஒரு முறையாவது கடந்த காலத்தைப் பற்றி தன்னைத் தேடி வந்து புகார் கூறியிருந்தால், ஒரு முறையாவது அழுகை கலந்த குரலில் அவள் தன்னிடம் 'அப்பா, நான் இங்கிருந்து போக மாட்டேன்' என்று கூறியிருந்தால், அவளுக்கு தன் மீது இருக்கக் கூடிய பாசத்தின் மீது அவன் நம்பிக்கை கொண்டிருக்க முடியும். ஒரு முறை தான் அவளைத் திட்டியது அவனுக்கு திடீரென்று ஞாபகத்தில் வந்தது. அவள் தன்னுடைய ஒரு பழைய ஆடையை எடுத்து கத்திரியால் வெட்டி, துண்டுகளாக ஆக்கிக் கொண்டிருந்தாள்.

'நீ என்ன செய்றே? இனி நான் ஒரு ஆடை கூட தைத்துத் தர மாட்டேன். வெறுமனே நாசம் பண்றியா?'

அவள் முகத்தை உயர்த்தினாள். இளம் சிவப்பு நிறத்திலிருந்த பட்டு துண்டுகள் அவளைச் சுற்றி சிதறிக் கிடந்தன.

'அப்பா, இது எனக்கு பொருத்தமாக இல்லாமற் போய் விட்டது. இது மிகவும் சின்னதாயிடுச்சு. இனி இதை வச்சு என்ன பிரயோஜனம்?'

அவள் எந்தச் சமயத்திலும் அவனைப் போல இல்லை. புதிய ஆடைகள் கிடைக்கும்போது, நீண்ட காலம் தான் விரும்பிய பழையவற்றை கிழித்து விட்டெறிய அவள் தயங்கியதேயில்லை. அவள் வளர்த்த நாய்க்குட்டி அவளுடைய கையை ஏதோ காரணத்தால் கடித்து விட்டபோது, அவள் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாள். பொருட்களுக்கு காலம் தரும் முக்கியத்துவத்தின் மீது அவளுக்கு நம்பிக்கையில்லை. அவன் நம்பினான். ஆனால், 'இல்லை' என்று நடித்தான். அவளுடைய அந்த இதயமற்ற தன்மை, அந்த விரல்களில் தெரிந்த கடினத்தன்மை ஒரு போலித்தனமாக இல்லை.

'அப்பா, இந்த கிழவியைப் போகச் சொல்லுங்க. நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்குறாங்க. இன்னைக்கு என்னிடம் வாக்குவாதம் பண்ணினாங்க.'

அவளை பல வருடங்களாக குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்த அந்த வயதான வேலைக்காரியை அவள் பிடிவாதம் பிடித்து, போகச் செய்தாள். அவள் அதற்காக சிறிது கூட வருத்தப்படவில்லை. எல்லா மாதமும் அவன் அந்த வயதான பெண்ணிற்கு சிறிது பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவள்தான் அனுப்பிக் கொண்டிருக்கிறாள் என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த வேலைக்காரி மரணத்தைத் தழுவினாள். அவள் நோய் வாய்ப்பட்டு படுத்திருந்தபோது, அவனும் மாதவிக்குட்டியும் சேர்ந்து பார்ப்பதற்காக சென்றிருந்தார்கள்.

'என்னை பேபிக்குட்டி என்றைக்கும் மறக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் எனக்கு பத்து ரூபாய் வீதம் அனுப்பி வைப்பாங்க.'

மாதவிக்குட்டி என் முகத்தையே பார்த்தாள். என் மகளின் குணம் அவளுக்கும் தெரியுமே!

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

படகு

படகு

June 6, 2012

நிலவு

நிலவு

April 2, 2012

நான்

நான்

February 17, 2015

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel