Lekha Books

A+ A A-

காளை வண்டிகள் - Page 5

அப்பு மேனன் தன்னுடைய சிறிய கண்களால் அவர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்தார். மனைவி தலையைத் தாழ்த்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். கணவன் எங்கோ பார்த்துக் கொண்டு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். பிறகு, தைரியத்துடன் தொடர்ந்து கூறினார்:

'நாராயணன் குட்டி, நான் உன்னை எந்தச் சமயத்திலும் ஒரு வேற்று ஆளாக நினைத்ததில்லை. உன்னிடம் நான் இந்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நான் எந்தக் காலத்திலும் கூற மாட்டேன். ஆனால், வேணுவிற்கும் உங்களுக்கும் - இரண்டு பேர்க்கும் சம்மதமென்றால், எனக்கும்.... வீட்டில் எஞ்சியிருக்கும் எல்லோருக்கும் எந்த அளவிற்கு சந்தோஷம் கிடைக்கும் என்பதைக் கூற முடியாது.'

'வேணுவிற்கு இருபத்து நான்கு வயதுதான் நடக்கிறது, அப்பு அண்ணே! பிறகு.... இப்போது அவனுக்கு ஒரு மனைவியைப் பார்த்துக் கொள்ளக் கூடிய சக்தி இல்லை. இப்போது அவன் ஒரு அப்ரன்டீஸ் மட்டுமே. சம்பளம் கிடைக்க ஆரம்பிக்கவில்லை....'

'இப்போது வேண்டும் என்று நான் கூறவில்லை. நாராயணன் குட்டி, தவறாக நினைக்கக் கூடாது. இல்லை... வேணுவிற்கு திருமண வயது நெருங்குறப்போ, பல ஆலோசனைகளும் வரும். சந்தேகமில்லை. ஆனால், அவற்றுடன் இதையும் ஒரு விண்ணப்பமாக எடுத்துக் கொண்டால் போதும்...'

'நிச்சயமா... ஆனால், இந்தக் காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கு தங்களின் தாய், தந்தை நிச்சயம் செய்யும் பெண்கள் தேவையில்லை. அவனவனே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறக் கூடிய காலமாயிற்றே!'

'ஆமாம்... உண்மைதான். இனி... வேண்டுமென்றால், வேணு ராதாவைப் பார்க்கலாமே! பார்க்கவோ, பேசவோ... எது வேண்டுமென்றாலும், சரிதான். வேணு வெளியிலிருக்கும் ஆளொன்றுமில்லையே! எங்களுடைய வீட்டிற்கு எப்போதும் வருவதற்கு வேணுவிற்கு உரிமை இருக்கு.'

மாதவிக்குட்டி தலையை உயர்த்தினாள். திடீரென்று அவள் எதையோ நினைத்ததைப் போல கூறினாள்: 'நான் ஒரு விஷயத்தை மறந்து விட்டேன். டாக்டரின் வீட்டிற்குப் போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். டாக்டரின் அப்பாவுக்குச் சிறிது உடல் நலக்கேடு என்று சொன்னார்கள்.'

'எப்படி தெரியும்? ஆள் வந்திருந்ததா?'

'ம்...'

அப்பு மேனன் மெதுவாக எழுந்து நின்றார்.

'அப்படியென்றால் நான் கிளம்பட்டுமா? நீங்கள் இரண்டு பேரும் டாக்டரின் வீட்டிற்குச் செல்கிறீர்கள் அல்லவா? நாளை காலையில் வருகிறேன்.'

'அப்பு அண்ணே, வராமல் இருக்கக் கூடாது. காலை வேளை தேநீர் இங்கே இருக்கட்டும்.'

அப்பு மேனன் வெளியேறினார். பஞ்சைப் போல வெளுத்து, மென்மையாக இருந்த அவருடைய தலை முடியில் வெயில் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. சற்று முன்னோக்கி குனிந்த அந்த உருவம் நிலத்தைக் கடந்து தெருவிற்குச் சென்றதும், அவன் தன் மனைவியின் பக்கம் திரும்பினான்:

'இந்த விஷயத்தில் உனக்கு ஏன் இந்த அளவிற்கு எதிர்ப்பு?'

'எதிர்ப்பா?'

'ம்...'

அவள் தலையைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு, கை விரல்களைப் பிசைந்தாள்.

'இந்த ஊரிலிருந்து வேணுமோ என்று எனக்கொரு தயக்கம். ஏனென்றால், வேணுவிற்கு சிரமமாக இருக்காதா? தன்னுடைய வீட்டில் உள்ளவர்களும், மனைவியின் வீட்டில் உள்ளவர்களும் உறவினர்களும் - எல்லாம் ஒன்றாக இருக்கும்போது, அவனுக்கு இந்த ஊருக்கு வருவதற்கே பயம் உண்டாகி விட்டால்...?'

அவள் சிரித்தாள். வெளிப்படையான அந்த சிரிப்பைப் பார்த்த போதும், அவன் அவளை நம்பவில்லை.

'அது எதுவும் இல்லை. உனக்கு வேறு ஏதோ காரணங்கள் இருக்கின்றன.'

'ஏய்.... எதுவுமில்லை. ஆனால், இப்போதே எதையும் முடிவு செய்ய வேண்டாம். அவனுக்கு அந்த அளவிற்கு வயதாகி விடவில்லையே!'
அவள் தூணில் சாய்ந்து நின்றவாறு தெருவைப் பார்த்தாள்.

பலசரக்கு கடைக்காரனின் காளை வண்டி மெதுவாக குலுங்கிக் குலுங்கி போய்க் கொண்டிருந்தது.

'மாதவிக்குட்டி, மனோகருக்கும் லில்லிக்குமிடையே ஏதோ கருத்து வேறுபாடுகள்....'

'ம்... எனக்கு தெரியும்.'

அவன் எழுந்து அவளுக்கு அருகில் வந்து நின்றான்: 'நாம என்ன செய்யணும்? பரவாயில்லை என்று நடிக்கணுமா?'

'அதனால் பிரயோஜனமில்லை.'

அதனால் பிரயோஜனமில்லையா? முன்பு எவ்வளவு தடவைகள் அவனுக்கும் மனைவிக்குமிடையே சாதாரண விஷயங்களுக்காக கருத்து வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன! சில நேரங்களில் காரணங்கள் இருக்கும். சில வேளைகளில் எந்தவொரு காரணமும் இல்லாமலே ஒரு எதிர்ப்புக் காட்சி உண்டாக்கப்படும்.

'நான் வீட்டிற்குப் போகணும்.'

'சரி.... இன்றைக்கே அனுப்புறேன்.'

இறுதியில் அவள் அழுவாள். அவன் மன்னிப்பு கேட்பான். காயங்கள் உண்டாகியும் அந்த இல்லற வாழ்க்கை வளர்ந்து வந்தது. பல வருடங்களைக் கடந்து வந்த இந்த பயணம் வளர்ச்சி என்றால், தான் அவளை நவநாகரீகமானவளாக ஆக்க வேண்டியதிருந்தது. அந்த ஆசைக்கு அவள் அடி பணிந்தாள். அவள் குழந்தைகளிடம் சாதாரணமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள். எப்படிப்பட்ட விருந்து நிகழ்ச்சியிலும் மிகவும் அருமையாக செயல்பட ஆரம்பித்தாள். தன்னுடைய அழகைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தினாள். எல்லா வகையிலும் அவனுடைய விருப்பதிற்குரிய மனைவியாக இருந்தாள். ஆனால், அவள் உள்ளுக்குள் மாறினாளா? பல நேரங்களிலும் அவன் அவளுடைய அந்த அழகு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே நினைத்திருக்கிறான் - அவள் பழைய மாதவிக்குட்டியாக இல்லாமற் போனாளோ? தன்னுடைய தாயின் காலில் விழுந்து வணங்கி விடை பெற்ற அந்த கிராமத்தில் பிறந்த புது மணப் பெண் எங்கு போய் மறைந்து கொண்டாள்? ஒரு முறையாவது அந்த கண்களின் பதைபதைப்பு நிறைந்த பார்வையை இப்போது தான் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால், அது நடக்காத விஷயமாயிற்றே! ஒவ்வொரு நாளும் பலவற்றின் மரணத்துடன்தான் முடிவடைகிறது. செயல் முடியும்போது, ஆசைகள் இறந்து விடுகின்றன. பொறாமை, அன்பு, கோபம் எல்லாவற்றிற்குமே மரணம் நடைபெறுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே ஆசைப்பட்ட அவன் இப்போதும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு நிமிடத்திலும் எல்லோருக்குள்ளும் பல பகுதிகளும் மரணமடைகின்றன. இறந்த காலத்திலிருந்து எஞ்சி நின்றிருக்கும் ஏராளமான சிறிய உணர்ச்சிகளை அவனைப் போலவே சிலர் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அவை இறந்த சரீரங்கள் என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல்....

'இங்கே பாருங்க... நான் சில நாட்களுக்கு சென்னைக்குப் போக வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.'

'ம்...'

'இவற்றையெல்லாம் சற்று சரி பண்ணுவோம். லில்லிக்கு நான் அங்கு வர வேண்டுமென்று மிகவும் ஆசை. மனோகரிடம் நான் கூறி புரிய வைக்கிறேன்.'

'அது நல்லதுதான். நானும் வரணுமா?'

'வேண்டியதில்லை, திரும்பி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்தால் போதும். அப்படியென்றால் வழியில் நாம் கோயம்புத்தூருக்குச் சென்று வேணுவையும் பார்க்கலாம்.'

'ம்...'
அவள் சாவிக் கொத்தை எடுத்து, கட்டியிருந்த துணியின் நுனியில் கட்டி விட்டு, உள்ளே சென்றாள். அவளும் போய் விட்டால், இந்த வீட்டில் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை வந்து விடுமே என்பதை நினைத்தபோது, அவனுடைய உள்ளங்கைகள் வியர்த்தன. எனினும், தனக்குள் எலியைப் போல கடித்துத் தின்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த தனிமை உணர்ச்சியை அவளுக்கு முன்னால் வெளியே எடுத்துக் காட்டுவதற்கு அவனுக்கு தைரியம் வரவில்லை.

நிலத்திற்கு அப்பாலிருக்கும் தெருவின் வழியாக அப்போதும் ஒரு காளை வண்டி ஓசை எழுப்பியவாறு, குலுங்கிக் கொண்டே போய்க் கொண்டிருந்தது.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel