Lekha Books

A+ A A-

படுக்கையில் சிறுநீர் கழிப்பவன்

padukkaiyil siruneer kalippavan

ப்போது எனக்கு எட்டோ ஒன்பதோ வயதிருக்கும். என்னுடைய தம்பி அப்துல்காதருக்கு என்னைவிட ஒரு வயது குறைவு. அவன் செல்லப்பிள்ளையாக இருந்தான். அருமைக் குழந்தை. மிகவும் அதிகமாக ஏங்கி, ஆசைப்பட்டு, எத்தனையோ பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றின் பலனாகப் பிறந்தவன் நான். ஆனால், என்னால் நீண்ட காலத்திற்கு செல்லப் பிள்ளை என்ற பெயரை வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

அப்துல்காதரின் வலது காலில் ஒரு ஊனம் இருந்தது. அதன் மூலம் பரிதாப உணர்ச்சி முழுவதும் அவன் மீதுதான். அவன் தவறு செய்யாத உத்தமன். உலகத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் பதில் கூற வேண்டியவன் நான்தான். செய்யாத தவறுகளுக்கு நான்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அப்துல் காதரும் நானும் பெரும்பாலும் படுப்பது வாப்பாவுடன்தான்- கட்டிலில். இப்படி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு பயங்கரமான சம்பவம் நடக்கிறது. சம்பவம் சுத்த சிறுநீரைப் பற்றியது! யாரோ படுக்கையில் படுத்து இரவில் சிறுநீர் கழிக்கிறார்கள்.

யார் அது?

அப்துல்காதரா, நானா?

ஒரு பிடியும் கிடைக்கவில்லை. யாரை அடிக்க வேண்டும்? உம்மாவும் வாப்பாவும் தீவிரமாக சிந்தித்தார்கள். ஒரு தும்பும் கிடைக்கவில்லை.

ஒருநாள் மாலை நேரத்தில் என்னைக் குற்றவாளியாக ஆக்கக்கூடிய அந்த கொடுமையான சம்பவம் நடைபெறுகிறது. எங்களுடைய வாசலில் இருக்கும் வெள்ளை மணல், பளபளா என்று மின்னிக் கொண்டிருக்கிறது. அதில்தான் நீதிபதிகளான யோக்கியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். எல்லாரும் இருக்கிறார்கள். வாப்பாவும் வாப்பாவின் நலம் விரும்பிகளும். மாதவன் நாயர், கிருஷ்ணன், அவுஸேப்பு மாப்பிள்ளை, சங்கரன் குட்டி, ஆனக்கார். பிறகு... வாப்பாவின் மைத்துனரும் என்னுடைய மாமாவும் பெரிய சண்டைக்காரரும் பயங்கரமான பேச்சாளரும் பெரிய பயில்வானுமான பாலசேரில் முஹம்மது. மாமாவின் மடியில் ஊனக்கால் உடையவ னும் செல்லப் பிள்ளையுமான அப்துல் காதர் சந்தோஷத்துடன் உட்கார்ந்திருக்கிறான்.

அந்த அவைக்கு வாப்பா என்னை அழைத்தார். எதற்கு என்று தெரியவில்லை. நான் சென்றேன். வாப்பா என்னைப் பிடித்து அருகில் நிறுத்தினார். பிறகு என்னுடைய வேட்டியைப் பிடித்து அவிழ்த்து முழுமையாக நிர்வாணமாக்கி நிற்கச் செய்தார். என்னுடைய இடுப்பில் வெள்ளி அரைஞாண் இருந்தது. அதில் வெள்ளி டாலர்கள் இருந்தன. அனைத்தும் பாசி படர்ந்து கறுத்துப் போயிருந்தன. வாப்பா சொன்னார்: “இவன் இரவு வேளையில் பாயில் படுத்து சிறுநீர் கழிக்கிறான். பார்த்தீர்களா? எல்லாம் கறுத்து பாசி பிடித்துப் போயிருக்கு.''

மாதவன் நாயர் மிகுந்த கம்பீரத்துடன் சொன்னார்: “இரவுப் பனி!''

நான் சொன்னேன்: “பாயில் படுத்து சிறுநீர் கழிப்பவன் அப்துல்காதர்தான். நான் இல்லை.''

அப்துல் காதர் சொன்னான்: “அண்ணன்தான்... நான் இல்லை.''

மூன்று பேர் பாயில் இரவுப் பொழுதில் படுத்து உறங்குகிறார்கள். அதிகாலை வேளையில் பாயில் சிறுநீர் காணப்படுகிறது. ஒரு ஆள் பாயில் படுத்து சிறுநீர் கழித்துவிட்டான். அது யார்? அது தான் பிரச்சினையே. நான்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

நான் உறுதியான குரலில் சொன்னேன்: “நான் இல்லை!''

மாமா கோபக் குரலில் கர்ஜிப்பதைப் போல நீதி வழங்கினார்: “இவன் இல்லை; நீதான்!''

எல்லாரும் என்னைப் பார்த்தார்கள். படுக்கும் பாயில் படுத்து சிறுநீர் கழிக்கும் கேடு கெட்டவன்! நான் உம்மாவை அழைத்தேன். உம்மா அழைப்பைக் கேட்கவில்லை. எல்லாரும் சேர்ந்து நீதி வழங்கி விட்டார்கள். பாயில் படுத்து சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டுமென்றால், இரவுப் பனி இல்லாமல் போக வேண்டுமென்றால் ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கிறது. அதை நான் செய்ய வேண்டும். அதாவது:

“ஆண் யானையின் காலுக்கு நடுவில் நுழைய வேண்டும்!''

அப்படி நீதி வழங்கிவிட்டு கூட்டம் பிரிந்தது. நினைத்துப் பார்த்து நான் மயக்கம் போட்டு விழவில்லை. நான் பார்க்கும்போது ஆண் யானை மண்ணைத் தும்பிக்கையால் எடுத்து வெளியே போடுகிறது. பயங்கரமாக வெளுத்துக் கூர்மையாக இருக்கும் கொம்புகள்! இரக்கமே இல்லாத குரூரமான கண்கள்!

நான் உம்மாவின் அருகில் சென்று பயத்துடன் சொன்னேன்:

“உம்மா, கேள்விப்பட்டீர்களா? நான் ஆண் யானையின் காலுக்கு அடியில் நுழையணுமாம்!''

“நீ படுத்திருக்கும்போது சிறுநீர் கழித்தாய் அல்லவா?'' உம்மா கேட்டாள்.

நங்ஙேலி சொன்னாள்: “தங்க மகனுக்கு இரவுப் பனி இருக்கு.''

வாப்பா சொன்னார்: “நீ படுத்து சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டுமென்றால், யானையின் அடியில் நுழையணும்.''

“பெண் யானையின் அடியில் நுழைந்தால் போதுமா?''

“போதாது. ஆண் யானையின் அடியில் நீ நுழையணும். நீ ஆணாக்கும்.''

சரி. அப்படியென்றால் எல்லாவற்றையும் முடிவு செய்து நீதி வழங்கி முடித்துவிட்டார்கள். இரவில் படுக்கையறையில் படுத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பவன் நான்தான். ஆண் யானையின் கால்களுக்கு நடுவில் நுழைய வேண்டியவன் நான்தான்.

நான் நுழைய வேண்டிய யானை காட்டு யானையாக இருந்தது. அடர்ந்த காட்டில் முழுமையான சுதந்திரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். அவனைப் பிடித்துப் பழக்கினார்கள். முழுமையாகப் பழக்கவில்லை. "இடப் பக்கம்... யானை' என்று கட்டளை இட்டால், அவன் வலப் பக்கம் திரும்புவான். இல்லாவிட்டால் கேட்காததைப் போல நிற்பான். யானைக்காரன் கொம்பைப் பயன்படுத்தி இழுப்பான். அவன் பயங்கரமான சத்தத்துடன் கத்துவான். எனினும், நான் அவன்மீது ஏறியிருக்கிறேன். யானைக்காரன் என்னைப் பிடித்திருந்தான். பயந்து நடுங்கி அவன்மீது நான் சிறுநீர் பெய்ததாக யானைக்காரன் சொன்னான். அது பச்சைப் பொய். ஆனால், அதை யானை கேட்டது. அவன் ரசிப்பானோ என்னவோ!

யானைக்கு அடியில் நான் நுழைய வேண்டிய விசேஷ நாள் வந்து சேர்ந்தது. ஆண் யானையைக் குளிப்பாட்டி கொண்டு வந்து நிறுத்தினார்கள். என்னையும் குளிப்பாட்டினார்கள். அதாவது நானும் ஆண் யானையும் ஒன்றாக ஆற்றில் குளித்தோம். எனக்கு புதிய வேட்டியும் புதிய சட்டையும் புதிய தொப்பியும் அணிவித் தார்கள்.

நான் முழுமையாக யானையைப் பார்த்தேன். கருப்போ கருப்பு. பருமனான உருண்டை மலை. நான்கு கால்களும் வாலும் தும்பிக் கையும் கொம்புகளும்... பயங்கரமான பகையை வெளிப்படுத்தும் கண்கள்... எனக்கு மூச்சு அடைப்பதைப் போல தோன்றியது. யானை என்னை மிதித்துக் கொன்றுவிடுமோ? தும்பிக்கையால் சுற்றிப் பிடித்து வாய்க்குள் போட்டு என்னை மென்று தின்றுவிடும். வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் ஓடி விடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. எங்கு போவேன்? எப்படிப் போவேன்?

சுற்றிலும் ஆட்கள். ஒரு பக்கம் முழுவதும் என்னுடைய நண்பர்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel