Lekha Books

A+ A A-

மருதாணி

Maruthani

றுநாள் காலையில் முகூர்த்தம். கைகளில் மருதாணி இடும் பெண்ணிடம் மணப் பெண் சொன்னாள்: “இந்தத் திருமணம் நடக்கப் போவ தில்லை.''

திருமணம் நடக்காதா? கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சமையல் அறையின் வாசலில் சமையல் செய்து கொண்டிருந்த பிராமண இனம் அதிர்ந்து போனது.

வீட்டு வேலைக்காரிகள் அதிர்ச்சியடைந்தார்கள். உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

“அம்மு, என்ன முட்டாள் தனமா பேசுகிறாய்?''

வளைகுடா நாட்டிலிருந்து விடுமுறை எடுத்து வந்திருந்த மாமா உரத்த குரலில் சொன்னார்:

“எதை வேண்டுமானாலும் கூறுவதா?'' அண்ணனின் மனைவிகள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார் கள்.

“இந்தத் திருமணம் நடக்காது.'' அம்மு உறுதியான குரலில் கூறினாள். மருதாணி இடுவதை நிறுத்திவிட்டு அழகு நிலையத்தைச் சேர்ந்த பெண் மணமகளிடம் கேட்டாள்:

“அப்படியென்றால் இன்னொரு கையில் மருதாணி இட வேண்டாமா?''

“இரண்டு கைகளிலும் மருதாணி இட வேண்டும்.  அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் என்ஜினியரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னேன்.''

“அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் என்ஜினியருக்கு அப்படியென்ன குறை? பார்ப்பதற்கு நல்லவனாக இருக்கிறான். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். உனக்கு இப்படிக் கூற எப்படித் தோன்றியது?'' அம்மா கேட்டாள்.

“யாரும் கேட்க வேண்டாம். பெண்ணை அளவுக்கும் அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார்கள்.'' மாமா சொன்னார்.

“நான் செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறேன் என்று தோன்றுகிறதா, அண்ணா?'' அம்மா கேட்டாள்.

“நான் குற்றம் சுமத்தியது உன்னை அல்ல. அம்முவின் அப்பாவை... பணிக்கர் எல்லாவற்றையும் கொடுத்து கெடுத்து விட்டார். குணம் மிகவும் மோசமாக ஆகிவிட்டது.'' மாமா சொன்னார்.

திருமணத்தை தாங்கள் நடத்துவோம் என்று சித்தப்பாக்கள் கூறினார்கள். “பெண்ணுக்கு மயக்க மருந்து கொண்ட ஊசியைப் போட்டு பந்தலில் உட்கார வைப்போம். ஒருவரையொருவர் மாலை அணிவிக்கச் செய்வோம். குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்று வோம். திருமணம் முடிந்து இரண்டு இரவுகள் கடக்கும்போது அம்மு புதிய மணமகனுக்குச் சொந்தமானவளாக ஆவாள்.'' அவர்கள் கூறினார்கள்.

“எனக்கு எய்ட்ஸ் வந்து இறப்பதற்கு விருப்பமில்லை.'' அம்மு கூறினாள்.

“ரவிக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று யார் சொன்னார்கள்? நல்ல உடல்நலத்தைக் கொண்ட ஒரு பையன். எய்ட்ஸ் இருக்கிறது என்று எந்தச் சமயத்திலும் நீ சொல்லிப் பரப்பி விடாதே. வேறு எந்த நோய் வந்தாலும், எய்ட்ஸ் வரவே கூடாது என்பதுதான் என் பிரார்த்தனையே.'' மாமா சொன்னார்.

“என் பிரார்த்தனையும் அதேதான்.'' அம்மு சொன்னாள்.

“அம்மு... முட்டாள்தனமா பேசாதே. இந்தத் திருமணம் நடக்காமல் போனால் உன் தந்தை அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வார்.'' அம்மா சொன்னாள்.

“எய்ட்ஸ் வந்தால், நானும் தற்கொலை செய்து கொள்வேன்.'' அம்மு சொன்னாள்.

“இந்த  ஊரில் வளர்ந்த யாரையாவது கொண்டு வரக்கூடாதா? யாராக இருந்தாலும் நான் திருமணம் செய்து கொள்வேன். பணக்காரனாக இருக்கத் தேவையில்லை. பெரிய படிப்பும் வேண்டாம். ஒரு சாதாரண மனிதன் போதும்.'' அம்மு சொன்னாள்.

“உனக்குப் பொருத்தமான ஒரு ஆள்கூட இந்த ஊரில் இல்லை, அம்மு.'' சித்தப்பாக்கள் கூறினார்கள்.

“அப்படியென்றால் திருவனந்தபுரத்திற்குச் சென்று பாருங்க. அங்கு நல்ல இளைஞர்கள் இல்லாமலிருக்க மாட்டார்கள்.'' அம்மு சொன்னாள்.

“இன்று திருவனந்தபுரத்திற்குச் சென்றால், நாளை காலையில் திருமணம் செய்வதற்குத் தயாராக இருக்கும் யாரையும் பார்க்க முடியாது. பிறகு... ரவியும் அவனுடைய ஆட்களும் வரும்போது நாங்கள் என்ன கூறுவது?'' மாமா கேட்டார்.

“எய்ட்ஸ் என்று  கேட்டாலே எனக்கு பயம் என்று கூறுங்கள். உண்மையைத் திறந்து சொல்லுங்க.''

“ரவிக்கு எய்ட்ஸ் இல்லை.''

“மாமா, அது எப்படி உங்களுக்குத் தெரியும்? மருத்துவச் சான்றிதழைக் காட்டினார்களா?''

“மருத்துவச் சான்றிதழைக் காட்டுங்கள் என்று நாங்கள் எப்படிக் கூற முடியும்? வரதட்சணைகூட வேண்டாம் என்று சொன்ன பையன். நன்றிகெட்டத் தனமாக நடக்க முடியாது.'' மாமா சொன்னார்.

“இந்தத் திருமணம் நடக்காது.'' அம்மு சொன்னாள்.

“யாருடைய முகத்தையும் என்னால் பார்க்க முடியாத நிலை உண்டாகும். நான் இப்போதே பாலக்காட்டிற்குச் செல்கிறேன். என் தாயின் வீட்டிற்கு...'' அம்மா வெறுப்புடன் சொன்னாள்.

“நாங்கள் ஓடித் தப்பி விடுகிறோம். மணமகனின் ஆட்கள் வரும்போது பெரியவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அம்முவே அவர்களைத் திருப்பி அனுப்பி வைக்கட்டும்.'' சித்தப்பாக்கள் சொன்னார்கள்.

“சமையல்காரர்களுக்கு யார் பணம் கொடுப்பது?'' அம்மா கேட்டாள்.

“யாராவது கொடுக்கட்டும்.'' அம்மு சொன்னாள்.

“மருதாணி காய்வதுவரை கையில் நீர் படக்கூடாது.'' அழகு நிலையத்தைச் சேர்ந்த பெண் கூறினாள்.

“மருதாணி நல்ல முறையில் பிடிக்கட்டும். நான் நீர் படாமல் பார்த்துக் கொள்கிறேன்.'' அம்மு கூறினாள்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel