Lekha Books

A+ A A-

நினைவுச் சின்னம் - Page 4

அந்த வெந்நீரைப் பருகிக் கொண்டே பிரதிபா மரணத்தைத் தழுவினாள்.

சுதர்ம்மாஜி மருத்துவ மாணவனுக்கு அருகில் மீண்டும் போய் நின்றார்.

'ஓஹோ... நீங்கள் வந்திருக்கீங்களா?' - அவன் வெறுப்புடன் கேட்டான்.

'ஆமாம்... நேற்று இரவு என் குழந்தை இறந்து விட்டது. பிணத்தை நீங்கள் வாங்கிக் கொள்வதாகக் கூறியதை நான் கேட்டேன். நீங்கள் இப்போது வாங்கிக் கொள்ளலாம்.'

அந்த மருத்துவ மாணவன் அதிர்ச்சியடைந்து விட்டான். அவனுடைய முகம் வெளிறிப் போய் விட்டது.

ஒரு தடுமாற்றத்துடன் அவன் சொன்னான்: 'சுதர்ம்மாஜி! உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று நான் நினைத்தேன். மன்னிக்கணும்.' அவன் உள்ளே சென்று 25 ரூபாய் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து சுதர்ம்மாஜியின் கையில் தந்தான்.
சுதர்ம்மாஜி வீட்டிற்கு நடந்து செல்லும்போது தன் மனதிற்குள் நினைத்தார்: 'என் மகளுடைய உயிரின் விலை இருபத்தைந்து ரூபாய்.'

மறுநாள் காலையில் சுதர்ம்மாஜி ஒரு சுமையைக் கட்டி, வீட்டிலிருந்து புறப்பட்டார்.

'எங்கே போறீங்க?' - மனைவி கேட்டாள்.

'தேச பயணத்திற்கு' - சுதர்ம்மாஜி பதில் கூறினார்.

'அப்படியென்றால் என் நிலையும், குழந்தைகளின் நிலையும்?'

சுதர்ம்மாஜி தன் மனைவியின் கையில் 20 ரூபாயைக் கொடுத்தார். 'ஒரு மாதம் கழித்து நான் கொஞ்சம் பணம் அனுப்பி வைக்கிறேன்' - அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர் தன் வீட்டிடமும், தன் சொந்த ஊரிடமும் விடை பெற்றார்.

இரண்டு மாதங்கள் கடந்தன. சுதர்ம்மாஜியின் மனைவியின் மேல் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அது வட இந்தியாவிலிருக்கும் ஒரு இடத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையிலிருந்து வந்திருந்தது.

'உங்களுடைய கணவரான சுதர்ம்மாஜி இங்கு நேற்று இரவு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்ட தகவலை வருத்தத்துடன் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம், அவரின் கையிலிருந்த ஒரு சுமையை உங்களுடைய மேல் முகவரிக்கு தனியாக அனுப்பி வைக்கிறோம். இறந்த உடலுக்கு வேண்டிய சடங்குகளைச் செய்து, இங்கேயே அடக்கம் செய்கிறோம்.

டாக்டர் சரத்குமார்.'

* * * *

 

'மகாகவி சுதர்ம்மாஜியின் மரணம்' - நாளிதழ்கள் தலைப்பு இட்டன. 'ஒரு மிகப்பெரிய இழப்பு' 'இலக்கிய உலகிற்கு உண்டான பேரிழப்பு' 'ஒரு மகாகவியின் மரணம்' ஆகிய பல தலைப்புகளையும் தந்து எல்லா பத்திரிகைகளும் தலைப்புச் செய்திகள் எழுதின. சுதர்ம்மாஜியின் மரணத்தைப் பற்றிய செய்திச் சுருக்கம் பத்திரிகையில் இப்படி வெளிவந்தது: 'சிறிது காலம் எதிலும் பற்றில்லாமல் சுதர்ம்மாஜி ஒரு துறுவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். பிறகு... இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு தேச பயணத்திற்காக அவர் புறப்பட்டு விட்டார். வட இந்தியாவிலிருக்கும் ஒரு தர்ம மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிறிதும் எதிர்பாராமல் அவர் மரணத்தைத் தழுவி விட்டார்.'

பல இடங்களிலும் அஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றன. சுதர்ம்மாஜியின் கவிதைகளைப் பற்றிய முட்டாள்தனமான விமர்சனங்கள் மட்டுமே இலக்கிய கூட்டங்களில் முக்கிய விஷயமாக இருந்தன. சுதர்ம்மாஜியை ஹாஃபீஸ்ஸுடனும் ஷெல்லியுடனும் சம நிலையில் வைத்து மிகப் பெரிய மனிதர்கள் சொற்பொழிவாற்றினார்கள். பத்திரிகைகளில் எங்கு பார்த்தாலும், சுதர்ம்மாஜியைப் பற்றிய மரண சுலோகங்களும், இரங்கல் செய்திகளும், நினைவுகளும்தான்....

சுதர்ம்மாஜியின் கவிதைகளைக் கேட்டு பதிப்பாளர்கள் கவிஞரின் மனைவியை அணுகினார்கள். 'நெருப்புப் பொறிக'ளின் இரண்டாம் பதிப்பிற்கான பதிப்புரிமைக்கு ஒரு பதிப்பாளர் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

தொடர்ந்து ஊரில் உள்ளவர்கள் ஒரு மிகப் பெரிய முயற்சியில் இறங்கினார்கள். சுதர்ம்மாஜிக்கு ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தார்கள். ஊரிலிருந்த பணக்காரர்களும், மிகப் பெரிய மனிதர்களும், பெரிய பதவிகளில் இருந்தவர்களும் சேர்ந்து ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து. நினைவுச் சின்னம் அமைப்பதற்காக 10,000 ரூபாய் சேர்க்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

அங்கேயே மூவாயிரம் ரூபாய் சேர்க்கப்பட்டது.

பணம் ஏற்பாடு செய்யும் குழு நாடெங்கும் நடந்தது. அவர்கள் பல படிகளிலும் ஏறி இறங்கி, கூறிய அடுத்த நிமிடமே, ஐந்து... பத்து என்று ஒவ்வொருவரும் நன்கொடை தந்தார்கள். சுதர்ம்மாஜியின் கவிதைகளை மனப்பாடம் செய்து வைத்திராத இலக்கிய ரசிகைகளான பெண்களைப் பார்ப்பதே அரிது என்ற நிலை இருந்தது. அதனால் அவர்களும் பணம் பெற்று தருவதிலும், நன்கொடை அளிப்பதிலும் உதவினார்கள். முன்பு சுதர்ம்மாஜியைப் பற்றி கேள்வியே பட்டிராதவர்கள் கூட, சுதர்ம்மாஜியின் 'நெருப்புப் பொறிக'ளை வாங்கி, வாசிக்க ஆரம்பித்தார்கள். சுதர்ம்மாஜியின் மனைவி, தன் கணவரின் கவிதைகள் இருந்த இன்னொரு நோட்டு புத்தகத்தைப் பதிப்பாளர்களிடம் காட்டினாள். அவர்கள் அதை 3,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி 'சொர்க்க ஒளி' என்ற பெயரில் பதிப்பித்தார்கள்.

பலரிடமிருந்தும் பெற்ற நன்கொடை ஒரு பெரிய தொகையாக இருந்தது. நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த வள்ளல் குணம் கொண்ட மனிதர்களுக்கு மத்தியில் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டுமென்ற தீவிரமான ஆவலுடன் சில செட்டிகளும் பட்டாணிகளும் சேர்ந்து கொண்டார்கள். மகாகவி 'சுதர்ம்மாஜி நினைவு நிதி'க்கு பெரிய அளவில் நன்கொடைகள் அளித்தார்கள்.

நன்கொடையாக பணம் பெறுவதற்கு பல இடங்களுக்கும் சென்றவர்கள் கான்ட்ராக்டர் லோனப்பனையும் அணுகினார்கள். நினைவுச் சிலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைத் தனக்கு தருவதாக ஒப்புக் கொண்டால், அந்த நிமிடமே நூறு ரூபாய் நன்கொடை தருவதாக லோனப்பன் கூறினார். குழு அப்போதைக்கு ஒத்துக் கொண்டு நன்கொடை பணத்தை வாங்கிக் கொண்டது.

அதைத் தொடர்ந்து அந்த நல்ல நாளும் வந்து சேர்ந்தது. சுதர்ம்மாஜி நினைவுச் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நாளன்று, அந்தப் புனிதச் செயலைச் செய்வதற்கு திவானே வந்திருந்தார். அந்த பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் வேறொரு ஊரைச் சேர்ந்த ஒரு மிகப் பெரிய கவிஞர். நாட்டிலிருந்த இலக்கிய சேவை செய்பவர்களும், மிகப் பெரிய அறிஞர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள்.

விழாவில் ஏராளமான கவிஞர்களும் பண்டிதர்களும் சுதர்ம்மாஜியின் கவிதைகளைப் பற்றி முடிவே இல்லாமல் சொற்பொழிவாற்றினார்கள். இன்னும் சிறிது காலம் சுதர்ம்மாஜி உயிருடன் இருந்திருந்தால், அவர் நோபல் விருதைப் பெற்றிருப்பார் என்று கூட அவர்கள் உரத்த குரலில் கூறினார்கள்.

நிதிக்கு பலரிடமிருந்தும் கிடைக்கக் கூடிய தொகை முழுவதும் கிடைத்து விட்டதாக செயலாளர் அறிவித்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் கைகளைத் தட்டி, பாராட்டை வெளிப்படுத்தினார்கள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel